Daily Archives: ஓகஸ்ட் 21, 2006

TK-TO Contest: #71 – #84 : Snap Reviews

  • கொல்ட்டிவெட்டிப்பயல்

    (சிறுகதை) மதிப்பெண் – 2 / 4

    தமாசு: ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்…

    படைப்பாளர், தமிழ் சினிமா நிறைய பார்த்து கெட்டுப் போயிருப்பது தெரிகிறது. பேச்சு நடையில் இருப்பதால், எது இலக்கண/எழுத்துப் பிழை என்று குற்றஞ்சாட்ட முடியவில்லை. கதிர் படத்தை ரசித்த வயது தாண்டி விட்டதால், காதல் கவிதை போன்ற chick flick கதையோடு விலகியே நகர்கிறேன். சமீபத்தில் இதே போன்ற பின்னணியைக் கொண்ட (சவுண்ட் பார்ட்டி: நிஜமல்ல, கதை-3!) செண்டிமெண்ட் ரசமில்லாத துள்ளல் விவரிப்போடு – மேலும் ஒன்ற முடிந்தது.

    சம்பவங்களில் அழுத்தம் இல்லை: -1;
    ஆதிகாலம் முதல் இளைஞர்களின் ஒரு தலை, தலையணைப் புதையல்: -1;

  • திருத்தவே முடியாதுசனியன்

    (சிறுகதை) மதிப்பெண் – 1.5 / 4

    எழுத்துப்பிழைகள் (போக்குவரரத்து) உண்டு. சிறுகதை கேட்டால், ஒரு உறவின் வாழ்க்கையை சுருக்கி சொல்கிறார். தீவிரமான விவரிப்பில் நகர்வதற்கு நடுவில் சடாரென்று ‘கஜினியின் கல்பனாவைப் போல’ என்னும் கையாளல் வீரியத்தை நீர்க்க செய்து, கஜினி மறந்த எனக்கு சினிமா ஜிலிர்ப்பை கொடுத்து, பாசத்தை திசை திருப்புகிறது.

    முடிவில் நச் கையாளல் +1.5

  • உறவுகள் நூறுசிமுலேஷன்

    (பட்டியல்) மதிப்பெண் – 1 / 4

    சிறப்பான ஐடியா. ஆனால், கணினியின் வடிவமைப்பு சாத்தியக்கூறுகளை ஆராயமல், நேரடியாக 1,2,3… போடுவது கூகிள் கடைக்கண் அருளினால், என்றாவது எவருக்காவது பயன்படலாம். Family chart என்பது போல் படம் போட்டு, குடும்பத்தை மரக்கிளைகளாகக் கொண்டு வந்திருந்தால் பாராட்டி இருக்கலாம். ஃப்ளாஷ், ஜாவாஸ்க்ரிப்ட் போன்ற நுட்பங்களை உபயோகித்து, வித்தை காட்டியிருந்தால், குரங்கிலிருந்து பிறந்தவன் என்பதற்கு ஆதாரமாக ஆடியிருக்கலாம். தற்போதைக்கு ‘தெரிந்த விஷயம்தானே?! அப்புறம்… வேறென்ன?’ என்ற கேள்வியோடு அன்றாட அட்டெண்டன்ஸ் பதிவாக மறைந்து விடுகிறது.

  • அந்த உறவுக்கு பெயரென்ன? ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன்

    (சொந்தக்கதை) மதிப்பெண் – ? / 4

    கனவுகளுடன் நம்பிக்கைகளுடன் வலம் வந்த பொன்னியின் செல்வன் நியோ‘ -வின் அம்மா குறித்த பதிவு. சந்திப்பை ஒலி வடிவிலோ, இன்னும் விரிவாகவோ, புகைப்படங்களுடன் நனவோடையாகவோ மாற்றாதது (படைப்பாக பார்த்தால்) ஏமாற்றம்.

    மதிப்பெண் கொடுக்க இயலாது. வளர்த்து ஆளாக்கியவனை இழந்து தவிப்பவருக்கு, ஆறுதலாக வாக்களிக்க மட்டுமே முடியும்.

