Monthly Archives: பிப்ரவரி 2006

நாடார்களுக்கு பட்டை நாமமா?

தேர்தல் நேரத்தில் பல்வேறு சுவரொட்டிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. அதுவும் நான் வசிக்கும் இடம் மிகவும் பலமான இடம். சரியாக 250 மீட்டர் நடந்தால் கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடு. மற்றொரு பக்கம் 500 மீட்டர் நடந்தால் ராயப்பேட்டை அஇதிமுக தலைமை அலுவலகம். அதனால் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் பார்க்க போஸ்டர்களுக்கு சிறிதும் குறைவில்லை.

இந்த போஸ்டர்களை கேமராவால் படம் பிடித்து தேர்தல்2006 வலைப்பதிவில் போட ஆசைதான். ஆனால் இதற்கென கையில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்வது அபத்தமாக உள்ளது. என் செல்பேசியில் கேமரா வசதி கிடையாது.

எனவே அவ்வப்போது படம்; மற்ற நேரங்களில் போஸ்டர்களில் கண்ட வாசகங்கள் மட்டும்.

இன்று பார்த்த போஸ்டர்:

“தலைவர் கலைஞர் அவர்களே
சோனியா காந்தி அவர்களே
தமிழகத்திற்கு 13 மந்திரிகள்
ஆனால் நாடார்களுக்கு பட்டை நாமமா?
பதில் சொல்வீர்!

நாடார் பேரவை”

இந்த போஸ்டரில் காமராஜர் படம் இடது மேற்புறம் உள்ளது.

புலி வருது..புலி வருது…

தமிழக தேர்தல் அலசலில் ம.தி.மு.க வை எடுத்து அலசலாம் என்று உள்ளேன். ஏற்கனவே குழலி ஒரு அலசலை வெளியிட்டுள்ளார்.இது என் பார்வையில் சுருக்கமாக.

இது சிறிய கட்சிதான் எனினும் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் சுமார் ஐம்பது தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆப்பு வைத்தது என்பதிலிருந்து இவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த கட்சியில் வைகோ மட்டும்தான் பெரிய தலைவர்.ஆனால் கருணாநிதிக்கு பிறகான தமிழக அரசியலில் வைகோவின் பங்கு மிகப்பெரிது.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

வைகோ தலைமையில் கருணாநிதிக்கு பிறகு தி.மு.க மீண்டும் விசுவரூபம் எடுக்கும். தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது வைகோ நடத்திய போட்டி பொதுக்குழுவிற்கும் கணிசமான கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். சேலம் வீரபாண்டி ஆறுமுகம்கூட ஊசலாடி கொணடிருந்தார்.கருணாநிதி ஒருவருக்காகத்தான் அனைவரும் ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொள்வது போல் நாடகம் ஆடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.ஸ்டாலின் கோஷ்டி என்று ஒன்று உண்டு.அதைத்தவிர மற்ற அனைவரும் வைகோ பின்னால் அணிசேருவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
ஸ்டாலினா, வைகோவா என்ற கேள்வி ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் வரும்போது தொண்டன் கண்டிப்பாக வைகோவை தான் தேர்தெடுப்பான் என்பது திண்ணம்.அந்த நம்பிக்கையில்தான் வைகோவும் கட்சி நடத்திக்கொண்டு வருகிறார்.நம்பிக்கை வீண்போகாது என்பது என் கணிப்பு.

தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட வைகோ அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, மீண்டும் தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, பி.ஜே.பி, காங்கிரஸ் என்று அனைவருடன் ஒரு ரவுண்ட் கூட்டணி அனுபவம் உள்ளதால் அரசியல் நடத்துவதிலும் தேறுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

அதிகம் உணர்ச்சி வசப்படும் தலைவரான வைகோ ஆட்சி நடத்திய அனுபவம் எதுவும் பெற்றிருக்கவில்லை. குறைந்தது ஒரு மந்திரி பதவியில் கூட ரொம்ப நாள் இருந்ததில்லை.இவருடைய நிர்வாகத்திறன் பற்றி யாருக்கும் தெரியாது.ஆனால் நேர்மையானவர் என்ற பெயர் உள்ளது.கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்ற பெயர் உள்ளது.அதுவே போதும்.

தேர்தலை பொறுத்தவரை தனியாக இந்த தேர்தலில் எந்த சீட்டையும் இவர்கள் வெல்ல முடியாது.கூட்டணி விஷயத்திலும் ம.தி.மு.க ஊசலாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் அதிக சீட் கேட்கும் நோக்கத்தில்தான் இந்த நாடகத்தை வைகோ ஆடுவதாக தோன்றுகிறது.பொடாவில் உள்ளே இருந்ததை மறப்பது வைகோவிற்கு கடினம்.

ம.தி.மு.க.விற்கு தென்மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கு நாயுடு இனத்தை சேர்ந்த விஜயகாந்த கட்சி ஆரம்பித்து உள்ளதால் குறைந்திருக்கும் என்று ஒரு எண்ணம் உள்ளது.அது உண்மையா என்று இந்த தேர்தல் பதில் சொல்லும்.

சண்டக்கோழி அமெரிக்கா

Why We Fightதிரைவிமர்சனம்

மக்கள் நலனை பாதுகாப்பது போல் கொடுங்கோலன் பேசுவான்; ஆனால் அவன் செய்கைகளினால் நன்மை கிடைக்காது.
Ramman Kenoun


அமெரிக்காவிற்கு இது பயம் தலைக்கேறிய காலங்கள்.

ஏழாவது படிக்கும் மாணவன் தன்னுடைய பள்ளிக் கட்டுரையில் எழுதிய விஷயத்துக்காக பள்ளியை விட்டே நீக்கப் படுகிறான். கிட்டத்தட்ட கைது ஆகி பாலர் சிறையில் கூட தள்ளியிருப்பார்கள்.

உன்னுடைய உகந்த நாளில் என்ன நடக்கும்‘ என்னும் கேள்விக்கு பதிலாக எழுதிய கட்டுரையினால்தான், அவனுக்கு பைத்தியம் பட்டம் கிடைத்திருக்கிறது.

‘கோகோ-கோலாவின் தலைவர், வால்-மார்ட்டின் மேலாளர்கள், அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆகியோர் கொல்லப்படுவார்கள்’

என்று பொலிடிகலி இன்கரெக்ட் ஆக எழுதி வைத்தான். வயதுக்கு மீறிய சிந்தனை பள்ளியை விட்டே நீக்க செய்து, அமெரிக்க உளவுப் படையால் கண்காணிக்கப்பட்டு என்று அமெரிக்காவின் மொத்த பாதுகாப்பு அமைச்சகமே அந்த மாணவனை ஆராயத் தொடங்கி விட்டது.

அமெரிக்காவிற்கு ஏன் இந்த பயம்? வியட்னாமில் கம்யூனிஸ்ட்கள் ஆண்டால், தெற்காசியா முழுவதும் கம்யூனிஸம் பரவி விடுமோ என்று அஞ்சுகிறார்கள். பின் லேடனுக்கு பயந்துகொண்டு மொத்த வளைகுடாப் பகுதியிலும் அமெரிக்க இராணுவத்தை கோலோச்ச விடுகிறார்கள். உலகப் போர் முடிந்து சரித்திரமாகிய பின்பும், நட்பான ஜெர்மனியிலும் இன்ன பிற ஐரோப்பாவிலும் கூட ஐம்பது வருடங்களுக்கு மேலாக அமெரிக்கத் தளவாடங்கள் ஊடுருவி நிற்கிறது. ருஷியா சிதறுண்ட பின்பும் அதன் மிச்ச மீதிகள் அனைத்திலும் பராக்கிரமத்தை ஊடுருவி omnipresent-ஆக உலகத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் அமெரிக்க வீரன் நிற்கவைக்கப் பாடுபடுகிறார்கள்.

