Category Archives: Uncategorized

Watching Vettaiyadu Vilaiyadu in Theater turns Suicidal

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை வெள்ளித்திரையில் பார்க்க ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதியை படித்தவுடன் பரிதாபமாக இருக்கிறது.

மற்றவர்களுக்காவது எச்சரிக்கையாக இருக்கட்டும் என்னும் நல்லெண்ணத்தில் இந்த செய்தியை வலையில் இடுகிறேன். படம் பார்க்க சென்று மாட்டிக்கொண்ட அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைத்துப் படங்களையும் Saw செய்பவரை வேண்டுகிறேன்.

மாற்றுகோணத்தில் சிந்தித்தால் வே.வி. போன்ற படங்களின் மூலமே கள்ளர்களின் திரைமறைவு வாழ்க்கை வெளிச்சமாகிறது என்பது பேருவகையை கொடுக்கிறது. சொல்ப பார்வையாளர்களே திரையரங்கிற்கு வரும் இந்தக் காலத்தில், கட்டணம் செலுத்தி குஷன் சேரில் உட்கார வரும் கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் சிறையில் தள்ளுவது, சொல்லொண்ணா இடரை உணர்த்துகிறது.

சீர்தூக்கி பார்க்கையில், ராகவன் டிஜிபியின் சாதுர்யங்களை தெரிந்து கொள்வதற்கு முன், உச்சகட்டம் முடிந்து கோட்டை விட்ட வில்லனின் ஓட்டைகளை அறிவதற்கு முன், விழிப்புடன் காவல்துறை செயல்படுகிறது என்பது பெருமை கலந்த பாராட்டுக்குரியது அல்லவா!?

படம் பார்த்தும் தப்பித்த இருவரைப் பார்த்தால் எனக்கு வருத்தம் கலந்த பொறாமை வருகிறது.

சினிமா தியேட்டரில் ரௌடி கைது: துப்பாக்கியால் சுட்டு போலீஸ் பிடித்தது

சென்னை, செப். 17: சென்னை சினிமா தியேட்டரில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரவுடியை, துப்பாக்கியால் வானில் சுட்டு போலீஸார் பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

மதுராந்தகம் சூனாம்பேடைச் சேர்ந்தவர் செந்தில். இவர் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

போலீஸாரிடம் சிக்காமல் சென்னையில் தலைமறைவாக இருந்த இவர், சனிக்கிழமை மாலை காசி தியேட்டரில் “வேட்டையாடு விளையாடு’ படம் பார்க்கச் சென்றுள்ளார். அவருடன் இரு நண்பர்களும் சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உளவாளி மூலம் காஞ்சிபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிந்தது. உடனே, 15 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அந்த தியேட்டருக்கு வந்தனர்.

செந்தில் தனது நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து காரில் வெளியே வந்தார். தனிப்படை போலீஸார் அந்தக் காரை சுற்றி வளைத்துக் கொண்டனர். பயங்கர குற்றவாளி எனவே அவரை எச்சரிக்கும் நோக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, வானத்தை நோக்கி சுட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

செந்திலைப் போலஸார் கைது செய்து காஞ்சிபுரத்துக்குக் கொண்டு சென்றனர். அவருடைய 2 நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.


| | |

Report on International Religious Freedom

மதச் சுதந்திரத்தை மீறும் நாடுகள் :: BBCTamil.com

மதச் சுதந்திரத்தை மீறும் நாடுகளாக மேலும் 6 ஆசிய நாடுகளை அமெரிக்கா வகுத்துள்ளது.

சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில்,

  1. ஆப்ஹானிஸ்தான்,
  2. புரூணை,
  3. இந்தியா,
  4. லாவோஸ்,
  5. பாகிஸ்தான் மற்றும்
  6. இலங்கை

ஆகியவற்றை கணிசமாக மதசுந்திரத்தை மீறுவோர் பட்டியலில் அது சேர்த்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் மதச் சுதந்திரத்தை மிக மோசமாக மீறுவோராக

  1. சீனா,
  2. பர்மா,
  3. வடகொரியா மற்றும்
  4. வியட்நாம

ஆகிய நாடுகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன.

தொடர்புள்ள கூகிள் செய்தித் தொகுப்பு | U.S. raps Iran for harassing religious minorities : வாஷிங்டன் போஸ்ட் | Extremists in India encouraged by poor prosecution : Daily News & Analysis


| |

போட்டி: பதிவுக்கு மேய்க்கி

தேன்கூடு + தமிழோவியம் மாதாந்திரப் போட்டிக்கான பதிவு.

பதிவுக்கு மேய்க்கி

பதிவின் தலைப்பு :: பதிவு ஏற்றமும் கழிவு இறக்கமும்
செப்டம்பர் 4, 2006 – திங்கள் :: வெளியான பதிவு – E-Tamil : ஈ-தமிழ்

‘கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?’ தலைப்பில் எழுத வேண்டும். என்ன எழுதுவது என்று குறிப்புகள் எடுக்க வேண்டும். அதற்கு அடிப்படையாகக் கொஞ்சம் கற்பனை கூடிய கதை வேண்டும்.

அமெரிக்காவில் elevator என்று அழைக்கிறார்கள். பிரிட்டிஷாருக்கு பதில் அமெரிக்கர், இந்தியாவை ஆண்டிருந்தால் ‘கொஞ்சம் எலிவேட்டர் கிடைக்குமா?’ என்று கொங்கு ராசா தலைப்பிருப்பார். பெரிய பழுவேட்டரையர், சின்ன ப.வே. மாதிரி சூப்பர் எலிவேட்டரையர் & சிக் எலிவேட்டர் கதை எழுதலாம்.

லிஃப்ட் கடைக்கு சென்று ‘லிஃப்ட் வேண்டும்’ என்று கேட்டால், லிஃப்ட் கடைக்காரன் எனக்கு லிஃப்டாக லிஃப்ட் கொடுப்பானா, அல்லது லிஃப்ட்களைக் காட்டி லிஃப்டைத் தேர்ந்தெடுக்க வைப்பானா என்பது என்னை லிஃப்ட் செய்யும் ஆண்டவனுக்கு வெளிச்சம் என்பது விசுத்தனமாக இல்லாமல் புரிந்து விடுகிறது.

