Daily Archives: ஒக்ரோபர் 18, 2005

Tsunami Relief & Anbumani

பா. ஏகலைவன்:: உலக நாடுகள் பலவும் மூலம் வந்த பணம் ஐம்பத்து ஏழு கோடி ரூபாய் , இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் சென்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய அந்தத் தொகை, கடந்த பதினொரு மாதங்களாக முடக்கப்பட்டே கிடக்கிறது.

அதற்குக் காரணம், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மனாக இருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் என்று குற்றம் சுமத்துகிறார் ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிகையாளரான சுபாஷ் சந்திரன். இப்போது நீதிமன்றக் கதவையும் தட்டத் தயாராகி வரும் அவரிடம் இதுபற்றிப் பேசினோம்.

“சுனாமிப் பேரழிவு ஏற்பட்ட பிறகு, நான் விசாகப்பட்டினம் மச்சினிபட்டினம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றேன். அந்தப் பகுதிகளில் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த ஏராளமானோரைச் சந்தித்தேன். அப்போதுதான் நாகலட்சுமி என்ற முப்பத்தைந்து வயதுப் பெண்மணியைப் பார்த்தேன். புருஷனோடு இரண்டு மகன்களையும் சுனாமிக்கு பறி கொடுத்துவிட்டு அனாதையாக நின்றவருக்கு, ஆந்திர அரசு போதிய நிதியுதவி செய்யாததைச் சொன்னார்.

பல நாட்களுக்குப் பிறகு அதே நாகலட்சுமியை ஐதராபாத் ரயில்வே நிலையத்தில் ஒரு பிச்சைக்காரியாகப் பார்த்தேன். ‘சொந்த ஊரில் யாரும் கண்டுகொள்ளாததால், இங்கு வந்து பிச்சை எடுத்துக் கொண்டே அதிகாரிகளைப் பார்த்து வருகிறேன் . இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் தாங்க முடியும். அதற்குமேல் வாழ முடியாது . தற்கொலை செய்து கொள்வதொன்றுதான் வழி’ என்று கூறி அழுதார். அந்தச் சமயத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு, டெல்லி சென்றுவிட்டேன்.

திரும்ப வந்து நாகலட்சுமியைத் தேடியபோது, அவரைப் பிணவறையில்தான் பார்த்தேன். சொன்னபடியே தற்கொலை செய்து கொண்டுவிட்டார். இந்த அவலத்தைத் தாங்க முடியாமல் ஐதராபாத்திலிருந்த பேரழிவு நிவாரண உதவி ஆணையரைச் சந்தித்தேன்.

அப்போது அவர், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து போதிய நிவாரண உதவித் தொகை வந்து சேரவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார் . அதன்பிறகு டெல்லியிலுள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வந்த நிதி பற்றி ஆராய்ந்தேன்.

  • செஞ்சிலுவைச் சங்க ஃபெடரேஷனிலிருந்து முப்பத்து மூன்று கோடி ,
  • ஹாங்காங் செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பிய ஒன்றரைக் கோடி,
  • கனடா செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து ஐந்து கோடியே ஐம்பது லட்சம்,
  • ஸ்பானிஷ் நாட்டிலிருந்து பத்துக் கோடி ரூபாய். இது தவிர,
  • இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கலெக்ஷன் செய்தது ஏழு கோடி
    என்று மொத்தம் ஐம்பத்து ஏழு கோடி ரூபாய் வந்து சேர்ந்திருக்கிறது.
  • இந்தத் தொகை, குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திராவிற்கு மட்டுமே. அதுவும் சுனாமி நிவாரணத்திற்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். பொதுவாக, இப்படி வரும் நிதியை சுமார் முப்பது நாட்களுக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும்.

    நமது இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் எந்தவிதத்தில் நிவாரணப் பணிகளைச் செயல்படுத்தப் போகிறோம் என்ற விவரத்தையும் நிதி உதவி அளிக்கும் நாடுகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ தெரிவித்துவிட வேண்டும். அப்படி ஏதும் செய்யாததோடு, இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கக் கிளைகளுக்கு அனுப்பி வைப்பதிலும் குளறுபடிதான் நடந்துள்ளது.

