Monthly Archives: ஓகஸ்ட் 2004

Saif Ali Khan & Amrutha Singh 

Saif Ali Khan & Amrutha Singh Posted by Hello

Akshay ditches lot of heroines including Raveena T…

Akshay ditches lot of heroines including Raveena Tandon Posted by Hello

Amitabh Bachan – Jaya Bhaduri Wedding Snap 

Amitabh Bachan – Jaya Bhaduri Wedding Snap Posted by Hello

நான் ஏன் எழுதுகிறேன் – தலை பத்து

RaayarKaapiKlub:

1. வேலை வெட்டி அதிகம் இருப்பதால். (Inspiration 🙂

2. தமிழில் தட்டச்சுப் பயிற்சி எனக்குத் தேவை.

3. சுய சுத்திகரிப்பு (உபயம்: பாரா)

4. சோகத்தை எழுதினால் பாரம் குறையும்.

5. சந்தோஷத்தை எழுதினால் இரட்டிப்பாகும்.

6. நான் இருக்கும் அழகிய சிறையில் இருந்து, என்னை விடுவித்துக் கொள்ள. (Anais Nin)

7. தமிழில் புத்தகம் எழுதி, ராயல்டி தொகையின் மூலம் கோடீஸ்வரராக.

8. பொழுதுபோக்காக ஆரம்பித்து obsessive-compulsive disorder ஆகத் தொடரும் நிறுத்தமுடியாத போதை பழக்கம் என்பதினால்.

9. சிலர் பேச்சில் எதிர்வினைப்பார்கள். சிலர் மனதுக்குள் விவாதித்துக் கொள்வார்கள். சிலர் எழுத்தில்….

10. You can make more friends in two months by becoming interested in other people, than you can in two years by trying to get other people interested in you. -Dale Carnegie

(நன்றி: Dhinam Oru Kavithai)

சுற்றுச்சூழல் கேடு – உலகமயமாக்கம்

காலை அலுவலகத்திற்கு வண்டியோட்டும்போதுதான் இந்த செய்தி காதில் விழுந்தது. இந்தியாவில் கக்கும் புகைகள், மேற்கத்திய நாடுகளையும் பாதிக்கின்றன என அலாரம் அடித்தார்கள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய ஜான்ஸி ரானி காலத்து வண்டியை, பாதுகாப்பு மற்றும் புகை பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது, பர்ஸுக்கு எவ்வளவு வேட்டு வைக்கப் போகிறதோ என்று பயமாக இருக்கும். புத்தகம் மட்டுமே கரைத்துக் குடித்த +2 மாணாக்கன் கணிதத்தில் நூறு எடுப்பது போல் பாதுகாப்பு சோதனையை எளிதாக வெல்லும். மேடையேறி பேசச் சொன்னால் எப்படித் தடுமாறுவானோ, அது போல சுற்றுச் சூழல் தேர்வில், எல்லைக்கோட்டைத் தொட்டு பாஸ் மார்க் எடுக்கும்.

போன வருடத்தில் இந்தியாவில் கூட இது போன்ற தரச் சான்றிதழ் பெற காலக்கெடு நிர்ணயித்த்தாக நினைவு. அது எந்த முறையில் ‘ஸ்டே ஆர்டர்’ வாங்கப்பட்டது, எவ்விதம் ஊக்கத்தொகைக் கொடுக்கப்பட்டது, எங்கு போலி ஸ்டிக்கர் கிடைத்தது போன்ற தகவல்களை அறியேன்.

என்னதான் அமெரிக்கவில் மாய்ந்து மாய்ந்து கார்களை சுத்தப்படுத்தல், தொழிற்சாலைகளின் மாசுகளுக்கும் கட்டுப்பாடு விதித்தல் செய்தாலும், உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கேடு விளைவித்தால், அது அமெரிக்காவையும் பாதிக்கிறது என்பதே, இந்த ஆராய்ச்சியின் தற்போதைய கண்டுபிடிப்பு. சைனா போன்ற வளரும் நாடுகளின் ஆலைகளுக்கு, புகைகளை சுத்தம் தரும் கருவிகளைக் கொடுப்பது, மேற்கத்திய நாடுகளைக் காப்பாற்றிக் கொள்ளும் வழி எனத் தொடர்கிறது.