அத்னான் சாமியின் “முஜ்கோ பீ லிஃப்ட் கரா தே” (பார்க்க: YouTube – Adnan Sami’s Lift Karade) ஆட்டமும் பாட்டமும் துள்ளவைக்கும். கையை அந்த மாதிரி செய்கை காட்டுவதை ‘ஹம் ஹே ரஹி ப்யார் கே’வின் (கேட்க: RAAGA – Hum Hain Rahi Pyar Ke – Hindi Movie Songs) ‘கூங்கடி கி ஆட்ஸே’ பாடலில் ஜூஹி சாவ்லா வேகமாகவும் நளினமாகவும் மெல்லிய புன்னகையுடன் செய்திருக்கிறார். ஜெய்ப்பூர் அரண்மனை மாடங்களில், இளவரசி போல் நகையணிந்து ‘கொஞ்சம் லிஃப்ட் வேண்டும்’ என்று கேட்பதை ஒத்திருக்கும்.

லிஃப்ட்டுக்கு தமிழில் என்ன என்று தேடினால், நெம்புதல், ஏற்றிவிடுதல், தூக்குதல் போன்ற பழக்கமானவை தவிர விவசாயத்துக்கு உரித்தான, பல புழங்காத வார்த்தைகளை அகரமுதலிகள் அடுக்குகிறது. தண்ணீர் தூக்கிகளை கபிலை, காம்பி, காராஞ்சி, பூட்டைப்பொறி என்று விதவிதமாக விளிக்கலாம் என்கிறது கொலோன்.

‘நினைவே ஒரு சங்கீதம்’ படத்தில் விஜய்காந்த் களத்துமேட்டில் ஜனதா தளத்தின் சின்னத்தில் உழவனாக நீர் இறைக்க, காதலி ராதா ‘ஏத்தமைய்யா ஏத்தம்’ என்று டூயட் பாடுவது போல், இவற்றையும் ராகம் தேடும் பல்லவி ஆக்கினால், ‘என்றென்றும் அன்புடன்’ பாலா பிறிதொரு நாளில் அதில் இருந்து சரணம் தேர்ந்தெடுப்பார்.

‘வள்ளி’யில் வடிவேலு எப்படி இருந்திருக்கிறார்? அப்போது அவரை லிஃப்ட் செய்வது எளிது. இம்சை அரசனை லிஃப்ட் செய்தால் முதுகு திருகி விடும். அதையும் நகைச்சுவை ஆக்கிவிடும் திறன் கொண்டவர். சென்ற முறை இந்தியாவுக்கு செல்லும் வழியில் வடிவேலுவை சந்திக்க நேர்ந்தது. இயல்பாக பேசிக் கொண்டிருந்தார். தனக்கு ஆங்கிலம் படிக்க வராது என்று வெளிப்படையாக பகிர்ந்தார். பரங்கியரின் ஆங்கிலத்தில் வந்த அறிவிப்புகளை, லிஃப்ட் போன்ற தமிங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

ரஜினி படங்களில் பணக்கார வில்லன் ஐந்து நட்சத்திர குடிலின் கண்ணாடி லிப்ட்டில் கீழே இறங்குவான். ‘என்றென்றும் காதல்’ விஜய் வீட்டுக்குள்ளேயே லிஃப்ட் வைத்து வருவார். சினிமாவில் லிஃப்ட் காட்சி என்றவுடன் ‘தூள்’ படத்தில் வில்லர் ஜோதிகா கழுத்தில் கத்தி வைப்பதும், விக்ரம் பதிலடி கொடுத்து காத்திருப்பதும் நினைவில் ஊசலாடும். சூர்யா – ஜோதிகா கல்யாணத்தில் விக்ரம் ஏன் வரவில்லை என்பது சூடான வதந்தி (வம்பு: Idleburra.com: Key people not invited for Surya-Jo wedding!!).

இந்த மாதிரி பிற வலையகங்களில் இருந்து உருவி எழுதுவதை லிஃப்ட் எழுத்து என்பார்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் மொழிபெயர்த்தால், அனு மாலிக் மொழியில் இன்ஸ்பிரேசன். சாதா மொழியில் திருட்டு. காவ்யா விஸ்வநாதன் பாஷையில் லிஃப்ட். எங்கிருந்து சுடுகிறோம், எதில் இருந்து ரீ-மிக்ஸ் செய்கிறோம் என்று சொல்லிச் செய்வது சாரு நிவேதிதாவாக இளிக்காமல் காப்பாற்றும்.

ஏதாவது எழுதிப் பார்க்க வேண்டும். சினிமா ரொம்ப கலக்காமல் இருக்க வேண்டும். கொஞ்சம் புனைவு வாசமாவது அடிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற்றால் ‘என்னை லிஃப்ட் செய்து முதல் பத்து இடத்துக்குள் தனி இடம் அமைத்துக் கொடுத்த வாக்காள வாசக வலைப்பதிவாளர்களின் வாழ்க்கையும் லிஃப்ட் ஆக வேண்டுகிறேன்’ என்று எதுகை மோனையோடு பதியலாம்.

அல்லது தன்னடக்கத்தோடு “‘கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?’ என்று கேட்ட எனக்கு ‘கொஞ்சம் என்ன… நிறைய தூக்கி விடுகிறோம்’ என்று வாழ்த்தி வரவேற்று, இந்தச் சிறுவனையும் சிகரத்தில் அமர்த்தி, அழகு பார்த்த அனைவருக்கும் பணிவான நன்றி கலந்த சிரம் தாழ்ந்த லிஃப்ட் பையனின் வணக்கங்கள்” என்று நவிலலாம்.

ஆமாம்.

எழுத வேண்டும்.


பதிவின் தலைப்பு :: God in Lift
செப்டம்பர் 5, 2006 – செவ்வாய் :: வெளியான பதிவு – E-Tamil : ஈ-தமிழ்

இந்த மாதப் போட்டிக்காக கற்பனை குதிரை மக்கர் செய்ததால் கூகிள் குதிரை ஓடவிட்டேன். திண்ணையில் இரா. முருகனின் ‘அலுவலகம் போகும் கடவுள்’ மாட்டியது.