    அரசு இயந்திரங்கள் மூலம் செலவிடப்படும்போது தாமதம், மெத்தனம், முறைகேடு…. என்று நடக்க வாய்ப்பிருக்கும் என்றுதான் செஞ்சிலுவைச் சங்கத்தை நாடுகிறார்கள். அதன் பணி விரைவாக இருப்பதோடு நேர்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இப்போது மண் விழுந்துவிட்டது.

    ஆரம்பத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் செகரட்டரி ஜெனரலாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த விமலா ராமலிங்கம் என்பவர். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அந்த இடத்தில் புதிய நபரை நியமித்திருக்க வேண்டும்.

    ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்கு மாறாக, மத்திய அரசு சுகாதாரத் துறையின் மெடிக்கல் அன்ட் ஹெல்த் சர்வீஸின் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் அகர்வால் என்பவரையே. இந்திய செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பை, கூடுதலாகக் கவனிக்கச் செய்திருக்கிறார் அன்புமணி. இந்திய செஞ்சிலுவைச் சங்கம் என்பது, டாக்டர் அன்புமணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் அவரே அதற்கு சேர்மனாக இருப்பதாலும் அப்படிச் செய்துவிட்டார்.

    இதில் நிறைய உள்நோக்கம் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். அகர்வால் என்னவிதமாகச் செயல்பட்டார் என்பதைப் பார்ப்போம்.

    நிவாரண நிதியாக வந்த ஐம்பத்தேழு கோடி ரூபாயை எடுத்து வங்கியில் போட்டார். அடுத்து இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் என்ற ஆணுறை தயாரிக்கும் நிறுவனத்திடம் நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள்.

    அந்த கம்பெனியோ ‘மீனவர்களுக்கான மோட்டார் படகு, வலை, கட்டுமரம் போன்றவற்றை எங்களால் வழங்க முடியாது. இதில் எங்களுக்கு அனுபவம் இல்லை’ என்று எழுதி அனுப்பிவிட்டது.

    ஆனாலும் டாக்டர் அன்புமணியும், அகர்வாலும் சேர்ந்துகொண்டு, ‘நீங்களேதான் செய்ய வேண்டும்’ என, போர்டில் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். ஏன் அந்த வலியுறுத்தல்?

    விசாரித்தபோதுதான் ‘இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உயர் பதவியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் இருக்கிறார். அவரை புரமோட் செய்வதற்காகவும் அவர் மூலம் செயல்படுத்தப்படும்போது , ‘வசதியாக’ச் செய்ய முடியும் என்பதாலும் அப்படிச் செய்திருக்கிறார் ‘ என்ற தகவல் கிடைத்தது!” என்றெல்லாம் விவரித்த சுபாஷ் சந்திரன், தொடர்ந்து பேசினார்…

    “நடந்த இந்தச் சம்பவம் இறந்துபோன பல்லாயிரம் பேருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல; அவமானமும் கூட. ஐயோவென்று அலறி உலகத்தில் எங்கோ இருக்கிற மனிதாபிமானிகள் கொடுக்கும் பணத்தை, இங்கே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தாமலேயே முடக்கி வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்? இதில் ஒடுக்கப்பட்ட சமூகமான மீனவ மற்றும் தலித் சமூகத்திற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டார். இதற்கு முழு பொறுப்பும் அவரே. பதினொரு மாதங்களாக நிதியை முடக்கி வைத்த பொறுப்பும் அவருடையதே. ஏன்? எதற்காகத் தாமதித்தார் என்பதற்கு பகிரங்கமாக மக்களிடம் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இதில் மற்றொரு வேதனை. இந்த நிதியை முடக்கி வைப்பதற்கு முழு முதல் காரணமாக இருந்து உதவியவர் மத்திய சுகாதாரத்துறையின் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் அகர்வால்தான். அப்படிப்பட்ட வரை, வரும் ஒன்றாம்தேதி முதல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கே நிரந்தர செகரட்டரி ஜெனரலாக நியமிக்கப் போகிறாராம் அன்புமணி. இதற்கான கோப்பு இப்போது ஜனாதிபதியிடம் இருக்கிறது .

    ஜனாதிபதி அந்தக் கோப்பில் கையெழுத்துப் போடுவதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்குத் துரோகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிடுமே என்பதுதான் எனது பயம்.

