Tag Archives: சரத்குமார்

போர் தொழில் – திரைப்பட விமர்சனம்

அது ஒரு கிராமம். என் அம்மா அந்த வீட்டின் சாவியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் யூடியுப் கிடையாது. கிடைத்த புத்தகத்தை எல்லாம் வாசித்து முடித்த பின், சுவாரசியமாக தன் பொழுதைப் போக்க சாவிக்கொத்து அகப்பட்டது.

சட்டென்று திரும்பிப் பார்த்தால், சுற்றிலும் குரங்குக் கூட்டம். அவளின் கையில் இருந்த மினுமினுப்பான தகதகப்பைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்த கூட்டம். அவருக்கு பயமாகி விட்டது. இவ்வளவு பேர் சுற்றி, புடைசூழ ரசிக்கிறார்களே!? இன்னும் விளையாட வேண்டுமா? இதைக் கொடுத்துவிட்டால் பூட்டை எப்படி திறப்போம்… வீட்டிற்குள் எவ்வாறு நுழைவது? இப்படி அகப்பட்டுக் கொண்டோமே… என்று பக்பக்.

இந்தக் கதையை என்னிடம் சொன்னவுடன் ‘போர்த் தொழில்’ படம் நினைவிற்கு வந்தது. குரங்குக் கூட்டம் போல் அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். அது தங்கம் அல்ல. ஏதோ, ஒரு சாவி வளையம். இந்தக் குரங்குகளுக்கு நடுவில், “இந்தப் படம் வெறும் இரும்பு.” என்று விளக்கினால் மேலே விழுந்து பிறாண்டி விடுமோ என்னும் படபடப்பு.

எனவே…

‘போர் தொழில்’ அருமையான காலகட்டத்தை இந்தக் கால தலைமுறைக்குச் சொல்லும் படம். ஆங்கிலத்தில், ‘ட்ரூ டிடெக்டிவ்’ (அசல் துப்பறிவாளர் – True Detective) மாதிரி லட்சக்கணக்கில் நல்ல தொடர்களும் படங்களும் இருக்கும்போது, அதை அபாரமான பலகுரல் கலைஞர்களின் தமிழாக்கத்தில் கேட்பதற்கு இது ஒரு மாற்று.

நாலே நாலு பேர் வைத்துக் கொண்டு சிக்கனமான படப்பிடிப்பை எவ்வாறு நடத்துவது? திரைக்கதை ஓட்டைகளை காலகட்டத்தை வைத்து ஒப்பேற்றுவது எப்படி? – சிறப்பாக சொன்னதற்கு வாழ்த்துகள்

குருதிப்புனல் படத்திற்கு பிறகு, ‘பயம்னா என்னன்னு தெரியுமா?’ வசனத்திற்கு அடுத்த பதிப்பு கொடுப்பது:
’பயந்தவன் எல்லாம் கோழை கிடையாது; பயந்து ஓடுறவன் தான் கோழை!’

குணா படத்தில், ’ரோஸி நல்லவதான்… ஆனா தப்பு; அம்மா தப்பு!’, வசனத்தை ஒத்த
‘உங்க வேலைய நீங்க சரியா பார்த்தீங்கன்னா; எங்க வேல கம்மியாகும்.’
அல்லது
‘நம்ம பண்ற வேலை நமக்கு மரியாதைய தேடித்தரும்!’

இதே போல், எல்லா வேலையுமே சிரத்தையாகவும் சிறப்பாகவும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்வது சாலச் சிறந்தது. வள்ளுவர் பாதையில்:
‘கொலைகரானுக்கு கொலை ஒரு அடிக்‌ஷன்’

அப்படியானால் – போர்த்தொழில் ஒரு மைல்கல் அல்லவா!?!

நிறைய ஃபேஸ்புக் நண்பர்கள். சமூக ஊடக செல்வாக்காளர் வழி சந்தைப்படுத்தம்; ‘ஜெயிலர்’ போல் அரைத்த மாவை புளிக்காத மாவாகச் சொல்லும் திரள்கூட்டம். வெறும் சாவியை வைடூரியமாக்கும் குரங்குக் கூட்டம்.

சின்ன கல்லு!
பெத்த லாபம்!!