கதையை ஆரம்பித்த விதம் கட்டிப் போடுகிறது. தனியே இருக்கும்போது தப்புகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. கூடவே கடவுளும் வந்து தொலைக்கிறார். இனி எங்காவது லிப்ட் என்றவுடன் எப்போதும் நினைவுக்கு வந்து அவஸ்தை தரப் போகும் விவரிப்பு. வேலைக்கு போகும் வாழ்க்கையை லிஃப்டோடு கொண்டு போகிறார்

இந்த மாதிரிதான் கதை எழுதவேண்டும். அப்போது பரிசு கிடைக்கும்.


பதிவின் தலைப்பு :: Thenkoodu – Tamiloviam September Contest
செப்டம்பர் 7, 2006 – வியாழன் :: வெளியான பதிவு – கில்லி – Gilli

இந்த மாதப் போட்டிக்கான தலைப்ப அறிவிச்சுட்டாங்க. அது குறித்த விவரங்கள் கொங்கு ராசாவின் பதிவில் கிடைக்கிறது.

லிஃப்ட் தொடர்பான முந்தைய லக்கிலுக் செய்தி: கலங்கரை விளக்கம் – TamilnaduTalk.com:

“சென்னையின் கலங்கரை விளக்கத்துக்கு ஒரு சிறப்பு உண்டு….. ஆம்… ஆசியாவிலேயே லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை சென்னை கலங்கரை விளக்கம் தான்…

முதலில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் கலங்கரை விளக்கம் இருந்தது…. அப்போதெல்லாம் மின்சார வசதி இல்லை… எனவே நெய் கொண்டு பெரிய தீப்பந்தம் ஏற்றுவார்கள்…. பின்னர் கலங்கரை விளக்கம் இப்போதைய உயர்நீதி மன்ற கட்டிடத்தில் இயங்கியது…. இப்போதும் அந்தக் கலங்கரை விளக்கத்தை நீங்கள் உயர்நீதி மன்றம் சென்றால் காணலாம்…. சென்னை துறைமுகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இப்போதைய சாந்தோம் பகுதியில் புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது….”


பதிவின் தலைப்பு :: Losing Jobs to NRIs – US Senator Escalates Issue by Resigning
செப்டம்பர் 13, 2036 – சனி :: வெளியான பதிவு – தமிழகத் தேர்தல் 2006

இந்தியர்களினால் அமெரிக்கர்களின் வேலை இழப்பு பிரச்சினை: செனேட்டர் பதவியை ராஜிநாமா செய்தார் ஃப்ரெட்ரிக் கென்னடி

வாஷிங்டன் டிசி, செப்.12: அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் அயல்நாட்டவர் பதவி வகிப்பது தொடர்பான பிரச்சினை காரணமாக ரிபப்ளிகன் கட்சித் தலைவர் ஃப்ரெட்ரிக் கென்னடி தனது செனேட்டர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அவர் கூறியதாவது:

அமெரிக்க வேலை வாய்ப்புகளை அமெரிக்கர்களே பெறக் கோரி தொடர்ந்து போராடுவோம். இதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. லட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டோம்.

பல மாகாணங்களிலும் செல்வாக்கை இழந்திருந்த ஜனாதிபதி, அமெரிக்க குடியுரிமை மெற்றவர்களுக்கே வேலை என்று கூறி எங்களுடன் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார். இதன் காரணமாகவே அவருடைய கட்சி பல இடங்களில் தோற்றிந்தாலும், அவரால் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது. இன்று வாக்குறுதியை மறந்துவிட்டு ஜனாதிபதியும் அவருடைய டெமோக்ரடிக் கட்சியும் செயல்படுகின்றன.

கோரிக்கையை நிறைவேற்ற மத்தியில் பெரும்பான்மை உள்ள குடியரசு கட்சியும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதையடுத்து செனேட்டர் பதவியிலிருந்து விலகினோம். கொள்கையை விட்டுக் கொடுத்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை.

சீனா, இந்தியா போன்ற அந்நியர்களுக்கு அமெரிக்க மண்ணில் வேலை அனுமதிக்கக்கூடாது என்று அமெரிக்க நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். பிறர் வந்து நமது வாய்ப்புகளைத் தட்டி பறிப்பது, அமெரிக்க சந்ததியினருக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது.

இந்தியாவிலும் அமெரிக்கர்களை வேலையை விட்டு காரணமின்றி நீக்குவது, விசாவை ரத்து செய்வது போன்றவை நடைபெற்று வருகின்றன. இன்றைய நிலையில் குடிபுகல் என்பது இருநாடுகளுக்குமே அச்சுறுத்தலாக இருப்பது உண்மையிலும் உண்மை. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க விரும்பவில்லை.

வாழ்க்கைமுறையை பாதுகாக்க இருநாடுகளுமே உறுதியாக இணைந்து செயல்பட வேண்டும்.

இருண்ட காடாக உள்ள அமெரிக்காவை பிரகாசிக்கச் செய்ய நான் வழிகாட்டுகிறேன். அமெரிக்காவின் மிகப் பெரிய சக்தி தனித்துவம் கொண்ட புத்தியல் சிந்தனாவாதிகள். இன்று அறிவியலாளர்களும் முதலீட்டாளர்களும் ஒன்றோடு ஒன்று மோதி சின்னாபின்னமாகின்றனர். மாற்று சக்திகள் தலைதூக்குகின்றன. இந்நிலையில், அமெரிக்கர்களை ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்பவராக நான் இருப்பேன். இந்தியாவுடன் அணுகுமுறை மென்மையானதாக இருந்தாலும், நம் திறன்களை கொள்ளையடிப்போரிடம் கண்டிப்பாக இருப்பேன்.

இந்த இடுகை குங்குமம்.காம் நடத்தும் பூமாலை வலையிதழில் வெளியாவதற்கு சம்மதம் இல்லை.


