Webulagam : Survey for the distribution of colour TV begins!
இலவச தொலைக்காட்சி கணக்கெடுப்பு துவங்கியது!
தொலைக்காட்சி இல்லாத ஏழை, எளிய குடும்பம் ஒவ்வொன்றிற்கும் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதற்கான கணக்கெடுப்பு துவங்கியது!
அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில், சமத்துவபுரத்தில் உள்ள ஏழைகளுக்கும், சென்னை குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கும் முதல் கட்டமாக வண்ணத் தொலைக்காட்சி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
முதல்கட்டமாக அளிக்கப்படவுள்ள 30,000 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான கணக்கெடுப்பு பணியை வருவாய்த்துறை தொடங்கியுள்ளது.
சென்னை நீங்கலாக பல மாவட்டங்களில் உள்ள சமத்துவப்புரங்களில் எத்தனை பேர் குடியிருக்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிசை மாற்று வாரியங்களில் குடியிருப்பவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியத்துறை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டு வருகிறது.
வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. 2 ஆண்டு உத்தரவாதம், மாவட்டம் தோறும் 10 பழுது நீக்கு மையங்கள், ஒவ்வொரு தொலைக்காட்சியுடன் ஒரு ஆன்டெனா அளிக்க வேண்டும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் தமிழக அரசின் சின்னம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிக்கான விண்ணப்பம் வருகிற 21 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். 24 ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுகிறது.