கிரேக்க, ரோமானிய சாம்ராஜ்யங்கள் இருந்தது. ·ப்ரென்சு, ஆங்கிலேயே, ஸ்பானிஷ் என்று பின்பு மாறியது. இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டனும், மற்ற ஐரோப்பாவும் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஜப்பானில் அணுகுண்டு நாசம். ருஷியாவில் ஏராளமான சேதங்கள். சீனாவும் சுருண்டிருந்த காலம். திடீரென்று சுயராஜ்யத்துக்கு மாறிய தெற்காசிய, வளைகுடா ஆசியாவின் காலனி அரசுகள். ஆனால், அமெரிக்காவுக்கு மட்டும் இவ்வித பாதிப்புகள் ஏதும் இல்லாமல், பெரிய அளவில் வீரர் இழப்பு இல்லாமல் வெற்றி. வெளிப்படையாக புதிய சாம்ராஜ்யம் உருவாக்கா விட்டாலும் அதைத்தான் அமெரிக்கா கடந்த ஐம்பது வருடங்களாக விஸ்தரித்து வந்திருக்கிறது என்கிறார் யூஜீன் (Eugene Jarecki).

‘·பாரென்ஹீட் 911’ எடுத்த மைக்கேல் மூரினால் பிரபலப்படுத்தப்பட்ட விவரணப் பட முறையில் எடுக்கப் பட்ட திரைப்படம் – ‘நாம் ஏன் சண்டை போடுகிறோம்?’

ஆனால், மைக்கேல் மூர் போல் இல்லாமல் எழுவரல் (liberal) மற்றும் பழமைவாத (conservative) சிந்தனைகள் இரண்டுக்குமே போதிய அளவு சமபங்கு கொடுக்கும் படம். நடுநிலையான அதே சமயம் விறுவிறுப்பான, தலையங்கப் பக்க கட்டுரையைப் படிப்பது போன்ற வடிவம். கருத்து சுதந்திரத்துடன் இயங்கும் விவாதக் குழுகளில் நடைபெறுவது போன்ற, எதிரும் புதிருமான தர்க்கங்கள். விவரங்கள் நிறைந்த தகவல்களை மட்டும் காட்டி மயக்காமல், சரித்திரத்தை சுவாரசியமான நிகழ்வுகளுடன் பதிந்து முடிவை நம்மையே எடுக்கச் சொல்லும் ஆவணப்படம்.

அமெரிக்கப்படைக்கு வீரர்களை ஈர்ப்பதற்காக ·ப்ரான்க் காப்ரா (Frank Capra)வின் படத்தின் தலைப்பான ‘Why We Fight’-ஐ மீண்டும் இந்தப் படத்துக்கும் இட்டிருக்கிறார். அன்று நாஜி ஜெர்மனியையும் ஆதிக்க சக்திகளையும் எதிர்ப்பதற்கு இரண்டாம் உலகப் போரில் அணிதிரட்டுவதற்கு உபயோகப்பட்ட ‘தலைப்பு’, இன்று ஆதிக்க சக்திகளை அடையாளம் காட்டுவதற்காகப் பயன்பட்டிருக்கிறது.

MIC (“military-industrial complex”) என்னும் பதம் குடியரசுக் (Republican) கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஐஸன்ஹோவர் (Dwight Eisenhower)-இனால் பயன்படுத்தப்பட்டு, இன்று அமெரிக்க ஆட்சியை ஆட்டிப் படைப்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். அரசியல்வாதிகள், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்கு வங்கி, கட்சி செலவுக்கு பணத்தைக் கொட்டும் செல்வாக்கு அமைப்புகள் (lobbyists), மற்றும் இராணுவத்திற்கு ஆயுதங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் என்று கூட்டு சேர்ந்து தொடர்ச்சியாகப் போர்களைத் தொடுப்பதன் பொருளாதார காரணங்கள் நம் முன் விரிகிறது.

அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதோவொரு வகையில் இராணுவத்திற்குத் தேவையானவை உற்பத்தியாகிறது. இராணுவத்திற்கான செலவைக் குறைக்க மசோதா கொண்டு வந்தால், அந்தத் தொகுதிகளை சேர்ந்தவர்கள், மசோதாவைத் தோற்கடிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்கிறது. மேலும் அந்தப் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள், அன்பளிப்பாக, தேர்தல் நிதியை உரியவர்களிடம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து இராணுவ காண்டிராக்ட் அவர்களுக்கு செல்கிறது. இராணுவத்திற்கான பட்ஜெட் அதிகரிக்கிறது. அதிக நிதி ஒதுக்கீடை நியாயப்படுத்த மேலும் போர்கள் தொடங்குகிறது.

இந்த சக்கரம் எப்படி முடியும்?

சால்மர்ஸ் ஜான்சனின் (Chalmers Johnson) Sorrows of Empire எழுதிய விஷயங்களைத் திரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்க வல்லரசையும், ஜான்ஸன் சொல்லும் Blowback எனப்படும் பூமராங் ஆகும் அயலுறவுக் கொள்கையும் ரோமானிய சாம்ராஜ்யம் போன்ற வீழ்ச்சியும் எவ்வாறு நெருங்குகிறது என்பதை புரிய வைக்கிறார்கள்.

சரி… அமெரிக்காவின், அமெரிக்க கொள்கைகளின் வில்லன் யார்? பிரச்சினை எப்படித் தீர்ப்பது? படத்தின் முடிவில் ஒரேயரு குற்றவாளி கிடையாது.

‘ஹாலிபர்டன்’ அமைப்பின் மூலம் கோடி கோடியாக சம்பளம் வாங்கிய இந்நாள் துணை ஜனாதிபதி டிக் சேனியை நோக்கி ஒரு விரல் சுட்டுகிறது. இன்னொரு விரல் இராணுவ ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக கட்சி வித்தியாசம் பாராமல், பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் மந்திரிகளையும் தன்வசமாக்கியுள்ள, பங்குச்சந்தைப் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் சுட்டுகிறது. அடுத்த விரல், ‘தற்காப்புக்காக பிறரை துவம்சம் செய்வது தவறல்ல’ என்னும் பிரச்சாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ள ஜனாதிபதியையும் அவரின் சிந்தனையை தன்வசப்படுத்திய அமைப்புகளையும் சுட்டுகிறது. கடைசியாக, ‘எதற்காக போர்’ என்று கவலை கொள்ளாமல், பின் விளைவுகளை அலட்சியப் படுத்தும் அளவு சொந்தக் கவலைகளில் மூழ்கிப் போன அமெரிக்க சமுதாயத்தையும், குடிமகன்களையும் காட்டுகிறது.

படம் நெடுக பலரின் பேட்டிகள், குரல்கள் ஒலிக்கிறது. 9/11 தாக்குதலில் தன் மகனை இழந்த ஒருவரின் கதை தொடர்ச்சியாக வருகிறது. உலக வர்த்தக மையம் வீழ்ந்ததற்கு ஈராக்தான் காரணம் என்று அவரை ஊடகங்கள் நம்பவைக்கிறது. பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறார். முதன் முதலாக ஈராக்கின் தலைமையைத் தகர்க்க விரையும் இரு போர் விமானங்கள் காட்டப்படுகிறது. அவருக்கு தன் மகனின் இழப்பிற்கு, ஈடு கிடைத்த திருப்தி. பல மாதம் கழித்து முதல் அதிர்ச்சி; அவருக்கும் நமக்கும் கிடைக்கிறது. ஈராக்கில் ‘இராஜ்ஜிய மாளிகை’, ‘அரசின் முக்கிய புள்ளிகள்’ என்று கருதப்பட்டுத் தாக்கிய இடங்கள் எல்லாம் தங்கள் இலக்கை தவறவிட்டிருக்கிறது. ஒன்றல்ல; இரண்டல்ல… அனைத்து குறிகளுமே ராஜாக்களை விட்டு விட்டு பொதுஜனங்களை காவு வாங்கியிருக்கிறது.

