Category Archives: Uncategorized

Tsunami Relief & Anbumani

பா. ஏகலைவன்:: உலக நாடுகள் பலவும் மூலம் வந்த பணம் ஐம்பத்து ஏழு கோடி ரூபாய் , இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் சென்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய அந்தத் தொகை, கடந்த பதினொரு மாதங்களாக முடக்கப்பட்டே கிடக்கிறது.

அதற்குக் காரணம், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மனாக இருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் என்று குற்றம் சுமத்துகிறார் ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிகையாளரான சுபாஷ் சந்திரன். இப்போது நீதிமன்றக் கதவையும் தட்டத் தயாராகி வரும் அவரிடம் இதுபற்றிப் பேசினோம்.

“சுனாமிப் பேரழிவு ஏற்பட்ட பிறகு, நான் விசாகப்பட்டினம் மச்சினிபட்டினம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றேன். அந்தப் பகுதிகளில் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த ஏராளமானோரைச் சந்தித்தேன். அப்போதுதான் நாகலட்சுமி என்ற முப்பத்தைந்து வயதுப் பெண்மணியைப் பார்த்தேன். புருஷனோடு இரண்டு மகன்களையும் சுனாமிக்கு பறி கொடுத்துவிட்டு அனாதையாக நின்றவருக்கு, ஆந்திர அரசு போதிய நிதியுதவி செய்யாததைச் சொன்னார்.

பல நாட்களுக்குப் பிறகு அதே நாகலட்சுமியை ஐதராபாத் ரயில்வே நிலையத்தில் ஒரு பிச்சைக்காரியாகப் பார்த்தேன். ‘சொந்த ஊரில் யாரும் கண்டுகொள்ளாததால், இங்கு வந்து பிச்சை எடுத்துக் கொண்டே அதிகாரிகளைப் பார்த்து வருகிறேன் . இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் தாங்க முடியும். அதற்குமேல் வாழ முடியாது . தற்கொலை செய்து கொள்வதொன்றுதான் வழி’ என்று கூறி அழுதார். அந்தச் சமயத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு, டெல்லி சென்றுவிட்டேன்.

திரும்ப வந்து நாகலட்சுமியைத் தேடியபோது, அவரைப் பிணவறையில்தான் பார்த்தேன். சொன்னபடியே தற்கொலை செய்து கொண்டுவிட்டார். இந்த அவலத்தைத் தாங்க முடியாமல் ஐதராபாத்திலிருந்த பேரழிவு நிவாரண உதவி ஆணையரைச் சந்தித்தேன்.

அப்போது அவர், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து போதிய நிவாரண உதவித் தொகை வந்து சேரவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார் . அதன்பிறகு டெல்லியிலுள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வந்த நிதி பற்றி ஆராய்ந்தேன்.

  • செஞ்சிலுவைச் சங்க ஃபெடரேஷனிலிருந்து முப்பத்து மூன்று கோடி ,
  • ஹாங்காங் செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பிய ஒன்றரைக் கோடி,
  • கனடா செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து ஐந்து கோடியே ஐம்பது லட்சம்,
  • ஸ்பானிஷ் நாட்டிலிருந்து பத்துக் கோடி ரூபாய். இது தவிர,
  • இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கலெக்ஷன் செய்தது ஏழு கோடி
    என்று மொத்தம் ஐம்பத்து ஏழு கோடி ரூபாய் வந்து சேர்ந்திருக்கிறது.
  • இந்தத் தொகை, குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திராவிற்கு மட்டுமே. அதுவும் சுனாமி நிவாரணத்திற்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். பொதுவாக, இப்படி வரும் நிதியை சுமார் முப்பது நாட்களுக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும்.

    நமது இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் எந்தவிதத்தில் நிவாரணப் பணிகளைச் செயல்படுத்தப் போகிறோம் என்ற விவரத்தையும் நிதி உதவி அளிக்கும் நாடுகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ தெரிவித்துவிட வேண்டும். அப்படி ஏதும் செய்யாததோடு, இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கக் கிளைகளுக்கு அனுப்பி வைப்பதிலும் குளறுபடிதான் நடந்துள்ளது.

    அரசு இயந்திரங்கள் மூலம் செலவிடப்படும்போது தாமதம், மெத்தனம், முறைகேடு…. என்று நடக்க வாய்ப்பிருக்கும் என்றுதான் செஞ்சிலுவைச் சங்கத்தை நாடுகிறார்கள். அதன் பணி விரைவாக இருப்பதோடு நேர்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இப்போது மண் விழுந்துவிட்டது.

    ஆரம்பத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் செகரட்டரி ஜெனரலாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த விமலா ராமலிங்கம் என்பவர். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அந்த இடத்தில் புதிய நபரை நியமித்திருக்க வேண்டும்.

    ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்கு மாறாக, மத்திய அரசு சுகாதாரத் துறையின் மெடிக்கல் அன்ட் ஹெல்த் சர்வீஸின் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் அகர்வால் என்பவரையே. இந்திய செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பை, கூடுதலாகக் கவனிக்கச் செய்திருக்கிறார் அன்புமணி. இந்திய செஞ்சிலுவைச் சங்கம் என்பது, டாக்டர் அன்புமணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் அவரே அதற்கு சேர்மனாக இருப்பதாலும் அப்படிச் செய்துவிட்டார்.