ஆறு நாடுகளில், ஆறு வாரங்களுக்கு இந்தச் சோதனைகள் நடத்தப்படும். ஓசோன் சிணுக்கர்களைத் (sensors) தாங்கிய பலூன்களுடன் மாசுள்ள காற்றும், இன்ன பிற தூய்மையற்றவையும் எங்கு செல்கிறது, எவ்வாறு கண்டங்களுக்கிடையே பயணிக்கிறது, எப்படி சோர்வுற்கிறது என்பதைக் கண்டறிவார்கள். தற்போது கனடாவிடம் இருந்தும், ஐரோப்பாவிடம் இருந்தும் இடிபட்டு வரும் அமெரிக்காவைக் காப்பாற்றிக் கொள்ள இதன் முடிவுகள் உதவலாம்.

அமெரிக்காவை விட, ஆசியாவின் மாசுபடுத்தல்தான் பெரியது என்று நிரூபிப்பதன் மூலம், மற்ற நாடுகள், தன்னை விட்டுவிட்டு சைனா, இந்தியாவின் மேல் தங்களின் கோபத்தையும் க்யோட்டோ போன்ற ஒப்பந்தங்களையும் வீசவேண்டும் என அமெரிக்கா எண்ணுகிறது.

oOo

சம்பந்தமில்லாமல், சமீபத்தில் பார்த்த மைக்கேல் மூரின் டாகுமெண்டரியான ‘பௌலிங் ஃபார் கொலம்பைன்’ நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ஆரம்பித்து பாஸ்டன் வரை கொடுக்கப்படும் இரவுச் செய்திகளை நகையாடும் பகுதி அது. கொலை என்றால் கறுப்பர், கொள்ளை என்றால் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்னும் எண்ணத்தை அமெரிக்கர்களிடையே ‘செய்திகள்’ எப்படி விதைத்துள்ளது என்பதை பல புள்ளி விவரங்களுடனும் சில செய்திக் கோப்புக்களுடனும், ஒரு நேரடி செய்தி சேகரிப்பு புலனாய்வுடனும் விவரிப்பார்.

கறுப்பர்கள் கொலை செய்தால் எவ்வளவு சினிமாஸ்கோப்தனத்துடன் காவலர்கள் ஆய்ந்து அறிகின்றனர் என்பதை, எல்லே போலீஸுடனான தன்னுடைய குதர்க்கப் பேட்டியின் மூலம் நமக்கு சொல்லுவார்.

மூர்: ‘அந்தக் கறுப்பனிடம் துப்பாக்கி இருந்ததா?’

போலீஸ்: ‘இன்னும் இருப்பதாக கண்டுபிடிக்கவில்லை”

மூர்: ‘எல்லேயில் எங்கு பார்த்தாலும் தெரியக்கூடிய, மலைமேல் இருக்கும் ‘ஹாலிவுட்’ என்னும் பெருத்த அடையாளப் பலகைத் தெரியவே இல்லையே! அதற்குக் காரணமான அசுத்தமான காற்று குறித்து விசாரித்தீர்களா?’

போலீஸ்: ‘இல்லை’.

மூர்: ‘இல்லாத ஒன்றை குறித்து கடந்த இரண்டு மணி நேரமாக துப்பு தேடுகிறீகள். இருக்கும் சுற்றுப்புறச் சூழலை குறித்து நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?”

பதில் சொல்ல விரும்பாத போலீஸார் நகர்ந்து செல்கிறார்கள்.