  • எதிர்மறை நியாயங்கள்நிர்மல்

    (சிறுகதை) மதிப்பெண் – 1.5 / 4

    ஓன்னைய பதினெட்டு வருஷம் வளத்ததுக்கு இதான் பலனாங்றாரு. நான் என்ன பேங்க் டெப்பாஸிட்டா மெச்சூர் ஆனதும் அவருக்கு வருமானம் கொடுக்கறதுக்கு.

    தலைப்பிலேயே ‘எதிர்மறை’ என்று வெளிப்படையான நீதியோடு அமைத்து, ‘நேர்மறை எது!?’ என்று ஆசிரியர் நினைக்க சொல்வது பலவீனம். ‘நேத்திக்கு இவங்கப்பா எங்கப்பாட்ட புலம்பினதும்’ என்று ‘நேர்மறை’ சங்கதியும் எங்கோ ஸ்வாஹா ஆகிவிட்டது. இத்தனூண்டு மேட்டருக்கு இவ்வளவு கதாபாத்திரங்கள் தேவையில்லை. கச்சிதமாக வந்திருந்தால் மனதில் பதிந்திருக்கும்.

  • உறவுகள் – நட்புஇளா

    (கவிதை) மதிப்பெண் – 2.25 / 4

    நன்றாகத்தான் இருக்கிறது. ‘முஸ்தஃபா… முஸ்தஃபா’ என்று கல்லூரி நட்பை யதார்த்தமாக சொல்கிறார். வித்தியாசமாக எங்குமே முத்திரை வரியோ, நிகழ்வோ இல்லாமல் வெறுமனே முன்னேறி செல்வது பலவீனம்.

  • ஏன் எனக்கு மட்டும்ஜெயக்குமாரன் மயூரேசன்

    (சிறுகதை) மதிப்பெண் – 2 / 4

    துள்ளலான நடை. மீண்டும் ஒரு காதல் கதை. அதே ரம்மியங்களை, அதே கிளுகிளுப்புடன், அதே ஆண்-பெண்-கல்லூரி-நட்பு என்று படித்து சோர்வுற்றதால்… ஐய்யோ… எனக்கு முடி நரைச்சுடுத்தே மம்மீ!

  • தாயுமானார் அவரே தந்தையுமானார் ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன்

    (பதிவு) மதிப்பெண் – ? / 4

    உதவும் கரங்கள் வித்யாசாகர் குறித்த பதிவு. என்னுடைய ‘மிக விரும்பும் சேவை அமைப்பு’களுள் ஒன்று. அயர்ச்சி ஏற்படாத தொடரும் பரிவு, சர்ச்சைகளைக் களைந்து காலத்திற்கேற்ப புதிய திட்டங்கள், தேவையான அளவு மைக்ரோ மேலாண்மை, நிதி பெற நவீன நுட்பங்களைக் கையாளுதல் என்று உதாரண மனிதராக வாழ்பவரை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

    எழுதப்பட்ட நோக்கத்திற்காக வாக்கு போட வேண்டும்.

  • தேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது! ஜி.கௌதம்

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 3.5 / 4

    தேர்ந்த பத்திரிகையாளருக்குரிய சொற்சிக்கனம். தெரியாத திரைமறைவு விஷயங்களுக்கும் சொந்தக் கதைக்கும் சுவாரசியமான முடிச்சு கொடுத்து உள்ளிழுக்கும் லாவகம். வெள்ளித்திரையாக 144 பக்கங்களில் புரட்டியதற்கு ‘Behind the scenes’ & ‘Making of விகடன்’ கொடுக்கிறார். உணர்ச்சிவசப்பட்ட சினிமா வாடையடித்த இறுதிப்பகுதி, என்றாலும், சுயமுன்னேற்றம், அலுவல் நெளிவு சுளிவு, வாழ்க்கைப் பயணம், கல்வியும் வேலையும் என்று சிதறலான எண்ணங்களை கவனத்தை சிதறடிக்காமல் சுவையாகக் கொடுக்கிறார்.