    இதில் நிறைய உள்நோக்கம் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். அகர்வால் என்னவிதமாகச் செயல்பட்டார் என்பதைப் பார்ப்போம்.

    நிவாரண நிதியாக வந்த ஐம்பத்தேழு கோடி ரூபாயை எடுத்து வங்கியில் போட்டார். அடுத்து இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் என்ற ஆணுறை தயாரிக்கும் நிறுவனத்திடம் நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள்.

    அந்த கம்பெனியோ ‘மீனவர்களுக்கான மோட்டார் படகு, வலை, கட்டுமரம் போன்றவற்றை எங்களால் வழங்க முடியாது. இதில் எங்களுக்கு அனுபவம் இல்லை’ என்று எழுதி அனுப்பிவிட்டது.

    ஆனாலும் டாக்டர் அன்புமணியும், அகர்வாலும் சேர்ந்துகொண்டு, ‘நீங்களேதான் செய்ய வேண்டும்’ என, போர்டில் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். ஏன் அந்த வலியுறுத்தல்?

    விசாரித்தபோதுதான் ‘இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உயர் பதவியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் இருக்கிறார். அவரை புரமோட் செய்வதற்காகவும் அவர் மூலம் செயல்படுத்தப்படும்போது , ‘வசதியாக’ச் செய்ய முடியும் என்பதாலும் அப்படிச் செய்திருக்கிறார் ‘ என்ற தகவல் கிடைத்தது!” என்றெல்லாம் விவரித்த சுபாஷ் சந்திரன், தொடர்ந்து பேசினார்…

    “நடந்த இந்தச் சம்பவம் இறந்துபோன பல்லாயிரம் பேருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல; அவமானமும் கூட. ஐயோவென்று அலறி உலகத்தில் எங்கோ இருக்கிற மனிதாபிமானிகள் கொடுக்கும் பணத்தை, இங்கே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தாமலேயே முடக்கி வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்? இதில் ஒடுக்கப்பட்ட சமூகமான மீனவ மற்றும் தலித் சமூகத்திற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டார். இதற்கு முழு பொறுப்பும் அவரே. பதினொரு மாதங்களாக நிதியை முடக்கி வைத்த பொறுப்பும் அவருடையதே. ஏன்? எதற்காகத் தாமதித்தார் என்பதற்கு பகிரங்கமாக மக்களிடம் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இதில் மற்றொரு வேதனை. இந்த நிதியை முடக்கி வைப்பதற்கு முழு முதல் காரணமாக இருந்து உதவியவர் மத்திய சுகாதாரத்துறையின் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் அகர்வால்தான். அப்படிப்பட்ட வரை, வரும் ஒன்றாம்தேதி முதல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கே நிரந்தர செகரட்டரி ஜெனரலாக நியமிக்கப் போகிறாராம் அன்புமணி. இதற்கான கோப்பு இப்போது ஜனாதிபதியிடம் இருக்கிறது .

    ஜனாதிபதி அந்தக் கோப்பில் கையெழுத்துப் போடுவதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்குத் துரோகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிடுமே என்பதுதான் எனது பயம்.

    மற்றொன்றையும் கூறியாக வேண்டும். ஒருவேளை பணிச்சுமை காரணமாக இவ்வளவும் அவர்களுக்குத் தெரியாமல் தான் நடக்கிறதோ என்று நினைத்து உண்மை நிலையை விவரித்து அகர்வாலுக்கும் , அன்புமணிக்கும் கடிதம் மற்றும் புகார் அனுப்பினேன். இன்று வரை ஒரு பதிலும் இல்லை. தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?

    அடுத்து, ஆந்திராவிலுள்ள (மாநில ) செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான அந்த மாநில ஆளுநர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் புகார் அனுப்பினேன். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான அவர், நிலைமையின் விபரீதத்தை அறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதினார்.

    இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசிடெண்ட்டாக இருக்கும் ஜனாதிபதிக்கும் இதுபற்றி புகார் அனுப்பினேன். அதோடு, உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.சி. லகோத்திக்கும் எழுதினேன். மேலும் உலக செஞ்சிலுவைச் சங்கங்கள் கொடுத்த நிதியையெல்லாம் ஏதோவொரு உள்நோக்கம் காரணமாக முடக்கியே வைத்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெனீவாவிலுள்ள உலக செஞ்சிலுவைச் சங்க தலைமையகத்திற்கும் புகார் அனுப்பினேன்.

    அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத் தலைவரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிற்கும் தமிழக கிளைச் செயலாளரான செல்வி பார்க்கவி தேவேந்திராவிற்கும் கடிதம் எழுதினேன். தமிழக செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரிடமிருந்து அந்தவித நிதியுதவி ஏதும் வரவில்லை’ என்று பதில் கடிதம் மட்டும் வந்தது.