இதற்கு சமாதானமாக ‘அடுத்த தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டேயிருக்கிறது’ என்று புதிய தளவாடங்களை விற்க நிறுவனங்கள் போட்டி போடுகிறது. கணினிக்கு நிரலி எழுதுவதால் இந்த மாதிரி பிழைகள் சகஜம் என்றும், அடுத்த வெர்ஷன் சரியாக வேலை செய்யும் என்னும் சப்பைக்கட்டு முன்வைக்கப்படுகிறது.

மேலும், குண்டு வீசும் விமானிகளுக்கு தாங்கள்தான் முதன் முதலாக எதிரியின் கோட்டைக்குள் நுழைகிறோம் என்னும் நடுக்கம் கலந்த மயக்கம். மேக மூட்டம் நிறைந்த இருட்டில் இலக்கை சரி பார்க்கும்போது, ஈராக்கிய போர் விமானத்தால் வீழ்த்தப்படுவிடுவோமோ என்னும் எண்ணம் பின்னணியில் ஓடிக் கொண்டே இருக்கிறது. எதிரியால் கொல்லப்பட்டுவிட்டால், வீட்டில் இருக்கும் குழந்தைகளின் நிலை என்ன என்னும் கழிவிறக்கங்கள் போன்றவற்றை உணர்த்தும் பேட்டிகள் நடு நடுவே நமக்குக் காட்டப்பட்டு, ‘உணர்ச்சியின்றி அடிக்க, குறிதவறாது தாக்க, இராணுவம் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல!’ என எண்ண வைக்கிறது.

மகனை இழந்தவருக்கு பேரதிர்ச்சியாக ஜார்ஜ் புஷ்ஷின் வாக்குமூலம் அமைகிறது. ‘ஈராக்கை நாம் போர் தொடுக்க காரணம் 9/11 அல்ல.’ என்கிறார். எய்தவனையும் பிடிக்காமல், அம்புகளையும் தப்பிக்க செய்துவிட்டு மான்கள் என்றாவது புலியாக மாறலாம் என்னும் வாதத்தில் போர் தொடுக்கிறாரா என்று வருந்துகிறார்.

அமெரிக்கா என்றுமே சண்டைக் கோழிதான். கம்யூனிஸத்தைக் கட்டுப்படுத்துவோம் என்னும் கோஷம் இருக்கலாம். க்யூபாவிற்கு சுதந்திரம் என்று மொழியலாம். பேரழிவு ஆயுதங்கள், அணு ஆயுதங்கள், எண்ணெய், ‘அவர்கள்தான் உதவி கேட்டார்கள்’, அகிலமெங்கும் ஜனநாயகம், சமத்துவம், சமாதானம் என்று பல காரணங்களை முன் வைக்கலாம். அமெரிக்கத் தலைவர்கள் கென்னடியாகட்டும்; ரேகன் ஆகட்டும்; க்ளிண்டன் ஆகட்டும்; சுதந்திரக் கட்சி, குடியரசு கட்சி என்று வித்தியாசம் பாராமல் எல்லாருமே போர் ஆர்வம் கொண்டவர்கள்.

அமெரிக்காவின் போக்கற்ற ஏழை குடிமக்களுக்கு இராணுவம் மட்டுமே குட்டிச்சுவராக அமைகிறது; ஆபத்பாந்தவனாக கை கொடுக்கிறது. இராணுவ விமானம் ஓட்டுவதற்கு ஆசைப்பட்டு, ஹெலிகாப்டர் மெக்கானிக் ஆக சேர்ந்தவனின் கதையை சொல்கிறார்கள். தாய் சமீபத்தில்தான் இறந்திருக்கிறாள். கல்லூரிக்கு செல்வதற்கு பணம் கிடையாது. பள்ளியை மட்டும் முடித்துவிட்டு என்ன செய்வதென்று தவிக்கிறான். அம்மா இருந்தவரை இராணுவத்துக்கு செல்லக் கூடாது என்னும் கட்டளை. அவளும் இல்லாத உலகத்தில், அடுத்த வேளை சோற்றுக்குத் திண்டாடும் நிலையில் இராணுவ விமானியாக வாய்ப்பு இருக்கிறது என்னும் வார்த்தைக்கு மயங்கி சேர்கிறான்.

இராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பவர்களைக் காட்டுகிறார். வியட்நாமில் நேரடியாக குண்டு வீச்சைப் பார்த்தவள். தெருவையே சுடுகாட்டாக்கும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கிறாள். அவளுக்கு அது ஒரு அன்றாட வேலை. அதன் மூலம் நேரும் இழப்புகளை நேரிலேயே அனுபவித்திருந்தால் கூட, தத்தெடுத்துக் கொண்ட நாட்டிற்கு செய்யும் சேவை.

தீவிர இடதுசாரியான கோர் விடால் (Gore Vidal) வருகிறார். ‘ஜப்பானில் குண்டு போட்டதே, நிக்ஸனை பயமுறுத்தத்தான்’ என்கிறார். ஏற்கனவே சரணடைந்துவிட்ட, போர் முடிந்துவிட்ட தருணத்தில் நாகஸாகி, ஹிரோஷிமாவை ட்ரூமன் தாக்கியதன் ஒரே காரணம் ‘நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல’ என்று ருஷியாவை மிரட்டிவைக்கத்தான் என்கிறார். ஈராக்கில் நிரந்தரமாக பதினான்கு இராணுவத்தளங்கள் அமைந்துவிடும் என முடிக்கிறார்.

இந்த மாதிரி சில காட்சிகளில், ஆங்காங்கே அராஜகமாய் கருத்துத் திணிப்பு நடைபெறுகிறது. ஈராக் போரை ஆதரித்த ஜான் மெக்கெயின் (John McCain) மகா உத்தமராக சித்தரிக்கப் படுகிறார். ஒரு நிமிடத்தில் ஐநூறு பக்க புத்தகங்களை சுருக்குவதன் விளைவு என benefit of doubt-ஐ இயக்குநருக்குத் தந்துவிடலாம்.

இராணுவத்திற்கான அமெரிக்காவின் நிதி ஒதுக்கீடு நானூறு பில்லியன் வெள்ளிகளை மிஞ்சுகிறது. நாட்டின் மொத்த செலவில் 52 சதவீதம் மிலிட்டரிக்கு செல்கிறது. கல்விக்கு செலவிடப்படும் ஏழு சதவீதத்தையும், உடல்நலத்திற்கு ஒதுக்கப்படும் ஆறு சதவீதமும், ஏம்போக்கியாக ஓரமாக பிச்சை போடப்பட்டிருக்கிறது. அயலுறவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 93 சதவீதம் பாதுகாப்புத் துறைக்குத் தரப்பட்டுவிடுகிறது. எஞ்சியிருக்கும் ஏழே சதவிகிதம்தான் உள்நாட்டு மற்றும் தற்காப்புகளுக்காக ஒதுங்குகிறது.