பதிவின் தலைப்பு :: நெஞ்சு பொறுக்குதில்லையே
டிசம்பர் 15, 2036 – திங்கள் :: வெளியான பதிவு – E-Tamil : ஈ-தமிழ்

நாற்பது வருடங்களில் சீதோஷ்ணமும் இணையமும் நிறைய மாறிவிட்டது. இருபது வருடம் முன்பு வரை நாளொன்றுக்கு ஆயிரம் வருகையாளர் தரிசித்த இந்த வலைப்பதிவில், இன்று நூறு வருவதே அரிதாகி இருக்கிறது. இவர்களுக்காக எழுத வேண்டுமா என்று மனம் அயர்வுற்றாலும், அமெரிக்காவின் நிலைப்பாடு வருத்தமளிக்கிறது.

‘ஜனவரி 1-க்குள் அமெரிக்காவை விட்டு அயல்நாட்டவர்கள் வெளியேற வேண்டும்’ என்னும் சட்டம் நத்தார் விடுமுறைக்கு செல்வதற்கு முன் காங்கிரஸ், செனேட் எல்லாம் தாண்டி ஜனாதிபதியின் கையெழுத்தும் பெற்றுவிட்டது. (நேற்றைய செய்தி : சுட்டி இங்கே கொடுக்கவும்). வேற்று நாடுகளில் இருந்து வந்த பலருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது அவசியமான ஒன்று. என்னைப் போன்ற இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவரையும் அமெரிக்கராகவே இந்த நாடு நடத்துகிறது. தங்கள் நாட்டுவாசிகளின் நலனை முன்னிறுத்துவதை எப்படி குறை கூற முடியும்?

‘தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்’ என்னும் சென்ற நூற்றாண்டு மொழியை நீங்கள் சன் டிவியில் பிரகாஷ்ராஜின் ‘அரட்டை அரங்க’த்தில் கேட்டிருக்கக் கூடும். சொந்த ஊர்க்காரருக்கே வேலை இல்லாதபோது அந்நியருக்கு எப்படி குடிபுகல் தர முடியும்!?

என்னுடைன் வேலை செய்யும் இருவர் இதனால் பாதிக்கப் பட்டனர். அவர்களுடன் நான் உரையாடிய ஆங்கில நேர்காணலை வலையொலிபரப்பாக கூடிய சீக்கிரம் இங்கு இடுகிறேன்.

குறுகிய காலத்தில் இளம் வயதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் தேவை நிறைவேறியதை அவர்கள் சொன்னார்கள். மாற்று நகரத்தில், கட்டுப்பெட்டி சிந்தனையில் மூழ்கிய இடத்தில், இந்தியாவை விட வித்தியாசமான பழங்கால சூழலில், சில காலம் வசிக்க கிடைத்த வாய்ப்பை, அவர்கள் பெருமையாகவே கருதுகிறார்கள்.

என்னவாக இருந்தாலும் நம்மவர்களுக்கு உதவுவதில் ஒரு திருப்தி கிடைக்கிறது. அவர்களின் உடைமைகளை விற்க, மூட்டை முடிச்சு கட்ட, கடைசி நேர சாமான் வாங்க என்று ஓடுவதில் நான் வாழும் நாடு அவர்களுக்கு செய்த தடாலடி மாற்றத்தை ஓரளவு பிராயசித்தம் செய்வதாக உணர்கிறேன்.

‘ஏர்போர்ட்டுக்கு லிஃப்ட் வேண்டும்’ என்று கேட்பதற்கு முன் நானே கொண்டு விடுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறேன்.

இந்த இடுகை குங்குமம்.காம் நடத்தும் பூமாலை வலையிதழில் வெளியாவதற்கு முழு சம்மதம்.


பதிவின் தலைப்பு :: குங்குமம்.காம் & கூகிள் – இலக்கிய போட்டி பதிவுகளுக்கான விமர்சனம்
செப்டம்பர் 15, 2006 – வெள்ளி :: வெளியான பதிவு – தடிப்பையன்

வாசகரைப் பொறுத்து இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. சிறுகதையிலிருந்து வேறுபட்டாலும் அனுபவ வெளியீடாக உருக்காண முடியாதது இடுகையின் மிகப்பெரிய குறை. வாசகரை முன்வைத்து எழுதப்பட்ட பதிவு. வாசகனுக்காக எழுதப்படுபவை நல்ல இலக்கியத் தகுதி உடையனவாகக் கருதப்படுவதில்லை என்று ஜூலை 2036 காலச்சுவட்டில் இ. அண்ணாமலை எழுதுகிறார். வாசகனை மனத்தில் இருத்தி எழுதப்பட்ட இந்தப் பதிவு பூரண திருப்தியளிக்கவில்லை. எழுதுபவரின் ஆளுமையையும் பிரதிபலிக்காமல், கதைக்கே உரித்தான பாத்திரப் படைப்பும் ஜொலிக்காமல், எழுத்தாளரின் உணர்வுகளும் வெளிப்படாமல் அரைகுறை அவியல்.

(சிறுகதை) மதிப்பெண் 1.5 / 4

இந்த இடுகை குங்குமம்.காம் நடத்தும் பூமாலை வலையிதழில் வெளியாவதற்கு முழு சம்மதம்.


| |

Jillunu oru kadhal


தமிழ் வலையில் வந்த விமர்சனங்கள்:

  • சும்மா டைம் பாஸ் மச்சி…..: “கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்” – திரை விமர்சனம் :: லக்கி லுக்
  • சில்லுனு ஒரு காதல் – திரை விமர்சனம் :: அண்ணாகண்ணன்
  • சென்னைக் கச்சேரி: சில்லுன்னு ஒரு காதல் :: தேவ்
  • திரை விமர்சனம்: சில்லுனு ஒரு காதல் :: மீனாக்ஸ் | Meenaks
  • சப்புன்னு ஒரு காதல் :: விழியன் பக்கம்

    இவ்வளவு எச்சரிக்கை வந்தாலும், நானும் பார்த்துவிட்டு இன்ஸ்டண்ட் காபி (படிக்க: Instant Kaapi ::NY Nagaram w/o the City!) வகையில் விமர்சனம் எழுதுவதற்காக பார்க்க செல்லலாம் என்று திட்டம். ரஜினிக்கும் கமலுக்கும் இருப்பது போல் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் (பூமிகாவுக்கும்தான்) இங்கே ரசிகர்கள் அதிகம் இல்லை என்று நினைக்கிறேன்.