    இப்படி எல்லா கதவுகளையும் தட்டிவிட்டேன். கடைசியாகத் தட்ட வேண்டிய கதவு ஒன்று உள்ளது. அது உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குப் போடுவதுதான்! தமிழக மக்களுக்கு தமிழக அமைச்சரே, செய்த துரோகத்தின் உள்நோக்கம் எல்லாம் அப்போது வெளிச்சத்திற்கு வராமலா போய்விடும்?” என்று ஆதங்கத்தோடு முடித்துக் கொண்டார் அவர்.

    தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள தமிழக செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சென்று செயலாளர் பார்க்கவி தேவேந்திராவை சந்தித்து கேட்டோம்.

    “ஆமாம். சுபாஷ் சந்திரன் அனுப்பிய கடிதம் எங்களுக்கு வந்தது . நாங்கள் மத்திய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து பணம் வராததை தெரியப்படுத்தியிருந்தோம். மற்றபடி எதுவும் பேச விரும்பவில்லை” என்றார்.

    தொடர்ந்து நாம் முன்னாள் அலுவலர்கள் சிலரிடம் பேசினோம்.

    மத்திய செஞ்சிலுவைச் சங்கம் நிதி கொடுக்கவில்லையே என்பதற்காக மாநில செஞ்சிலுவைச் சங்கம் கையைக் கட்டிக் கொண்டிருக்க முடியாது. இதன் வேலையே உதவி வாங்கி , பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதுதான். இதுவரை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பத்துக்கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உதவியிருக்கிறது .

    இதில் மற்றொரு வேதனையையும் சுட்டிக்காட்ட வேண்டும். கோகோ கோலா நிறுவனம் ஒரு கோடி ரூபாயை மத்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுத்திருக்கிறது. அந்த நிதியை கன்னியாகுமரி குளச்சல் பகுதி நிவாரணப் பணிக்குச் செலவிட வேண்டும் என்று சொல்லியே கொடுத்தார்கள். அந்தப் பணமும் தமிழகத்திற்கு வரவேயில்லை. ஏதோ நிர்வாகச் சிக்கல் என்கிறார்கள்” என்ற குண்டையும் போகிற போக்கில் தூக்கிப் போடுகின்றனர்.

    இவற்றிற்கெல்லாம் பதில் வேண்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸைத் தொடர்பு கொள்ள முயன்றோம். அவரது உதவியாளர் முத்துக்குமார், “அமைச்சர் ஜதராபாத்தில் இருக்கின்றார். கேட்டுச் சொல்கிறேன் ” என்ற பதிலையே சொன்னார்.

    வெளியான இதழ்: குமுதம் ரிபோர்டர்

    சுந்தர ராமசாமி

  • கலாச்சாரம் அரசியலை பாதிப்பதற்கு பதில் அரசியல் இங்கே கலாச்சாரத்தை பாதிக்கிறது. அரசியல்வாதிகளின் கண்ணோட்டமே வாழ்வின் பொதுக்கண்ணோட்டமாக மாறிவிட்டது.
  • சாகித்ய அகாதமி பரிசு ஒரு சாதாரண சின்ன பரிசு. அதை பெறுவதற்கே இங்கே ஜனாதிபதியின் சிபாரிசு தேவைப்படுகிறது. பரிசு பெற்ற படைப்பாளிகளைக் கேட்கிறேன். துணிச்சல் இருந்தால் வெளியில் வந்து சொல்லுங்கள்… எந்த சிபாரிசும் இல்லாமல் பரிசு பெற்றேனென்று. சிபாரிசால் பரிசு பெறும் எழுத்தாளனுக்கு உண்மையில் ஆத்ம சந்தோஷம் இருக்குமா ?

    நாற்பதாண்டு கால தமிழ் இலக்கிய கலாச்சார வெற்றி தோல்விகளின் சாட்சியாக, தமிழ்ச் சமூகத்தின் தாழ்ச்சியின் மீதோர் தார்மீகக் கோபமும், அதன் எழுச்சியில் தீவிர முனைப்பும், கலைக்கோட்பாடுகள் பற்றிய சில பிடிவாதங்களும் கொண்டவர்.

    கேள்வி: சின்ன வயசிலேயே கம்யூனிஸ்ட் கட்சியை சிநேகித்ததற்கான காரணம் ?

    வாழ்க்கையின் கஷ்டங்கள் என் மனசை பாதித்தது. முக்கியமாக இந்தியாவின் வறுமை. நாங்கள் ஓரளவு வசதியாய் இருந்தாலும் எங்கள் உறவினர்கள் படும் துன்பங்கள் என் இதயத்தை இம்சித்தது. அதோட ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ படித்தேன்.

    அவர் ஒரு கம்யூனிஸ்ட் – அந்த புத்தகம் என்னை பாதித்தது. கம்யூனிஸ தத்துவத்தின் மூலம் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

    கேள்வி: சோசலிச எதார்த்தவாத இலக்கியம் படைக்க முடியும்னு நம்புகிறீர்களா ?