காத்திருந்த வேளையில் – மனுஷ்யபுத்திரன்

தமிழ்ப் படைப்பாளிகளின் சமூக இருப்பு

துரதிஷ்டவசமாக எல்லாப் பிரச்சினைகளிலும் ஆளும் தரப்பாகவும் எதிர்தரப்பாகவும் அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். இவர்களுடைய நீதி மற்றும் அநீதி சார்ந்த முடிவுகள் அவர்களது அரசியல் நீதியான இலாப-நஷ்டங்களுக்கு அப்பால் ஒரு சமூகத்தின் ஆதாரமான நெறிகளையோ மதிப்பீடுகளையோ தழுவி விரிவடைவதேயில்லை. இதனால்தான் எல்லா அரசியல்ரீதியிலான முடிவுகளும் அவை எடுக்கப்பட்ட தருணத்திலேயே உள்முரண்பாடுகள் கொண்டவை யாகவும், நம்பகத்தனமையற்றவையாகவும் மாறிவிடுகின்றன.

….

ஒரு படைப்பாளி எல்லாப் பிரச்சினைகளிலும் தனது கருத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒருவருக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்கோ அல்லது அப்படியே இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. தன்னுடைய நிலைகளையும் கோழைத்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் கூட ஒருவரது அடிப்படை உரிமையே. ஆனால் ஒரு சமூகம் நீடித்திருப்பதற்கான அடிப்படை நியாயங்கள் மீறப்படும்போதுகூட ஒருவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்ற நிலை அந்த நியாயங்களை அழிப்பவர்களை ரகசியமாக ஆதரிப்பதாகிவிடும்.

மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கூடத் தமிழ் எழுத்தாளர்களிடையே அவர்களது தனிப்பட்ட உறவுநிலைகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

(14.07.2001)



அரட்டையும் அரட்டலும்

சமூகம் திருத்தப்படுகிறது, தான் பாதுகாக்கப்படுவிடுவோம் என்ற உவகையை, நிம்மதியை பார்வையாளர் அடைகிறார். இந்த சுயஏமாற்று மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் வாழ்வதற்குப் பொருள்களும் கேளிக்கைகளும் மட்டுமல்ல கருத்துகளும் தேவையாக இருக்கின்றன.

…..

தமிழ்ச்சமூகம் கல்வி, அரசியல், வெகுசன் ஊடகங்கள் அனைத்திலும் சிந்தனை சார்ந்த மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட்டது. சிந்தனை என்பது ஒரு பொதுக்கருத்தைச் சொல்வதாகவும் கேட்பதாகவும் மாறிவிட்டது. பொதுகருத்து சார்ந்த அறங்களைத் திரும்ப திரும்ப வலியுறுத்துவதன் மூலம் பிரச்சினைகள் பேசப்படுவதான, தீர்க்கப்படுவதான ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் எல்லாப் பிரச்சினைகளும் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கப்படுகின்றன.

…..

ஒவ்வொரு பிரச்சினையைப் பற்றியும் எவ்வளவு பிற்போக்கான கருத்துகளும் மனோபாவங்களும் சமூகத்தின் பொதுக்கருத்தியலில் நிலவுகின்றன என்பதற்கு இந்த (அரட்டை) அரங்குகளே சாட்சியங்கள். பேசுகிறவர்கள் மற்றும் நிகழ்ச்சியை நடத்துபவரைக் காட்டிலும் ஒவ்வொரு மேலோட்டமான அல்லது கொச்சையான கருத்திற்கும் வாய்பிளந்து ஆரவாரிக்கும் பார்வையாளர்களின் குதூகலம் இன்னும் அச்சுறுத்துகிறது.

….

(பட்டிமனற) ஒரு நோயைப் பரப்புவது எவ்வளவு சுலபம் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை. இந்தப் பேச்சு அர்த்தமுள்ள ஒரு பேச்சை அழிக்கும் ஓர் ஏற்பாடு. ஏனெனில் பேச்சு இன்று உற்பத்தி செய்து பரப்பப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பேச்சை பேசுவதற்குப் பதில் அதை வேடிக்கை பார்ப்பது, ஒரு சமூகம் தன்னுடைய பேச்சை இழப்பதாகவே அர்த்தம் பெறுகிறது.

