Tag Archives: வரஹஸ்தம்

இடஞ்செல்லுகையும் வலம்படுதலும்

நம்ம சாமிகளில் எவரெவர் எந்தக் கையை பெரிதும் பயன்படுத்துகிறார்?

ராஜா ரவி வர்மா போன்ற பெரும்பாலான ஓவியர்கள் வலக்கை பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம். ஹிந்து மதத்திலும் சோற்றாங்கை, பீச்சாங்கை என்று வகைப்படுத்தியதால் அனைத்து தெய்வங்களின் ஆயுதங்களும் கருவிகளும் வலப்பக்கத்துக் கைக்கே தரப்படுகிறது. ஒரட்டாங்கையில் கபாலமும் கமண்டலமும் கிடைக்கிறது.

முதலில் எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய இராமர். வலக்கையை ஆதிக்கமாக கொண்டவர். அதனால்தான் இடது தோளின் மேல் அம்பை வைத்திருக்கிறார். அம்பறாத்துணியை வலது தோளின் மீது வலது கைக்கு வாகாக வைத்திருக்கிறார்.

அவரின் எல்லாமுமான அனுமார் – வலதுகையில் கதை. இடது கையில் சஞ்சீவி மலையைத் தூக்கி இருக்கிறார். குரங்கிற்கு இடது, வலது என்றெல்லாம் பாகுபாடு உண்டா! இரண்டும் சரிசமமாக பலம் வாய்ந்தவை. எது இவருடைய ஆதிக்க கையாக இருக்கும்?

ராமரைப் போலவே அய்யப்பன். அதே போல் வில்லையும் அமபுகளையும் வைத்திருக்கிறார்.

ராமர் என்றால் கிருஷ்ணரைச் சொல்ல வேண்டும். சக்கரம் இவரையும் வலதுகையர் ஆக்குகிறது. புல்லாங்குழலை அடுப்பூத மட்டுமே நேரடியாக ஃபிடில் போல் ஊதியதால், வேணுநாதனின் பிடி பிடிபடவில்லை.

அடுத்ததாக சரஸ்வதி. கையில் இருக்கும் வீணையோ, கிடாரோ, தம்பூராவோ – வலதுகைக்காரி ஆக்குகிறது.

முருகரும் கோவணாண்டியாக இருந்தாலும் வலது கையிலேயே வேலைத் தாங்கி இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் துவக்கத்தில் இவரைச் சொல்லி இருக்க வேண்டும். ஏழாவதாக விநாயகர். வியாசர் சொல்லச் சொல்ல வலது கையால் பாரதத்தை தந்தத்தை உடைத்து எழுதியவர். மோதகம் சாப்பிடுவதற்கு தனியாகத் தும்பிக்கையை கொண்டவர்.

இரண்டு கையும் உபயோகிப்பவர் என்றால் லஷ்மியைச் சொல்லலாம். இரு கையிலும் தாமரை வைத்திருக்கிறார். தங்கப் பொக்கிஷ குடத்தை இடது கையில் வைத்திருக்கிறார். வலக்கை பழக்கம் உள்ளவர்கள் இடக்கையிலேயே பளுவைத் தூக்குவார்கள் என்பதால் இவ்வாறு இருக்கும்.

இவர்களைப் போலவே சிவனும் திரிசூலத்தை வலது கையிலும் தாங்குகிறார். இடக்கையிலும் சில சமயம் கொண்டிருக்கிறார். கால் மாறி ஆடியவர் ஆயிற்றே!

பத்தாவதாக பத்ரகாளி, துர்காதேவி – இவரும் ambidextrous.

எந்தக் கையாக இருந்தால் கை இருந்தால் சரி என்றால் சைவம் எனலாம்.
வலது கை யே சிறந்தது என்றால் அனேகமாக வைணவம் எனலாமா?