    என்னுடைய ஆரம்ப கால கதைகளே அதற்கு சாட்சி. நான் கலைநயத்தை காப்பாற்றிக் கொண்டே முற்போக்கான கருத்துக்களை எழுதிவந்துள்ளேன். அதில் வெற்றியும் பெற்றேன்னு நினைக்கிறேன். எனக்கு கலைநயம் மிகவும் முக்கியம். நீங்க எந்த விஷயத்தை முன்வைத்தாலும் கூட அதில் மனிதனோட மனசை ஈர்க்கிற சக்தி இருந்தாத்தான் அது சமூகத்தை பதிக்கும். நான் கலை அம்சத்தை வற்புறுத்தக் காரணமே கலை சமூகத்தை பாதிக்கணும்ங்கறதாலதான்.

    எப்பவுமே கலை இலக்கியம் மனிதனை பாதிக்கக் கூடியதாகத்தான் இருக்கணும்ங்கறது என் நம்பிக்கை. முற்போக்கான கருத்துக்கள் இருந்தும் கூட ஒரு நாவல் சரியான நாவல் இல்லைன்னு ஏன் சொல்றேன்னா முற்போக்கான கருத்துக்களால் பாதிக்கக் கூடிய சக்தி அந்த நாவலுக்கு இல்லை. அது கலைநயத்தோடு சொல்லப்படலை. அது போய்ச் சேராது.

    கேள்வி: நீங்கள் மார்க்சிய விரோதியா ?

    மார்க்ஸின் சிந்தனைகளை நான் ஒப்புக் கொள்கிறேன். அதில் சந்தேகமே கிடையாது. ஒரு பகுதி முக்கியமாக மார்க்ஸ் செய்த எல்லாக் காரியங்களும் ஐரோப்பிய பின்னணியில், அதுவும் 19- ம் நூற்றாண்டில் இறுதியில் செய்யப்பட்டவை. அதில் கணிசமான ஒரு பகுதி இன்றும் நமக்கு உபயோகமாக இருக்கும் . ஆனால், அதற்கு மேலாக வேறொரு விதமான கலாச்சார பின்னணியும், மனோபாவங்களும், மத நம்பிக்கைகளும் கொண்ட நம்முடைய மக்களுக்கு ஏற்புடையதான கருத்துக்களைக் கொண்டு போகும் அளவுக்கு மார்க்ஸீயத்தை வளர்த்தெடுக்கவில்லை.

    நீங்க ஒரு கம்யூனிஸ்டா என்று கேட்கும்போது நீங்க தத்துவத்தை சேர்ந்த ஆளா கட்சியைச் சார்ந்த ஆளா என்பது முக்கியமான விஷயம். நீங்க ஒரு எழுத்தாளன்னு சொன்னா கட்சி எடுக்கிற ஒவ்வொரு நிலையும் ஆதரிக்கணும்கிற கட்டாயம் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்க சிறப்பான விஷயங்களை உருவாக்க முடியாது. அரசியல்ரீதியாக பல்வேறுபட்ட காரணங்களுக்காக கட்சி பல்வேறுபட்ட நிலை எடுக்கும். அதெல்லாம் எழுத்தாளர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நான் கம்யூனிசத்தை விமரிசிக்கக் கூடிய எல்லா சந்தர்ப்பத்திலேயும் கட்சியினுடைய போக்கைத்தான் விமரிசிக்கிறேன்.

    இப்ப 1977-இல் இருந்து 1990 வரையிலும் சோவியத்துல நடந்த எல்லா விஷயங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிச்சு வந்திருக்கு. இதை நான் எதிர்க்கிறேன். நான் மட்டும் எதுக்கலே . சோவியத்துல உள்ள தலைமைப் பீடமே எதுக்குது. இன்னிக்கு சோவியத் தலைமைப் பீடம் ஒரு முற்போக்கான நடவடிக்கையை எடுக்குதுன்னா இதுக்குமுன்னே உலகத்தை சேர்ந்த பல எழுத்தாளர்களும் நானும் எடுத்திருக்கோம். நேற்று நாங்க சொன்ன விமரிசனங்களுக்காக எங்களை முத்திரை குத்துவது, இந்த விமரிசனங்களை கட்சித் தலைமையிலிருந்து ஒருவன் உருவாக்கக் கூடிய சந்தர்ப்பத்துல அவனைப் பரிபூரணமா ஏற்றுக் கொள்வது அவனைப் பரிபூரணமா ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையிலும் எங்களைத் திரும்பவும் விமரிசனம் பண்ணுவது – இதை எந்த விதமான கருத்துலக நாகரிகத்துல சேர்த்துக் கொள்வீங்க? உலகத்துல ஸ்டாலினை விமரிசனம் செய்தவர்கள் எல்லாம் பிற்போக்குவாதின்னு சொன்னா கோர்பசேவ் பிற்போக்குவாதிதான்.