(21.07.2001)



புதிய கடவுள்கள் புதிய அடையாளங்கள்

பழைய மதங்கள் அனைத்தும் தனிமனிதனுடனான உறவைப் படிபடியாக இழந்துவிட்டன. அவனது மதம் சார்ந்த அடையாளம் என்பது ஒரு குழு சார்ந்த அடையாளமாக இல்லாமலாகி விடுகிறது. அப்போது ரகசியக் குழுக்கள் தீவிரச் செயல்பாட்டையும் திட்டவட்டமான குழு அடையாளத்தையும் அளிப்பவையாக இருக்கின்றன.

….

ஒஷோவோ பங்கரு அடிகளோ சாய்பாபாவோ அடிப்படையில் நவீனச் சமூகத்தின் ஒரே விதமான தேவைகளையே நிறைவேற்றுகின்றனர். அவர்கள் மதங்களற்ற உலகின் மதங்களாக மாறியுள்ளனர். தெய்வத்தின் சாயல்களை நேரடியாகவும் வெகு அருகாமையிலும் கொண்டு வருகின்றனர். தமக்குள் பிரத்யேக நம்பிக்கைகளையும் மொழியையும் கொண்ட குழுக்களை உருவாக்குகின்றனர். இதற்குள் உறவுகளும் பரிவர்த்தைனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உடனடியான அந்த இடத்தில் ஒரு சமத்துவச் சூழல் உருவாக்கப்படுகிறது.

….

ரஸ்புதீனிலிருந்து தீரேந்திர பிரமச்சாரி வரை பெரிய தேசங்களின் முக்கிய வரலாற்றுக் காலங்களோடு சாமியார்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சிறிய அளவில் செயல்படும் வட்டாரச் சாமியார் கூட அந்த இடத்தின் செல்வாக்கு மையங்களில் முக்கிய இடம் வகிக்கிறார்.

….

அக்ரஹாரங்களும் சேரிகளும் இல்லாத ஒரு வெளியில் சாதிய முகம் மறைந்து கொள்கிறது. உதிரியாகக் கலைந்துகிடக்கும் மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு பொது நம்பிக்கை, தமக்கான ஒரு பிரத்யேக அடையாளமும் குழுவும் அவசியமாகிவிடுகிறது. இவ்வாறு பலவிதங்களிலும் மரபான அமைப்புகள் சிதையும்போது, பயனற்றதாக மாறிவிடும்போது அந்த வெற்றிடத்தை நிரப்பும் பல அம்சங்களில் இந்த மனிதக் கடவுளர்களும் உள்ளனர்.



நன்றி: காத்திருந்த வேளையில் – மனுஷ்யபுத்திரன் – உயிர்மை

வெறும் பொழுது – உமா மகேஸ்வரி

பிரியம்

ஏனிந்தக் குருவியை

இன்னும் காணோம்?

எனக்கு மகா செல்லம் அது.

பழுப்புக் கலரில் அழுக்குக்குஞ்சு.

சின்ன இறக்கைகளில்

கறுப்புக்கோடு தெரியும்.

கண் மட்டும்

கண்ணாடிக் கல் மாதிரி

செளிச்சத் துறுதுறுக்கும்.

உரிமையாய் கூடத்தின்

உள்ளே நுழைந்து நடக்கும்.

புத்தகம் ஒதுக்கி

அதையே கவனிக்கும் என்னை

அலட்சியப்படுத்தும்.

மாடி வெயிலில்

வேட்டியில் காயும்

வடகத்தை அலகால் நெம்புதல்,

தோல் உரிக்காது

நெல்லை விழுங்குதல்,

துணிக்கோடியில் கால் பற்றிக்

காற்று வாங்குதல்,

அறைக்கண்ணாடியில்

தன்னைத் தானே

கொத்திக் கொள்ளுதல் –

அதற்குப் பிடிக்கும்.