இவ்வளவு பணமும் எப்படித் தேவைப்படுகிறது?

இராணுவ காண்டிராக்ட்களை ஏலத்தில் பிடிக்கும் அமெரிக்க நிறுவனங்கள். ஒப்பந்தங்களைப் பெறுவதற்குக் கொடுக்கும் லஞ்சங்கள். போர்க்கருவிகளை மேம்படுத்த வலியுறுத்தும் லாபியிஸ்ட் அமைப்புகள். தேர்தல் நிதியைக் கேட்டுப் பெறும் அரசியல்வாதிகள்.

சமீபத்தில் பிபிசியில் The Power of Nightmares நிகழ்ச்சியில் அமெரிக்க நியோகான்களையும் (neo-conservatives) அடிப்படைவாத இஸ்லாமியர்களையும் ஒப்பீடு செய்யும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இருவருக்குமே புதியதோர் உலகத்தை இனிய முறையில் அமைப்பதே குறிக்கோள். ஆனால், தாங்கள் நினைத்ததற்கு மாறான பலன்களை இவர்களின் செய்கைகள் உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார அடிப்படையே போர்களினால்தான் அமைகிறது. குட்டி நாடுகளான கிரெனாடா, பனாமா, ஹைதி, சோமாலியாவில் தலையிடுவதில் ஆரம்பித்து கொள்கைப் போர் என்று சொல்லப்படும் பெரிய யுத்தங்களான வியட்நாம், ஈராக் வரை பொருளியல் கொள்கைக்களுக்காகவே நடாத்தப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் சொல்லும் விவரணப் படம்.

அமெரிக்கவாசிகள் இன்னும் ஏன் ஈராக் ஆக்கிரமிப்பை நம்புகிறார்கள். நாளையே ஈரான் மீது போர் தொடுத்தாலும் ஏன் பொங்கியெழ மாட்டார்கள். பிறன்மனை நோக்கிய ஜனாதிபதி க்ளிண்டனை impeach செய்தவர்கள், பொய் சொன்ன அமெரிக்க ஜனாதிபதியை ஏன் குற்றஞ்சாட்டி அவமானப்படுத்தவில்லை?

இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் திரைப்படம் தேவையா, என்பதை 2008 அமெரிக்கத் தேர்தல் அறிய வைக்கலாம்.

திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள்: Why We Fight – A Film By Eugene Jarecki


அமெரிக்க பட்ஜெட்டை தூசு தட்டி புது இரத்தம் பாய்ச்சும் முறை:

  • ஒரு லட்சம் வீரர்களை திரும்ப அழைத்துக் கொண்டு, ருஷியாவுடன் ஆன பனிப் போர் திட்டங்களை நவீனமாக்குதல்: $20 பில்லியன்
  • அணு அணிவகுப்பை ஆயிரம் ஏவுகணைகளுக்குக் குறைத்தல்:: $15 பில்லியன்
  • பனிப் போர் காலத்து ஆயுதங்களைத் தவிர்த்தல்: $12 பில்லியன்
  • வான்வெளி போர் திட்டங்களுக்கான செலவை முடித்துக் கொள்ளுதல்: $ 8 பில்லியன்
  • பிறநாடுகளுக்கான ஆயுத தானங்களை மட்டுப்படுத்தல்: $ 4 பில்லியன்
  • அயல்நாடுகளில் நிறுவனத்தை பதிவு செய்வதன் மூலம் உண்டாகும் வரி ஏய்ப்புகளை நீக்குதல்: $ 1 பில்லியன்

    மொத்தம் $60 பில்லியன் சேமிக்கலாம்

    Tamiloviam.com


    | |

  • அனைவரும் தனித்துப் போட்டியிட்டால் என்ன ஆகும்?

    இது நடக்கப்போவதில்லை, இருந்தாலும் கற்பனைதானே?

    தமிழகத்தில் முக்கியமான முதல் நான்கு கட்சிகள்: திமுக, அஇஅதிமுக, பாமக, காங்கிரஸ்.
    அடுத்த இடங்களில் இருக்கும் கட்சிகள்: மதிமுக, கம்யூனிஸ்டுகள்
    பெயர் தெரிந்து ஆனால் வாக்குகள் அதிகம் கிடைக்காதவர்கள்: பாஜக, விடுதலை சிறுத்தைகள், பார்வர்ட் பிளாக், முஸ்லிம் லீக், இன்ன பிற (மக்கள் தமிழ் தேசம் போன்றவை)
    புது ஆசாமிகள்: விஜயகாந்த்தின் கட்சி

    இதில் திமுக, அஇஅதிமுக இரண்டும் முதல் இரண்டு இடத்தில். மிகச்சிறிய சதவிகித வித்தியாசமே இவர்களுக்கு இடையில் இருக்கும். பாமக நிச்சயமாக மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் மாநில அளவில் மூன்றாவது பெரிய வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் தனித்து நின்றுப் போட்டியிட்டால் பாமகவே காங்கிரஸைவிட அதிகமாக இடங்களைப் பெறும் என்பதால் பாமகவுக்கே மூன்றாவது இடம்.

    எந்தக் கட்சியும் எந்த இடத்திலும் கூட்டு சேராமல் போட்டியிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். 90% இடங்கள் முதல் நான்கு கட்சிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மதிமுகவுக்கு ஓர் இடம் கூடக் கிடைக்காது என்று நினைக்கிறேன். வைகோ நின்றால் அவருக்கு மட்டும் வெற்றி கிட்டலாம். கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு அல்லது மூன்று இடங்கள் கிடைக்கும். மீதி அனைவருக்கும் டெபாசிட் கூடக் கிடைக்காது.

    அனைவரும் தனியாக நின்றால் என்ன ஆகும் என்று கணிக்கலாமா?

    மொத்த இடங்கள்: 234
    அஇஅதிமுக: 90
    திமுக: 85
    பாமக: 35
    காங்கிரஸ்: 15
    மதிமுக: 1
    கம்யூனிஸ்டுகள்: 3
    சுயேச்சைகள்: 5

    அஇஅதிமுக அதிகமாக இடங்கள் பெறுவதால் அவர்களால் அமைச்சரவை அமைக்க முடியும் என்று சொல்ல முடியாது. தேர்தலுக்குப் பிறகான கூட்டணி முக்கியத்துவம் பெறும். அப்பொழுது பாமக ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா பாணியில் பாதி காலத்துக்குத் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றுகூடக் கேட்கலாம்!

    என் கற்பனை எப்படி என்று பின்னூட்டத்தில் சொன்னால் சந்தோஷப்படுவேன்!

    கருத்துக் காவலர்கள்

    Political correctnessGeorge Orwell

    பிறந்ததில் இருந்து சாகும் வரை கருத்துக் காவலர்களின் கண்காணிப்பில்தான் கட்சி உறுப்பினர்கள் வாழவேண்டும். அவன் மட்டும் தனியாக இருக்கும்போதும் கூட தனியாக இருக்கிறானா என்பது நிச்சயமில்லை.

    அவன் எங்கிருந்தாலும், நித்திரையில் ஆழ்ந்திருந்தாலும், முழித்திருந்தாலும், வேலையில் மூழ்கியிருந்தாலும், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், படுக்கையில் சயனித்திருந்தாலும், அவனை சோதனை போட முடியும். சோதனைக்குள்ளாகிறோம் என்பதை உணராமலேயே, பரீட்சிக்கப் படுகிறோம் என்று அறிவிப்புகள் வராமலேயே நடத்தப்படும்.

