Monthly Archives: ஜூன் 2004

Laloo’s first plan as Railway minister 

Laloo’s first plan as Railway minister Posted by Hello

Raghu Romeo 

Raghu Romeo Posted by Hello

Off the mark 

Off the mark Posted by Hello

ஆர். வெங்கடேஷ்

ரா.கா.கி.: கவிதையில் எனக்குக் குரு ஞானக்கூத்தன். பல செய்திகளை அவரிடமிருந்துதான் நான் அறிந்துகொண்டேன். அறிந்துகொண்டிருக்கிறேன். வண்ணநிலவன் கவிதைகளில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, நேரடித்தன்மை. கூடவே ஒரு கமெண்ட். கவிதையைச் சட்டென உயர்த்தி, ஞாபகமண்டலத்தில் இருத்தி வைப்பது கமெண்ட்தான். பல கவிதைகளில் இந்தக் கமெண்ட் வண்ணநிலவனிடத்தில் பயங்கர உயிர்ப்புடன் இருக்கிறது.

என் டெஸ்க்டாப்

கொஞ்ச நாள் சே குவேரா

அழகு தொப்பியும்

குறுந்தாடியும்

கொள்ளை கொண்ட நாள்கள் அவை.

அப்புறம் மாவோ

கிறுகிறுக்க வைத்தவை

அழுக்குக் காக்கியும்

கூர்மைக் கண்ணும்

கீழை மார்க்சியமும்.

சிறிது நாள் மார்க்குவெஸ்

சில நாள்கள் குந்தர் க்ராஸ்

அப்புறம் சட்டென

ஒரு நாள் பாரதி,

வீரக்கொம்பூன்றி

செல்லச் செல்லம்மாளோடு.

அன்னையும் அரவிந்தரும்

அலங்கரித்தது

பின்னொரு நாள்.

சில நாள் சாமி

சில நாள் கோவில்

சில நாள் குடும்பம்

அலங்கரித்த எவரும்

அதிக நாள் நீடித்ததில்லை

எப்போதும்போல்

சுகமாய் இருக்கிறது

சுத்தமாய் இருக்கும்

டெஸ்க்டாப்.

எஸ்.பொவுடன் மூன்றரை மணி நேரம் 1

Thanks to eelam Arts & literature Yahoo Groupசமீபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்ற இதழ் ஏ.ஜே.கனகரட்னா சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது. ஏ.ஜே.வோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் எஸ்.பொவும் ஒருவர். ஏ.ஜே. லேக் ஹவுஸ் நிறுவனத்தினரின் Daily News பத்திரிகையில் வேலை பார்த்து வந்த நேரம். முதலில் துணை ஆசிரியராக அங்கே பணிக்குச் சேர்ந்தார். பின்னர், அவரது வேலைத் திறத்தினைக் கண்டு, நிர்வாகம் அவரை Special Features Editor ஆக பதவியளித்ததாம். ஒரு சமயத்தில்

அதன் முதலாளி (இவர் இன்றைய ரணில் விக்ரமசிங்கேவின் தகப்பனார்) கல்வித்துறை சம்பந்தமாக ஒரு தகவலைத் தெரிவித்து, அதன் மேல் விவரங்களைத் திரட்டிக் கட்டுரை எழுதச் சொன்னாராம். ஏ.ஜே.வும் அத்தகவலை ஒட்டி தன் வழியில் விவரங்களைத் தேடிப் போயிருக்கிறார். ஆனால், அரசாங்கத் தகவல்கள் முற்றிலும் வேறாக நல்லவிதமாக இருந்திருக்கிறது.

பின்னொருநாள் கட்டுரை பற்றி சேர்மன் கேட்க, மிக தைரியமாக, நேர்மையாக, “நீங்கள் குறிப்பிட்டபடி தவறுகள் ஏதும் கல்வித்துறையில் நடைபெறவில்லை. அதனை என் வழியில் நான் உறுதிசெய்துவிட்டேன். அதனால் நான் அந்தக் கட்டுரையை எழுதுவில்லை” என்றாராம்.

மறுநாள் அலுவலகம் போனால், அவரை பாராளுமன்ற நிருபராக பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தாராம்.

