Category Archives: Uncategorized

வாயாடல்

வீ.விஷ்ணுகுமார் – கிருஷ்ணகிரி ::

வங்கி ஒன்றில் கிளார்க்கும் கிராமத்து ஆசாமி ஒருவரும்…

“என்னய்யா… ‘செக்’ இது. தமிழ்ல கையெழுத்துப் போட்டிருக்கே..?”

“ஹி…ஹி… எல்லாம் தமிழ் பற்றுதான் சார்…”

“தமிழ் பற்றை அக்கவுன்ட் ஆரம்பிக்கும்போதே காட்டியிருக் கணும். அப்போ இங்கிலீஷில் கையெழுத்துப் போட்டுட்டு இப்போ தமிழுக்கு மாறினா எப்படி கையெழுத்தை சரிபாக்குறது… இதை நான் பாஸ் பண்ணினா என்னை பீஸ் பண்ணிடுவாங்க… போய் வேற ‘செக்’ல பழைய மாதிரி கையெழுத்துப் போட்டுக் கொண்டு வா.”

விமரிசனத்தின் எல்லைகள்

நன்றி: விமரிசனக்கலை (நர்மதா பதிப்பகம்) & மதி கந்தசாமி

க.நா. சுப்ரமண்யம் ::

இலக்கிய விமரிசனத்தைப் பற்றிச் சில சில்லரைச் சந்தேகங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் (எனக்கும்தான்) விளக்கிக் கொள்வதற்காகவே நான் இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன். ஒரு கலையின் ஆரம்ப தசையில் சொல்லப்படுகிற விஷயங்கள் எல்லாமே முடிவானவையல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். என்னைப் பற்றிய வரையில் நான் இதுபற்றியெல்லாம் “உரக்கச் சிந்திக்கிறேன்” என்று சொல்லலாமே தவிர வேறு சொல்வதற்கில்லை.

இன்னும் ஒரு விஷயம் தெளிவாகவே சொல்லுகிறேன். சிறுகதையோ, நாவலோ, கவிதையோ எழுதும் போது வாசகர்களைப் பற்றிய நினைவைப் படைப்பாளன் அறவே ஒழித்துவிடவேண்டும் என்கிற நினைப்புள்ளவன் நான். ஆனால் இலக்கிய விமரிசனம் செய்யும்போது வாசகனுடைய நினைவும் கூடவே வரத்தான் செய்யும். என் இலக்கிய அனுபவத்தைத்தான் நான் எடுத்துச் சொல்ல முயலுகிறேன் என்றாலும் வாசகனுக்காகச் சொல்லுகிறேன் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. என் இலக்கிய அனுபவத்தை எடுத்துச் சொல்லி, கூடியவரையில் ஒரு இலக்கிய சிருஷ்டி வரையில் அந்த அனுபவத்தை அலசியும் பார்க்க முயலுவதுதான் என் இலக்கிய விமரிசனத்தின் அடிப்படைக் காரியம். இதிலே பிறருக்கு உகந்ததாகச் சொன்னோமா என்பதோ, முன்கூட்டியே முடிவான ஒரு தீர்மானத்துக்கு வந்தோமா என்பதோ என் கவலையில்லை. என் அனுபவ உண்மையைப் பூரணமாகச் சொல்லியாகி விட்டதா என்பதுதான் எனக்குக் கவலை. பூரணமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறபோது உட்கார்ந்து மறுபடி முயன்று எழுதிப் பார்க்க வேண்டியதுதான்.

விமரிசனத்தில் அனுபவத்தை அலசிப் பார்க்கிற காரியம் இருக்கிறதே – அது எப்போதுமே சரியாக வராது. அதுவும் ஆரம்ப தசையில் விமரிசனம் எழுதப்படும் தோரணையில் (ஆமாம், எழுதப் பழகும் தோரணைதான் இன்னமும், இருபது வருஷ இலக்கிய விமரிசன அனுபவத்துக்குப் பிறகும் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது.) அலசிப் பார்க்கிற காரியத்தைத் தற்காலிகமாகத் (tentative)தான், பூனைக்குட்டி தனது காலை நீட்டி எதிரில் உள்ளது என்ன என்று பார்க்கிற தோரணையில்தான் செய்ய முடியும் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் உள்ள மற்ற துறைகளைப் போலவே இலக்கிய விமரிசனத்தையும் ஒரு அளவுக்குக் கலையாகவும், ஒரு அளவுக்கு சாஸ்திரமாகவும் எண்ணுகிறேன் நான். இலக்கிய விமரிசனத்தை விஞ்ஞானமாக, ஒரு சாஸ்திரமாகப் பயிலுவது சுலபமாகவே எல்லோருக்கும் கை வந்துவிடும். ஆனால் இலக்கிய விமரிசனத்தைக் கலையாகப் பயிலுவது சுலபத்தில் கைகூடி வந்து விடுகிற காரியம் அல்ல. இலக்கிய விமரிசனத்தைக் கலையாகப் பயிலுகிற காரியத்தை இப்போதுதான் தமிழ் ஆசிரியர்களில் சிலர் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தில் வளம் தொடர்ந்து ஏற்படுவது என்பது இந்த இலக்கிய விமரிசனக் கலை வளர்ந்து மேஜராவதைப் பொறுத்தே இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் இன்னும் சோதனைகளும் முயற்சிகளும் “மேலே மேலே” என்று செய்துகொண்டே போவதற்கு இலக்கிய விமரிசனம்தான் சிறப்பாக வழிகாட்ட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். குறிப்பிட்ட ஓரிரண்டு துறைகளில் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் வளம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வளம் உரம் பெறவும், மேலும் வளர்ச்சி சாத்தியமாகவும், இலக்கிய விமரிசனம் உடனடியாகத் தேவை. 1948-க்குப் பிறகு இலக்கியம் (தமிழைப் பற்றிய வரையில்) தேங்கிப் போனதற்குக் காரணம், வளத்தை அளவிடக்கூடிய தெம்பு படைத்த இலக்கிய விமரிசனம் தோன்றாமைதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

இலக்கிய விமரிசனம் தோன்றிவிட்டால் தானே இலக்கிய வளர்ச்சி தோன்றிவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிற சந்தேகப்பட்டவர்களுக்கு ஒரு பதில் சொல்லலாம். இலக்கிய விமரிசனம் தோன்றினால், இலக்கிய வளத்துக்கான சூழ்நிலையையும், இலக்கிய சோதனைகள் நடத்துவதற்கான தெம்பையும் சிருஷ்டித்துத் தந்துவிடும். அந்தத் தெம்பும் சூழ்நிலையும் காரணமாகச் சிலர் புது இலக்கியம் சிருஷ்டிக்கலாம். பலர் எழுதியும் உயர் இலக்கியம் சிருஷ்டியாகாமல் போனால், அதுபற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இலக்கியம் என்கிற அளவில் ஒவ்வொரு ஆசிரியனும் தன்னில் உள்ளதில் சிறந்ததைப் பூரணமாகத் தருகிறான். சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது. அந்தப் பூரணமும் இலக்கிய சிருஷ்டிக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் என்ன பண்ணுவது? எதுவும் செய்வதற்கில்லை – காத்திருப்பதைத் தவிர என்றுதான் சொல்லவேண்டும்.

