Kalki Weekly Magazine’s Thalayangam
சின்ன விஷயங்களும் பெரிய தலைவர்களும்…
‘‘சின்ன விஷயங்களைப் பெரிதாக்க வேண்டாம்; பெரிய விஷயங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள்’’
என்று முதல்வர் கருணாநிதி தமது சக அரசியல்வாதிகளை நோக்கிப் பேசியிருக்கிறார். மிக உயர்ந்த அறிவுரை இது. நாட்டில் கல்வியின்மை, வறுமை, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை வசதிகளின்மை, பயங்கரவாதம், வன்முறை… என பெரிய பெரிய பிரச்னைகள் காத்திருக்க, அவற்றைப் புறக்கணித்துவிட்டு உப்பு பெறாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதென்பது நமது அரசியல் கலாசாரமாகவே மாறிவிட்டது.
துரதிர்ஷ்டவசமாக, அறிவுரை சொல்லும் முதல்வரும் இந்தக் கலாசாரத்தில் சிக்கியிருக்கிறார். தமது அறிவுரையைத் தாமே கடைபிடிப்பதில் அவர் முனைப்புக் காட்டாததால்தான் இன்று சிவாஜி கணேசன் சிலை நிர்மாணம் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்றத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் நடிகர் திலகத்துக்குச் சிலை வைக்கத் தகுதியான இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை விடுத்து, சாலைப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் ஏற்கெனவே நிறுவியுள்ள காந்தி சிலையின் தோற்றத்தைப் பாதிக்கும் விதமாகவும் சிவாஜி சிலைக்கு இடம் தேர்வாக, இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருக்கிறது. ‘வழக்கு விவகாரமெல்லாம் எதற்கு, இது சிறிய விஷயம்; சென்னையில் எத்தனையோ மாற்றிடங்கள் உண்டு’ என்று தமிழக அரசு உடனடியாக வேறு இடம் பார்த்திருக்கலாம். வழக்கு ரத்தாகியிருக்கும்; சர்ச்சை ஓய்ந்திருக்கும். ஆனால், அதற்குப் பதில் நீதிமன்றத்தில் மோதலுக்கு வழிவகை செய்துள்ளது தமிழக அரசு!
கோயில்களில் பூர்ண கும்ப மரியாதை செய்வது, பரிவட்டம் கட்டுவது போன்றவை கர்ண பரம்பரையாக விளங்கி வரும் சின்னச் சின்ன பழக்க வழக்கங்கள். உபயதாரர் அல்லது கட்டளைதாரர், நன்கொடையாளர் போன்றவர்களுக்குச் செய்யப்படும் இந்தப் பாரம்பரிய மரியாதையை வர்க்க பேதத்தின் அடையாளமாகக் கருதி, அதனைத் தடை செய்தது அரசு. இந்தச் சின்ன விஷயத்தில் அரசு தலையிட்டதால்தான் இதுவும் பெரிய விவகாரமாகி அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. சில தினங்களில், முதல்வர் பின்வாங்கி,
‘‘மடாதிபதிகள், ஆதீனங்களுக்குப் பூர்ணகும்ப விஷயத்தில் விதி விலக்கு’’
என்றும் அறிவிக்கச் செய்திருக்கிறார். இதுபோன்ற மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த விஷயங்களில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமற்றது என்பதுடன் நேர விரயமும்கூட. ஆனால், இங்கே அரசியல் ஆதாயம் கருதி சின்ன விஷயத்துக்குப் ‘பெரிய’ மாயத் தோற்றம் பூசப்படுகிறது.
உண்மையிலேயே கவனம் பெற வேண்டிய மிகப்பெரிய விஷயமோ, மிக அற்பமான விஷயம் போல அலட்சியத்துக்கு உள்ளாகி மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. என்.எல்.ஸி. பங்குகள் விற்பனை குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் தி.மு.க. அமைச்சர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. இதனை ஒப்புக்கொண்ட டி.ஆர்.பாலு, ‘‘கூட்டத்தின் முடிவை ஏற்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’’ என்று பேசியுள்ளார். இந்தப் பெரிய விஷயத்தில் தி.மு.க. தலைவரும் அக்கட்சியின் மத்திய அமைச்சர்களும் கவனம் செலுத்தத் தவறியதால் ஏகப்பட்ட கிளர்ச்சி, குழப்பம். இறுதியில் தி.மு.க. தலைவர் மத்திய அரசை அச்சுறுத்த, பிரதமர்தான் அவமானத்தையும் தலைகுனிவையும் சந்திக்க வேண்டி வந்தது.
‘சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று முதல்வர் கூறியதன் பின்னணியையே எடுத்துக் கொண்டாலும், சட்டசபையில் ஆளுங்கட்சி முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் எதிரெதிராக அமர்வது மரபு. அவ்வாறே எதிர்கட்சித் தலைவர்களும் ஆளுங்கட்சி அமைச்சர்களும். திடீரென்று இருக்கைகள் இடம் மாற்றப்படுகின்றன. எதிர்கட்சியினர் பலர் முதல்வரைப் பார்க்க முடியாது. ஆளுங்கட்சியினர் பலர் எதிர்கட்சித் தலைவரைக் காண முடியாது. ‘‘இதில் உள் நோக்கம் இல்லை; சின்ன விஷயம். அவைத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம்’’ என்று முதல்வர் வாதாடுகிறார். முதல்வர் கூறுவதுபோல் சின்ன விஷயமாயின்
‘மரபுகளை மீறி இடமாற்றம் செய்வானேன்…? அம்மாற்றத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட இடமளிப்பானேன்?’
என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது!










