Tag Archives: vannadaasan

தொய்யில் எழுதுதல்: புனைந்த ஓவியம்

கல்யாண்ஜியைத் தெரியும்.
வண்ணதாசன் சிறுகதைகளை விரும்பி வாசிப்பேன்.

அவர் ஒரு ஓவியரும் கூட – என்பதை வேலாயுத முத்துக்குமார் அவர்கள் மூலமாகத்தான் அறிகிறேன்.

செத்த காலேஜ் எனப்படும் ”இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்” (Museum of Natural History) போனால் நிறைய மிருகங்களையும் பறவைகளையும் விதம் விதமாக பாடம் செய்து வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன, என்று கண்டம் கண்டமாகக் காணக்கிடைக்கும் விலங்குகளை தத்ரூபமாக அதன் ஒய்யாரத்துடனும் அலங்காரங்களுடனும் தீட்சண்யமான பார்வைகளுடனும் அருகருகே நிறுத்தி வைத்திருப்பார்கள். சிறுகதையையோ நாவலையோ வாசிப்பது அந்த வகை.

அதை எப்படி அனுபவிப்பது என்று #vannadasan -க்குள் சற்றே உள்ளிழுக்கிறார் வேலாயுத முத்துக்குமார்.

அதன் பிறகு ஆசிரியரை சந்திப்பது… வண்ணதாசனின் எழுதுபடங்களை உணர்வாக்கி நமக்குள் ”நெடுமண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதி செவ்விரல் சிவந்த அவ் வரி அணங்கொழிலை”யும் பகிர்கிறார்.

எழுத்தை படிப்பது என்பது செத்த கல்லூரி அரும்பொருளகம்.
எழுத்தாளர்களை நேரில் பார்ப்பது என்பது விலங்குகளை சுதந்திரமாக உலவ விட்டு நாம் கூண்டுக்குள் இருக்கும் மிருகக்காட்சிசாலை விலங்காலயம்.
எழுத்தாளரை சந்தித்து உரையாடுவது என்பது அடர்காட்டின் உள்ளே பயணம் செய்து யாருமில்லா தனிமையில் அந்த உயிரினமும் நாமும் தூரத்தே நின்று ஒருவரையொருவர் நோட்டம் விடும் அபாயம் கொண்ட துணிகரச் செயல்.

நமக்காகச் சென்றிருக்கிறார். காசியபனின் அசடு, பூமணியின் பிறகு, கலாப்ரியாவின் தீர்த்த யாத்திரை, ”ஸ்வப்ந புஷ்பங்கள்” (யார் எழுதியது?), இராகுல தாசனின் அக்க்ரைப் பூக்கள், கதைப்பிதனின் தவிப்பு நூல்களுக்கான அட்டை ஓவியங்களை நம்முடன் பகிர்கிறார்.

#solvanam இதழில் முகப்புக் கட்டுரையாக கல்யாணியின் எழுத்துக்களையும் சந்திப்புகளையும் தூரிகை தீட்டல்களையும் அறிமுகம் செய்கிறார்.

#சொல்வனம் தளத்திற்கும் வண்ணதாசன் அவர்களுக்கும் நன்றி!

“உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்”

(குறுந். 276; 3-4)