    எடுத்துக் கொண்ட எக்ஸ்க்ளூசிவ் களம் +1;
    அதை சொன்ன விதம் +1;
    உறவுக்கு கொடுத்த கனம் +1;
    பல தளங்களுக்கான விஷயத்தை ஒரே பதிவில் அர்ப்பணித்ததற்காக -0.25;
    சில இடங்களில் தேவைக்கதிமான ‘நேம் ட்ராப்பிங்’ -0.25;

  • தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள்சிமுலேஷன்

    (பட்டியல்) மதிப்பெண் – 2 / 4

    சும்மா… ஜாலியா படிக்கலாம். விட்டதை ஹரன்பிரசன்னா நிரப்பியது போல் மேலும் தொடுக்கலாம்.

  • லாவண்யா VS வைகுந்தன்மாதுமை

    (சிறுகதை) மதிப்பெண் – 3.25 / 4

    அறியாத நடைக்குள் புகும்போது ‘புரியாதோ’ என்னும் பயம் மேலிடுவதை, களையும் வகையில் மொழி அமைந்துள்ளது மிகப் பெரிய பலம். உரையாடலில் ருசித்த/ஒன்றிய/அறிந்த பகுதிகளைத் தர விரும்பினால் முழுக்கதையும் தர நேரிடும் அளவு நேர்த்தி. கதை அமைப்பு மேலும் வலு சேர்க்கிறது. அழகாக நகரும் கதையில், முடிவு மட்டும் கொஞ்சமாக பிசிறு தட்டி கோர்வையில் தடுமாறுவது மட்டும் குறை.

    எடுத்துக் கொண்டதை விவரித்த நேர்த்தி +1;
    மொழிவளம் +1;
    கதை அமைப்பு +1;
    கள விவரிப்பு & சம்பாஷணை & எதார்த்தம் +1;
    கதையை விட்டு விலகி தொக்கி நின்ற முடிவு -0.75

    இன்னும் ஒரு பருந்துப் பார்வையுடன் தேன்கூடு – தமிழோவியம் போட்டி படைப்புகளை விமர்சித்தலுக்கு மங்களம் பாடப்படும். (அடுத்த மாதப் படைப்பாளிகள் என்சாய்… நிச்சயமாய் நுணுக்கி நுணுக்கி குற்றங்குறை சினிமாஸ்கோப் போட்டு படுத்த மாட்டேன் என்று அரசியல் வேட்பாளராய் வாக்குறுதி அளிக்கிறேன்.) எவரெவருக்கு என்னுடைய பொன்னான வாக்குகள், எவர் முதல் மூன்றைப் பிடிக்க விரும்புகிறேன், யார் வெற்றி பெறக்க்கூடும் போன்ற ஜாதகத்துடன் அழகு பார்க்க எண்ணம். இன்ஷா பதிவர்.

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த பதிவுகள்


    | |

  • Aazvargal Research Institute presents Tholkappiyar award to M Karunanidhi

    Dinamani.com – TamilNadu Page

    ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருது

    சென்னை, ஆக. 21: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, “”தொல்காப்பியர்” விருதை குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சென்னையில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.

    இது தொடர்பாக ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம. வீரப்பன், நிறுவனர் – செயலர் எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

    தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பான தொண்டாற்றியவர்களுக்கு இந்த ஆண்டு முதல் “”தொல்காப்பியர்” விருது வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் ஆண்டு விருதை, தொல்காப்பிய பூங்கா வடித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கருணாநிதிக்கு இவ்விருதினை வழங்குகிறார்.

    ரூ.1 லட்சம் ரொக்கமும், தொல்காப்பியர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும், வெள்ளியால் ஆன பட்டயமும் இவ்விருதில் அடக்கம்.