    பாஸ்டனில் ‘ஜில்லுன்னு ஒரு காதல்’: IndiaGlitz – Purchase Sillunu Oru Kaadhal Tamil Movie Tickets Online & Showtimes

    எப்பொழுது:
    வெள்ளி, செப்டம்பர் 15:: 5:30 PM 9:00 PM
    சனி, செப்டம்பர் 16:: 2:00 PM 5:30 PM 9:00 PM
    ஞாயிறு, செப்டம்பர் 17:: 2:00 PM 5:30 PM 9:00 PM

    எங்கே:
    ஸோமர்வில் அரங்கம் – 55 டேவிஸ் சதுக்கம்


    | |

  • Jakkaiyan vs Mrs Pazhani Vel Rajan? – Madurai Central Constituency

    Dinamani.com – TamilNadu Page

    மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்கள்: திமுக – பழனிவேல் ராஜன் மனைவி; அதிமுக – ஜக்கையன்?

    சென்னை, செப். 14: அடுத்த மாதம் 11-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் மறைந்த பிடிஆர் பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜன் போட்டியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஜக்கையனுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை (செப். 16) தொடங்குகிறது.

    மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகிவிட்டன. திமுக, அதிமுக மற்றும் விஜயகாந்த் கட்சியான தேமுதிக ஆகிய 3 கட்சிகள் களத்தில் குதிக்க உள்ளன.

    இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 16-ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 23-ம் தேதி.

    மனுக்கள் செப்டம்பர் 25-ம் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தேதி செப். 27.

    தேர்தல் நடைபெறும் நாள் அக்டோபர் 11. வாக்கு எண்ணும் நாள் அக்டோபர் 14.

    இத் தொகுதியை தக்கவைத்துக் கொள்வது ஆளும் திமுகவுக்கு கெüரவப் பிரச்சினை. எனவே, முழுமூச்சுடன் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிமுக சார்பில் முன்னாள் பேரவைத் தலைவர் காளிமுத்து, மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தாலும் ஏற்கெனவே போட்டியிட்ட ஜக்கையனுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    கடந்த தேர்தலில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அக் கட்சியின் பொருளாளர் சுந்தரராஜன் 12039 வாக்குகள் பெற்றார்.

    இடைத் தேர்தலிலும் சுந்தரராஜன் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. விஜயகாந்துக்கு மதுரை சொந்த ஊர். அதிலும் அவரது வீடு மதுரை மத்திய தொகுதியில் உள்ளது. எனவே, கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெற போராடுவோம் என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    வாக்காளர்கள்: மதுரை மத்திய தொகுதியில்
    மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 231.
    ஆண் வாக்காளர்கள் 63 ஆயிரத்து 333;
    பெண் வாக்காளர்கள் 65 ஆயிரத்து 898.

    புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் முதல் முறையாக இத் தொகுதியில்தான் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 95 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுவிட்டது.

    Salvador Allende Gossens – Chile (aka) History Dejavu

    அலன்டே & பினொச்சே – சிலி
    தென் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான இரணகளறியான ஆட்சிக் கவிழ்ப்பு, நான் பிறந்த வருடத்தில் அரங்கேறியது. சிலி நாட்டின் ஜனாதிபதி சால்வடோர் ஆலெண்ட் கோஸன்ஸ் (Salvador Allende Gossens) மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். மார்க்சிய சித்தாந்தத்தை உறுதியாக கடைபிடிப்பவர். கம்யூனிஸத்தின் வளர்ச்சியைக் கண்டு பயந்த அமெரிக்க உளவுத்துறை, ஜனாதிபதியை உலகை விட்டே அகற்றியது.

    அமெரிக்க வலையகக் கணக்குகளின்படி ஏறக்குறைய 5,000 மக்கள் இறந்தார்கள். சரியான கணக்குப்படி பார்த்தால் குறைந்தது முப்பதாயிரம் பேர் மரணம்.

    ஜனநாயக முறையில் நிலவிய மக்களாட்சியை நீக்குவதற்காக – கட்சித் தலைவர், தாளிகை, ஊடகம், வர்த்தக நிறுவனத்தின் தலைவர், தொழிலாளர் அமைப்பு, முக்கிய பிரஜை என்று வித்தியாசம் பாராமல் சி.ஐ.ஏ. மில்லியன்களை இறைத்தது. அவர்களின் கைங்கர்யம் இல்லாமலேயே அலெண்டேவிற்கு இறங்குமுகம் தொடங்கியிருந்த காலம். கிட்டத்தட்ட போலந்தை ஒத்த நிலையாக இருந்திருக்கிறது.

    மேற்கத்திய நாடுகளில் முதன்முதலாக மார்க்சீய கட்சியை தேர்ந்தெடுத்த பெருமை சிலியைச் சாரும். செப்டம்பர் 1970-இல் குறுகிய வித்தியாசத்தில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்துகிறார் ஆலெண்டெ. நாட்டின் முக்கிய குடும்பத்தை சேர்ந்தவர்; செனேட்டராக இருந்தவர்; முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர். வலதுசாரி தேசியக் கட்சியையும் இடதுசாரி கிறித்துவ டெமொக்ரடிக் கட்சியையும் வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கிறார்.

    அவருக்கு முன் ஆட்சியில் இருந்தவர் மிதமான இடதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட கிறித்துவ டெமொக்ரடிக் கட்சியின் எட்வர்டோ ஃப்ரெய் மொண்டால்வா (Eduardo Frei Montalva).

    முழுக்க முழுக்க அயல்நாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்த சுரங்கங்களில் பெரும்பானமை உரிமை அரசுவசம் செய்து காட்டியவர். சிலியின் ஜீவாதாரமான தாமிரச்சுரங்கத்தில் 51% அரசுக்கு சொந்தமாக்கியவர். வணிக கூட்டுறவு மையம், நேரடி கொள்ளளவு போன்ற சீர்திருத்தங்களை அமைத்தவர்.

    மொண்டால்வாவினால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடியாததால் பணப்புழக்கம் குறைந்து, அரிசி விலை, யானை விலையாக ஏறிக் கொண்டே போனது. நோக்கங்கள் நல்லவையாக இருந்தாலும், வாழ்க்கை தரத்தில் மாற்றம் இல்லை.