இரண்டொரு நாள்கள் அங்கேயும் போய்விட்டு, பின் சேர்மனுக்கு ஒரு கடிதம் அளித்தாராம். அதில், என்னை துணை ஆசிரியராகப் பணிக்கு அமர்த்தினீர்கள். பின்னர் என்னை features editorஆகவும் உயர்த்தினீர்கள். இப்போது என்னை நிருபராக மாற்றியுள்ளீர்கள். இது சரியெனப் படவில்லை. என்னை மீண்டும் துணை ஆசிரியராகவே மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியிருந்தாராம்.

சேர்மன் கூப்பிட்டனுப்பினார். பேச்சினூடே, சேர்மன், “நாங்கள் சில கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பணம் செலவு செய்து பத்திரிகை நடத்துகிறோம். இதில் எங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதே முக்கியம். நீங்கள் கொஞ்சம் வளைந்துபோக வேண்டும். அப்படிச் செய்வதென்றால், துணை ஆசிரியராகத் தொடர்வது சாத்தியம். இயலாது என்றால், பாராளுமன்ற நிருபராக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றாராம்.

சற்றும் மனந்தளராத, ஏ.ஜே. கொஞ்சம் பொறுமை காத்துவிட்டு

“மூன்றாவது வழி ஒன்று இருக்கிறது ஐயா”

“என்ன அது”

“நான் என் ராஜினாமாவைக் கொடுத்துவிடுகிறேன். அது ஒரு சாத்தியம் தானே”

முப்பத்தைந்தாவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

லீனா மணிமேகலை

பெண்ணே நீ – Sify.com: ‘அமெரிக்காவில் “எச்’ விசாவில் இருப்பவர்கள், இந்தியாவுக்கு வந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டு போகின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் கிடைக்கும். அங்கு சென்றவுடன் நமது பெண்களை வெளியுலகமே தெரியாத அளவுக்கு கூண்டுக்கிளியாக்கி வருகின்றனர். திருமண பந்தத்தைத் தொடரவும் முடியாமல், துண்டிக்கவும் வழியில்லாமல் நாளுக்கு நாள் இந்திய அபலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பாதிக்கப்பட்ட அமெரிக்கா வாழ் பெண்களின் துயர் துடைக்க பல சங்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் பற்றியே ஒரு டாகுமெண்டரி எடுக்கலாம் என்ற எண்ணம்கூட ஏற்பட்டது. அவ்வளவு சோகம் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் இருக்கிறது.’

குமுதம் ஜங்ஷன்:

“மக்களோட கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்ற எத்னோகிராபிங்கிற செக்ஷன்ல என்னோட மாத்தம்மா படத்தைத் திரையிட்டாங்க. இண்டர்நேஷனல் கமாடடீஸ்’ங்கிற செக்ஷன்லதான் என்னோட பறை டாக்குமென்டரியை திரையிட்டாங்க. உலகம் முழுக்க பெண்களை எப்படி போகப் பொருளாகப் பார்க்கறாங்க, பல்வேறு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்படறாங்கன்னு அழுத்தமா சொல்ற படங்களை இந்த செக்ஷன்ல பார்த்தேன்.”

Belief without Facts: பத்துப் பாட்டு

1. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கட் செய்தலிற் றீது.


பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

2. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.


செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

3. செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

4. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

5. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய

வல்லார்நட் பாய்ந்து கொளல்.

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

6. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

7. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்

பாற்பட் டொழுகப் பெறின்.

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

8. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத் தஞ்சா தவர்.

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

9. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

10. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

நன்றி: திருக்குறள் – கலைஞர் உரை

எஸ். வைத்தீஸ்வரனின் இணையத்து சுவர்கள்

EXPECTATION: she is waiting for the call in the jungle

நன்றி: Vaidheeswaran’s Art Gallery

இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை.காம்

தெ. மதுசூதனன் :

எழுதிய முதல் நாவல் ‘காலவெள்ளம்’, இதில் அரசியல் அரங்கில் நிகழும் சதுரங்க விளையாட்டை நாவல் களத்துக்குள் கொண்டு வந்தார். குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திரபூமி ஆகிய நாவல்களும் அரசியல் சார்பு வகைப்பட்ட படைப்புகளாகவே வெளிவந்தன.