    அவன் எதையும் வித்தியாசமாக செய்வதில்லை. அவனுடைய நட்பு, கேளிக்கை, பாவனை, குடும்பத்துடன் பழகும் விதம், தனிமையில் தோன்றும் முகச்சலனம், தூக்கத்தில் புலம்பும் வார்த்தை என்று எல்லாமுமே, இயல்பான உடலின் அசைவு உட்பட துல்லியமாக அலசப்படுகிறது. மிகச்சிறியதாகக் கூட பிழற வேண்டாம். படபடத்திருக்க வேண்டாம். பழக்கவழக்கத்தில் நிகழும் நுட்பமான மாறுதல்கள் மட்டுமே போதும். அவனைக் காட்டிக் கொடுத்துவிடும்.

    அடுத்த டேபிளில் அமர்ந்திருப்பவன் கருத்துக் காவல்படை (Thought Police)யை சேர்ந்தவனாக இருக்கலாம்.

    மற்றவர்களால் கவனிக்கப் படுகிறோம் என்பதை எப்பாடுபட்டாலும் அனுமானிக்க முடியாது. ஒவ்வொருவரையும் இருபத்தி நாலு மணி நேரமும் கருத்துக் காவலர்கள் பார்த்துக் கொண்டிருப்பதும் சாத்தியமே. எப்படியாக இருந்தாலும் உங்கள் மேல் ஒற்றுக்கருவியை எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் பொருத்திக் கொள்ளலாம். நீங்கள் வேவு பார்க்கப்படுகிறீர்கள் என்ற நினைப்பில்தான் வாழவேண்டும். தூக்கத்தில் பேசுவது பேராபத்து. உளறல் என்றாலும் உங்கள் கருத்தாகக் கொள்ளப்படும்.

    கருத்துக் குற்றம் (Thoughtcrime) என்பதை எப்போதுமே வெளிக்காட்டாமல் இருக்க முடியாது. பல காலமாக சிந்தனையை மறைத்து ஒதுக்கியிருக்கலாம். என்றாவது ஒரு நாள், அவர்களால் நிச்சயம் பிடிபட்டுவிடுவீர்கள்.

    அண்மைய காலகட்டத்திய சிறுவர்கள் எல்லாருமே பாவப்பட்டவர்கள். குப்பையை சொல்லித்தரும் பள்ளி; சார்ந்திருக்கும் அமைப்பின் முழக்கங்கள்; காலை வணக்க கானங்கள்; எல்லாமே அவர்களின் சுவாதீனமான உணர்வுகளை தூரத் தள்ளிவிட்டது. கட்டுக்குள் அடங்காதவர்களாக மாறிவிட்டார்கள். ஆனால், அவர்களின் கோபம் கட்சியின் எஃகு சட்டங்களை உடைப்பதற்கு எதிராக அல்லாமல், கருத்துக் கிரிமினல்களை நோக்கிப் பாய்கிறது.

    தங்கள் பெற்றோருக்கு எதிராக செயல்பட வைக்கப்படுகிறார்கள். கருத்துக் காவலரின் பிரதிநிதியாக குடும்பத்தை வேவு பார்க்கிறார்கள். நம்பகம் வாய்ந்த உற்றவர்களே ஐந்தாம்படையாக துப்பு கொடுத்து சூழ்ந்திருக்கிறார்கள்.

    முப்பதைத் தாண்டியவர்கள் சொந்தக் குழந்தைகளைக் கண்டு அஞ்சுவது சாதாரணமானது. காரணமும் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு வாரமும் செய்தித்தாளில் பெற்றோரின் சம்பாஷணையைத் துப்புக் கொடுத்து, கருத்துக் காவலரிடம் அனுப்பிய ‘குழந்தை நட்சத்திரம்’ குறித்த செய்திகள் வெளியாகிறது.

    அது இரவில் மட்டும்தான் நடந்தது. எப்பொழுதுமே இரவுகளில்தான் கைதுகள் அரங்கேறியது. அனேக கைதுகள் வெளியில் தெரிவதில்லை. கோர்ட்டுக்கு செல்வதும் கிடையாது. நள்ளிரவில் மக்கள் காணாமல் போய்விடுவார்கள். உங்களின் பெயர் தஸ்தாவேஜுகளில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலின் தடயங்களும் அழிக்கப்படும். தங்களின் வாழ்வு மறுக்கப்படும். உங்களின் இருப்பு மறக்கப்படும். உங்களைக் கொன்று, அழித்துவிடுவார்கள். காற்றோடு கலந்து மறைவீர்கள்.

    அசாதரணமாக, சில சமயம் இறந்தவராக நினைக்கப்பட்டவர் பொதுவில் தோன்றுவார். மக்கள் மன்றத்தில் விசாரணை நடக்கும். நூற்றுக்கணக்கானவரை வாக்குமூலமாகக் குற்றஞ்சாட்டுவார். அதன்பிறகு அவரும் காணாமல் போய்விடுவார். இந்த முறை மீளமாட்டார்.

    சரியான முடிவென்பது அவர்கள் உங்களை அடைவதற்கு முன், நீங்களே உங்களைக் கொன்று கொல்வதுதான். சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். ஆனால், விஷம், துப்பாக்கி, குண்டுகள் போன்ற கருவிகள் இல்லாத உலகத்தில் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு பெருவீரம் தேவைப்படுகிறது.

    1984 :: ஜார்ஜ் ஆர்வெல்

    Political correctness என்னும் உபதலைப்பும் மொழியாக்கமும் நான் கொடுத்தவை. இந்தப் பகுதி பிடித்திருந்தால், நீங்கள் படித்து புரட்ட வேண்டிய ஆசிரியர்களும், புத்தகங்களும்:

    The New Thought Police : Inside the Left’s Assault on Free Speech and Free Minds ::

    Hannah Arendt: The origins of Totalitarianism | The Human Condition
    Daniel J Boorstin: Cleopatra’s Nose: Essays on the Unexpected | The Discoverers | The Creators | The Seekers
    Ray Bradbury: Fahrenheit 451
    Andrea Dworkin: Scapegoat: The Jews, Israel, and Women’s Liberation | Intercourse | Heartbreak: The Political Memoir of a Feminist Militant
    Brenda Feigen: Not One of the Boys: Living as a Feminist
    David Horowitz: Radical Son: A Generational Odyssey | Hating Whitey and Other Progressive Causes
    Aldous Huxley: Brave New World
    Ayn Rand: For the new Intellectual | Atlas Shrugged | The Fountainhead
    Michael Walzer: On Toleration


    | |

    தி சிரியன் ப்ரைட்

    The Syrian Bride :: திசைகள்

    பெரியோர்கள் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணம். உள்ளூர் நாட்டாமைப் பெரியவர்களுக்குப் பயப்பட்டு நடக்கும் குடும்ப அமைப்பு. மனைவி என்பவள் வீட்டுக்குளே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன். திருமணத்துக்குப் பின் பெற்றோரை பார்க்க முடியாதபடி பறந்து போய்விடும் மகள். காதலை கண்டிக்கும் பெற்றோர். ஜாலியாக ஊர் சுற்றி வாழும் மகன். காதல் மணம் புரிந்ததால் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெரிய அண்ணன்.

    கதையைப் பார்த்தால் தமிழ்ப் பட கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கிறது. முன்பின் பழக்கமில்லாதவருடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம். திருமணம் முடிந்தவுடன் அமெரிக்கா வாசம். கிராமத்துப் பழக்கவழக்கங்களுக்கு அடங்கி நடக்கும் குடும்பம் என்று இந்தியாவின் சகல அறிகுறிகளையும் கொண்ட படம்.