    இன்றைய வெனிசுவேலா அதிபர் போன்ற கருத்தாக்கம் கொண்ட அலெண்டெ இந்த திட்டங்களை தூசு தட்டி அந்நியர் கண்ணில் விரலை விட்டு படுத்தியிருக்கிறார். கனிமங்களையும் இயற்கை வளங்களையும் மட்டும் ஏற்றுமதி என்று சுரண்டுவதை கட்டுக்குள் கொணர்ந்து, இறக்குமதி என்று தள்ளிவிடுவதை நிறுத்தி, சுதேசியாக உள்நாட்டில் அனைத்தையும் தயாரித்து, வாழ்வை வளமாக்குவேன் என்னும் வாக்குறுதியில் ஜெயித்தார்.

    பதவிக்கு வந்தவுடன் தொழிலாளியின் சம்பளத்தை உயர்த்துவது, நிலங்களை பங்கிட்டு உடைமையைப் பரவலாக்குவது, சமூக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரிப்பது, என்று ஜரூராக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்.

    இதன் தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் ஸ்தாபனங்களை தேசியமயமாக்குகிறார். அதிபரை உழைப்பாளியின் தோழனாகவும் விவசாய நண்பனாகவும் மாற்றுகிறது. சமீபத்தில் (தற்போதும் கூட) ஜிம்பாப்வேயில் நிலவிய சூழலையொத்த அந்த நிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் பொங்கியெழுந்து பிறரின் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    அமெரிக்க முதலீட்டுக்கும் நிறுவனங்களுக்கும் இன்ன பிற பணக்காரர்களுக்கும் கடுந்தொல்லை. அந்நிய செலாவணி தேய்ந்து நின்று போகிறது. தனித்து விடப்பட்ட சிலியின் பொருளாதாரத்தை முட்டுக் கொடுக்க மாஸ்கோவும் விரையமுடியாத ருஷியாவின் குழப்பங்கள். அத்தியாவசியப் பொருள் கிடைக்க நீண்ட காத்திருப்பு. எந்தப் பொருளும் கள்ளச்சந்தையில் மட்டுமே கிடைக்கும் பற்றாக்குறை கோலம். பணவீக்கம் பெருக்கிறது.

    (செய்ய வேண்டிய சுயகுறிப்பு: இ.பா.வின் ‘ஏசுவின் தோழர்கள்’ போன்ற கம்யூனிஸ-பொருள்முதல் வாதங்களை முன்வைக்கும் விவரிப்பு இங்கு தரலாம். )

    ஆலண்டே-வை எதிர்த்து கனரக ஓட்டுனர், குடியானவர், பெட்டிக்கடைகாரர், வேலை நிறுத்தம் (அதாவது பதுக்கல்?!) செய்கிறார். அலண்டேவின் ஆதரவாளர்கள், அரசின் தலையீடைக் கோருகிறார்கள். அநியாயமாக ஸ்ட்ரைக்கில் ஈடுபடுபவர்களை பொடா/தடா/144 இட்டு அடக்கி வைக்க சொல்கிறார்கள்.

    மன்மோகன் சிங் மாதிரி ஆலண்டேவும் கூட்டணி ஆட்சி நடத்தினார். கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், லிபரல், சுயேச்சை என்று ஆளுக்கொரு பக்கம் அரசியல் செய்தார்கள். வலதுசாரி ஆணைக்கு இணங்க இராணுவத் தளபதி பதவி விலகுகிறார். ஆலண்டேவின் நம்பகத்துக்குரியவர் நாட்டின் பாதுகாப்பில் இருந்து ஒதுங்கி கட்சி மாறி விடுகிறார். இது சி.ஐ.ஏ காசு செலவழிப்பதின் பலனாக இருக்கலாம்; அல்லது உள்ளூர் அரியணை அவா ஆகவும் இருக்கலாம்.

    உள்ளே நுழைகிறார் புது ஹீரோ அகஸ்டோ பினொச்செ (Augusto Pinochet). புதிய தளபதியாக அலண்டேவினால் பட்டாபிஷேகம் நடக்கிறது. வேலை நிறுத்தம் போராக மாறுகிறது. போராளிகளின் தாக்குதல்கள் தலைநகரைத் தொடுகிறது. தோல்வி நிச்சயம் என்று தெரிந்தவுடன் இரகசிய சுரங்கப் பாதை வழியாக தப்பித்துப் போகாமல், அமெரிக்க விமானங்களினால் கொல்லப்படுகிறார்.

    பினொச்சே கட்சி மாறி மேற்கத்திய சித்தாந்தத்தைத் தழுவினார். கோபம் கொண்ட போராளிகள், ஆயிரக்கணக்கான அலெண்டே ஆதரவாளர்களை ஹிட்லர் தனமாய் கொன்று குவிக்கிறார்கள். அனைத்து கட்சிகளையும் தடை செய்வது பினாச்சேவின் முதல் வேலை. எதிர்த்து பேசுகிறவர் காணாமல் போகிறார்.

    (செய்ய வேண்டிய சுயகுறிப்பு: இங்கு ஜார்ஜ் ஆர்வெல் நினைவு கூர்ந்தால் பொருத்தமாக இருக்கும். இந்திரா காந்தி அவசர காலத்தினை ஒப்பிடலாம். சீனாவின் தணிக்கை முறை, சிரியாவின் ஊடக அடக்குமுறை, ஈரானின் கொடுங்கோல் ராஜாங்கம், பர்மா நோபல் பரிசு; ஃபிடெல் காஸ்ட்ரோவின் நசுக்கல்களோடு உலகப் பயணத்தை முடித்துக் கொள்க!)

    ‘சிகாகோ பாய்ஸ்’ என்று செல்லமாக விளிக்கப்படும் மில்டன் ஃப்ரீட்மென் (Milton Friedman) அடிப்பொடிகளை நிதித்துறை அமைச்சகத்தை கையிலெடுக்கிறார்கள். மேற்கத்திய கோட்பாடுகளை சில காலத்திற்கு திறம்பட நிர்வகித்து பொருளாதாரத்தைப் பல்கிப் பெருக்கினார்கள். எண்பதுகளில் மீண்டும் புரட்சி கலந்த கோபம் வெடிக்க ஆரம்பித்தது.