இந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் பலவும் நகர வாழ்வின் பாசாங்குகளை விமரிசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே டெல்லியில் இருக்க நேர்ந்ததால் நகரவாழ்வியல் மீதான மதிப்பீடுகள் விழுமியங்கள் குறித்த விசாரணையை தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார். டெல்லி வாழ்வில் பல கலாசார அதிர்ச்சிகளை சந்தித்தார். குறிப்பாக தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள போலித்தன்மைகள் பாசங்குகள் இவரது படைப்பில் தனித்தன்மை பெற்றது. இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் உரையாடல்கள் மிகுந்து இருக்கும். பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியே உருவாகும். உளவியல் சார் அணுகுமுறை இவரது எழுத்தில் முக்கியமாக இழையோடிக் கொண்டிருக்கும்.

குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசும், இராமனுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றுள்ளார். 1991ல் சிறந்த இந்தியபடமாய் தேசிய விருது பெற்ற முதல் தமிழ் படமான ‘மறுபக்கம்’ படத்தின் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறுநாவலே. இ.பா. போலந்து நாட்டு வார்சா பல்கலைகழகத்திலும் சிலகாலம் பணியாற்றியவர். கணையாழி இதழின் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய நாடகப்பிரதிகளில் ஒன்று ‘ஓரளங்கசீப்’. சரித்திர நாடகம் சமகால அரசியலின் ஒத்திசைவைப் பெற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.

படைப்புகள்

நாவல்கள்

தந்திரபூமி
சுதந்திரபூமி
ஹெலிகாப்டர்களும் கீழே இறங்குகின்றன
குருதிப்புனல்
உச்சிவெயில்
கிருஷ்ணா கிருஷ்ணா

நாடகம்

போர்வை போத்திய உடல்கள்
மழை
இறுதியாட்டம்
கொங்கைத் தீ
ஔரங்கசீப்
இராமானுஜர்

கட்டுரை

தமிழ் இலக்கியத்தில் வைணவம்
என்றுமுள்ள தமிழ்

சென்னையில் ஒரு வெயில் காலம் – 4

நன்றி: சமாச்சார் தமிழ்

எம்.பி.3 பாடல்கள் இப்பொழுது ரொம்பவும் சல்லிசாகிவிட்டது. முப்பது ரூபாய்க்கு தெருவோரத்தில் கூவிக் கூவி சிடி விற்கிறார்கள். கொஞ்சம் பேரம் பேசினால், மூன்று வாங்கினால், ஒன்று இனாம் என்று டீல் கூட போடலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அறுபது அமெரிக்க டாலர்களுக்கு, இன்றுவரை வெளிவந்த எல்லாப் திரைப்பாடல்களையும் வாங்கி விட முடியும். ரிச்சி ஸ்ட்ரீட்டில் எல்லாவிதமான சினிமாப் பாடல்களும் கிடைக்கிறது.

ஆனாலும், லேண்ட்மார்க்கில் கூட்டம் நெட்டித் தள்ளுவது ஆரோக்கியமான விஷயம். எல்லோரும் கூடை நிறைய சிடி பொறுக்குகிறார்கள். ஒரு காலத்தில் முன்னூறு ரூபாய்க்கு விற்ற இசைத்தட்டுகள், இப்பொழுது நூறு ரூபாய்க்கும் குறைவாகவே கிடைப்பது ஆரோக்கியமான விஷயம். எம்.பி.3க்கள் எளிதில் கிடைத்தாலும், மக்கள் (சிலராவது) ஒரிஜினல்களை வாங்குவது வரவேற்கப்படவேண்டும். ஆனால், இணையமெங்கும் புதிய படங்களான ஆய்த எழுத்து முதல் எப்போழுதோ ரசித்த கீதாஞ்சலி வரை திரைப்பாடல்கள் எளிதில் கிடைக்கிறது. இவற்றைத் தவிர்க்க, குறைந்தபட்சம், வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவாவது புதிய பாடல்கள் உடனக்குடன் கிடைக்க வேண்டும்.

அமெரிக்காவை கலக்கும் itunes.com, real.com போல தமிழ்த் திரையுலகமும் செயலாற்ற வேண்டும். காஸெட் வெளியீட்டு விழாவின் போதே, உலகமெங்கும் உள்ள தமிழர்கள், பாடலை வலையிறக்க வசதி செய்து தர வேண்டும். பாடல்களை உடனடியாகக் கேட்கும் ஆர்வத்தில் நேயர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு, இணையம் மூலமாக, காஸெட்டோ, சிடியோ, தவணை அட்டையை உபயோகப்படுத்தி, ஆறு வாரம் கழித்து வரவழைத்து, பொறுமையாகக் கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை instant gratification.