  • இலக்கியத்திலுள்ள பல துறைகளில், சிறுகதைபோல, நாவல் போல, கவிதைபோல, இலக்கிய விமரிசனமும் ஒன்று என்பதனால், இலக்கிய விமரிசனத் துறை வளருவதால் இலக்கியமும் வளருகிறது என்பது ஏற்படுகிறது. இது இலக்கிய விமரிசனத்தின் தேவை அடிப்படையை வற்புறுத்துகிறது.
  • இரண்டாவதாக, இலக்கிய விமரிசனம் நல்லது என்று தோன்றுவதை அழுத்தமாக எடுத்துச் சொல்லி, நல்லதல்லாததைக் கண்டித்து இலக்கிய உழு நிலத்தில் களை பிடுங்கி நிலம் திருத்தித் தருகிறது.
  • மூன்றாவதாக, இலக்கிய சிருஷ்டிகளிலே ஒரு கோணத்தை, ஒரு நோக்கத்தை மட்டும் கண்டு திருப்தி யடைந்துவிடுவதுடன் நின்றுவிடாமல், வாசகன் பல கோணங்களையும், பல நோக்கங்களையும் இனங்கண்டு அனுபவிக்க இலக்கிய விமரிசனம்தான் வழி வகுத்துத் தரவேண்டும்.
  • நாலாவதாக, சோதனை அம்சங்களுக்கு இலக்கியத்தில் அழுத்தம் தந்து சோதனைகளை மேலே மேலே செய்துகொண்டு போவதையும் இலக்கிய விமரிசனம் தான் சாத்தியமாக்க முடியும். ஐந்தாவதாக, ஆறாவதாக, என்றும் சொல்லிக்கொண்டு போகலாம். அவசியம் இல்லை என்றே நம்புகிறேன்.

    புதுசாக எழுதத் தொடங்குகிறவர்களை அநுதாபத்துடன் அணுகிப் பரிவுடன் விமரிசனம் செய்யவேண்டும் என்று நமக்குள்ளே ஒரு சித்தாந்தம் தோன்றி உள்ளது. இது அசட்டுச் சித்தாந்தம். எந்த இலக்கியாசிரியனுக்கும், இலக்கிய சிருஷ்டி சம்பந்தமாகப் பரிவோ, யாருடைய அநுதாபமோ தேவையில்லை. பரிவும் அநுதாபமும் தேவையாகி, “ஐயோ பாவம்!” என்று எண்ணவேண்டிய எழுத்து எழுத்தாகவே பலமுள்ளதாக இராது என்பது ஒரு அடிப்படைக் கருத்து. அது இலக்கியம் ஆகவே முடியாது. நான் எழுதியது இலக்கியமானால் ஆயிரம் பேர் பரிவு காட்டாவிட்டாலும் இலக்கியந்தான்; இலக்கியமல்லவானால் ஆயிரம் பேர் வோட்டு எடுத்துச் சொன்னாலும், பரிவு காட்டி புகழ்ந்தாலும் இலக்கியமாகிவிடாது. காலதேவனைப் போல பரிவு இல்லாத ஒரு புருஷனைக் காண இயலாது. காலதேவனின் பரிவில்லாமை இலக்கிய விமரிசகனுக்கும் தேவை. இன்றைய இலக்கியத்தை மதிப்பிடுகிற இலக்கிய விமரிசகன் ஓரளவுக்குக் காலதேவனின் காரியத்தைத்தான் செய்ய முற்படுகிறான். அதைப் பரிவு என்பதே காட்டாமல் செய்துதான் தீரவேண்டும்.

    எழுதப்படுவதெல்லாமே எழுத்து என்றும், பத்திரிகைகளில் வந்துவிட்டதெல்லாம் இலக்கியம் என்றும் ஒரு எண்ணம் தமிழிலே இரண்டு தலைமுறைகளாக நமக்குள் நமக்கே வளர்த்துவிட்ட ஒரு சித்தாந்தம். இந்த நிலை மாற இலக்கிய விமரிசனம்தான் உதவ முடியும். சர்க்கார் சார்பு பெற்ற ஸ்தாபனங்களும், சர்க்கார் சார்பு அவ்வளவு இல்லாத ஸ்தாபனங்களும் இலக்கிய ஸ்தாபனங்கள் என்று எண்ணி நாம் ஏமாறுகிறோம். அவை வேறு என்னவோ, எப்படியோ-நமக்கு மட்டும் என்ன, வேறு யாருக்குமே தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவற்றிற்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப் பிராப்திகூடக் கிடையாது என்பதை உணர இலக்கிய விமரிசகன்தான் இன்று வழி செய்து தரவேண்டியதாக இருக்கிறது. அவற்றின் காரியங்கள் இன்று நம் எழுத்தைப் பெரிதும் பாதிக்கின்றன–அப்படிப் பாதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொல்லியே தீரவேண்டும். இன்றைய இலக்கியத்தில் பத்திரிகை ஆதிக்கம், பண்டிதர் ஆதிக்கம், இரண்டுக்கும் இலக்கிய ரீதியில் ஒருவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க நம்மிடையே இலக்கியத்தின் தனித் தன்மையின் காவலாளனாக இலக்கிய விமரிசகன் பணிபுரிய வேண்டியதாக இருக்கிறது

    இத்தனையும் சொன்ன பிறகு, வாசகர்களுக்கும் நல்ல எழுத்துக்கும் உள்ள உறவுமுறைகளையும், அவற்றின் அடிப்படைகளையும் இலக்கிய விமரிசனம் ஆராயப் பயன்படவேண்டும். உண்மையான இலக்கிய சிருஷ்டி காரியத்தில் இலக்கியம் சுய அனுபவமாக, ஆத்ம திருப்தி ஒன்றையே தான் லட்சியமாகக் கொண்டு தோன்றுகிறது என்பதையும், அதிர்ஷ்டவசத்தால் வாசகன் என்று சொல்லப்பட்டவன் அந்த இலக்கியத்தை ஒட்டுக் கேட்டு ஆனந்திக்கும் பேற்றைப் பெறுகிறான் என்பதையும் வற்புறுத்த வேண்டிய அவசியம் இன்று இலக்கிய விமரிசகனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இலக்கிய கர்த்தாக்களான, வால்மீகியும், வியாசரும், ஹோமரும், டாண்டேயும் அதிர்ஷ்டசாலிகள்.

