Daily Archives: பிப்ரவரி 25, 2004

பயண நேரம் – சல்மா

பாபு மற்றும் பிகே சிவகுமார் ராகாகியிலும் மரத்தடியிலும் தங்களை ஈர்த்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சல்மா சிலசமயம் பழக்கப்படுத்திய உருவகங்களையே கொடுப்பதாக பட்டது.

‘கண்கள் பூக்கள் மீதிருக்க

மனம் தேடிப் போகிறது

வரைபட வீட்டின்

தனிமையை’

என்று முடிக்கும் அவர் ‘இரண்டாம் ஜாமத்துக் கதை’யில்

‘சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டிலமர்ந்து

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது’
என மீண்டும் பயன்படுத்துகிறார்.

பெண்ணியக் கவிதைகள் தொலைக்காட்சி சீரியல்களைவிட

ரொம்ப கழிவிரக்கம் பேசுகிறது என்று தோன்றும் எனக்கு,

அவருடைய தொகுப்பில் வேறுபட்ட பதிவுகளையும் பார்த்தது

நல்ல அனுபவமே.



பயண நேரம் – சல்மா

பயணம் நிகழ்கையில்

ஜன்னலோர இருக்கை வாசிகள்

அதிர்ஷ்டசாலிகள்

சீறும் காற்று

முடியைக் கலைக்கவும்

கண்ணில் தூசு விழவுமாய்

அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட

மனிதருள்,

இயற்கையுள் நுழைய

வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்

பாதையோரத்தில்

இடிந்து கிடக்கும்

ஒற்றைச் சுவர்

என்னவாய் இருந்திருக்கும்?

அது ஓர்

அச்சம் தரும் நினைவு

முடிவு நேரம் அறிவிக்கப்படாத

பயணம் துரிதப்படுத்துகிறது

எல்லாவற்றையும் முடிக்க

ஏதொன்றுமே

முடிவடைவதில்லை.

பயணம் முடியும் வேளை

தகிக்கும் நிறைவின்மை

அச்சுறுத்துகிறது அனைவரையும்

சமயத்தில் எரிக்கிறது

எல்லாவற்றையும்

நன்றி: ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – சல்மா –

காலச்சுவடு பதிப்பகம் – விலை ரூபாய் 40


வலைப்பூ மேய்தல்

1. சங்கர்:

குட்டி இளவரசியின் அறிதல்கள்

காலம் என்கிறீர்கள்

அகாலம் என்கிறீர்கள்

காலத்தை வெல்வதென்றும்

காலத்தைக் கடப்பதென்றும்

பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்

குட்டி இளவரசி சகானா

‘நாளைக்கு மழை பெய்தது’

என்கிறாள் அமைதியாக

– மனுஷ்யப் புத்திரனின் ‘இடமும் இருப்பும்’ தொகுதியிலிருந்து.

நன்றி: சுவடுகள்

2. ராதாகிருஷ்ணன்:

“தமிழ்நாட்டுப் பறவைகள்”

டேவிட் ஆட்டன்பரோவின் ‘The Life of Birds’-ஐ வாசித்த சமயத்தில், தமிழிலும் இப்படி ஒரு புத்தகம் இருந்தால்….என்று ஏங்கியதுண்டு. இந்த அளவிற்கு நேர்த்தியான, அரிய புகைப்படங்கள், ஆழமான செய்திகளுடன் ஒரு புத்தகத்தைத் தரமாகப் பதிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்று தோன்றுகிறது. நமக்குள்ள திறமை குறைவு காரணமல்ல, வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததுமே முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். ஆர்வமும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இன்றைய வாழ்க்கையில் பறவைகளைப் பார்க்கவேறு நேரம் இருக்கிறதா நம் மக்களுக்கு! இருப்பினும் ஹிந்து பத்திரிக்கையின் புத்தக மதிப்புரைப் பகுதியில் தமிழ்நாட்டுப் பறவைகள் என்ற தலைப்புடன் ஒரு மதிப்புரையைக் கண்டவுடன் மகிழ்வேற்பட்டது. தமிழில் இம்மாதிரியான பல்துறைப் புத்தகங்கள் அடிக்கடி வந்தால் நன்றாயிருக்கும்.

நன்றி: நினைவோடை

3. யாழ்.NET:

பேசாப் பொருளை பேச துணிதல்

ஆழமான பன்முகப்பட்ட சில பிரச்சினைகள் பற்றி எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் பேசுதல் முறையல்ல என்பது ஒரு அனுபவ உண்மை. எனினும், அவற்றைப் பற்றிப் பேச வேண்டிýய வேளையில் பேசாமல் விடுவதும் மிகப் பெரிய தவறாகும்.

வடக்கு, கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு அத்தியாவசிய அரசியல் நிலைப்பாடாகும். அதிர்ஷ்டவசமாக அந்த அரசியல் இலக்கு நோக்கைச் சுலபப்படுத்துவதற்கான பண்பாட்டு ஒருமைப்பாடு கிழக்கிலேயே அதிகம் உள்ளது.

நன்றி: Yarl.net Groupblog மற்றும் தினக்குரல் – 15.02.04

4. திவாகரன் முருகானந்தன்:

திரை ஆய்வு: தென்றல்

பறை இசை அனைத்து இசைகளின் தாய் இசை உடல் உழைப்பின்றி கம்பியை மட்டும் நீட்டி இசை வாசிப்பது அவாளுக்கு சுகமானது தவிலை தூக்கி, தப்பை தூக்கி உடலை வருத்தி இசையைச் சொல்வது தமிழனின் கலை. கர்நாடக இசைக்கு அளிக்கும் முக்கியத்துவம் தாய் இசையான பறைக்கும் அளிக்கப்பட வேண்டும்.

தமிழன் பூமியை வைத்து விவசாயம் செய்தால் பார்ப்பனர்களாகிய நீங்கள் சாமியை வைத்து விவசாயம் செய்கிறீர்களா? தமிழ்நாட்டு ஆலயங்களில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும். இதை தடுத்தால் இதோ நாங்கள் உயிரை விடுகிறோம் என்று கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யும் 3 தமிழ் இளைஞர்கள்

நன்றி: படித்ததில் சுட்டது மற்றும் தமிழ்நாதம்

5. மயிலாடுதுறை ஜெ. ரஜினி ராம்கி:

ஜெயா வணக்கம் – கோவையின் பிரபல தொழிலதிபர் வானவாராயர்

சுவாமி விவேகானந்தர் தன்னை அதிகமாக பாதித்திருப்பதாக சொன்னார். விவேகானந்தர் சொன்ன ஆன்மீ£கத்தில் தெளிவு இருந்தது தேடல் இருந்தது.. அதெல்லாம் இந்த காலத்தில் குறைஞ்சுகிட்டே வருது என்றார். இந்தியா தனக்கென்று லட்சியம் எதையும் கொள்ளாததுதான் நமது பிரச்சினை என்றவர் மகாத்மா காந்திஜியின் பொருளாதார கொள்கைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும் என்றார்.

பாரதீய வித்யாபவனின் தலைவராக இருந்து கொண்டு இந்திய கல்வி முறையை மாற்றியமைக்கும் பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கியிருப்பதாக சொன்னார். விஞ்ஞானத்தோடு மெய்ஞானமும் இணைந்து செயல்பட்டே ஆகவேண்டும். அதை முன்னெடுத்து செல்ல இந்தியா போன்ற ஆன்மீக கலாசாரத்தை அடிப்படையாக தேசத்தால்தான் முடியும் என்று சொல்லி நிமிர வைத்தார்

நன்றி: சில்லுண்டியின் சிந்தனைகள்