    மற்றொன்றையும் கூறியாக வேண்டும். ஒருவேளை பணிச்சுமை காரணமாக இவ்வளவும் அவர்களுக்குத் தெரியாமல் தான் நடக்கிறதோ என்று நினைத்து உண்மை நிலையை விவரித்து அகர்வாலுக்கும் , அன்புமணிக்கும் கடிதம் மற்றும் புகார் அனுப்பினேன். இன்று வரை ஒரு பதிலும் இல்லை. தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?

    அடுத்து, ஆந்திராவிலுள்ள (மாநில ) செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான அந்த மாநில ஆளுநர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் புகார் அனுப்பினேன். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான அவர், நிலைமையின் விபரீதத்தை அறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதினார்.

    இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசிடெண்ட்டாக இருக்கும் ஜனாதிபதிக்கும் இதுபற்றி புகார் அனுப்பினேன். அதோடு, உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.சி. லகோத்திக்கும் எழுதினேன். மேலும் உலக செஞ்சிலுவைச் சங்கங்கள் கொடுத்த நிதியையெல்லாம் ஏதோவொரு உள்நோக்கம் காரணமாக முடக்கியே வைத்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெனீவாவிலுள்ள உலக செஞ்சிலுவைச் சங்க தலைமையகத்திற்கும் புகார் அனுப்பினேன்.

    அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத் தலைவரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிற்கும் தமிழக கிளைச் செயலாளரான செல்வி பார்க்கவி தேவேந்திராவிற்கும் கடிதம் எழுதினேன். தமிழக செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரிடமிருந்து அந்தவித நிதியுதவி ஏதும் வரவில்லை’ என்று பதில் கடிதம் மட்டும் வந்தது.

    இப்படி எல்லா கதவுகளையும் தட்டிவிட்டேன். கடைசியாகத் தட்ட வேண்டிய கதவு ஒன்று உள்ளது. அது உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குப் போடுவதுதான்! தமிழக மக்களுக்கு தமிழக அமைச்சரே, செய்த துரோகத்தின் உள்நோக்கம் எல்லாம் அப்போது வெளிச்சத்திற்கு வராமலா போய்விடும்?” என்று ஆதங்கத்தோடு முடித்துக் கொண்டார் அவர்.

    தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள தமிழக செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சென்று செயலாளர் பார்க்கவி தேவேந்திராவை சந்தித்து கேட்டோம்.

    “ஆமாம். சுபாஷ் சந்திரன் அனுப்பிய கடிதம் எங்களுக்கு வந்தது . நாங்கள் மத்திய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து பணம் வராததை தெரியப்படுத்தியிருந்தோம். மற்றபடி எதுவும் பேச விரும்பவில்லை” என்றார்.

    தொடர்ந்து நாம் முன்னாள் அலுவலர்கள் சிலரிடம் பேசினோம்.

    மத்திய செஞ்சிலுவைச் சங்கம் நிதி கொடுக்கவில்லையே என்பதற்காக மாநில செஞ்சிலுவைச் சங்கம் கையைக் கட்டிக் கொண்டிருக்க முடியாது. இதன் வேலையே உதவி வாங்கி , பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதுதான். இதுவரை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பத்துக்கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உதவியிருக்கிறது .

    இதில் மற்றொரு வேதனையையும் சுட்டிக்காட்ட வேண்டும். கோகோ கோலா நிறுவனம் ஒரு கோடி ரூபாயை மத்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுத்திருக்கிறது. அந்த நிதியை கன்னியாகுமரி குளச்சல் பகுதி நிவாரணப் பணிக்குச் செலவிட வேண்டும் என்று சொல்லியே கொடுத்தார்கள். அந்தப் பணமும் தமிழகத்திற்கு வரவேயில்லை. ஏதோ நிர்வாகச் சிக்கல் என்கிறார்கள்” என்ற குண்டையும் போகிற போக்கில் தூக்கிப் போடுகின்றனர்.

    இவற்றிற்கெல்லாம் பதில் வேண்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸைத் தொடர்பு கொள்ள முயன்றோம். அவரது உதவியாளர் முத்துக்குமார், “அமைச்சர் ஜதராபாத்தில் இருக்கின்றார். கேட்டுச் சொல்கிறேன் ” என்ற பதிலையே சொன்னார்.