    மறைவில், தனிமையில், ரகசியத்தில், ஒதுங்கி நின்று இலக்கிய சிருஷ்டி செய்வது, யார் கண்ணிலும் படாது நூல் இயற்றுவது அவர்களுக்குச் சாத்தியமாக இருந்தது. இன்று தான் எனும் தனிமை நிலைகூட இல்லாமல், பத்திரிகை எழுத்தாக, முற்போக்கு எழுத்தாகத்தான் இலக்கிய சிருஷ்டி நடைபெறுகிறது. இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதல்ல — அதற்கு எதிர்மாறாக வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப் பிடிப்பது என்பதை வற்புறுத்த இன்று இலக்கிய விமரிசனம் உபயோகப்படவேண்டும். இலக்கியாசிரியன் வாசகர்களையோ ஒரு லட்சிய வாசகனையோ எண்ணிக்கொண்டு எழுதுவதில்லை.

    வாசகன்தான் தன் இலக்கியத் தாகத்தில் ‘நமக்குகந்த ஆசிரியன் இவன்’ என்று தேடிக்கொண்டு இடைவிடாமல் ஓடவேண்டும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிய விமரிசனம் வாசகர்களுக்கு அடித்துச் சொல்லவேண்டும்.

    ஷேக்ஸ்பியரைப் படித்தனுபவிக்க முடியாதவன் துரதிர்ஷ்டசாலி. கிரேக்க சோக நாடகாசிரியர்களை அனுபவிக்க முடியாதவர்களும் துரதிர்ஷ்டசாலிகள்தான். கம்பனைப் படித்தனுபவிக்க அறியாதவன் துரதிர்ஷ்டசாலிதான். வேறு என்ன? ஆனால் இதை இன்றைய இலக்கியக் கர்த்தாக்கள் வரையில் கொணர்ந்து புதுமைப்பித்தனையும், மௌனியையும் லா.ச.ராமாமிருதத்தையும், கு.அழகிரிசாமியையும் (சிறுகதைகளில் மட்டும் சொல்லுகிறேன்)

    அனுபவிக்கத் தெரியாதவர்களைத் துரதிர்ஷ்டசாலிகள் என்று கூற இன்றைய இலக்கிய விமரிசகன் தயங்கக்கூடாது.

    காலதேவனின் நிர்த்தாட்சண்யத்துடன் பரிவு என்பதே காட்டாமல்தான் இலக்கிய விமரிசனம் செய்தாகவேண்டும். இன்று எண்ணாயிரம் பேர்வழிகள் சிறுகதைகள் என்று எழுதுகிறார்கள் என்றால், எண்ணாயிரம் பேர்வழிகளும் இலக்கியக் கர்த்தாக்கள்தான் என்கிற எண்ணம் நம்மிடையே பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த எண்ணாயிரம் பேர்வழிகளில் அதிகம் சொல்லப்போனால் ஒரு எண்பது பேர்வழிகள் நன்றாகவே எழுதலாம். மொழிவளத்தையும் அடிப்படையாகக் கொண்டு படிக்கக்கூடிய கதைகள் எழுதலாம். ஆனால் காலம் என்கிற சல்லடை இதில் ஒரு எட்டுப் பேரையாவது சலித்தெடுத்து அடுத்த தலைமுறைக்குத் தருமா என்பது சந்தேகமே! எட்டு என்று நான் இலக்கிய விமரிசகனாக எண்ணிச் சொல்கிற கருத்து காலதேவனின் பரிவு – அல்லது பரிவில்லாமை என்பதனால், மூன்று, இரண்டு, ஒன்று என்றுகூடத் தேய்ந்துவிடலாம்தான். இந்த எட்டுப் பேரிடம் இலக்கியத் தரம் இருக்கிறது என்று சொல்லுகிற மூச்சிலேயே எனக்கு எட்டுகிற வரையில் என்றும் சேர்த்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்த எட்டுப் பேரைப் பற்றியும் காலம்தான் முடிவாகச் சொல்ல வேண்டும்; சொல்ல முடியும்.

    அப்படியானால் வாசகனை அடியோடு மறந்துவிட்டு எழுதுகிறவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்களா என்று ஆணித்தரமாக கேட்டு, அதற்குப் பிறகு வெற்றிகரமாகவே, அப்படியானால் எழுதியதைப் பிரசுரிப்பானேன்? ஆத்ம திருப்தியுடன் முடிந்துவிட்டது என்று கிழித்துப் போட்டு விடக்கூடாதா? என்று பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்பார்கள் சிலர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மை இதுதான். இலக்கியம் சிருஷ்டியாகிற சமயத்தில் ஆசிரியனுக்கு மட்டுமே அது சொந்தமான விஷயம்.

  • சமூகம்,
  • தனி மனிதனின் வளர்ப்பு,
  • பயிற்சி,
  • சூழ்நிலை,
  • குடும்பம்,
  • அவன் மதம்,
  • கொள்கைகள்,
  • அவன் இனத்தவரின் ரத்த அருவியோட்டம்,
  • வாசனை
    எல்லாமாகச் சேர்ந்துதான் அவனுடைய சிருஷ்டியை ஓரளவுக்கு உருவாக்குகின்றன என்பது உண்மையே. ஆனால் இதெல்லாம் சேர்ந்துவிட்டதனால் மட்டும் இலக்கியம் உற்பத்தியாகிவிடுவதில்லை. இந்த விஷயங்களையெல்லாம் வைத்து எத்தனைதான் அலசிப் பார்த்தாலும், இதெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று எல்லா இலக்கிய சிருஷ்டியிலேயும் காணக் கிடக்கிறது. அந்த ஒன்றைத்தான் இலக்கியாசிரியனுக்கே சொந்தமான தனி விஷயம் என்று நான் சொல்வேன். இந்த தனித்வம் என்கிற தத்துவம் இருக்கிறதே, அது, பரம்பொருள் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களே அதைப் போன்றது. வார்த்தைகளில் அகப்படாதது. பக்திமான்கள் வார்த்தைகளுக்கு அகப்படாத அக்கடவுளைத் தேவாரமாகவும், நாலாயிரமாகவும் பாடிக் காண முயன்றார்கள்.