    நன்றி : சுபமங்களா – இதழ் #6


    சுய அறிமுகம் – சில சிதறல்கள்

  • நான் 1931இல் பிறந்தேன். பள்ளிப் படிப்பு என்று சொல்லும்படி எனக்கு ஒன்றும் இல்லை. பள்ளிக்கு சென்ற குறைந்த காலத்தில் என் மனம் வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே தாவித் தன் போக்கில் அலைந்து கொண்டிருந்தது. என் புத்தகங்களைப் படிக்கும்போது நான் ஏதேனும் கற்றுக் கொண்டிருப்பதாக வாசகர்களுக்குத் தோன்றினால் அவை என் சுய முயற்சியில் அறிந்து கொண்டவைதான்.
  • சுயமாகக் கற்க புத்தகங்களைத் தேடிக் கொண்டு போகிறேன். கிடைக்கும் புத்தகங்களிலிருந்து எனக்கு விருப்பமானவற்றைத் தேர்வு செய்கிறேன். என் சுதந்திரத்திற்குள் நிற்கும் தேடலும் தேர்வும். என் விருப்பம் போல் படிக்கிறேன். படிக்காமலும் இருக்கிறேன். பாதி படித்த நிலையில் அலுப்பு மேலிட நிறுத்திக் கொள்ளவும் செய்கிறேன். மனதில் தோன்றும் மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்கிறேன். அவற்றை நண்பர்களுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஆசிரியர்களிக் குறுக்கீடு அற்ற வாசிப்பின் மூலம்தான் ஆளுமையை ஓரளவேனும் வளர்த்துக் கொள்ள முடிந்தது என்று நம்புகிறேன்.
  • நான் அறிஞர்களின் வரிசையில் ஒருவன் அல்ல. அறிஞர்களின் முக்கியமான குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம்.
  • என் கருத்துக்களை முன்வைக்கும்போது அவை உருவாக்கும் எதிர்வினைகள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எதிர்நிலைகள் மீதும் கவனம் உண்டு.
  • பதினெட்டு வயதுவாக்கில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டேன். இருபது வயதுவாக்கில் என் முதல் கதையை எழுதினேன் . தகழி சிவசங்கர பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ நாவலை மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்தேன். அதை ஒரு சாகஸம் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு முன்னர் நான் அரைபக்கம் கூட மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்தது இல்லை. என் திறமையைப் பற்றி யோசித்திருந்தால் அந்தப் புத்தகத்தின் பக்கமே போகத் துணிந்திருக்க மாட்டேன். இளமையின் சாகஸம் ! எதிலேனும் ஏறி விழுந்து தன்னை இனங்கொண்டுகொள்ள வேண்டும் என்ற துடிப்பு.
  • நான் சமத்துவத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவன். வாழ்வின் குறிக்கோளைத் தீர்மானிக்கும் இவ்விரு அடிப்படைகளிலும் நம்பிக்கையற்ற ஒரு மனம் சிந்தனைகளை ஆழப்படுத்திக் கொள்வது சாத்தியம் என்று நான் நம்பவில்லை. சமத்துவம், ஜனநாயகம், மனித நேயம் உட்பட வாழ்வை மேலெடுத்துக் செல்லப் பயன்படும் சகல தத்துவங்களையும் அவற்றின் சாராம்சங்களிலிருந்து பிரித்து அடையாளங்களிலிருந்து மாற்றும்போது அவற்றின் அர்த்தங்களையே நாம் இழந்துவிடுகிறோம். தமிழ்ச் சூழல் சாரங்களில் சக்கைகளிலிருந்து அடையாளங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சாரங்களை இனங்காணவோ வறுமைப்படுத்தவோ மறு பரிசீலனை செய்யவோ உதறவோ திராணியற்று அடையாளங்கள் சார்ந்து ஏமாறும் குணம்தான் இன்று நம் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

    விண்நாயகன், 1999 டிச. 1-15 & டிச. 16-31

    நன்றி: ஆளுமைகள், மதிப்பீடுகள் – காலச்சுவடு பதிப்பகம்


    குறிப்பு

    சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் 1931இல் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டியின் மக ‘னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம்பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988 இல் காலச்சுவடு இதழைத் தொடங்கி எட்டு இதழ்களையும் ஒரு ஆண்டு மலரையும் வெளியிட்டார்.

    சுந்தர ராமசாமிக்கு டொரொண்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியுள்ளது.

    வாழ்நாள் இலக்கியப் பணிக்காக ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றுள்ளார்.

    மனைவி : கமலா

    குழந்தைகள் : தைலா, கண்ணன் , தங்கு.

    நாவல்கள்:
    ஒரு புளியமரத்தின் கதை (1966)
    ஜே.ஜே.: சில குறிப்புகள் (1981)
    குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)

    சிறுகதைகள்
    காகங்கள் (2000)
    மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் (2004)

    கவிதை
    107 கவிதைகள் (1996)

    விமர்சனம்
    ந பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும் (1991)
    காற்றில் கலந்த பேரோசை (1998)
    விரிவும் ஆழமும் தேடி (1998)
    இறந்த காலம் பெற்ற உயிர் (2003)

    மொழி பெயர்ப்பு
    செம்மீன் (1962)
    தோட்டியின் மகன்
    தொலைவிலிருக்கும் கவிதைகள் (2004)

    நினைவுக் குறிப்புகள்
    ஜீவா (2003)
    கிருஷ்ணன் நம்பி (2003)
    க.நா.சு . (2003)
    சி.சு. செல்லப்பா (2003)

    பிற
    தமிழகத்தில் கல்வி: வே. வசந்தி தேவியுடன் ஓர் உரையாடல் (2000)
    இவை என் உரைகள் (2003)
    இதம் தந்த வரிகள்(2002) – கு அழகிரிசாமி – சு .ரா. கடிதங்கள்
    வாழ்க சந்தேகங்கள் (2004)
    வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)