    ஓவியத்தில் தகுதிப் பட்டயம்: வழக்கமாக தகுதிச் சான்றினை (சைட்டேஷன்) எழுத்துகளில் வடித்துப் பட்டயம் வழங்கும் முறையை மாற்றி ஓவிய வடிவில் பட்டயம் வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்தது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ் இலக்கியம் படைத்த தொல்காப்பியர் உருவமும், தற்காலத்தில் வாழ்நாள் முழுவதும் படைப்பிலக்கியம் படைத்துவரும் முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் “எழுதுகிற தோற்றமும்’ தகுதிப் பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் நிகழ்ச்சிகளை விளக்கும் உருவங்கள் இதில் வெள்ளியில் பொறிக்கப்பட்டுள்ளன என்றனர்.

    Nirmal Deshpande gets Sathbhavana Award

    Dinamani.com – Headlines Page : ராஜீவ்காந்தி விருது விழாவில் சோனியா பேச்சு: பயங்கரவாதத்துக்கு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தையே பொறுப்பாக்கக்கூடாது

    புது தில்லி, ஆக. 21: “”பயங்கரவாதச் செயல்களுக்கு சமுதாயத்தின் எந்த ஒரு பிரிவினரையும் பொறுப்பாளியாக்கக் கூடாது” என்றார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

    ராஜீவ் காந்தி பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சத்பாவன விருதை, பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே அம்மையாருக்கு வழங்கிய நிகழ்ச்சியில் பேசுகையில் இக்கருத்தை அவர் வலியுறுத்தினார். விருதில் பாராட்டு பத்திரமும் ரூ.2.5 லட்சம் ரொக்கமும் அடக்கம்.

    (மும்பை தொடர் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள பின்னணியில், சோனியா காந்தியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.)

    பிரதமர் மன்மோகன் சிங்: மதவாதிகளால் ஏற்படும் சவால்களை மக்கள் நேரடியாகச் சந்தித்து நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கு வகுப்புவாதம்தான் பிரதான எதிரி என்று ராஜீவ் காந்தி அடிக்கடி எச்சரிப்பார்.

    மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் காந்தியவாதியான நிர்மலா அற்புதமாகச் செயல்பட்டிருக்கிறார். மதத்தாலும் பூகோளரீதியாகவும் பிரிந்திருந்தாலும் நாம் அனைவரும் ஒரே கலாசாரம், பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று இந்தியாவில் மட்டும் அல்ல, பக்கத்து நாடுகளிலும் சென்று பிரசாரம் செய்தவர் நிர்மலா.

    சோனியா காந்தி: நிர்மலாவுக்கு இந்த விருது தரப்படுவது மிகவும் பொருத்தமே. ராஜீவ் காந்தி எந்த லட்சியங்களுக்காகவும் கொள்கைகளுக்காவும் வாழ்ந்து, மறைந்தாரோ அவற்றின் அடையாளமாகத் திகழ்பவர் நிர்மலா.

    பயங்கரவாதத்துக்கு சமுதாயத்தின் இந்தப் பிரிவினர்தான் காரணம் என்று யார் மீதும் பழிபோடக் கூடாது.

    நிர்மலா தேஷ்பாண்டே: அணு ஆயுதமற்ற, வன்முறைகளற்ற உலகம் வேண்டும் என்று விரும்பினார் ராஜீவ் காந்தி. மதத்தின் பெயரால் நடந்த கலவரங்களில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர் என்பதை அவர் வலியுறுத்தி வந்துள்ளார். நம்முடைய பக்கத்து நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதை பிரசாரம் செய்து வருகிறேன்.

    நீதிபதி ஏ.எம். அகமதி (விருதுக்குழுவின் ஆலோசகர்): வெவ்வேறு மதம், இனம் கொண்ட குழுக்களிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறவர்களுக்கும், பயங்கரவாதம், வன்செயல்களுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின்போது இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.

    அன்னை தெரசா, பிஸ்மில்லா கான், சுநீல் தத், திலீப் குமார், லதா மங்கேஷ்கர், கபில வாத்ஸ்யாயன் உள்பட இதற்கு முன் 13 பேர் இந்த விருது பெற்றுள்ளனர்.

    விழாவுக்கு வந்தவர்களை மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா வரவேற்றார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.