    1981-இல் நிரந்தர ஜனாதிபதி சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்திக் கொள்கிறார். இருபதாண்டுக்குப் பிறகு நடந்த 1989 தேர்தலில் மண்ணைக் கவ்வினாலும், அரியணையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.

    பினாச்சே நல்லவரா / கெட்டவரா என்னும் வாதம் சென்ற வருடம் வரை இழுபறியாக ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் தொடர்ந்தது. கடைசியாக கெட்ட பையன் என்று கிழ வய்தில் தீர்ப்பு வந்தாலும் சொகுசாகத்தான் காலந்தள்ளுகிறார்.

    அலன்டே குறித்தும் சிலி பற்றியும் அறியத் தூண்டிய மயூரனின் பதிவு.


    | | | |

    Madurai (Central) Bye-Election Preview

    மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல்: கட்சிகளின் செல்வாக்கை வெளிப்படுத்தும் உரைகல்

    சென்னை, செப். 14: தமிழக அரசியல் களத்தில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை வெளிப்படுத்த உதவும் உரைகல்லாக மதுரை மத்திய தொகுதிக்கான இடைத்தேர்தல் அமையும்.

    குறிப்பாக தி.மு.க. அணிக்கும், அ.தி.மு.க. அணிக்கும் இடையேயான பலப் பரிட்சையாக இத்தேர்தல் திகழும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க.வின் வளர்ச்சியையும் இத்தேர்தல் வெளிப்படுத்தும் என்பது அவர்களின் கணிப்பு.

    சட்டப் பேரவைக்கு 8.5.2006-ல் தேர்தல் நடைபெற்றது. மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அகால மரணம் அடைந்தார்.

    இதையடுத்து காலியான இத்தொகுதிக்கு அக்டோபர் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    முதல் இடைத்தேர்தல்: தி.மு.க. அரசு அமைந்தபிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. தாங்கள் அறிவித்த -நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மக்களிடையே எந்த அளவுக்கு தங்களுக்கு ஆதரவைப் பெருக்கி உள்ளது என்பதை இத்தேர்தலின் மூலம் தி.மு.க. அரசு தெரிந்து கொள்ள முடியும்.

    எடை போடலாம்: தி.மு.க. அரசுக்கு மட்டும் இன்றி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த இடைத்தேர்தல் அவற்றின் பலத்தை எடை போட உதவும் சோதனைத் தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தீவிரம் காட்டும்: அ.தி.மு.க.வைப் பொருத்தவரை, இத்தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். அதன்மூலம் மக்களிடையே தனது செல்வாக்கு உயர்ந்துள்ளது என்பதை காட்ட வேண்டும் என்கிற நிலையில் உள்ளது.

    Tamil Nadu Local Body Elections – Statistics & Details

    1.31 லட்சம் பதவிகளை உருவாக்கும் உள்ளாட்சித் தேர்தல்

    பா. ஜெகதீசன்

    சென்னை, செப். 14: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான நடவடிக்கைகள் அடுத்த ஓரிரு வாரங்களில் ஆரம்பம் ஆகிறது.

    சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

    இத்தேர்தலை அக்டோபர் 24-ம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

    இத்தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 12,618 ஊராட்சிகளில் இருந்து மொத்தம் 97 ஆயிரத்து 485 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 385 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 6,570 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    29 மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 686 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    561 பேரூராட்சிகளில் (டவுன் பஞ்சாயத்துகளில்) இருந்து 8,825 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் இருந்து 969 கவுன்சிலர்களும், 102 நகராட்சிகளில் இருந்து 3,392 கவுன்சிலர்களும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் இருந்து 474 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இவற்றில் சிற்றூராட்சித் தலைவர், அவற்றின் வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. இதர அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.

    எந்தப் பதவிக்கு எவ்வளவு டெபாசிட்: இப்பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

    சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.200.

    சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் -ரூ.600.

    மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், நகராட்சி உறுப்பினர் -ரூ.1,000.

    பேரூராட்சி -3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.250.

    மாநகராட்சி உறுப்பினர் -ரூ.2,000.

    பொது வேட்பாளர்களுக்கான இந்த டெபாசிட் தொகையில் பாதியை தாழ்த்தப்பட்ட -பழங்குடி சமுதாய வேட்பாளர்கள் கட்டினால் போதும்.

    இத்தேர்தலில் வாக்குச் சீட்டு முறைதான் பின்பற்றப்படும். எனினும், தேர்தல் முடிவுகளை மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வசதியாக உடனுக்குடன் ஆன்-லைனில் வெளியிட மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அக்.24-க்குள் தேர்தல்: தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி, இத்தேர்தலைத் தள்ளி வைக்க இயலாது. எனவே, அக்டோபர் 24-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    தேர்தல் பணியில் 4.5 லட்சம் ஊழியர்கள்: இத்தேர்தல் பணிகளில் மாநிலம் முழுவதும் நாலரை லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தலை நடத்துவது தொடர்பான பயிற்சிகள் பல்வேறு கட்டங்களாக அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    தேர்தல் பணிகளைப் பார்வையிட மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் மொத்தம் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

    பதற்றம் ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்டறியவும், அந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி வாக்குப் பதிவை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    ADMK MLA is Stripped of Party post for Acknowledging MK Stalin’s Contributions

    Dinamani.com – TamilNadu Page

    ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியதன் எதிரொலி: கட்சிப் பதவியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ. நீக்கம்

    சென்னை, செப். 14: உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    கட்சியில் ஜெயலலிதா பேரவையின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார் அவர். தற்போது அப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்ட தொடக்க விழாவில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் கலந்துகொண்டார்.

    திராவிட இயக்கங்களை ஒற்றுமைப்படுத்தி சகோதர யுத்தத்துக்கு முடிவு கட்டி தமிழகத்தை பிரகாசிக்க செய்யும் பொறுப்பு மு.க. ஸ்டாலினுக்கு உள்ளது என்று அவர் பேசினார்.

    அதோடு அரசியல் நாகரீகம் தெரிந்தவர், பண்பாளர் என்றெல்லாம் ஸ்டாலினைப் பாராட்டினார்.