    அதையேதான் இலக்கிய அளவில் இலக்கிய விமரிசனம் செய்து பார்க்க முயலுகிறது. முடியாது என்று தெரிந்திருந்தும் செய்து பார்க்கிற அளவில் கைநீட்டி வானைத் தொடச் செய்யப்படும் முயற்சி சிறப்பானது, உற்சாகம் தருவதுமாகும். எப்படித் தனிமையில், தனித்வத்தின் வார்த்தை உறவாக இலக்கிய நூல் உண்டாகிறது என்பதை இலக்கிய விமரிசனம் எடுத்துச் சொல்வதுடன், அடுத்த படியில் அது இலக்கியமாக ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அம்சமாகக் காட்சி தருவது எப்படி என்பதையும் இலக்கிய விமரிசகன் எடுத்துச் சொல்ல வேண்டும். இரண்டாயிரம் வருஷ விமரிசன வளத்தில் மேலைநாடுகளில்கூட இம்முயற்சி அதிகமாக நடைபெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அதற்கு அவசியம் இன்று இல்லை என்று சொல்ல முடியாது.

    ஒரு நூல் சிருஷ்டியாகிற விதத்தை நாம் அறிந்து கொள்வதால் அதைப் பற்றிய அளவில் அதை அதிகமாக அனுபவிப்பது சாத்தியப்படுமா என்பது அடுத்த கேள்வி. ரசத்தையும், கடிகாரத்தையும் உதாரணம் சொல்லிப் பயனில்லை. இலக்கியத்தைப் பற்றிய வரையில் நம் அறிவு பூராவுமே எந்த நல்ல சிருஷ்டியையுமே அனுபவிக்க நமக்கு உதவும் என்றுதான் சொல்லவேண்டும். வார்த்தைகள், வாக்கியங்கள், கருத்துக்கள், உருவங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு தனித்வத்தையும் கணிக்க இலக்கிய விமரிசனமும் வார்த்தைகளின் உதவியைத்தான் நாடுகிறது. அந்த வார்த்தைகளுக்கான பலமும் பலவீனமும் இலக்கியத்தைப் போலவே இலக்கிய விமரிசனத்துக்கும் உண்டு. இலக்கிய விமரிசனத்தின் அளவைகளும் எல்லைகளும் வார்த்தை அளவைகளையும் எல்லைகளையும் பொறுத்தவை. முடிவில்லாத ஒரு முயற்சி இது என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை சொன்னாலும், சொல்லவேண்டியது பாக்கியிருப்பது புலனாகிக் கொண்டே தான் இருக்கும். மேலே மேலே என்கிற ஏக்கம், மற்ற கலைகளைப் போலவே இலக்கிய விமரிசனத்துக்கும் உண்டுதான். அதன் கலைநயமே அதில்தான் அடங்கியுள்ளது.

    நல்ல நாவல் என்றால் என்ன? நல்ல சிறுகதை என்றால் என்ன? நல்ல கவிதை, காவியம் என்றால் என்ன? என்று சொல்லி இலக்கணம் வகுக்கச் செய்யப்படுகிற முயற்சிகள் எல்லாமே இலக்கிய அளவில் தோல்விகள் தான். ஏனென்றால் இலக்கணம் சொல்லி முடித்தவுடனேயே அவ்விலக்கணத்தை மீறி நாவலோ, சிறுகதையோ, கவிதையோ எழுதுகிற ஒரு இலக்கிய மேதைத் தோன்றிப் புது இலக்கணத்துக்கு அவசியம் ஏற்படுத்தி விடுகிறான். இந்த நிலையை இலக்கிய விமரிசகன் (பண்டிதர், புலவருக்கு எதிர்மாறாக) ஏற்றுக்கொண்டே தொடர்ந்து விடாப்பிடியாக இலக்கிய விமரிசனம் செய்கிறான்.

    பூரணத்வம், லட்சியம் என்பதை இலக்கியத்தில் தொடர்பு அளவிலே இருக்கிறது என்று reliative உறவு சம்பந்தமாகத் தான் கூறமுடியும். டாஸ்டாவ்ஸ்கியைப் போன்ற நாவலாசிரியன் வேறு கிடையாது உலகிலே என்று சொல்கிற அதே மூச்சிலே, இலக்கிய விமரிசகன் டாஸ்டாவ்ஸ்கியின் நாவல்களிலும் ஷொட்டுக்கள் குறைபாடுகள் காணாமல் இல்லை என்று சொல்லவேண்டும். அதற்காக டாஸ்டாவ்ஸ்கிக்குப் பின்னர், இன்று டாஸ்டாவ்ஸ்கியைப் போலவே எழுதியவனைப் பெரிய நாவலாசிரியனாகவும் நாம் கருதுவதில்லை. அவனைப் படிக்க வேண்டிய அவசியமேயில்லை என்று முடிவு கூறினாலும் கூறிவிட முடியும். இத்தனைக்கும் அப்பால் டாஸ்டாவ்ஸ்கி உயர்ந்து நிற்கிற விஷயத்தை ஆணித்தரமாகவே இலக்கிய விமரிசகன் எடுத்துக் காட்டிவிடுகிறான். எப்படிச் செய்கிறான் என்பது விமரிசகனின் தனித்தன்மை, சாமர்த்தியம்.

    குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தின் தரம் பூராவையும் இலக்கிய விமரிசனம் மூலம் எடுத்துச் சொல்லிவிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்றுதான் பதில் தரவேண்டும். அதனால்தான் ஷேக்ஸ்பியரையும், டாண்டேயையும் பற்றி இத்தனை விமரிசன நூல்கள் தோன்றியும் (பள்ளி நூல்களைப் பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்) இன்னும் பல நூல்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சிறுகதையோ கவிதையையோ, நாவலையோ அலசிப் பார்த்து இதிலுள்ள இலக்கிய நயம், அம்சம், தரம் எல்லாம் இவ்வளவுதான் என்று எடை போட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால் இன்னின்ன நயங்கள், தரங்கள், அம்சங்கள் இப்படி இப்படியாக ஏற்பட்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்ட முடியும்.