நான் இறைக்கும்

தானியமணிகளை

அழகு பார்த்துத் தின்னும்

ரசனாவதி.

ஏனிந்தக் குருவியை

இன்னும் காணோம்?

அது வரும் மாலை

மெதுவாய் நகருதே!

கீழ்வானப் பரப்பில்

கண் விசிறித் தேடினும்

காணவில்லை, எங்கு போச்சோ!

திடுமெனக் காதில்

தித்தித்தது அதன் கீச்சுக்குரல்

ஜன்னல் பிளவில்

உன்னிப் பார்த்தால்

அடுத்த வீட்டு முற்றத்தில்

இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி

அழகு பார்க்கும் என் குருவி;

என் முகம் ஏறிடாது

திருப்பிக் குனியும் விழிகளை

oOo

தமிழினி – 224 பக்கங்கள் – ரூ. 100/-

கவிதைகளை ரட்சியும் – வைரமுத்து

Marathadi

அதிகாலை

சூரியன்கூட இன்னும்

முகம் கழுவவில்லை

வாசிக்க ஆளில்லை

என்னும்

வானப்புத்தகம்

திறந்திருந்தது

எனது தவச்சாலையாய்

மொட்டைமாடி

நட்டுவைத்த மௌனங்களாய்

மரங்கள்

அங்கங்கே

புள்ளினங்களின் பூபாளம்

கலை என்பது

இயற்கை வாழ்க்கை

இரண்டின் மொழிபெயர்ப்போ?

“அப்பா

உங்களைப் பார்க்க நிறையபேர்”

என் மகன்

கதவு தட்டிக்

கனவுடைத்தான்

கலைந்த தலை

கசங்கிய லுங்கி

முகத்தில் முள்

பரவாயில்லை

கவிதைக்கும் கவிஞனுக்கும்

நிஜமே கம்பீரம்

கீழே வந்தேன்

முகங்கள் முகங்கள்

முழுக்க முழுக்க முகங்கள்

படித்த முகங்கள் பாமர முகங்கள்

கனவு முகங்கள் கழுவாத முகங்கள்

அன்பில் குழைந்த ஆர்வ முகங்கள்

மழலை சுமந்த மாதர் முகங்கள்

‘வணக்கம்’

ஓ!

ஒரேபொழுதில்

அத்தனை உதட்டிலும் பூப்பூக்க வைக்கும்

அற்புத மந்திரமா ‘வணக்கம்’?

“எந்த ஊர் நீங்க?”

ஊர் சொன்னார்கள்

“என்ன விஷயம்?”

“ஒங்க பாட்டுன்னா உசுரு”

லுங்கி சிறகானது

“எல்லோருக்கும் டீ சொல்லுப்பா”

தேநீரைப் போலவே

சுடச்சுடக் கேள்விகள்

“ஒரு பாட்டு எழுத

எவ்வளவு நேரம்?”

“அதிகபட்சம்

அரை மணி நேரம்”

“பாட்டுக்கு எவ்வளவு

பணம் வாங்குறீங்க?”

“வாங்கவில்லை

கொடுக்கிறார்கள்”

“பாரதிராஜா உங்களுக்குச்

சொந்தக்காரரா?”

“ஆமாம் ‘கலைச்சொந்தம்'”

“ரஜினியோடு

சாப்பிடதுண்டா?”

‘உண்டு’

“கமல் டெலிஃபோன்

பண்ணுமா?”

“எப்போதாவது”

“நடிகைகள் வருவார்களா?”

“வந்திருக்கிறார்கள்

கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்கு”

“உங்களைப் பற்றியும்

கிசுகிசு வருகிறதே”

“என் புகழுக்கு அது போதாது”

“உங்களைத்

தொந்தரவு செய்கிறோமா”

“இல்லை

தோகை, மயிலுக்குத்

தொந்தரவா?