    வெளியான இதழ்: குமுதம் ரிபோர்டர்

    சுந்தர ராமசாமி

  • கலாச்சாரம் அரசியலை பாதிப்பதற்கு பதில் அரசியல் இங்கே கலாச்சாரத்தை பாதிக்கிறது. அரசியல்வாதிகளின் கண்ணோட்டமே வாழ்வின் பொதுக்கண்ணோட்டமாக மாறிவிட்டது.
  • சாகித்ய அகாதமி பரிசு ஒரு சாதாரண சின்ன பரிசு. அதை பெறுவதற்கே இங்கே ஜனாதிபதியின் சிபாரிசு தேவைப்படுகிறது. பரிசு பெற்ற படைப்பாளிகளைக் கேட்கிறேன். துணிச்சல் இருந்தால் வெளியில் வந்து சொல்லுங்கள்… எந்த சிபாரிசும் இல்லாமல் பரிசு பெற்றேனென்று. சிபாரிசால் பரிசு பெறும் எழுத்தாளனுக்கு உண்மையில் ஆத்ம சந்தோஷம் இருக்குமா ?

    நாற்பதாண்டு கால தமிழ் இலக்கிய கலாச்சார வெற்றி தோல்விகளின் சாட்சியாக, தமிழ்ச் சமூகத்தின் தாழ்ச்சியின் மீதோர் தார்மீகக் கோபமும், அதன் எழுச்சியில் தீவிர முனைப்பும், கலைக்கோட்பாடுகள் பற்றிய சில பிடிவாதங்களும் கொண்டவர்.

    கேள்வி: சின்ன வயசிலேயே கம்யூனிஸ்ட் கட்சியை சிநேகித்ததற்கான காரணம் ?

    வாழ்க்கையின் கஷ்டங்கள் என் மனசை பாதித்தது. முக்கியமாக இந்தியாவின் வறுமை. நாங்கள் ஓரளவு வசதியாய் இருந்தாலும் எங்கள் உறவினர்கள் படும் துன்பங்கள் என் இதயத்தை இம்சித்தது. அதோட ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ படித்தேன்.

    அவர் ஒரு கம்யூனிஸ்ட் – அந்த புத்தகம் என்னை பாதித்தது. கம்யூனிஸ தத்துவத்தின் மூலம் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

    கேள்வி: சோசலிச எதார்த்தவாத இலக்கியம் படைக்க முடியும்னு நம்புகிறீர்களா ?

    என்னுடைய ஆரம்ப கால கதைகளே அதற்கு சாட்சி. நான் கலைநயத்தை காப்பாற்றிக் கொண்டே முற்போக்கான கருத்துக்களை எழுதிவந்துள்ளேன். அதில் வெற்றியும் பெற்றேன்னு நினைக்கிறேன். எனக்கு கலைநயம் மிகவும் முக்கியம். நீங்க எந்த விஷயத்தை முன்வைத்தாலும் கூட அதில் மனிதனோட மனசை ஈர்க்கிற சக்தி இருந்தாத்தான் அது சமூகத்தை பதிக்கும். நான் கலை அம்சத்தை வற்புறுத்தக் காரணமே கலை சமூகத்தை பாதிக்கணும்ங்கறதாலதான்.

    எப்பவுமே கலை இலக்கியம் மனிதனை பாதிக்கக் கூடியதாகத்தான் இருக்கணும்ங்கறது என் நம்பிக்கை. முற்போக்கான கருத்துக்கள் இருந்தும் கூட ஒரு நாவல் சரியான நாவல் இல்லைன்னு ஏன் சொல்றேன்னா முற்போக்கான கருத்துக்களால் பாதிக்கக் கூடிய சக்தி அந்த நாவலுக்கு இல்லை. அது கலைநயத்தோடு சொல்லப்படலை. அது போய்ச் சேராது.

    கேள்வி: நீங்கள் மார்க்சிய விரோதியா ?

    மார்க்ஸின் சிந்தனைகளை நான் ஒப்புக் கொள்கிறேன். அதில் சந்தேகமே கிடையாது. ஒரு பகுதி முக்கியமாக மார்க்ஸ் செய்த எல்லாக் காரியங்களும் ஐரோப்பிய பின்னணியில், அதுவும் 19- ம் நூற்றாண்டில் இறுதியில் செய்யப்பட்டவை. அதில் கணிசமான ஒரு பகுதி இன்றும் நமக்கு உபயோகமாக இருக்கும் . ஆனால், அதற்கு மேலாக வேறொரு விதமான கலாச்சார பின்னணியும், மனோபாவங்களும், மத நம்பிக்கைகளும் கொண்ட நம்முடைய மக்களுக்கு ஏற்புடையதான கருத்துக்களைக் கொண்டு போகும் அளவுக்கு மார்க்ஸீயத்தை வளர்த்தெடுக்கவில்லை.