தயாரிப்பளர்களுக்கும் உலகமெங்கும் உள்ள தமிழர்களை ‘நேருக்கு நேர்’ சென்றடைவதற்கு இது வழிவகுக்கும். ஹமாரா சிடி, சாரேகமா போன்ற புகழ்பெற்ற இணையத்தளங்கள் மூலம் இது எளிதில் நடைமுறைப்படுத்தலாம். தன்னுடைய முதல் வருடத்தில் ஐட்யூன்ஸ் எழுபது மில்லியன் பாடல்களை விற்றிருக்கிறது. அவ்வளவு பெரிய சந்தை தமிழ்ப்பாடல்களுக்கு இல்லாவிட்டாலும், என்னைப் போன்ற பலரும் அதிகாரபூர்வமான தளங்கள் மூலம் காசு கொடுத்து வாங்கிக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, ‘அமோரஸ் பெரோஸ்’ (Amores perros) என்னும் படத்தின் தாக்கங்கள் நிறைந்தது என்று எப்பொழுதோ ஹிந்துவில் படித்தேன். இணையத்திலும், இந்த வதந்தி பலமாக உலாவ, நெட்ஃபிளிக்ஸ் மூலம் படத்தை வ¦டு தேடி வர வைத்தேன். ஒரு விமர்சனம் கூட படிக்காமல், சன் டிவி திரை விமர்சனத்தில் ஒரு காட்சி கூட பார்க்காமல், முந்தின வாரமே முந்திரிக்கொட்டையாக படம் பார்த்த நியு ஜெர்ஸி/சென்னை நண்பர்களின் அறிமுகம் இல்லாமல், நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் விலாவாரியான அலசல் இல்லாமல், எங்காவது எட்டிப் பார்த்த sneak preview ஒன்று கூட இல்லாமல், எந்தவிதமான தீர்மானமும் இல்லாமல் பார்த்த படம். ஆனால், இந்தப் படத்தை எப்படி தமிழ்ப்படுத்த முடியும் என்னும் கேள்வி படம் பார்த்தவுடன் விஞ்சி நிற்கிறது.

ஒரு விபத்து நிகழ்கிறது. அது எவ்வாறு மூன்று மனிதர்களையும், அவர்கள் சார்ந்தவர்களையும் பாதிக்கிறது என்பதை கொஞ்சமாய் நீட்டி முழக்கி, மூன்று பாடல்களையும் வைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். ஆய்த எழுத்திலும் மூன்று பேர் நடுநாயகமாக வீற்றிருக்கிறார்கள் என்பதைத் தவிர பெரிய ஒற்றுமை ஒன்றும் இருந்துவிடாது. நான் பார்த்த முதல் மெக்ஸிகன் படம் இது. தமிழ்ப் படங்களில் அடிக்கடி வரும் சண்டைக் காட்சிகள் போல், ஒருவருக்கொருவர், காதலரை ஏமாற்றி கள்ளக்காதல் செய்கிறார்கள். ஆனால், பாலச்சந்தர் படம் பார்த்த dejavu கொடுக்காமல், நம்பும்படி, மிரளும்படி காட்டியிருந்தார்கள். மேஜிகல் ரியலிசமும் இன்ன பிறவும் புழங்கும் மொழியில் இருப்பதாலோ என்னவோ, நிறைய குறிய¦டுகள் கொடுத்திருந்தார்கள். தங்களுடைய உரிமையாளருக்கு ஏற்ற குணாதிசயங்களைக் கொண்ட மூன்று விதமான நாய்களும் அவற்றின் விசுவாசமும்; கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பதை பிரதிபலிக்கும் மூன்று கதை நாயகர்கள் என்று வெளிப்படையாக உடைத்து காட்டமால், மனதில் உறைய வைத்தது திரைக்கதை.

எது எப்படியோ… ஸ்பானிய மொழித் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஏரியல் விருதை வென்ற ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்க முடிந்தது.

