ஜெமினி கணேசன் – என் ஆசான்


அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் – விகடன் பிரசுரம்: “நான் ஜெமினி ஸ்டூடியோவில் 1946-ல் வேலைக்குச் சேர்ந்தேன். கே.ஆர்.ராம்னாத்துக்கு புரொடக்ஷன் அசிஸ்டெண்டாக வேலை! மாசம் 150 ரூபாய் சம்பளம். அந்த வகையில் ‘சக்ரதாரி’, ‘வள்ளியின் செல்வன்’, ‘ஔவையார்’ ஆகிய படங்களுக்கு புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டா இருந்தேன். ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பார்த்தால் ‘ஜெமினி’ கணேஷ் என்று பெயரும் வைத்துக் கொண்டேன்.

1955-ல் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துல என்னை ஹீரோவா நடிக்க வெச்சார் எஸ்.எஸ்.வாசன். வெள்ளிவிழா கண்ட திரைப்படம் அது. என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய முக்கியமான படமும் கூட! அதே படத்தை இந்தியிலும் தயாரிச்சார் எஸ்.எஸ். வாசன். பெயர் ‘ராஜ்திலக்’. அதிலும் நான்தான் ஹீரோ.

எஸ்.எஸ். வாசன் டீமில் டிசிப்ளின் உண்டு. எல்லோரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். படத் தயாரிப்பின் அத்தனை விஷயங்களையும் மிகத் துல்லியமாகத் திட்டமிடுவார். ஒரு படம் எடுக்குமுன்பே பக்காவாக ரிகர்சல் பார்த்துவிடுவோம்.

எஸ்.எஸ். வாசன் இறந்த நாளில் அவர் அருகிலேயே கடைசிவரை இருந்து சுடுகாட்டுக்கும் தூக்கிச் சென்றேன். ஜெமினி பேனரில் ஹீரோவாக நான் செய்தது என்னவோ மூன்றே படம்தான். ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’, ‘மிஸ். மாலினி’, ‘வாழ்க்கைப் படகு’. ஆனால், எனக்கு பேரும் புகழும் கிடைக்கச் செய்தவர் என் ஆசான் எஸ். எஸ். வாசன் என்பதில் சந்தேகமில்லை!”


aaraamthinai.com :: கேடிஸ்ரீ: “தமிழகத்தில் புதுக்கோட்டையில் 1920ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி அன்று வழக்கறிஞர் ஜெனரலாக இருந்த நாகராஜ ஐயரின் மகனாக பிறந்தவர் ராமசாமி கணேசன் என்கிற ஜெமினி கணேசன். பட்டப்படிப்பை முடித்தப் பின் சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றினார்.

முதன் முதலாக ‘மனம் போல் மாங்கல்யம்’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஜெமினி ஒப்பந்தம் ஆனார். 1953ல் இப்படம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ‘கணவேனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘மாதர் குல மாணிக்கம்’, ‘கல்யாண பரிசு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘தேன் நிலவு’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘சுமைதாங்கி’, ‘கற்பகம்’, ‘பணமா பாசமா’, ‘பூவா தலையா’ போன்றவை அவர் நடித்த படங்களில் சில… அவரது சொந்த தயாரிப்பில் உருவாகி அவர் பல வேடங்களில் நடித்த ‘நான் அவனில்லை‘ படம் மிகவும் சிறப்பாக பேசப்பட்டது.