    நீங்க ஒரு கம்யூனிஸ்டா என்று கேட்கும்போது நீங்க தத்துவத்தை சேர்ந்த ஆளா கட்சியைச் சார்ந்த ஆளா என்பது முக்கியமான விஷயம். நீங்க ஒரு எழுத்தாளன்னு சொன்னா கட்சி எடுக்கிற ஒவ்வொரு நிலையும் ஆதரிக்கணும்கிற கட்டாயம் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்க சிறப்பான விஷயங்களை உருவாக்க முடியாது. அரசியல்ரீதியாக பல்வேறுபட்ட காரணங்களுக்காக கட்சி பல்வேறுபட்ட நிலை எடுக்கும். அதெல்லாம் எழுத்தாளர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நான் கம்யூனிசத்தை விமரிசிக்கக் கூடிய எல்லா சந்தர்ப்பத்திலேயும் கட்சியினுடைய போக்கைத்தான் விமரிசிக்கிறேன்.

    இப்ப 1977-இல் இருந்து 1990 வரையிலும் சோவியத்துல நடந்த எல்லா விஷயங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிச்சு வந்திருக்கு. இதை நான் எதிர்க்கிறேன். நான் மட்டும் எதுக்கலே . சோவியத்துல உள்ள தலைமைப் பீடமே எதுக்குது. இன்னிக்கு சோவியத் தலைமைப் பீடம் ஒரு முற்போக்கான நடவடிக்கையை எடுக்குதுன்னா இதுக்குமுன்னே உலகத்தை சேர்ந்த பல எழுத்தாளர்களும் நானும் எடுத்திருக்கோம். நேற்று நாங்க சொன்ன விமரிசனங்களுக்காக எங்களை முத்திரை குத்துவது, இந்த விமரிசனங்களை கட்சித் தலைமையிலிருந்து ஒருவன் உருவாக்கக் கூடிய சந்தர்ப்பத்துல அவனைப் பரிபூரணமா ஏற்றுக் கொள்வது அவனைப் பரிபூரணமா ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையிலும் எங்களைத் திரும்பவும் விமரிசனம் பண்ணுவது – இதை எந்த விதமான கருத்துலக நாகரிகத்துல சேர்த்துக் கொள்வீங்க? உலகத்துல ஸ்டாலினை விமரிசனம் செய்தவர்கள் எல்லாம் பிற்போக்குவாதின்னு சொன்னா கோர்பசேவ் பிற்போக்குவாதிதான்.