  • சந்திரமுகி விழா

    நிறைய சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்கள். மாமாவை ‘சார்’ போட்டு
    அழைக்கும் மாப்பிள்ளை தனுஷ், ரசிகர் மன்ற உறுப்பினர் ‘இளைய தளபதி’ விஜய்,
    முடி நரைக்காத ‘சிவாஜி’ தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், சூப்பர் ஸ்டாரை
    மட்டும் புகழ்ந்த சபையில் ஜோதிகாவையும் மனமுவந்து பாராட்டிய ‘சிவாஜி’
    இயக்குநர் சங்கர் என்று odd men-கள் நிறைந்த சபை. பாபா தோல்வியை even
    செய்யும் சந்திரமுகி வெற்றி விழா.

    கஸ்தூரிராஜாவைப் பார்த்தால் செல்வராகவனின் தம்பிதானே என்று சொல்ல
    வைக்கிறார். விஜயகுமாரின் பேரன், மெரீனா பீச்சில்
    ஒன்றுக்கிருக்கும்போதும் ‘வேட்டையனை’ நினைவு கூர்வதை மேஜிகல்
    ரியலிஸ்மாக்கலாம். மேடையில் இருந்த ஒரே பெண்மணி நயந்தாராவுக்கு மைக்
    கொடுக்கப்படவில்லை.

    சன் டிவியில் காட்டப்பட்ட ‘சந்திரமுகி உருவான கதை’ நல்ல முறையில்
    தொகுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலப் புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட
    பூனைகளான ‘தி மேகிங் ஆஃப் கிஸ்னா’, ‘ஸ்வதேஷ் பின்னணி’ என்றெல்லாம்
    பார்த்து நொந்து போயிருந்த, கண்ணாடிகளுக்கு பதமாக இருந்தது. நச்
    எடிட்டிங். ‘கங்கா’வாகாவே பி. வாசு மாறுகிறார். அடுத்த விநாடி சரவணனாக
    ரஜினிக்குப் பாடம். சீன் முடிந்தவுடன் மானிட்டரில், உடனடியாக எதிர்வினை.
    வெற்றிகரமான இயக்குநராவது சாதாரணமான விஷயமல்ல.

    சந்திரமுகியின் படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் பிறிதொரு பேட்டியில்
    தன்னுடைய அனுபவங்களை சொன்னார். முதலில் இவர் எடிட்டிங் செய்வதாக இல்லை.
    நடுவில்தான் பெங்களூரில் திடீர் நேர்முகம்; பின் தேர்வு. Batch
    process-ஆக படங்கள் சுடப்பட்டு, இவரிடம் வந்து கொண்டேயிருக்க, சுரேஷ்
    தொகுத்துக் கொண்டேயிருப்பார். Hands off-ஆக இயக்குநர் விடுவது அர்ஸின்
    நம்பகத்தன்மையை சுட்டி பொறுப்பை அதிகரித்திருக்கும். ‘சரஸகு ரரா’ பாடலில்
    முதல் ஃப்ரேம் ‘குஷால்தாஸ் பவன்’. மூன்றாவது ஃப்ரேம் ‘பெங்களூர் மாளிகை.
    ‘ பத்தாவது ஃப்ரேம் ‘ராமோஜிராப் ஃபிலிம் சிட்டி’. ‘இருபதாவது அடி ‘மைசூர்
    மாளிகை’. சுரேஷ்-அர்ஸ் படத்தின் மிகப் பெரிய பலம்.

    தோட்டா தரணி படத்தின் இன்னொரு பலம். ‘அண்ணனோட பாட்டின்’ பிருமாண்டமான
    வளர்ப்பு மகன் திருமண செட் ஆகட்டும்; சந்திரமுகி அரண்மணை; அறைகள் என்று
    பார்த்து பார்த்து மினுக்கியிருக்கிறார்.

    ‘ஜெயம்’ ரவி வரவில்லை. சிம்புவுக்கு அழைப்பிதழ் வரவில்லையே என்று இன்னும்
    புலம்பவில்லை. வரி ஏய்ப்பு நலனுக்காக மத்திய மந்திரி தாசரி நாராயண
    ராவும், பினாமி நலன்களுக்காக ராவ் பகதூரும் ஆஜர்.

    ரஜினியின் பேச்சு இந்தப் பதிவை ஒத்து ஜெர்க் தாவல்கள் கொண்டிருந்தது.