ஜெமினி கணேசன் பல திருமணங்கள் செய்தவர். இவரின் முதல் மனைவி அலுமேலு என்கிற பாப்ஜி. இவருக்கு 5 மகள்கள். தற்போது உடல்நலம் சிறிது குன்றிக்காணப்படுகிறார். ஜெமினியின் இரண்டாவது மனைவி பிரபல திரைப்பட நடிகை சாவித்திரி. அன்றைய காலக்கட்டத்தில் ஜெமினி – சாவித்திரி ஜோடியின் நடிப்பில் பல படங்கள் வெற்றிகளை அள்ளித் தந்தது. ஜெமினி – சாவித்திரிக்கு சதிஷ் என்ற மகனும், சாமுண்டிஸ்வரி என்ற மகளும் பிறந்தனர். பழம்பெரும் நடிகை புஷ்பவல்லியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டர். ஹிந்தி திரைப்பட உலகின் கனவு கன்னியாக அன்றும், இன்றும் திகழும் பிரபல நடிகை ரேகாவும் ஜெமினியின் மகள்தான்.”

2 responses to “ஜெமினி கணேசன் – என் ஆசான்

  1. ஜெமினி புதுக்கோட்டையில் மச்சுவாடி என்ற ஊரில் பிறந்தவர். அந்தக்கால நடிகர்கள் தங்கள் இனிஷியல் முன்பு தங்கள் ஊரின் இனிஷியலையும் சேர்ப்பது வழக்கம். இவர் ஏன் செய்யவில்லை, தெரியவில்லை.
    உதாராணங்கள்:
    1. பி.யூ.சின்னப்பா= புதுக்கோட்டை உயைப்பா சின்னப்பா.

    2. டி.ஆர்.மகாலிஙக்கம்= திருச்சி ஆர்.மகாலிங்கம்.

    3.வி.சி. கணேசன்= விழுப்புரம் சின்னையா மன்றாடியார் கணேசன் (அட… நம்ம சிவாஜி சார்)

    4. எம்.ஜி.ஆர் = மருதூர் கோபால ராமச்சந்திரன்.

    எம்ஜியாரின் தந்தை பெயர் கோபால மேனன். அவருக்கு மூன்று மனைவியர். (ஆனால் எம்ஜியாரின் தாத்தா அங்காரத்த சங்குண்ணி மன்றாடியாருக்கு நான்கு மனைவியர்

    இருந்திருக்கிறார்கள்). கோபால மேனனின் முதல் மனைவி மாதவி அம்மாள். எர்ணாகுளத்திலிருந்து காயலைக் கடந்தால் வரும் மொளகுக் காடு என்ற ஊரில் உள்ள வெளுத்தன் வீட்டைச் சேர்ந்தவர் இந்த அம்மாள். இரண்டாவது மனைவி மீனாட்சியின் ஊர் இரிஞ்ஞாலக்குடா , வட்டம்பரத்தே வீடு. மூன்றாவது மனைவியான சத்யபாமாதான் எம்ஜியாரின் தாயார். இவர் கொல்லங்கோட்டை அடுத்துள்ள வடவனூரில் உள்ள மருதூர் வீட்டைச் சேர்ந்தவர். அதனால்தான் எம்ஜியாரின் பெயர் மருதூர் கோபால ராமச்சந்திரன் என்று ஆனது. ( எம்.ஜி.ஆர். பெயருக்கு விளக்கம் தந்தவர்.: சாருநிவேதிதா சார். – நன்றி.)

    5. வி.கே.ராமசாமி = விருதுநகர் கே.ராமசாமி.

    6. எம்.எஸ்.சுப்புலெட்சுமி = மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி. (முதன் முதலில் தன் தயாரின் பெயரை இனிஷியாலாக வைத்துக்கொண்ட துணிச்சல்கார அம்மா. அவரின் பாடல்களை கேளுங்கள். மனம் அமைதியாகும். இது சத்தியம்.

    7. கே.பி.சுந்தராம்பாள்= கொடுமுடி பி.சுந்தராம்பாள்.

    8. பெங்களுர் ரமணியம்மாள்

    9. சூலமங்கலம் சகோதரிகள்.

    10. என்.எஸ்.கிருஷ்ணன் = நாகர்கோவில் எஸ்.கிருஷ்ணன்.

  2. பிங்குபாக்: என்ன கண்ணுடா இது | Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.