    மேலும் சில ஒற்றுமைகளும் காணக் கிடைக்கிறது. சகோதரராக இருந்தாலும் பாகிஸ்தான் போன்ற பக்கத்து நாட்டுடன் பிரச்சினை. அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு பிரஜைகள் பலாபலனை அனுபவிப்பது. மக்களின் மனங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஈகோ பார்த்து, எங்கேயோ எப்பொழுதோ எதற்கோ போட்ட நியம் அனுஷ்டானங்களை கர்ம சிரத்தையாக உருவேற்று வேற்றுமைகள் தொடர்கிறது.

    இதற்கு முன்பும் எல்லைப் பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக கோலன் ஹைட்ஸ் – இஸ்ரேல் – பாலஸ்தீன அனுபவங்களை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. வால் (Wall), செக்பாயிண்ட் (Checkpoint) விவரணப்படங்களும், போரில் அடிபட்ட செர்பிய மற்றும் போஸ்னிய வீரர் இருவரைப் பற்றிய நோ மேன்ஸ் லாண்ட் (No Man’s Land) இரண்டும் குறிப்பிடத்தக்கவை.

    இஸ்ரேலிய உளவுத்துறை நிபுணனுக்கும் நாஜியின் பேரனுக்கும் இடையே உள்ள உறவை ‘வாக் ஆன் வாட்டர்’ (Walk on Water) விவரித்தது. தற்கொலைப் படையினர் இருவரின் உலகத்தை ‘பாரடைஸ் நௌ’ (Paradise Now) சொன்னது. இஸ்ரேலில் வளர்வதற்கும் பாலஸ்தீனிய குழந்தைகளுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வை ‘அனதர் ரோட் ஹோம்’ (Another Road Home) காட்டுகிறது. சிரியன் ப்ரைடில் ட்ரூஸ் இனத்தவரை விவரித்தது போல் ஹஸிதிம் (Hasidim) மக்களை ‘உஷ்பிசின்’ (Ushpizin) வெளிச்சம் பாய்ச்சியது.


    திருமணத்துக்கு மணப்பெண் ‘மோனா‘ தயாராவதில் திரைப்படம் ஆரம்பிக்கிறது. சிகையலங்காரத்திற்கு செல்லும் காலையில் கோலன் ஹைட்ஸ் (Golan Heights) குறிப்புகள் கொடுக்கிறார் இயக்குநர். கட்டுப்பெட்டியான நகரம். ஆடு மேய்ப்பவர்களும், டீக்கடையில் பராக்கு பார்ப்பவர்களுமாக மந்தமாக விழித்துக் கொள்கிறது. அனைவருக்கும் அனைவரையும் தெரிந்திருக்கிறது. ட்ரூஸ் (Druze) இனத்தை சேர்ந்தவர்கள்.

    முஜாஹிதீன்கள் இந்தியாவாலும் பாகிஸ்தானாலும் கைவிடப்பட்டவர்கள். ட்ரூஸ்களின் நிலையும் கிட்டத்தட்ட இப்படித்தான். கோலன் ஹைட்ஸை சிரியா (Syria) சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், இஸ்ரேல் வசம்தான் கோலன் ஹைட்ஸ் இருக்கிறது. கோலன் ஹைட்ஸில் இருக்கும் ட்ரூஸ் மக்களுக்கு சிரியாவுடன் இணையத்தான் விருப்பம். இஸ்லாமியப் பழக்கவழக்கங்களுக்கு நெருக்கமானவர்கள். ஊர்த்தலைவர் பேச்சை மீறாது நடப்பவர்கள்.

    கடகடவென்று கதையில் புது பாத்திரங்கள் தோன்றுகிறார்கள். மணப்பெண்ணை தலைப்பில் கொண்டிருந்தாலும் மணப்பெண்ணின் அக்கா ‘அமல்‘தான் திரைப்படத்தின் நாயகி. அவளுக்கு இரு மகள்கள். மதக் கோட்பாடுகளின் படி உடை அணியாமல் முழுக்கால் சட்டையும் மேற்கத்திய ஆடைகளும் உடுப்பவள் அமல். தளைகளை விட்டு வெளியில் வந்து, மூச்சு விட்டுக்கொள்ள முயற்சிப்பவள்.

    குடும்பத்தின் மூத்த மகன் ‘ஹதேம்‘ இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளாததால் ஊரை விட்டுத் தள்ளிவைக்கப் பட்டிருப்பவன். ருஷியாவில் இருந்து டாக்டர் மனைவியுடனும் துறுதுறு மகனுடனும், தங்கை மோனாவின் திருமணத்திற்காக வந்து கொண்டிருக்கிறான்.

    இரண்டாமவன் ‘மர்வான்‘. இத்தாலியில் இருந்து ‘ஏற்றுமதி-இறக்குமதி’ செய்து வருகிறான். சிங்கப்பூர் குருவிகள் போன்ற வாழ்க்கையைக் கடத்துகிறான். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பெண்களுடன் நன்றாக வழிகிறான்.

    குடும்பத் தலைவர் ‘ஹமேத்‘ சிரியாவின் மேல் கொண்ட பாசத்தினாலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேல் கொண்ட வெறுப்பினாலும் சிறைவாசம் முடிந்து பரோலில் இருப்பவர். குழம்பிய அப்பாவியாக, அமலின் கணவனாக மூத்த மாப்பிள்ளை ‘அமீன்‘ திருமண ஏற்பாட்டில் மும்முரமாக இருக்கிறார்.

    மணநாளன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் வருகிறது. சிரியாவின் தலைவர் இறந்து விட அவரின் மகன் பதவியேற்பு வைபவம். இரண்டாவதாக அக்கா அமலுக்கு அன்றுதான் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிப்பதற்கான அட்மிஷன் கிடைத்த கடிதம் வருகிறது.

    குழப்பமில்லாமல் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் அறிமுகமாகிறார்கள். சிரியாவில் நடக்கும் தலைமை மாற்றம், செய்திகளில் விவரிக்கப்படுகிறது. கோலன் ஹைட்ஸில் இருப்பவர்களும் பக்கத்து ஊரில் இருப்பவர்களும் இடையே வேலிக்கம்பிகள் போடப்பட்டு, பேசுவதற்குக் கூட மெகா·போன் துணை வேண்டியிருக்கிறது.

    வேற்று மொழி பேசும் இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்; ஆனால், சொந்த மொழி பேசும் பக்கத்து ஊர்க்காரர்களுடன் ஊடாட ஒரு மைல் தடுப்புகள்; மின்கம்பி வேலிகள்.

    சிரியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவினால், கோலன் ஹைட்ஸில் இருந்து சிரியாவுக்கு நுழைந்தபின், மோனாவினால் மீண்டும் தன் குடும்பத்தை பார்க்க முடியாது. தொலைக்கட்சியில் நடிக்கும் கணவனை சின்னத்திரையில் கண்டு களித்தது மட்டுமே பரிச்சயம். தெரியாத ஒருவனுடன் எப்படி குடித்தனம் செய்யப் போகிறோம் என்னும் கவலை, படம் முழுக்க மோனாவிடம் குடியிருக்கிறது. திருமணத்துக்காக இருபது வருடம் உறவாடியவர்கள் அனைவரும் தூரமாகி, தள்ளிப் போய் விடப் போவது சோகத்தை இன்னும் பெரிதாக்குகிறது.

    ‘திருமணம் என்பது தர்பூசணி போல. உள்ளுக்குள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தால்தான் தெரியும்’ என்று ஆறுதல் மொழிகிறார் ·போட்டோகிராபர்.

