தனது 22-வது வயதில் அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து பட்டமும் தங்கப்பதக்கமும் பெற்றவர். பத்மபூஷண் விருதும், பி.டி. கோயங்கா விருதும் இதழியல் துறைகளுக்காகப் பெற்றவர். கம்பம் பள்ளத்தாக்கில் ஆய்வு செய்ய வந்த சூசன் என்ற அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு சென்னையில் வாழ்கிறார். இவர்களுக்கு வித்யா என்ற பெண் இருக்கிறார். கீழ்க்காணும் அனைத்து கருத்துக்களும் என்.ராமின் சுபமங்களா நேர்காணலில் பகிர்ந்தவை. அவை என்னுடைய புரிதல் அல்ல. தொடர்புடைய கேள்விகளின் முழு பதிலையும் தேர்ந்தெடுத்து தட்டச்சு(ப்பிழைகளுடன்) இட்டது மட்டும் என்னுடையது.
மக்கள் உணர்வில் ஒரு பாதிப்பு ஏற்படுத்துவது என்பது எளிமையான காரியம் இல்லை. ஒரு பத்திரிகை மக்களிடம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி அதீதமாகவோ, குறைவாகவோ மதிப்பிடக் கூடாது. நாம் எழுதுவதை வைத்துக் கொண்டு ‘அது மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கிறது’ என நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால் இந்த பத்திரிகை விஷயங்களிலிருந்து வேறு பல அமைப்புகள் இந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு மக்களிடம் செல்கின்றன. அது உடனடியாக இல்லாவிட்டாலும் நாள் சென்று பலனைக் கொடுகும். ஆனால், எழுதும் விஷயத்தில் நம்பகத்தன்மை என்பது நிச்சயம் இருக்க வேண்டும்.
தனி ஈழம் கோரிக்கையை நான் முற்றிலுமாக ஆதரிக்கவிலை. தமிழர்களுக்கு சிங்கள் ஆட்சியால் கொடுமைகள் எல்லாம் நடந்தன என்பது உண்மைதான். ஆனால், இவைகளெல்லாம் தனி ஈழம் கோரிக்கையை நியாயப்படுத்தாது. இப்போது நடந்த போராட்டங்களுக்குப் பிறகு ஸ்ரீலங்கா அரசும் பல உண்மைகளைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஸ்ரீலங்காவின் ஒரு பகுதியாகத்தான் ஈழத்தமிழர்கள் வாழவேண்டும்.
இஸ்ரேல் என்ற ஒரு நாடு வலுக்கட்டாயமாக ஸ்தாபிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை இழந்தனர். அவர்கள் சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள். இஸ்ரேல் அவர்கள் பூமியை கவர்ந்து கொண்டதோடு பாலஸ்தீனர்களைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் ஈழம் அப்படியல்ல. இங்கு ஜார்கண்டு, உல்ஃபா போன்றவர்கள் தனிநாடு கேட்பதை ஒத்தது அது. அதோடு மட்டுமல்ல எல்.டி.டி.இ. இயக்கம் ஒரு பயங்கர இயக்கமாக மாறிவிட்டது. அமிர்தலிங்கம், பத்மனாபா, யோகேஸ்வரன், சபாரத்தினம், ராஜீவ்காந்தி போன்றவர்களை கொன்று குவித்தார்கள். கம்போடிய பால்போட் இயக்கம் போலவும் பெருவிலுள்ள ஷைனிங்பாத் போலவும் அவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயக முறைகளுக்கு விரோதமான அரைப்பாசிச அணுகுமுறையைக் கைக்கொள்கிறார்கள்.
ஸ்ரீலங்கா அரசை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர ஒரு நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்பைடையில் இவர்களுக்கு பண உதவி செய்வது, ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற தவற்களை நாமும் செய்தோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
இனக்குழு என்று கூறுவது ‘ethnic’ என்ற வார்த்தையின் தமிழ் வடிவம் என்றே நினைக்கிறேன் இனக்குழு என்பது ஒரு தந்திரமான வார்த்தையாக இருக்கிறது. அது ஒரு ஆதிவாசிக் குழுவாக இருக்கலாம் – ஒரே மொழி பேசும் குழுவாக இருக்கலாம். காலிஸ்தான் கோரிக்கையாளர்களைப் போல அடிப்படை மதவாதக் குழுக்களாக இருக்கலாம். இனக்குழுத்தன்மை (ethnicity) என்பது ஒரு குழப்பமான கருத்து. கூர்க்காலாண்ட் ethnic அடிப்படையில் கோரப்படுகிறது. ஆனால் சிக்கிமில் 75 சதம் நேபாளியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த கோரிக்கையை ஆதரிக்கவில்லை. காஷ்மீர் ஒரு இனமா, லடாக் ஒரு இனமா, ஜம்மு ஒரு இனமா – இது ஒரு hold all மாதிரி. இதற்குள் எதையும் அடக்கலாம். ஒன்று மட்டும் உறுதி. நாம் மிகப்பெரிய பாரம்பரியமிக்க மக்கள். ஒரு புதிய தேசியத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உறுதி.
நன்றி: சுபமங்களா நேர்காணல்கள் – கோமல் சாமிநாதன் & இளையபாரதி; நர்மதா பதிப்பகம்
தமிழ்ப்பதிவுகள்