  • இலக்கிய உருவத்தையும்,
  • அந்த உருவத்தை நமக்கு நிர்மாணித்துத் தருகிற வார்த்தைகளையும்,
  • ஆசிரியரின் கருத்துக்களையும்,
  • சூழ்நிலையையும்,
  • அதனால் எழுந்த கோயிலையும்,
  • குச்சையும்,
    இலக்கிய விமரிசனம் நல்ல வாசகனுக்குச் சுட்டிக்காட்ட முயலுகிறது. இந்த நூலின் நோக்கம் இது என்று சொல்லும்போதே, வார்த்தைகளால் எழுந்த இதன் நோக்கம் பலதரப்பட்டது. இதிலே பல கோணங்களும் திருப்பங்களும் தொனிக்கின்றன என்பதையும் காட்ட இலக்கிய விமரிசனம் பயன்படுகிறது. இதோ கதவு, திறந்துகொண்டு உள்ளே போகலாம் என்றோ; இதோ மலர் நுகரலாம் என்றோ நல்ல வாசகனுக்குச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இலக்கிய விமரிசகன் செய்யவேண்டிய காரியம் என்று நான் எண்ணுகிறேன். இலக்கியப் பாதையிலே வழிநெடுக நடப்பது விமரிசகனின் கடமையல்ல.

    கதாகாலஅக்ஷபக்கார்கள் ஒரு வரிக்கவிதைக்கு எட்டுப் பக்கம் பிரசங்கம் செய்பவர்கள் செய்கிற காரியம் அல்ல இலக்கிய விமரிசகன் செய்ய வேண்டிய காரியம். நல்ல கவிதையை (சிறுகதையையோ, நாவலையோ) சுயம் கவிதையாக அப்படியே தரவேண்டுமே தவிர அதிலே பட்டணத்துப் பால்காரனாகத் தண்ணீர் ஊற்றிப் பெருக்கித் தரக்கூடாது இலக்கிய விமரிசகன் என்பது வெளிப்படை.

    கம்பனுடைய காவியத்தைப் பற்றிய விமரிசனம் செய்ய முன்வருபவன், கம்பனுடைய கவிதையை முக்கியமாகக் கருதி விமரிசனம் செய்யவேண்டுமே தவிர, என் கெட்டிக்காரத்தனத்தைப் பார், என் அறிவைப் பார் என்றெல்லாம் கம்பன் கவிதைக்குப் புறம்பானதை, இல்லாததைச் சொல்லிக் கதாகாலஅக்ஷபம் செய்வதை இலக்கிய விமரிசனம் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்காக இலக்கிய விமரிசகன் அறிவற்ற ஒரு சூனியத்தில் நிற்கிறான் என்பதல்ல, அவன் அறிவெல்லாம், அவன் திறனெல்லாம், அவன் படித்த படிப்பெல்லாம் அவன் விமர்சனம் செய்யும் நூலுக்கு அடங்கி நிற்கின்றன. அதை மீறிய எதையும் அவன் கவனிப்பதேயில்லை. தாக்ஷண்யம், பரிவு, அநுதாபம், பெரியவர், சின்னவர், காலத்தால் முந்தியவர், பிந்தியவர் என்பதெல்லாம் இலக்கியத்துக்கும் விமரிசனத்துக்கும் புறம்பான அப்பாற்பட்ட விஷயங்கள்.

    இலக்கிய விமரிசகன் இலக்கியம் என்கிற அளவில் பேராசைக்காரனாக இருந்துதான் ஆகவேண்டும். காவலில் ஜாக்கிரதையுள்ளவனாக போலி எதையும் இலக்கியச் சோலைக்குள்ளே அனுமதிக்காதவனாகவும் இருக்கவேண்டும்.

    இத்தனையும் பொதுவாகக் கூறிய பிறகு தமிழைப் பற்றிய வரையில் இன்னொன்றும் சிறப்பாகக் கூற வேண்டும். தமிழில் இன்று இலக்கிய விமரிசனம் செய்ய முன்வருபவன் மற்ற உலக மொழி இலக்கிய இயக்கங்களிலும் ஆழ்ந்த அறிவுள்ளவனாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. மற்ற மொழி இலக்கியங்களில் இன்று நிர்மாணமாகியுள்ளது போலத் தமிழிலும் நல்ல நூல்கள் வரிசை, classics, ஒன்றைத் தமிழுக்கும் ஏற்படுத்தித் தருவதில் அவன் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். பழசு புதுசு இரண்டிலும் நல்ல நூல் வரிசை நிர்த்தாரணம் செய்யும் சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும். இன்றைய மொழி இலக்கியம் எதுவும் தனித்தியங்காது. உலகமொழி இலக்கியத்துக்கெல்லாம் வாரிசுதான் இன்றையத் தமிழ் இலக்கியமும் என்கிற உண்மையை எப்போதும் மறக்காதவனாக இருக்கவேண்டும்.

    தமிழில் இலக்கிய விமரிசனம் வளரட்டும். ஏனென்றால் தமிழ் இலக்கியம் வளம் பெற அதுவே இன்றும் சிறந்த வழி.

    | | |

    நன்றி: விமரிசனக்கலை :: நர்மதா பதிப்பகம் & மதி கந்தசாமி

  • Priya Sakhi – Maadhavan & Sadha 

    Priya Sakhi – Maadhavan & Sadha Posted by Picasa

    tamilcinema.com

    Priya Sakhi - Maadhavan and Sadha Thx IndiaGrlitz.comவிநியோகஸ்தர்கள் சங்கம் போட்ட புதிய லிஸ்ட் :: பூஜை போடும்போதே தனியார் தொலைக்காட்சிக்கும் ஒரு ரேட் பேசிவிடுகிற தயாரிப்பாளர்களுக்கு இனி சிரமம்தான். மூன்று வருடங்களுக்கு சில நடிகர்களின் படங்களை தொலைக்காட்சிக்கு விற்க கூடாது என்று லிஸ்ட் போட்டுவிட்டது விநியோகஸ்தர்கள் சங்கம். இந்த லிஸ்ட்படி ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, படங்களை மூன்று வருடங்கள் கழித்துதான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியும்.