    ‘இந்த தாடியை ஏன் சார் வச்சிருக்கீங்க? அது என்ன உங்களுக்கு ஆளுமையோ
    பலத்தையோக் கொடுக்குதான்னு கேக்கிறாங்க. எனக்கு தாடி ஒரு தன்னம்பிக்கைய
    கொடுக்கிறதா தோணுது. சின்ன வயசில இருந்தே தாடி மேல எனக்கொரு பிரேமை. இப்ப
    வசீகரமா இருக்கிறதா நெனச்சுண்டு வச்சுக்கிறேன். ‘அது அப்படி இல்ல’ என்று
    கட்டுடைக்கிறதும் பகுத்தறிவு மூலமா தெளிவு கற்பிக்கறதும் வேணாம். என்னை
    விட்டுடங்க்ளேன்ப்பா. எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து உட்பொருள் காணுவதால்
    என்ன பயன். சில விஷயங்கள் சந்தோஷமா இருந்தா அப்படியே விட்டுடணும்’

    அப்புறம் ஜெயலலிதா பாணியில் குட்டிக்கதை ஒன்று சொன்னார். கடத்தப்பட்ட
    விமானமாய் டாபிக் மாறினார். ‘பாபா’ படத்தின் தோல்வியையும் பாபாவையும்
    வம்புக்கிழுத்ததை ‘சோதனை இருந்தால்தானே சாதனை’ என்னும் ஆன்மிகப்
    பார்வையில் விளக்கினார். தெலுங்கு சந்திரமுகியின் பிரச்சாரத்தை செய்த
    தாசரிக்கும், கண்ணுருட்டல் ஜோதிகாவுக்கும், நன்றி நவின்றார்.

    நன்றி நெடுஞ்சாண் வீழ்வதில் பிரபுவை விஞ்ச முடியாது. சிவாஜிக்கு அப்புறம்
    இந்த ‘சிவாஜி’தான் என்றபோது வசூல்ராஜாவுக்கு பில்லியன்கள் கிடைக்காததை
    மட்டுமே எண்ணி சொன்னதாக கொள்ளலாம்.

    இணையப்பதிவர்களில் ரஜினி ராம்கி போயிருந்தாரா என்று கேட்க வேண்டும்.

    Booker Prize Nominated candidates’ reviews 

    Booker Prize Nominated candidates’ reviews Posted by Picasa

    Ettu kai arakkan 

    Ettu kai arakkan Posted by Picasa

    Model Robot Lady 

    Model Robot Lady Posted by Picasa

    Fly in the Bathroom 

    Fly in the Bathroom Posted by Picasa

    உன்னதம்

    கௌதம சித்தார்த்தனை ஆசிரியராகக் கொண்டு ‘உன்னதம்’ வெளிவருகிறது. எளிமையான வடிவம். ஆசிரியரின் சிறுகதைகள். நிறைய கவிதைகள்.

    எனக்குப் பிடித்த பகுதிகளாக மூன்று இருந்தது:

    1. ‘மாதங்கன்’ எழுதிய புத்தக மதிப்புரை. அ.மார்க்ஸ் எழுதிய ‘புத்தம் சரணம்’ தொகுப்புக்கு அறிமுகம்.

    ‘ஆன்மாவே நிலையான ஒளியாகும் என வலியுறுத்தும் வேத/உபநிடத சிந்தனைகளுக்கு எதிராக ‘நீயே உன் கைவிளக்கு’ என மாற்றுச் சிந்தனையை பௌத்தம் வழங்கியது. சித்தார்த்தர் தான் புத்தராக உருபெற்றதை பிரம்மத்தில் கரைந்து அமைதியாதல் என்கிற பிராமண மதக் கோட்பாட்டிற்கு நேர்மாறாக ‘எழுச்சிபெறுதல்’ – விழிப்படைதல் எனப் பகர்கிறார். சித்தார்த்தன் துறவுநிலை மேற்கொண்டதற்கு பல்வேறு புனைவுகள் காராணமாக்கப் பட்டுள்ள இலையில், ரோகினி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் சாக்கியர்க்கும் கோலியகுலத்தோர்க்குமிடையே உருவாகவிருந்த போரைத் தடுப்பதற்காகவே சித்தார்த்தர் துறவுபூண முடிவு செய்தார் என்று அம்பேத்காரின் கூற்றிலிருந்து அ.மா. முன்வைக்கும் பகுத்தற்வு சார்ந்த காரணம் கவனத்திற்குரியது.’

    2. விக்ரமாதித்தக் கவிஞனுக்கு யதார்த்த வேதாளம் சொன்ன கதைகள்

    ‘எதிர்வரும் அக்டோபர் மாதம் குற்றாலத்தில் தமிழ் இலக்கிய உலகின் புகழ்பெற்ற கவிதைப் பட்டறை நடக்க இருக்கிறது என்ற செய்தியை அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். அக்டோபர் 1988ல் நடந்த இப்பதிவுகள் ஏழு வருடம் கழித்து இப்போது நடக்கப் போகிறது என்பது மிகவும் முக்கியமான அம்சம். இந்தக் கருத்தரங்கில்தான் எவ்வளவோ நவீன விசயங்கள் அறிமுகமாயின. விமர்சகத் திலகங்களின் புகழ்பெற்ற அடிதடிகளும், சிலம்பாட்டங்களும் நடந்தேறினாலும், சிந்தனைக்கு விருந்தும் இங்கேதான் திகட்டத் திகட்டக் கிடைக்கும்.

    அந்தப் பட்டறையில் நடந்த நிகழ்வுகளை வைத்து அப்போது எழுதிய parody இது.’

