Daily Archives: நவம்பர் 22, 2006

Irony and Hypocrisy – The staples of Satire

நகைச்சுவை எழுதுவது எப்படி?

நகைச்சுவையில் பல வகை உண்டு.

இன்று படித்த கட்டுரையில் இருந்து (OpinionJournal – Leisure & Arts: It’s Enough to Make You Laugh :: Politics is a funny business) மொழியாக்க உதாரணம்.

ஜெயேந்திரர் கைதான சமயம். கூடவே ரவி சுப்பிரமணியமும் மாட்டிக் கொண்டுவிடுகிறார்.

பொதிந்த அர்த்தத்துடன் கிண்டலடிக்க விரும்பினால்: “ரவியின் சொந்த ஊரான காஞ்சீபுரம் ஜெயிலில் வைப்பது, காவல்துறைக்கு சிரமதசையைத் தந்திருக்கிறது. ரவி பாட்டுக்கு, ஒவ்வொரு அரசியல்வாதியின் வண்டவாளங்களை விளக்குவதால், புதுசு புதுசாக விஷயம் சிக்கிக் கொண்டேயிருக்கிறது; காஞ்சிக்கும் சென்னைக்கும் பாயிண்ட் டு பாயிண்ட் விட போலீஸ் விரும்பவில்லை.”

வெளிப்படையாக நக்கலடித்தால்: “ரவி சுப்பிரமணியம் இன்று பிடிபட்டார். சிறைக்குள் நுழைந்தவுடன் மடத்தில் இருக்கும் சாமியார்களை விட, அதிக அளவில் அருள்வாக்கு ஆனந்தாக்களைப் பார்த்தவுடன், தோழமையைக் கொண்ட பரிச்சயமான இடமாக ஆக்கிக் கொண்டார்.”

படிப்பவர் ஜெயேந்திரராக இருக்காத பட்சத்தில், இரண்டுமே சிரிப்பை வரவைக்கும். முதலாம் வகை நிஜ செய்தியாகவே வாய்ப்பு உண்டு. பூந்தமல்லி, காஞ்சி, சென்னை என்று அலைக்கழிக்காமல் நீதிபதி முன் ஆஜராக, விசாரிக்க, இப்படி நடந்திருக்கலாம் என்பதை நுட்பமாக உள்ளடக்கத்தில் வைத்திருக்கிறது.

இரண்டாவது வகை, எந்த வித கிரிமினலுக்கும் பொருந்தும். செரினா, சரவண பவன் என்று யாரை உள்ளே தள்ளினாலும், எள்ளலை பெயர் மாற்றி சொருகி விடலாம்.

இன்னொரு உதாரணமாக, முரண்களை வெளிக்கொணரவும் நகைச்சுவை கை கொடுக்கும்.

முதல் வகை: ‘கணவன் இழந்தவர்கள் மீண்டும் மணமுடிக்கக் கூடாது என்று ஜெயேந்திரர் அறிவுறுத்தினாரே… ஏன் தெரியுமா? அவர்கள் தன்னிடம் வருவார்கள் என்னும் ஆசையில்தான்!’

இரண்டாவது: ‘ஜெயேந்திரருக்கு கட்டாங்கடைசியாக நிம்மதி பிறந்திருக்கிறது. சிக்குன் குனியாவினால் அவருடைய பெயர் முதல் பக்கத்தை விட்டு அகன்றிருக்கிறது. அவருடைய ‘ஜெயேந்திரர்’ பட்டம் ஏற்கனவே அகன்றிருந்தது.’

முதலாவதில் எள்ளல் இருக்கும். வெளியே ஒரு வேஷம், உள்ளே இன்னொன்று வைத்திருப்பதை உரித்துக் காட்டும். இரண்டாவது எளிமையானது. செய்திகளின் மேற்சென்று அலசாமல், கரையிலே நின்று மீன் பிடிக்கும்.

முந்தைய வகையில் பெரியமனுசத்தனம் வெளிப்படும். கொஞ்சம் ஆலோசனை வழங்குவது போல் தோன்றும். பிந்தையது வெ.சீதாராமன் மாதிரி யாருக்கும் மனம் நோகாது. சிரித்து விட்டு செல்லச் சொல்லும்.

நடுவே தேவையில்லாமல் இருள்நீக்கி சுப்பிரமணியன் என்று விளித்தால் அது தனிமனிதத் தாக்குதல் என்று வகைப் பிரிக்கலாம்.

இதற்கெல்லாம் இடையில் சிலர் இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு பில் க்ளிண்டன். இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமி. இவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் கோபமே வராது. எள்ளி நகையாடினாலும் சிரித்து புறந்தள்ளி விடும் குணம் வாய்ந்தவர்கள்.

இப்போது சில சமீபத்திய பதிவுகள்:

  1. joke party: சென்னை வலைபதிவர் சந்திப்பு
  2. simulation padaippugal: 2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்
  3. ஜொள்ளுப்பேட்டை: சென்னை வலைப்பதிவர் ( ரகசிய ) சந்திப்பு !!
  4. அம்மான்னா சும்மாவா?: இலைக்காரன் – well done கலாநிதி

எந்த எந்த பதிவு, பதிவில் வரும் எண்ணங்கள் – எப்படிப்பட்டவை என்று நீங்களே வீட்டுவேலையாக செய்து பார்த்து, எனக்கு பின்னூட்டமிடவும் :-D)

ஜோக் சொன்னால் அனுபவிக்கிற மாதிரி இருக்க வேண்டுமா? ஆராயுமாறு அமைய வேண்டுமா?


| |