    ஒரு வருடம் கழித்து வேண்டுமானால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் அனுமதித்திருக்கிற இன்னொரு லிஸ்டில் மாதவன், சிம்பு, சத்யராஜ் மூவரும் இருக்கிறார்கள். மற்ற நடிகர்களின் படங்களை விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் ஒளிபரப்பி கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.


    மனதைத் திறந்தால் தவறா? :: கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் மாதவனை பற்றி பேசிய ப்ரியசகி பட தயாரிப்பாளர் தேனப்பன், இந்த படத்திற்காக நான் பேசிய 75 லட்சம் சம்பளத்தில் இரண்டு லட்சம் தவிர மற்றதெல்லாம் கொடுத்துவிட்டேன். ஆனால் டப்பிங் சமயத்தில் அந்த இரண்டு லட்சத்தை கொடுத்தால்தான் வருவேன் என்று சொல்லிவிட்டார் என்று மாதவன் மேல் ஒரு குற்றச்சாட்டை வெளிப்படையாக வைத்திருந்தார்.

    மாதவன் ::

    “அட போங்க சார்… ஒரு நல்ல தயாரிப்பாளர் யார் சொல்லுங்கள் பார்ப்போம். இங்கே பல தயாரிப்பாளர்களிடம் நேர்மை கிடையாது. நான் ஐம்பதாயிரத்திற்கும் மேல் அட்வான்சே வாங்கியது கிடையாது. எனது சம்பளத்தை யாரும் விமர்சிக்க முடியாதபடி குறைவான நேர்மையான சம்பளமே வாங்குகிறேன்”

    என்றார்!

    மாதவனுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது. அவரை புதுப்படங்கள் எதற்கும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறது.

    தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.எல்.அழகப்பன் ::

    “நான் மாதவனை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் நான் பேட்டியில் தயாரிப்பாளர்களை பற்றி தவறான கருத்து எதுவும் குறிப்பிடவில்லை என்றதுடன், இது குறித்து வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் கொடுப்பதாக சொன்னார். ஆனால் நேற்றுவரை அவரது கடிதம் கிடைக்கவில்லை. அவர் வருத்தம் தெரிவிக்கும் வரை எந்த தயாரிப்பாளரும் அவரை ஒப்பந்தம் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது நடித்து வரும் தம்பி என்ற படத்திற்கு மட்டும் தடையில்லை”

    என்றார்.

    | |

    தமிழ் தாதா

    கல்கி ::

    தமிழ்த் தாத்தா ஸ்ரீ உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் சமூகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக் கொள்வது.

    பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார் கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது ஔவையாருக்கு எப்படி ‘தமிழ்ப்பாட்டி‘ என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே, தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும் ‘தமிழ்த் தாத்தா’ என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.

    இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு ‘த்’களையும் நீக்கி விட்டால், தாங்கள் “தமிழ் தாதா” ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை ‘தமிழ் தாதா’ என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?

    மூன்றாவது, ‘உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்’ என்பது போல, தமிழன்பர்கள் இன்னமும் தங்களை நோக்கித் ‘தமிழ் தா! தா!’ ‘தமிழ் நூல்களைத் தா! தா!’ என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல் தான் என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.)

    தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும் எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள் நினைக்கவில்லையா?

    போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது வயது நிரம்பப் போகிறது என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால் பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும், அவ்வளவு வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?

    கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந் தேதி வைபவங்கள் முடிந்து 7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின் சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81 என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்றும் பதினாறு வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்து விடுங்கள்.

    ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர வேண்டுமாம். எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!

    வானதி பதிப்பகம் :: ‘வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!’

    | | |

    மனிதாபிமானம் செத்துப்போச்சா

    ரேவதிராஜா

    செவ்வாய்பேட்டை அப்புசெட்டித் தெரு
    சேலம்.

    நடந்து சென்று கொண்டிருந்த ஏழை கர்ப்பிணிப் பெண் நடு ரோட்டிலேயே விழுந்து பிரசவ வலியால் துடித்திருக்கிறாள். அந்த வழியாக போய்க்கொண்டிருந்த யாரும் அருகில் சென்று உதவவில்லை. வீட்டிலிருந்து கதவைத் திறந்து பார்த்த ஒரு சில பெண்களும் வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிரசவ வலியால் துடிதுடித்து மயங்கியிருக்கிறாள். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. அப்போதும் யாரும் அருகில் வரவில்லை. அந்தப் பெண்ணே கண்விழித்து, குழந்தையை எடுத்து தொப்புள் கொடியைக் கைகளினாலேயே கிள்ளியிருக்கிறாள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு யாரோ ஒரு புண்ணியவான் அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

    அன்னியன் தேவை :: (1) | (2)

    கருத்தோடை : | | |

    தீரன் சின்னமலை

    செ. இராசு ::

    ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை – பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை.

    இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவருக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம்.

    இளவயதிலேயே தம்பியர் பெரியதம்பி, கிலேதார் ஆகியவர்களோடு மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் சின்னமலை கற்றுத் தேர்ந்தார்.

    மதுரை நாயக்கர் வசமிருந்த கொங்கு நாட்டுப் பகுதியை மைசூரார் கைப்பற்றியதால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

    ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு வினியோகித்தார். வரி தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்‘ என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் ‘சின்னமலை’ என்ற பெயர் வழங்கலாயிற்று.

    கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். மலையாளத்திலும் சேலம் பகுதியிலும் காலூன்றிய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

    7.12.1782 இல் ஐதர்அலி மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து ‘வெள்ளைத்தொப்பியரை’ எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் ‘கொங்குப்படை‘ சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

    நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளன் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நான்காம் மைசூர்ப் போரில் 4.5.1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்புசுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்குநாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

    ஏற்கெனவே 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மலை – பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.

    தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

    போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து 3.6.1800 அன்று கோவைக் கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. மக்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

    இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.

    சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர் பாளையக்காரர்கள் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

    சில பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி வேரூன்றுவதை எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்ற கருத்தும் சிலரிடம் உண்டு. ஆனால் சின்னமலை தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, உண்மையான நாட்டுப்பற்றுடன் போரிட்டார்.

    எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் நடைபெற்ற போர்களில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

    போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் (??!), சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

    சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார்.

    சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார். முன்பு அவர் நினைவாகப் போக்குவரத்துக் கழகமும், தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உருவாகி வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

    இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31.7.2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

    (நாளை (31.7.2005) தீரன் சின்னமலையின் 200 ஆம் ஆண்டு நினைவு நாள்)

    | |

    சத்யா

    நன்றி: துக்ளக் / ஆகஸ்ட் 3, 2005

    | | |

    52 கேள்விகள்

    குமுதம் ::

    தமிழில் உங்களுக்கு மிகவும் பிடிக்காத வார்த்தை?
    ஆங்கிலம்

    இப்போது 50 லிட்டர் கூவம் யார்?
    நான்தான்

    காதல் என்பது?
    இயக்குநர்களின் கழிவு அல்லது பாடலாசிரியர்களின் அழிவு.

    பிடித்த கலர்?
    பொவொண்டோ

    ரஜினி – கமல் ஒப்பிடுக?

    அரசியலை ஜனரஞ்சகமாக்கியவர் ரஜினி;
    ஜனரஞ்சகத்தை அரசியலாக்கியவர் கமல்

    உங்கள் இளமையின் ரகசியம் என்ன?
    முடி நரைக்காமல் பார்த்துக்கொள்வது

    இளையராஜா – ரெஹ்மான்?
    பண்ணைபுரத்தையும் பறங்கி மலையையும் பாஸ்டனுக்கு அறிமுகம் செய்தவர்கள்.

    ரொட்டி பிடிக்காதா?
    பசி பிடிக்கும்.

    தம்பி…?
    இல்லை மகன்தான் அரசியலுக்கு

    ரஜினி?
    நடிகர்களில் நடிப்பவர்

    கமல்?
    அறிவாளியாக நடிப்பவர்களில் ஒருவர்

    மனைவி?
    வீட்டுக்கு வந்த வேலைக்காரி

    பெரியார்?
    என்னவோ செய்தார்.

    அண்ணா?
    இவரும் என்னவோ செய்தார்.

    சின்ன வயதில் ஹீரோ பக்தி உண்டா?
    சினிமாவுக்குப் போனதுண்டு. படம் மட்டும் பார்ததில்லை.

    ஜெயலலிதாவிடம் பிடித்தது?
    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நம்பிக்கை, துணிச்சல், தைரியம், வீரம், செல்வம், கல்வி, குணம், தானியம், அரிசி, பருப்பு, மஞ்சள் என்று ஒன்று

    முதல் பாடல்?
    அழுவாச்சியா நிறுத்தறியா

    நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
    எதைச் சொல்வது

    தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?
    தமிழ்நாட்டை விட அயல்நாடுகளில் தமிழுணர்வு அதிகம் என்னும் பிரக்ஞை.

    உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)
    50 கிலோவுக்குக் குறைவான தாஜ் மஹல்கள்

    படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
    மீண்டும் படம் எடுத்து பார்வையாளனைப் படுத்துவது

    தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?
    சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தீவிரவாதியாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; தலைவனாவாய்

    சென்னையில் பிடித்த இடம்?
    ஆளுங்கட்சியைப் பொறுத்தது

    கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?
    வியப்பது ஆசையை
    ரசிப்பது சாதுரியத்தை

    வைகோ?
    மதிமுகவில் திமுக கலப்பவர்
    திமுகவில் மதிமுக கலக்காதவர்

    விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?
    நடிப்பது எப்பொழுது என்று தீர்மானித்துக் கொள்வது – திரைப்பட வெற்றி
    நடிக்காதது எப்பொழுது என்று தீர்மானித்துக்கொள்வது – அரசியல் வெற்றி.
    அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

    ராஜா – ரகுமான் ஒப்பிடுங்கள்?
    அவர் தமிழிசைப் பிரியர்;
    இவர் ‘‘அங்ரேஸி லவ்வர்’’

    துதி – காதல் எழுதுவதில் எது பிடிக்கும்?
    காதலில் துதி எழுதப்பிடிக்கும்

    கவிஞர்களில் கூட விரசம்தானே அதிகம் இருக்கிறது?
    பக்தி உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

    ரசிக்கும் வீடியோ..?
    கண்கள் மூடிய முழுஅழுக்கு குளியல்

    இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்…
    ஆண் : தாடி முத்தம் வேண்டுமா;
    தாடி இல்லாத முத்தமா?
    டாடி முத்தம் என்பது பெண்ணே
    நான் உனக்குத் தருவது
    தாடியில்லாத முத்தம் என்றால்
    அம்மா உனக்குத் தருவது (வலைஞரின் கிளிப்பிள்ளைகள்)

    நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் நடுநிலைமை இல்லாதவர்களாக இருக்கிறார்களே ஏன்?
    எனதுப் பிடிமானம் கொள்கைள் அல்ல – கூப்பாடுகள்தான்.

    இன்றைய தலைமுடிக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?
    முடிதிருத்தகத்தில் அதிகம் இருக்கிறேன்.

    உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?
    பணம் கூட மரத்தில் காய்க்கலாம்; அது பேப்பராவதற்கு முன்பே தட்டிப் பறித்தால்.

    சந்திப்பு : திருவேங்கிமலை சரவணன்(னுக்காக பாஸ்டன் பாலாஜி)

    சுஜாதா

    என் இனிய இயந்திரா ::

  • ‘ஜீவாவுக்குப் பகிரங்கக் கடிதம்!

    பொய் வியாபாரியே! வயதானவர்களைக் கொல்ல உனக்கு என்ன உரிமை? தப்பிப் போன கருக்களைக் கலைக்க என்ன உரிமை? அருமையான நூல்களைத் தடை செய்ய என்ன உரிமை? பாட்டையும் கூத்தையும் பண்பாட்டையும் நீக்க உனக்கு என்ன உரிமை? பதில் சொல். உலுத்தனே, டிசம்பர் மூன்று ஞாபகம் இருக்கட்டும்.’

