Name the Author & the Novel


புகழ் பெற்ற நாவகளின் தொடக்கங்கள்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

1. அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். மொத்தம் ஒரு ஓவர்தான் பாக்கியிருக்கிறது. எடுக்கவேண்டிய ரன்களோ பதினெட்டு. விக்கெட்டு ஒன்பது விழுந்து விட்டது. கடைசி ஓவர் போடப் போவது யார் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். திடீர் என்று பெவிலியனுக்குச் செய்தி போய் இம்ரான்கான் வருகிறான். எப்படி வாளாடி டீமில் இம்ரான்கான் வரமுடியும் என்று காப்டனைக் கேட்கிறான். அதற்கு அவன், அப்படித்தான் அது, இப்போது புதுசா ரூல் கொண்டு வந்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கடைசி ஓவரில் போடலாம் என்று வந்திருக்கிறது என்கிறான்.

2. ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோறு வயது நடந்து கொண்டிருந்தது.

தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அலைந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருந்தன. காலை நேரத்தில் அவை மண்சுவர்களை விட்டு மெதுவாகக் கீழிறங்கித் தலையைச் சிலுப்பியபடி தெருவின் நீண்ட தனிமையில் பயத்தோடு, கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தா. அவன் வீட்டு வேம்படியில் இருந்த எறும்புகள் நேற்றோடு முற்றாக வெளியேறிப் போய்விடன. எறும்புகளின் சரசரப்பு ஓசையும் அற்றுப் போனபிறகு மரத்தில் காற்று துளிர்ப்பது கூட ஒடுங்கி விட்டது. இலைகள் தலைகவிழ்ந்தது போல நிசப்தித்துவிட்டன. எறும்புகள் எங்கே செல்கின்றன என்றே தெரியவில்லை.

3. கணேசன் கண் விழித்ததும் அவன் முதலில் பார்த்த பொருள் ஒரு நட்சத்திரம். ஜன்னலுக்கு வெளியே வெகு தொலைவில் அற்புதமாய் மின்னிக் கொண்டிருக்கிற விஷயம்.

எழுந்தவுடன் நட்சத்திரம் பார்ப்பது நல்லதா, கெடுதலா? உள்ளங்கையைப் பரக்கத் தேய்த்துப் பார்ப்பது தான் கணேசனுடைய தினசரி வழக்கம். அப்படி பார்க்காத நாளெல்லாம் சிரமப்படுத்தும் என்பது தீர்மானம். ஆனால், இன்றைக்கென்னவோ எழுந்தவுடன் முதலில் பார்த்த பொருள் நட்சத்திரம்தான்.

புலருமுன் தெருவில் விளக்கணைத்து விட்டார்கள். அறைக்குள்ளே இருட்டு கனமாக அழுந்திக் கொண்டிருக்க நட்சத்திரம் சிரித்துக் கொண்டிருந்தது. வெகு தூரத்தில் சிவப்பாய், கனமாய், அழகாய் அந்தச் சுடர் மின்னிக் கொண்டிருந்தது. பிசுபிசுத்த இமைகளூடே ஒளிக்கதிரால் முத்தமிட்டது. இத்தனை அழகாய், அமைதியாய் சிரிக்கிற சுடர் கெடுதலைத் தருமா? கணேசன் விழிகளை அசைக்கிற பக்கமெல்லாம் அதுவும் நகர்ந்த்து. விழிகளைத் திறந்ததும் ஜன்னலுக்கப்பால் வெகு தொலைவில் போய் ஒட்டிக் கொண்டது.

“இதென்ன விளையாட்டு உனக்கு. சாவித்திரி மாதிரி?”