    சாமுவல் பெக்கெட்டின் (Samuel Beckett) புகழ் பெற்ற நாடகமான ‘வெயிட்டிங் ஃபார் கொடாட்’ (Waiting for Godot)-ஐ சில இடங்களில் இந்தப் படத்தின் இயக்குநர் நினைவுபடுத்துகிறார். இருத்தலியத்தின் (Existentialism) சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லப்படும் அந்த நாடகத்தில் விளாடிமிரும் எஸ்ட்ராகனும் — கொடாட்டுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருப்பார்கள். சில சமயங்களில் பிணக்குகளுடனும், பல சமயங்களில் பேச்சுவார்த்தைகளுடனும்; எதற்காக கொடாட்டைப் பார்க்க வேண்டும் என்று அறியாமலே காலங்கடத்துவார்கள்.

    கொடாட்டை கடவுள் என்னும் குறியீடாகப் பார்க்கலாம். எல்லா சக்தியும் வாய்த்தவர். இருக்கிறாரா என்று தெரியாது. ஆனால், வரப்போவதாக தூதர்கள் சொல்லிச் செல்வார்கள். இருவரும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நாளையும் எதற்காக இந்த காத்திருப்பு வைபவம் என்பதை உணராமலேயே, கடனே என்று கழித்திருப்பார்கள்.

    நாயகி மோனாவுக்கும் இதே நிலைமைதான். இஸ்ரேலின் புதிய நடைமுறையினால், கோலன் ஹைட்ஸை விட்டு வெளியேறுபவர்களுக்கு குடியேறல் முத்திரை குத்தி அனுப்புமாறு மேலதிகாரியிடமிருந்து புத்தம்புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. நேற்று வரை முத்திரை குத்தாமல் அனுப்பித்தவர்கள், இன்று மட்டும் எப்படி ‘சிரியாவின் பகுதியான கோலன் ஹைட்ஸில் இருந்து, சிரியாவுக்குள்ளேயே நுழைபவர்களுக்கு’ இஸ்ரேலிய இலச்சினை பொறிக்கலாம் என்று அந்தப் பக்கம் சிரியா அதிகாரிகள் வெகுண்டெழுகிறார்கள்.

    இருதலைக் கொள்ளியாக, திருமணம் நடக்குமா என்று தெரியாத அலங்கரிக்கப்பட்ட மணப்பெண். மேலதிகாரிகளைக் கூப்பிட்டு பார்த்தால் இரு பக்கமும் பதில் கிடையாது. வியாழன் மாலை ஆனதால் எல்லாரும் வாரயிறுதியைக் கழிக்க சீக்கிரமே கிளம்பிவிட்டார்கள். எதற்காக இந்தப் புது முத்திரை சட்டம் என்றும் விளங்கவில்லை. நியதிகள் இயற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எதற்கு என்றுதான் தெரியவில்லை.

    குடும்பத்துக்குள்ளும் விரிசல்கள். மனைவியின் ஆசைகளை புரிந்து கொண்டாலும், ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்று அஞ்சி அஞ்சி வாழும் அமீன். மேலும், தன்னுடைய மகளின் காதலன் இஸ்ரேலிய ஆதரவாளனாக இருப்பானோ என்னும் பயம். காதலுக்காக குடும்பத்தைப் பிரிந்த ஹதேம் மீது பாசம் நிறைய இருந்தாலும், வெளிப்படையாக சொல்ல முடியாத அப்பா. உள்ளுணர்வு எல்லாருக்கும் சரியாகத்தான் இருக்கிறது. அதை வெளியே திறந்து விடுவதில்தான் தயக்கம் கலந்த அச்சம்.

    சாதாரண மனிதர்களால்தான் சட்டங்கள் திருத்தப்படுகிறது. ஆதிகாலத்து விதிகளை சிறிது சிறிதாகத்தான் அழித்து மீற முடியும். அனைவரும் உதவத்தான் பகைகளை ஒதுக்கத்தான் நினைக்கிறோம். Whitener போட்டு முத்திரையை அழித்துவிடுமாறு சிரியா அதிகாரி சொல்கிறார்.

    குடும்பத்துக்குள் இருந்த பனிமூட்டங்கள், இறுக்கங்களும் காலப்போக்கில் தளர்கிறது. காதலித்து வேற்று தேசத்தவளை மணந்த பெரிய மகனை, ஆதுரமாக அணைக்கிறார் அப்பா.

    ருஷிய மொழி, ஹீப்ரூ, அரேபிக் என்று பல மொழிகள் புழங்கினாலும், மணங்கள் இணைந்தால் திருமணங்களும் குடும்பங்களும் நாடுகளும் அல்லாடுவது நிற்கும் என்பது கதையின் குறியீடாகிறது.

    படத்தின் முடிவில் மங்களம் போடுவதற்கு வசதியாக, மணம் முடிக்கிறாள். அது நமது நம்பிக்கை. ஆனால், அவள் இன்னும் தன்னுடைய நாயகனுக்காக காத்துக் கொண்டுதான் இருப்பது போல்தான் தோன்றுகிறது. இஸ்ரேலிய அதிகாரி வெள்ளை மசியைப் பூசியது போல் நாமும் ஆங்காங்கே தார் கொண்டு நிறைய அழித்தால் உலகமே மணம் வீசும்.

    ஐ.எம்.டி.பி. | திசைகள்


    |

    மாம்பழம் சுவையாக இருக்குமா?

    கடந்த வாரம் தேர்தல் வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றி அலசினோம்.இந்த வாரம் அந்த வரிசையில் பா.ம.க.ஏற்கனவே பா.ம.க வை பற்றி தமிழ் சசி அருமையான ஒரு அலசலை வெளியிட்டுள்ளார். என் பார்வையில் சில விஷயங்கள்.

    பா.ம.கவை பற்றி அதிகம் பாஸிடிவ் விஷயங்கள் மீடியாவில் பேசப்படுவதில்லை என்பது உண்மை. தினமலர் மாதிரியான “நடுநிலை” நாளேடுகள் பா.ம.க.வை பற்றி எழுதாதது ஆச்சரியம் இல்லை.ஆனால் தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியும் அவர்களுக்கு சாதகமாக எந்த செய்தியையும் சொல்வது இல்லை.பா.ம.க வளர்ந்துவிடுமோ என்ற பயம் தான் காரணம்.ஆனால் ராம்தாஸ் கலைஞரை சந்தித்தால் மட்டும் பெரிதாக சொல்லுவார்கள். கூட்டணி உடைய கூடாதாம்.

    என்னதான் இது ஒரு சாதி கட்சி இல்லை என்று சொன்னாலும் இது பெரும்பாலும் ஒரு இனமக்களை நம்பித்தான் இருக்கிறது. வட மாவட்டங்களில் இவர்களுக்கு கண்டிப்பாக நிறைய செல்வாக்கு உள்ளது. ஏறத்தாழ முப்பது தொகுதிவரை வெற்றியை நிர்ணயிப்பது இவர்கள் கையில் உள்ளது. தனியாக நின்றால் அதிகப்பட்சம் பத்து தொகுதிகள் கூட இவர்களால் வெல்ல முடியும்.சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி மாவட்டத்திலும் இவர்களுக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது.ஆனால் ஒன்று. கருணாநிதியும் தி.மு.க.வும் தங்களுடைய சில கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவில்லையென்றால் அதே சமயம் பா.ம.க மற்ற சாதி மக்களையும் அங்கீகரித்து பதவிகளும் கொடுக்க முன்வந்தால் தி.மு.க. வின் அழிவு ஆரம்பாகிவிடும்.