    இவண்,
    ம.தி.க.
    (மக்களாட்சி திரும்ப வரும் கழகம்)

  • “ஃப்ரமோன் அனலைஸர் என்று ஒன்று இருக்கிறது. அது சுமாராக வேலை செய்கிறது!” ஜீனோ மூக்கை மூக்கை உறிஞ்சியது. “என் டிஸைனிலேயே ரொம்ப ‘வீக்’ மூக்குதான். அப்படியிருந்தும் மற்றொரு மிஷினை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த ஆள் ஒரு ஃப்ராடு! இது மனிதனே இல்லை.”
  • “கவலைப் படாதே. ஜீவா கவனித்து விட்டார். ஜீவா நமக்கெல்லாம் பெருந்தலைவர். அவர் கருணையுள்ளவர். அன்புள்ளவர். திறமையுள்ளவர்… ஒவ்வொரு குடிமகனும் அவருக்கு ஒன்றே… ஜீவா வாழ்க!”
  • “ஜீவா ஜீவா ஜீவாதாரம் ஜீவனோபாயம் ஜீவாத்மா” என்றது ஜீனோ.
  • ‘ஜேவ்’ மனிதர்களும் ரோபாட்டுகளும் விளையாடும் ஆட்டம். ‘ ஜேவ்’ என்கிற ஒரு ரோபாட் இயங்கும். அதை மனித கட்சிக்காரர்கள் பிடிக்க வேண்டும். பிடித்துக் கொல்ல வேண்டும். ரோபாட் மிகத் திறமையாக ஓடும். அது யாரையும் எதிர்க்கது. யாருக்கும் துன்பம் கிடையாது. முட்டாது, மோதாது. மைதானத்தின் எல்லையை மீறாது. அதைப் பிடிக்க வேண்டும், அவ்வளவுதான். ஜேவ் ஆடுவதற்கு, பிடிப்போன் – எடுப்போன் – அடிப்போன் என்று தனித் தனி விபாகங்கள் உண்டு. கடைசியில் ரோபாட்டைக் கொல்கிறவனுக்கு வெற்றிச் செல்வன் (வெ.செ.) என்கிற பட்டம் ஜீவாவே கொடுப்பார்.
  • “இன்று, இந்தக் கணத்தில், நான் உங்களுக்குத் தகுதியில்லாத தலைவன் என்று சொல்லுங்கள். உடனே விலகுகிறேன். இன்று இந்தக் கணத்தில் நான் உங்களுக்குத் தீங்கிழைத்து விட்டேன் என்று சொல்லுங்கள். உங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் மார்பைப் பிளந்து கொள்கிறேன். இன்று, இக்கணத்தில் நான் உங்களைக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று சொல்லுங்கள். இதோ, என் காவலனின் லேசர் என்னைத் துளைக்கட்டும்…” – ஜீவா அந்த ஆயுதத்தை வாங்கித் தன் மார்பில் குறி வைத்துக் கொண்டு, “சொல்லுங்கள், நான் தகுதியில்லாதவனா?”

    “இல்லை… இல்லை” என்றன லட்சம் தொண்டைகள்.

  • “உங்கள் எல்லோரையும் ஆண்டது, ஆள்வது ஒரு புகை, ஒரு மாயத்தோற்றம் – ஜீவா!”

  • “இருங்கள்… இருங்கள். முழு உண்மையையும் சொல்லித் தீர்க்கிறேன்” என்று நிலா கதறினாள். “இவள்தான் நம் புதிய தலைவி!” என்ற கூட்டத்தினர், அவளை கவனிக்க விருப்பமின்றி ஆகாயத்தில் வீசப்பட்டாள். கீழே விழுவதற்கு முன் பந்தாகப் பிடிக்கப்பட்டாள்.

  • ‘யார் புரட்சிக்காரர், யார் சர்வாதிகாரி! யார் விடுதலை செய்கிறவர்கள்? யார் விடுவிக்கப் பட்டவர்கள்…? சற்றுமுன் ஜீவாவுக்காகக் கொடி அசைத்தவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்? ஜீவாவை சதிசெய்து கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் எங்கள் மூவரையும் இப்போது உயர்த்துகிறார்கள். இந்த ரவியும் மனோவும் யார்? இவர்கள்தான் சூத்திரதாரிகளா? இல்லை பிண்ணணியில் இதைவிட மகத்தான பொய் முக வடிவங்களா? ஒன்றுமே புரியவில்லையே!’

  • “அந்த நாய் சற்று அபாயகரமான நாய்! சொல்லிக் கொடுத்ததுக்கு மேலாகச் சிந்திக்கத் துவங்கிவிட்டது.”
    “நீ கற்றுக் கொடுத்ததுதான் ரவி.”

  • “என் கண்ணுக்கு முன்னால் வேண்டாம்! தயவு செய்து வேறு எங்கேயாவது கூட்டிப் போய் அதைக் கொல்லி. என் இனிய இயந்திர நண்பன் அது!”
    “ஒரு இயந்திரத்தின் மேல் ஏன் இத்தனை பாசம் என்று தெரியவில்லை.”
  • ‘எத்தனை பெரிய சக்தி இவர்கள்! விஞ்ஞானம், டெக்னாலஜி, பிம்பங்கள், குரல்கள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒருத்தியின் உண்மையான வடிவத்தை முழுவதும் கலைத்துவிட்டு, வேறு குணாதிசயங்களை ஒட்ட வைக்கும் இந்த மகத்தான சக்தியை எப்படி எதிர்ப்பேன்?’

  • “இதை ஏமாற்று என்று சொல்வது தப்பு. நீ மக்கியாவெல்லி படித்திருக்கிறாயா, இல்லை நீட்ஷே?” என்று கேட்டான் ரவி.

  • “சுதந்திரம் என்பதற்கே அர்த்தம் இல்லை. உன்னை சுதந்திரமானவள் என்று சொல்லிக் கொள்கிறாய். உன் புதிய சிந்தனை என்ன என்றுதான் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். எதிலிருந்து சுதந்திரம் என்பதைவிட எதற்காக சுதந்திரம் என்றுதான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்!”

    இன்று காலை பாஸ்டன் செல்லும் ரயிலில் திடீர் சோதனை. மோப்பம் பிடித்துக் கொண்டே நாய்கள் வந்தது. வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு நாயைத் தவிர சிறந்த சாதனம் வேறு எதுவும் இல்லை. முஸ்லீமாக இருந்தால் தீவிர சோதனை; பாதிரியாருக்கு பாதி சோதனை என்று செய்யத் தெரியாது. பைரவரைக் கொண்டே எல்லா இடத்திலும் பாதுகாவல் புரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தபோது. ‘என் இனிய இயந்திரா’/’மீண்டும் ஜீனோ’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!

    தமிழ் | Tamil | அறிவியல்