    நன்றி : சுபமங்களா – இதழ் #6


    சுய அறிமுகம் – சில சிதறல்கள்

  • நான் 1931இல் பிறந்தேன். பள்ளிப் படிப்பு என்று சொல்லும்படி எனக்கு ஒன்றும் இல்லை. பள்ளிக்கு சென்ற குறைந்த காலத்தில் என் மனம் வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே தாவித் தன் போக்கில் அலைந்து கொண்டிருந்தது. என் புத்தகங்களைப் படிக்கும்போது நான் ஏதேனும் கற்றுக் கொண்டிருப்பதாக வாசகர்களுக்குத் தோன்றினால் அவை என் சுய முயற்சியில் அறிந்து கொண்டவைதான்.
  • சுயமாகக் கற்க புத்தகங்களைத் தேடிக் கொண்டு போகிறேன். கிடைக்கும் புத்தகங்களிலிருந்து எனக்கு விருப்பமானவற்றைத் தேர்வு செய்கிறேன். என் சுதந்திரத்திற்குள் நிற்கும் தேடலும் தேர்வும். என் விருப்பம் போல் படிக்கிறேன். படிக்காமலும் இருக்கிறேன். பாதி படித்த நிலையில் அலுப்பு மேலிட நிறுத்திக் கொள்ளவும் செய்கிறேன். மனதில் தோன்றும் மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்கிறேன். அவற்றை நண்பர்களுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஆசிரியர்களிக் குறுக்கீடு அற்ற வாசிப்பின் மூலம்தான் ஆளுமையை ஓரளவேனும் வளர்த்துக் கொள்ள முடிந்தது என்று நம்புகிறேன்.
  • நான் அறிஞர்களின் வரிசையில் ஒருவன் அல்ல. அறிஞர்களின் முக்கியமான குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம்.
  • என் கருத்துக்களை முன்வைக்கும்போது அவை உருவாக்கும் எதிர்வினைகள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எதிர்நிலைகள் மீதும் கவனம் உண்டு.
  • பதினெட்டு வயதுவாக்கில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டேன். இருபது வயதுவாக்கில் என் முதல் கதையை எழுதினேன் . தகழி சிவசங்கர பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ நாவலை மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்தேன். அதை ஒரு சாகஸம் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு முன்னர் நான் அரைபக்கம் கூட மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்தது இல்லை. என் திறமையைப் பற்றி யோசித்திருந்தால் அந்தப் புத்தகத்தின் பக்கமே போகத் துணிந்திருக்க மாட்டேன். இளமையின் சாகஸம் ! எதிலேனும் ஏறி விழுந்து தன்னை இனங்கொண்டுகொள்ள வேண்டும் என்ற துடிப்பு.
  • நான் சமத்துவத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவன். வாழ்வின் குறிக்கோளைத் தீர்மானிக்கும் இவ்விரு அடிப்படைகளிலும் நம்பிக்கையற்ற ஒரு மனம் சிந்தனைகளை ஆழப்படுத்திக் கொள்வது சாத்தியம் என்று நான் நம்பவில்லை. சமத்துவம், ஜனநாயகம், மனித நேயம் உட்பட வாழ்வை மேலெடுத்துக் செல்லப் பயன்படும் சகல தத்துவங்களையும் அவற்றின் சாராம்சங்களிலிருந்து பிரித்து அடையாளங்களிலிருந்து மாற்றும்போது அவற்றின் அர்த்தங்களையே நாம் இழந்துவிடுகிறோம். தமிழ்ச் சூழல் சாரங்களில் சக்கைகளிலிருந்து அடையாளங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சாரங்களை இனங்காணவோ வறுமைப்படுத்தவோ மறு பரிசீலனை செய்யவோ உதறவோ திராணியற்று அடையாளங்கள் சார்ந்து ஏமாறும் குணம்தான் இன்று நம் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

    விண்நாயகன், 1999 டிச. 1-15 & டிச. 16-31

    நன்றி: ஆளுமைகள், மதிப்பீடுகள் – காலச்சுவடு பதிப்பகம்


    குறிப்பு

    சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் 1931இல் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டியின் மக ‘னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம்பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988 இல் காலச்சுவடு இதழைத் தொடங்கி எட்டு இதழ்களையும் ஒரு ஆண்டு மலரையும் வெளியிட்டார்.

    சுந்தர ராமசாமிக்கு டொரொண்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியுள்ளது.

    வாழ்நாள் இலக்கியப் பணிக்காக ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றுள்ளார்.

    மனைவி : கமலா

    குழந்தைகள் : தைலா, கண்ணன் , தங்கு.

    நாவல்கள்:
    ஒரு புளியமரத்தின் கதை (1966)
    ஜே.ஜே.: சில குறிப்புகள் (1981)
    குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)

    சிறுகதைகள்
    காகங்கள் (2000)
    மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் (2004)

    கவிதை
    107 கவிதைகள் (1996)

    விமர்சனம்
    ந பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும் (1991)
    காற்றில் கலந்த பேரோசை (1998)
    விரிவும் ஆழமும் தேடி (1998)
    இறந்த காலம் பெற்ற உயிர் (2003)

    மொழி பெயர்ப்பு
    செம்மீன் (1962)
    தோட்டியின் மகன்
    தொலைவிலிருக்கும் கவிதைகள் (2004)

    நினைவுக் குறிப்புகள்
    ஜீவா (2003)
    கிருஷ்ணன் நம்பி (2003)
    க.நா.சு . (2003)
    சி.சு. செல்லப்பா (2003)

    பிற
    தமிழகத்தில் கல்வி: வே. வசந்தி தேவியுடன் ஓர் உரையாடல் (2000)
    இவை என் உரைகள் (2003)
    இதம் தந்த வரிகள்(2002) – கு அழகிரிசாமி – சு .ரா. கடிதங்கள்
    வாழ்க சந்தேகங்கள் (2004)
    வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)