    இந்நிலையில் எஸ்.வி. சண்முகம் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே எம்.எல்.ஏ. பதவியை சண்முகம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உள்பட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    60 ஆயிரம் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட நான், ஒருசிலர் கோருவதற்காக ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று சண்முகம் கூறியுள்ளார்.


    திமுக- அதிமுக இணைப்பை மக்கள் விரும்புகின்றனர்: மதுரை அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் பேட்டி

    மதுரை, செப். 14: திமுக – அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர் என, மதுரை மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் (அதிமுக) தெரிவித்தார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

    திராவிட இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் நான் பேசியதில் தவறில்லை.

    அதைத் தவறு என்று கூறினால், தொடர்ந்து அத்தவறை செய்யத் தயங்கமாட்டேன். நிர்பந்தங்களுக்கும் பயப்படமாட்டேன்.

    திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைப்பு என்ற கருத்துடன், அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவுடனும் மென்மையான அணுகுமுறையை திமுக அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். எனவே என் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை.

    திராவிட இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழகத்தில் நாகரிகமான அரசியல் நடைமுறை ஏற்பட வேண்டும். மதுரை மேற்குத் தொகுதியில் நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பம்.

    திமுக-அதிமுக ஒருங்கிணைப்பை மக்கள் விரும்புகின்றனர். அதற்கான நல்ல விதையை விதைத்துள்ளேன். அது நன்றாக வளரும். இணைப்பு ஏற்படாவிட்டால் தேவையில்லாத தேமுதிக போன்ற அரசியல் களைகள் உருவாகிவிடும்.

    அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய கருத்துகளைக் கட்சித் தலைமையிடமும் தெரிவித்துள்ளேன். ஆனால், தலைமையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

    திமுக-அதிமுக இணைப்புக்கு நீண்ட காலத்திற்கு முன் தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் முயற்சி மேற்கொண்டார். தற்போது நான் முயற்சித்துள்ளேன்.

    இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்து 38 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இன்று வரை இணையவில்லை.

    இருப்பினும், ஒரே தளத்தில் நின்று செயல்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதுபோன்ற நிலை தி.மு.க- அ.தி.மு.க.விடமும் ஏற்படலாம்.

    இக்கருத்தை தெரிவித்ததால் நான் அ.தி.மு.க.விலிருந்து விலகுகிறேன் என்று அர்த்தமல்ல. நான் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எனவே, அ.தி.மு.க.விலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. என்னை தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.வினருக்கும் இல்லை.

    திமுக- அதிமுக ஒருங்கிணைப்புக் கருத்தைத் தெரிவித்ததால் என் மீது தாக்குதல் ஏதும் நடைபெறலாம் என்று கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் அவர்.

    Local body elections in Tamil Nadu – Allocations for Lady Candidates

    Dinamani.com – TamilNadu Page

    34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு :: ஆர்.ராமலிங்கம்

    வேலூர், செப்.13: தமிழகத்தில் 34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4 இடங்கள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம்: பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சிகள் (அடைப்புக்குறிக்குள் மாவட்டம்):

  • கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி (திருவாரூர்),
  • சிதம்பரம் (கடலூர்),
  • கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),
  • தஞ்சாவூர், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),
  • ஆரணி (திருவண்ணாமலை),
  • மணப்பாறை (திருச்சி),
  • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி (விருதுநகர்),
  • தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி (ராமநாதபுரம்), புதுக்கோட்டை ,
  • திருமங்கலம் (மதுரை),
  • போடிநாயக்கனூர், கம்பம் (தேனி),
  • மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி (கோவை),
  • சங்கரன்கோயில் (திருநெல்வேலி),
  • பெரியகுளம், சின்னமனூர் (தேனி),
  • சீர்காழி (நாகப்பட்டினம்),
  • கரூர், மதுராந்தகம் (காஞ்சிபுரம்),
  • அரக்கோணம் (வேலூர்),
  • உசிலம்பட்டி (மதுரை),
  • கிருஷ்ணகிரி.

    தாழ்த்தப்பட்ட மகளிருக்கு

  • செங்கல்பட்டு (காஞ்சிபுரம்),
  • துறையூர் (திருச்சி),
  • திருப்பத்தூர் (வேலூர்),
  • ஆத்தூர் (சேலம்) ஆகிய நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தாழ்த்தப்பட்ட பொது பிரிவினருக்கு

  • தாராபுரம் (ஈரோடு),
  • புளியங்குடி (திருநெல்வேலி),
  • திண்டிவனம் (விழுப்புரம்),
  • தேனி அல்லிநகரம் (தேனி),
  • திருவள்ளூர்,
  • ஆவடி (திருவள்ளூர்),
  • மேட்டூர் (சேலம்) நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சிகள்
    மதுரை மாநகராட்சி மகளிர் பொதுவுக்கும், சேலம் மாநகராட்சி தாழ்த்தப்பட்ட மகளிர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மூன்றாம் நிலை நகராட்சிகள்
    மூன்றாம் நிலை நகராட்சிகளில் 17 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 இடங்கள் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    அதன் விவரம்: தாழ்த்தப்பட்ட மகளிருக்கானவை:

  • கூடலூர் (வடக்கு) (நீலகிரி),
  • புஞ்சைபுளியம்பட்டி (ஈரோடு),
  • பூந்தமல்லி (திருவள்ளூர்).

    மகளிர் (பொது):

  • தாராபடவேடு,
  • ஜோலார்பேட்டை,
  • சத்துவாச்சாரி (வேலூர்),
  • கூடலூர் (நகரம்) (தேனி),
  • வெள்ளக்கோயில், குனியமுத்தூர் (கோவை),
  • ஆனையூர், திருப்பரங்குன்றம் (மதுரை),
  • அனகாபுத்தூர் (காஞ்சிபுரம்),
  • தாந்தோனி, இனாம்கரூர் (கரூர்),
  • கள்ளக்குறிச்சி (விழுப்புரம்),
  • அரியலூர் (பெரம்பலூர்),
  • திருத்தணி (திருவள்ளூர்).

    நரசிங்கபுரம் (சேலம்), மணலி (திருவள்ளூர்), ஜெயங்கொண்டம் (பெரம்பலூர்), திருத்தங்கல் (விருதுநகர்) ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.