சென்னையின் தமிழ் புத்தக நேயர்கள் அனைவரும் வலம் வரும் தலம் நியு புக்லேண்ட்ஸ். ஹிக்கின்பாதம்ஸில் மனமுவந்து கொடுத்த பத்து சதவிகிதத் தள்ளுபடி மாதிரி இங்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஹிக்கின்பாதம்ஸில் சிக்காத, எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்தது. அங்கிருக்கும் வரை குடித்து முடிக்க, முடிக்க ந¦ர்மோர் வந்துகொண்டே இருந்தது. கேட்கும் தலைப்புகளில் புத்தகங்களை எடுத்து வந்து கொடுப்பதும், கேட்காவிட்டால், நிம்மதியாக படித்துப் பார்க்கவும், பராக்கு பார்த்து, புரட்டி, உள்ளடக்கம் அலசி முடிவுக்கு வாங்க என்று விட்டுவிட்டு சென்றதும் சௌகரியமாக இருந்தது. மாலையில் சென்றால் இஞ்சி டீ கிடத்திருக்கும் என்றார் நண்பர். மாலை வரை இருந்திருந்தால் இன்னொரு நூறு டாலர் விட்டிருப்பேன் என்பதால், சீக்கிரமே அங்கிருந்து கிளம்பியதும் நல்ல முடிவுதான்.

No Judgments… Only Bull!

இணையக் குழுக்களில் கலக்குபவர்களுக்கு பத்து கட்டளைகள்

1. குழுவை வழிநடத்துபவர் டெஸ்ட் மெஸேஜ் எழுதினால் கூட அவசியம் ஒரு வார்த்தையாவது சிறப்பாக இருந்தது என்று பதில் எழுதவும்.

2. குறை கூறி எழுதுவதாக இருந்தால் பகிரங்கமாக எழுதவும். நிறையோ, நன்றியோ (விதி #1 விலக்கு) சொல்வதாக இருந்தால் தனிமடல் அனுப்பவும்.

3. ‘யாருமே எழுத மாட்டேன் என்கிறீர்களே’ என்று அடிக்கடி விசனப்படவும்.

4. இந்தக் குழுவில் பேசுவதை வேறொரு இடத்திலும், அங்கு நடக்கும் விவாதத்தை மற்றொரு குழுவிலும், இரண்டுக்கும் சம்பந்தமில்லாத பிறிதொரு மடற்குழுவிலும் பதிலாகவோ, forwardஆகவோ கொடுக்கவும்.

5. புதிதாக வலைப்பதிவோ, இணைய சஞ்சிகையோ, மடலாடற்குழுவோ, மூன்று கிலோபைட் வலைபக்கமோ அமைத்தால், அனைத்துக் குழுமங்களுக்கும் அறிவிப்பு செய்யவும்.

6. யாராவது #1 விதியை மீறினால், ‘இந்தப் பிரச்னை இங்கு விவாதிக்க ஏற்றதல்ல’ என்றோ, ‘உங்களுக்குப் பண்போடு எழுதவரவில்லை’ என்றோ கண்ணியமாக பதில் போடவும்.

7. குழுவில் நீண்ட காலம் வசிக்கும் இன்னொருத்தர் மூலம் அனுகூலமான இண்ட்ரோ மடல் ஒன்று அனுப்ப செய்யவும்.

8. ‘எனக்குத் தமிழ் தட்டச்சே வர மாட்டேங்குது’, ‘நான் உங்களை அண்ணி என்று கூப்பிடலாமா’ போன்ற பிரயோகங்கள் உங்கள் அறிமுக மடலில் வைத்துக் கொள்ளவும்.

9. நல்லசிவம், தா. சங்கரன் என்று முகமூடி போட்டால் கேவிஆரின் கட்டளைகளைப் பின்பற்றவும்.

10. கோபித்துக் கொண்டோ, கோபமில்லாமலோ தனிக்குழு நடத்தப் போனால், வரும் ஆரம்ப ‘வாழ்த்து; மடல்களுக்கு எல்லாம் ‘தங்கள் காவியம் அற்புதம்’, ‘உங்கள் படைப்பு இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்’ என்று திக்குமுக்காட வைக்கவும். (மறந்தும் ‘கவிதை’ அல்லது ‘கதை’ நன்றாக இருந்தது என்று தவறாக எழுதி, கட்டுரையாளரை புண்படுத்த வேண்டாம்).