Tag Archives: வட்டம்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

பூன் 2023

ஜெயமோகன் பதிவு: பூன் முகாம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. (௲௱௭ – 1107)

தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் மாபெரும் மகிழ்ச்சி, ஆசான் இடத்தில் முரண்டு தெளிவாகும்போதும் கிடைக்கும்.

இந்தக் குறளை வைத்து ஜெயமோகன் சந்திப்பான பூன் முகாம் கட்டுரையைத் துவங்கினேன்.

மூன்று நாளும் எப்படி இப்படி பம்பரமாக சிந்திக்கிறார்! எல்லாவற்றையும் எப்படி நினைவகங்களில் இருந்து பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து சந்தர்ப்பத்திற்கேற்ப கனகச்சிதமாகக் கொடுக்கிறார்!! அணுகுவதற்கு ஆர்ப்பாட்டமில்லாமல், வயது வித்தியாசம் பாராமல் கேள்விகளின் அறியாமையை நக்கலிடாமல், எவ்வாறு உண்மையாக, காத்திரமாக, அறத்துடன் உங்களுக்கேற்ப விளக்க முடிகிறது!!!

ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் வரும் ஆச்சரியங்கள்தான். இந்த முறையும் தொடர்ந்தது. ஆஸ்டின் சௌந்தர், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், தேயிலை மணக்க காபி போட்ட மகேஸ்வரி, உபசரிப்பு முத்து காளிமுத்து, பவா செல்லத்துரையின் செல்லக்குட்டி பிரகாசம், தத்துவவியலாளர் விவேக், மேய்ப்பர் சிஜோ – விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் ஒவ்வொருவராலும் விழா அமர்க்களமாகியது

எனவே, முடிவில் கம்பரின் இந்தப் பாடல் பொருத்தமாக பட்டது:

”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ”

அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே, அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை. இப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச் சிறப்பினையும் தெரிவிக்கிறது. அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ.; செல்வர்,
வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.

“பையணைப்‌ பஃறலைப்‌. பாந்தள்‌ ஏந்திய
மொய்ந்நிலத்‌ தகளியில்‌: முழங்கு: நீர்நெயின்‌
வெய்யவன்‌ விளக்கமா மேருப்‌ பொன்திரி
மைஅடுத்‌ தொத்தது மழைத்த வானமே”

(உரை): ஆதிசேடன்‌ தாங்கும்‌, இந்த நிலமே-அகலாகவும்‌; கடலே நெய்யாகவும்‌, மேருமலை திரியாகவும்‌, ஞாயிறு.விளக்காகவும்‌. அமைந்திருக்க, : அந்த விளக்குப்‌ புகையினால்‌, வானம்‌ இருண்டது. போன்று வானத்தில்‌ முகில்‌ மூட்டம்‌ காணப்‌ பட்டது.

மேகமூட்டம் என்பதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என நினைக்கிறேன். அமெரிக்கத் தமிழர் கடல்நீர்; அதில் அகல் விளக்கின் குழிவில், இலக்கியத்தை விரும்புவோர் என்னும் நெய்யினை சிக்கெனப் பற்றிக் கொண்டு பூன் மலை என்கின்ற பொன்திரி கொழுந்து விட்டெரியவே அதிலிருந்து கிளம்பிய சிந்தனை மூட்டமே மேகமூட்டம் எனலாமா?

அதன் தொடர்ச்சியாக திசையைக் காண்பிக்கும் கொல்லன், அந்த மேகக்கூட்ட மழைக் காலத்துக் கரிய மேகமாகிய கரிக் குவியலில் வாடைக் காற்றாகிய பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு ஊதி, மின்னல் நெருப்பெழச் செய்து வெளிப்படுத்துகினற கொல்லன்பட்டரையாகப் பார்க்கிறார் கம்பர்:

“மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.”

இந்த மாதிரி எல்லாம் வெம்மையான நெருப்புச் சுடர்கள் பொறி பறக்கும் என எண்ணி என்னுடைய கம்பளிச்சட்டையை கழற்றி விட்டு ஒயிலாகக் குளிரில் நின்றிருந்தேன். உஷ்ணம் மூளைக்குள் அனலாக தகித்தாலும் நெஞ்சில் கபம் தங்கி ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அடுத்த முறை மறக்காமல் தலைக்கு குல்லா, காதுக்கு மஃப்ளர், கழுத்துக்குப் போர்வையுடன் பவ்வியமாகச் செல்ல வேண்டும்.

அறிவுப்பூர்வமான தருக்கத்திற்கும், எதார்த்தத்திற்கும் — இடையே உள்ள உறவை ஜெயமோகனின் மொழியில் அவரின் நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் அன்றாடப் பதிவுகளின் வழியாகவும் நுழையலாம். எனினும், மொழி என்பது பேசப்படுவது. அந்த மொழியை அவரின் நேரடி பிரவாகமாக, ஊற்றாகக் கிடைப்பதற்கு இந்த பூன் முகாம் அரிய வாய்ப்பு.

வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு தத்துவம் நுண்ணறிவை வழங்க முடியுமா? அதை வெளிப்படுத்த மொழியின் எல்லை என்ன? மீமெய்யியலும் நெறிமுறைகளும் வெறும் முட்டாள்தனமான பேச்சுதானா? இவற்றை நேரே எதிர்கொண்டு அதற்கான பதில்களை உணர்த்தும் பேச்சு, இந்தச் சந்திப்பின் உச்சகட்டம். அவர் அர்த்தமுள்ள மொழியின் எல்லைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, உணர்வை முட்டாள்தனத்திலிருந்து பிரிக்க மெய்யியலை வாயிற்கதவாக்கும் விரிவுரையைத் தந்தது — விடையில்லா வினாக்களுக்கு விவாதங்களை உள்ளுக்குள் புலப்பட வைத்த தருணம் ஆகி நிறைந்து நிற்கிறது.

சென்ற முறை வந்தவர்களைப் பற்றிய விரிவான பதிவை, ஒவ்வொருவரைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுத முடிந்தது. இந்த முறை (கிட்டத்தட்ட) அத்தனை பேரும் மீண்டும் வந்தது ஜாக்பாட். நீண்ட கால உறவுகளை, பால்ய காலத் தோழமைகளை மீண்டும் காணும் சந்தோஷம். சென்ற வருடம் ஐம்பது என எல்லை வைத்திருந்தார்கள். இந்த வருடம் எழுபது. அந்த எண்ணிக்கையும் சட்டென்று நிரம்பி காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிந்தது. அந்த எழுபதில் ஒருவராக இடம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

சென்ற ஆண்டு பதிந்தது:

ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானம் வரும் நேரம் பார்த்து, ஒத்த காலத்தில் வந்து சேர்பவர்களை வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் கார்கள்; வேளா வேளைக்கு உணவு, காபி, டீ, சிற்றுண்டி; அனைவருக்கும் சௌகரியமான ஓய்வெடுக்கும் வசதி; பக்கத்து பக்கத்தில் குடில்கள்; ஆசானுடன் அதிகாலை முதல் பின்னிரவு நள்ளிரவு வரை நேரம் கழிக்கும் வாய்ப்புகள்; விடிய விடிய நட்புகளுடன் அளவளாவும் தனிமை – சென்ற ஆண்டைப் போலவே இவ்வளவு சிறப்பாக செய்து முடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்த மனதுடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஜமாய்த்தார்கள்.

இந்த மாதிரி மாநாடு என்றால் அதற்கான பேச்சாளர்கள் அதிமுக்கியம். ஒவ்வொருவரும் காத்திரமாக தயாரித்து வந்திருந்தார்கள். கச்சிதமாகப் பேசினார்கள். இத்தனை பரந்துபட்டத் தலைப்புகள் ஆயிற்றே! எவ்வாறு பேரவையில் எல்லாவற்றையும் அகல உழப் போகிறார்கள்? மீண்டும் கருத்தரங்கை களை கட்ட வைப்பார்களா? என்னும் அச்சம் இல்லாவிட்டாலும், சென்ற ஆண்டு மாதிரியே சுவாரசியமாகவும் ஆழமாகவும் நயமாகவும் கலந்தாய்வார்களா என்னும் முன்னுதாரணம் சற்றே நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த முறையும் புடமிட்ட பொன் ஆக ஜொலிக்க வைத்தார்கள்.

எல்லோருக்கும் நன்றி. ஒருவருக்காகக் கூடுகிறோம். அவரின் நிழலில் தழைக்கிறோம். அடுத்த சந்திப்பை எதிர்நோக்குகிறோம்.

“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.”

மேலும்:

அமெரிக்க இந்தியர் சமூகவியல்: தமிழ்ச் சங்கம்

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தத் தொடரைத் துவங்குகிறேன்.

தமிழ்ச் சங்கங்கள் மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.

அ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;

ஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது

இ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது

பெட்னா நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ எவ்று யாராவது தனி மனிதரின் புகைப்படம் இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.

மேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது!’ என்பார்.

இத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னை துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார்! எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.

பெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் நூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கிய ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைந்த்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.

பத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரெண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.

துர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்கு பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வாகத்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.

இராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.

வீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.

என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.

இன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.

இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.

வருடாந்திர விடுமுறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.

‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.

ஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.

அதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்பு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.

குறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.

இவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.

நான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளை தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.

பெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வ்ரவழைக்கலாமா?” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க! உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு!” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.

புகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளை கூப்பிடலாம். முதியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளை பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்!

ஒரு ஜென் கதையும் கேள்வியும்

நியு இங்கிலாந்து கலை இலக்கிய முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ஜென் கதையை சொல்லி கேள்வி கேட்கிறார்.

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்