4. மெலிந்த மேகங்கள் தெருவிற்கு மேலே கடந்து போயின. அதற்கு எதிர்த்திசையில் கூட்டமாக விரைந்து பயணிப்பதாய் பிரமை கொடுத்த நட்சத்திரங்கள் நுட்பமாகத் துடித்தன. மண்ணிலிருந்து எதையோ கவர மாமரத்தின் புல்லுருவிக் கொடிகள் ஊசலாடித் தொங்கின. வேப்பம்பழத் தோல்களுக்குள்ளிருந்து வெளியேறியிருந்தன சிற்றெறும்புகள். வேம்பின் அடர்ந்த கிளைகளொன்றிலிருந்து பால் கசிகிறது கையறு நிலைக்கண்ணீர் போல. மரத்தின் இருட்டந்தரங்கத்தில், உச்சிப்பாதுகாப்பில் வழிகிறது. யாரும் அறிந்திருந்தால் அப்போதே அது மாரியம்மனாயிருக்கும். அடிமரத்தில் மஞ்சள் பாவாடை கட்டப்பெற்றிருக்கும். தொழ வந்திருக்கும் பெருங்கூட்டம். திண்ணைச் சுவருக்கும் ஓட்டிற்குமான இடைவெளியில் பெரியண்ணன் எப்போதோ கோந்து தயாரிப்பதற்காக, முருங்கைப் பிசினில் நீர் ஊற்றி ஊற வைத்திருந்த தகர டப்பாவிற்குள்ளிருந்து மீள முடியாமல் அமிழ்ந்தது பாச்சை. வேம்பையும் வீட்டுத் திண்ணை உத்தரத்தையும் பிணைந்திருந்த கம்பிக்கொடியில் உலர்ந்தது வேஷ்டி. தென்னங்கீற்றுகளில் நிழல்கள் வேஷ்டியில் விழுந்து விரல்களாக முறுக்கிக் கொள்கின்றன். பிசைந்து கொண்டு பிரிந்து கூடி நடுங்குகின்றன.

திண்ணையில் படுத்திருந்த பெரியண்ணனின் கால்களை மடியில் வைத்து அம்மா தடவிக் கொடுத்தாள். பெரியண்ணன் பேச இயலாதிருந்தான். கூர்ந்தொளிந்து துலங்கியது பார்வை. தாவித்தாவி அலைக்கழித பார்வை அம்மாவின் முகத்தில் நிலைத்தது ஏக்கமாக. கசங்கிக் கிழிந்து தொய்ந்த தளிரைப் போல உடல் முழுதும் முற்றும் சோர்ந்திருந்தது. அக்கா, அவன் தாகத்திற்கு குளுகோஸ் கரைத்த சுடுநீரை ஸ்பூனல் புகட்டினாள்.

5. எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. கலியாணப் பந்தலைப் பார்த்தால் சிரிப்பு. மணமகள் தலைகுனிந்து நாணத்திலும் அடக்கத்திலும் முழுகிப் போய் உட்கார்ந்திருக்கிறாள். அதைப் பார்த்தால் சிரிப்பு. அகல மார்பும் இடைச்சரிவும் வழவழத் தோலுமாக, மணமகன் அக்னியில் நெய்யை வார்க்கிறான். அதைப் பார்த்தால் சிரிப்பு. இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற கிழவர்களையும் நடு வயதுக்காரர்களையும் பார்த்தால் சிரிப்பு. இத்தனை இரைச்சல்களையும் கவனிக்காமல், சீவாளியைக் குழந்தைக் கடியாக் கவ்விக் கொண்டு, ஆகாசத்திற்கும் பூமிக்குமாக நாயனத்தை வீசி வளைத்துக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பார்த்தால் சிரிப்பு. எதற்கு ‘உம்’மென்று இந்த முகம்! இந்தக் கன்ன உப்பல்! நாயன் துவாரங்களை இத்தனை கண்ணும் கருத்துமாகத் தடவி, எந்த ஸ்வர சுத்தத்துக்கோ பயந்து கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தால்… கலியாணத்துக்குக் கூடியிருக்கிற இத்தனை சாயல்களை, பற்களை, நெற்றிகளை, கால்களை, சிரிப்புகளை, புருவந்தூக்கும் கவலைகளை, முகங்களில் படர்ந்திருக்கிற பூசணி வெள்ளைகளை, தானே பேசுகிற குழந்தைகளை, வருடங்கள் கழிந்து சந்திக்கும் தாயாதிகளை – ஒன்றையும் பார்க்காமல் ஏன் இப்படி கண்ணை மூடி நாயனத்தில் வதை கொள்ள வேண்டும்?

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.