“உங்களுக்குப்

பிடித்த பாட்டு…”

‘காதல் சிறகைக்

காற்றினில் விரித்து’

“நீங்கள் நினைத்து

நிறைவேறாமல் போன ஆசை?”

‘மொட்டை மாடியிலிருந்து

குதிக்க வேண்டும்’

“உங்கள் பலம் எது?

பலவீனம் எது?”

‘பலம் – பகை

பலவீனம் – சொந்தம்’

“குறைந்த நாளில்

நிறையச் சம்பாதித்த கவிஞர்

நீங்கள் தான்”

‘இல்லை

எனக்கும்

மாசக்கடைசிகள் உண்டு’

“எங்களுக்கு

என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

‘மீண்டும் வணக்கம் சொல்ல

விரும்புகிறேன்’

சிரித்தார்கள்

அலையலையாய் அழகழகாய்ச்

சிரித்தார்கள்

கலைந்தார்கள்

கனவுகளாய்

கலர் கலராய்க்

கலைந்தார்கள்

எல்லோரும் போனபின்

அந்த அறையில் யாரோ

முனகுவது கேட்டது

திரும்பிப் பார்த்தேன்

தன்னை யாரும்

விசாரிக்கவில்லையே என்ற

விசாரத்தில்

கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது

என் கவிதை

oOo

வைரமுத்து கவிதைகள் – ரூ. 300/- சூர்யா வெளியீடு

என்.பி.ஆர். செய்தியோடைகள்

நான் முடிந்தவரை கேட்டுப் பயன்பெறும் நிகழ்ச்சிகளில் அமெரிக்காவின் ‘ஆல் இந்தியா ரேடியா’வான NPR முக்கியமான ஒன்று. நடுநிலைமை, ஓரளவு ஆழ்ந்த பார்வை, அவ்வப்போது அரசியல்வாதிகளையும் சிந்தனையாளர்களையும் தோண்டி வெளிக்கொணரும் பேட்டி, பரந்த உலகளாவிய பிண்ணனியில் செய்தி அலசல் என்று பலமுறை ‘அட…’ போட வைத்து, அவ்வப்போது டொனேஷனும் கொடுக்கவைத்த என்.பி.ஆர்., ஆர்.எஸ்.எஸ். கொடுக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியான விஷயம்.

All Things Considered: http://www.npr.org/rss/rss.php?prgCode=ATC

Morning Edition: http://www.npr.org/rss/rss.php?prgCode=ME

Day to Day: http://www.npr.org/rss/rss.php?prgCode=DAY

Tavis Smiley: http://www.npr.org/rss/rss.php?prgCode=TAVIS

Motley Fool: http://www.npr.org/rss/rss.php?prgCode=FOOL

Weekend Edition Sunday: http://www.npr.org/rss/rss.php?prgCode=WESUN

Weekend Edition Saturday: http://www.npr.org/rss/rss.php?prgCode=WESAT

Talk of the Nation: http://www.npr.org/rss/rss.php?prgCode=TOTN

Fresh Air: http://www.npr.org/rss/rss.php?prgCode=FA

ஒண்ணே ஒண்ணு… கண்ணே கண்ணு!

இங்கு செல்லவும். மவுஸை அவருடைய முகத்தின் மேல் சுட்டவும். மேலும் கீழும் ஆசை தீர ஆட்டவும். வேண்டிய அளவு ஆட்டிவைத்து, அலுத்தபிறகு, முகத்தின் மேல் சுட்டியை விட்டு விட்டு, நடப்பதைப் பாருங்கள். ஹிஸ்பானிய மக்களுக்காக ஃபிலிப்ஸ் நடத்திய இலக்கக் கலை (Digital Arts) விழாவில் முதல் பரிசை வென்றிருக்கிறது.

நன்றி: ஃபிலிப்ஸ்