    இராமதாஸ் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் மக்கள் கேட்பது பாஸிடிவ் பாயிண்ட். இந்த விஷயம் தான் மற்ற சாதி கட்சிகளையும் பா.ம.க வையும் வித்தியாசப்படுத்துகிறது.எத்தனையோ சாதி சங்கங்கள் அரசியலில் கால்பதிக்க முயற்சி செய்தாலும் ராம்தாஸ் மட்டும் வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் இனமக்களுக்கு அவர்மேல் இருக்கும் மகத்தான நம்பிக்கை.இன்னொன்று மக்கள் அவ்வளவாக வசதி இல்லாதவர்களாக இருப்பது.இது எனது அவதானிப்புதான்.தவறாகவும் இருக்கலாம்.
    கூட்டணி மாற இவர் எந்த காரணமும் கூறி தம் மக்களை சமாதானப்படுத்த தேவையில்லை.

    மருத்துவர் ராமதாஸ் ஒரு சாதனையாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கருணாநிதியை மடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ஏற்படுத்திய போதே அவர் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் தன் மகனை மந்திரியாக்கி வாரிசாக்கி விட்டதுதான். பணமும் நிறைய சேர்த்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் சொல்கிறார்கள்.அதுவெல்லாம் இன்னும் பெரிதாக பேசப்படவில்லை.
    ஆனால் அவர்கள் கட்சிக்காரர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களுக்கும் பிரச்சனை இல்லை.

    கருணாநிதி தமிழ் தமிழர் ஆகிய கோஷங்களை இப்பொது எழுப்புவதை குறைத்துக்கொண்டுவிட்டார்.அதை ராமதாஸ் எடுத்துக்கொண்டுவிட்டார். தமிழ் சமுதாயத்தில் இந்த கோஷத்திற்கு இன்னும் தேவை உள்ளது என்பது உண்மை.பல புதிய “அறிவியல்” கண்டுபிடிப்புகள் வந்தள்ள நிலையில் தற்போது தேவை கொஞ்சம் அதிகமாகி உள்ளது. தமிழ் , தமிழர் என்ற கொள்கை தங்கள் வளர்ச்சியை பாதிப்பதாக தி.மு.க. நினைக்க தொடங்கிவி்ட்டதாக தெரிகிறது. சன் டி.வி சம்பந்தமாக அவர்கள் செய்யும் செய்ய நேரும் காம்ப்ரமைஸ் கட்சியை பாதிக்க தொடங்கிவிட்டது.ஆனால் ராமதாஸ் மீடியாவுக்கு பயப்படுவதில்லை.அது பாஸிடிவ் விஷயம்தான்.
    பா.ம.க.வை பத்திரிக்கைகள் படித்து சாதிக்கட்சி என்று விமரிசிக்கும் பலர் ஓட்டு போட வருவதில்லை.இதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கிறது.

    இந்த தேர்தலில் அவர் தி.மு.க அணியில் தொடர்ந்து இருப்பார் என்றே நினைக்கிறேன்.ஏற்கனவே மூன்று எம்.எல்.ஏக்களை ஆளுங்கட்சி பிள்ளை பிடிப்பவர்களை போல் பிடித்துள்ள நிலையில் மருத்துவர் அய்யாவிற்கு வேறு வழியில்லை.

    ஆனால் தி.மு.க வும் வடமாவட்டங்களில் கணிசமாக செல்வாக்கு பெற்றுள்ளதால் தொகுதி பங்கீட்டில் சில சலசலப்புகள் வரலாம்.
    சுவாரசியமான விஷயம் என்னவென்றால் திருமாவையும் தோளில் போட்டுக்கொண்டு அலைகிறார் ராமதாஸ். தொகுதி பங்கீட்டின் போது அவரையும் கவனித்து கொண்டால் நல்லது.இந்த இணை மேல் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.இவர்களுக்கு பிரச்சார மீடியா இல்லாதது ஒரு பெரிய குறை என்பேன் நான்.இணையத்தில் பிரச்சாரம் பண்ணுவது எல்லாம் வேஸ்ட்.ஒரு சாடிலைட் டிவி கண்டிப்பாக தேவை.

    ஒருவேளை பெரிய திராவிட கட்சி இரண்டுக்கும் பெரும்பான்மை வராவிட்டால் பா.ம.க முக்கியத்துவம் பெரும்.கண்டிப்பாக கூட்டணி அமைச்சரவையை ராமதாஸ் டிமாண்ட் செய்வார்.அதில் நியாயமும் உண்டு.

    படமும் பாடலும்

    செல்வம் ::

    இருக்காது…
    அப்படி எதுவும் நடக்காது…
    நடக்கவும் கூடாது!
    நம்ப முடியவில்லை! இல்லை!!!

    உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
    உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா?


    நான் ஆணையிட்டால்

    நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்

    நானே எழுதி நானே நடித்த
    நாடகத்தில் நல்ல திருப்பம்

    கண் மேல் பிறந்து கை மேல் தொடரும்
    கதையில் என்ன தயக்கம்

    Image hosting by Photobucket


    நல்ல நேரம்

    ஓடி ஓடி உழைக்கணும்
    ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடிப்பாடி நடக்கணும்
    அன்பை நாளும் வளர்க்கணும்

    இதை அடுத்தவன் சொன்ன கசக்கும்
    கொஞ்சம் அனுபவமிருந்தா இனிக்கும்

    வலிமை உள்ளவன் வெச்சதெல்லாம் சட்டம் ஆகாது தம்பீ
    பிறர் வாழ உழைப்பவன் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பீ

    நல்ல சமத்துவம் வந்தாகணும்
    அதிலே மகத்துவம் உண்டாகணும்

    நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
    நாட்டுக்குப் படிப்பினை தந்தாகணும்

    Image hosting by Photobucket


    | |

    எஸ் ஜி இராமானுஜுலு நாயுடு

    பெ சு மணி :: ஓம் சக்தி – டிசம்பர் 2005

    தமிழ் இதழியல் வரலாற்றைக் கட்டமைக்க உதவும் பழம்பெரும் பத்திரிகையாளர்களைப் பற்றிய செய்திகளை ஆவணப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் ‘திரிசிரபுரம் எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு’ (1885 – 1935). பிரஜாநுகூலன், திராவிடபிமானி, ஆநந்த குணபோதினி, அமிர்த்த குணபோதினி முதலான இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

    ஜனவரி மாத ‘ஓம் சக்தி’ இதழில் முழுக் கட்டுரையும் அவர் பணியாற்றிய பத்திரிகைக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

    பிற ‘ஓம் சக்தி‘ இதழ்களுக்கு: Om Sakthi Publications – Downloads

    பெ சு மணியின் கட்டுரையை இங்கும் சேமிக்கப்பட்டுள்ளது: 1 | 2 | 3 | 4 | 5 | 6


    | |

    Wear Red Day

    Vethikaa Madarasi Arjun

    ‘என்னது இது? சிவப்பு டிரெஸ் போட்டுக்கலே?’

    ‘ஏன்?’

    ‘பெண்களிடையே இதய நோய்களுக்கான விழிப்புணர்வை பரவலாக்குவதற்காக ஃபெப்ரவரி மூன்றை சிகப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு தினமாகக் கொண்டாடுகிறார்கள்.’

    ‘ஓ… என்னைக் கொஞ்சம் பெயிண்ட்ஷாப் செஞ்சு விடேன்!’

    இனிய இதயமாக உடல் நலனைப் பாதுகாப்போம்.

    தொடர்புள்ள சுட்டிகள்: கொலஸ்ட்ரால் கணக்குகள் | என்னுடைய முந்தையப் பதிவு


    |