    3. ‘யாத்திரை’ – முத்துமகரந்தன்

    சென்ற இதழில் சோ தர்மனின் ‘கூகை’ நாவலில் இருந்து ஒரு முக்கியமான பகுதி வெளி வந்திருந்தது. இந்த இதழில் அய்யப்ப மலை பயணத்தின் பகுதிகளை விவரிக்கும் பகுதி. வெளிவர இருக்கும் இந்த நாவல், சுலபமான நடையில் அமைந்திருக்கிறது. அலங்காரம் இல்லாத யதார்த்தத்தில் சாமிமார்களின் சம்பவங்களை உள்ளது உள்ளபடியே சுவாரசியமாக சொல்லியிருந்தார்.

    இது தவிர உதயசங்கரின் ‘கண்ணாடிச் சுவர்கள்’, கால பைரவனின் ‘புலிப்பானி ஜோதிடர்’, ஆர் பி ராஜநாயஹம் எழுதிய மகுடேஸ்வரனின் ‘காமக் கடும்புனல்’ கவிதை புத்தக விமர்சனம், தொ பரமசிவனின் பண்பாட்டு வாழ்வியல் பத்தி, நானாவதி அறிக்கை குறித்து ரவிக்குமர் ஆகியவையும் பதிப்பித்திருக்கிறார்கள்.

    குஷ்வந்த சிங், பியூசிஎல், தார்குண்டே, ழாக் தெரிதா என்று பலவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘நவம்பர் கலவர’த்தையும் தமிழகப் பின்னணிகளையும் சுருக்கமாக கொடுக்கும் ரவிக்குமாரின் கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று.

    கொசுறு மேற்கோள்கள்:

    அ) ‘இந்தப் படுகொலைகளைப் பற்றிப் பேசுவது இந்துத்துவ ஆதரவாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் நமது மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் சீக்கியர்களைக் கைகழுவினர். இதுதான் இங்கே பேசப்படுகிற ‘கம்யூனிஸ்ட் ப்ராண்ட் மதச் சார்பின்மையின்’ நகைமுரணாகும். – ரவிக்குமார்

    ஆ) விக்ரமாதித்யன் – தில்லாலங்கிடி கவிதைகள்

    அனுபவங்கள் கவிதையாகின்றன
    உணர்வுகள் கவிதையாகின்றன
    வார்த்தைகள் கவிதையாகின்றன
    புனைவுகள் கவிதையாகின்றன
    என்னென்னவெல்லாமோ
    கவிதையாகின்றன

    நிற்கத்தான் வேண்டும் கதவு
    கிடக்கத்தான் வேண்டும் கட்டில்
    இருக்கத்தான் வேண்டும் அடுப்பு
    தொங்கத்தான் வேண்டும் கயிறு
    நானூறு பேருக்குள்தான்
    நவீன இலக்கியம்

    துண்டு போடுகிறவர்கள்
    துண்டு போடுகிறார்கள்
    முண்டாசு கட்டுகிறவர்கள்
    முண்டாசு கட்டுகிறார்கள்
    இடைக்கிடை அப்போதைக்கப்போது
    எல்லாமும் மாறுகிறது.

    இ) சட்டத்தைக் கட்டுடைப்பு செய்வதற்கு மேம்படுத்துவதற்கு தூண்டுதலை, ஊக்கத்தை, நம்மிடம் உண்டாக்குவதுதான் நீதி – ழாக் தெரிதா

    தொடர்புக்கு:
    தொலைபேசி: 04256. 243 125
    செல்பேசி: 944.322.4945

    அவுரங்கசீப்

    முன்னுமொரு காலத்தில் நான் ஒரு கதை கேட்டேன்: “நடந்த கதை. அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அதை விட புகழ்பெற்ற பத்திரிகையாளர். அவர் ஒருக்கா ரயில்ல மெட்ராஸ்லேர்ந்து தூத்துக்குடி வரைக்கும் செகண்ட் க்ளாஸ்ல போனாராம். பக்கத்து சீட் ஆசாமி கையில மேற்படி எழுத்தாளரோட புஸ்தகம் ஒண்ணு இருந்தது. பார்ட்டி படு சுவாரசியமா படிச்சிட்டு வருது.

    நம்மாளுக்கு அவன் முடிச்சதும் என்ன மாதிரி முகபாவம் காட்டப்போறான்னு ஒரு இது. வண்டி முக்கா தூரம் கடந்ததும் படிச்சி முடிச்சவன், இவராண்ட, “பார்த்துக்கிட்டே வர்ரீங்களே, வேணுமா?”ன்னு கேட்டிருக்கான்.

    அதுக்கு அவர் ‘நீங்க படிச்சீங்களே, எப்படி இருக்கு’ன்னு கேட்டாரு.

    வந்த பதில்: “இவன் கதையை விட இவன் பத்திரிகை ரொம்ப நல்லா இருக்கும்”

    ஆசிரியர் தாந்தான் அந்த இவன் என்று முன்னமேயே சொல்லியிருந்தா அந்த உண்மையான, ராவான, பாமர உள்ளக் கருத்து வந்திருக்குமா?

    புரிஞ்சிருக்கும். அந்த மனிதர் பேர் எஸ்.ஏ.பி. அந்த புஸ்தகம் “காதலெனும் ஏணியிலே”

    இப்படியொரு அறிமுகத்துடன் வந்தாலும், ‘அவுரங்கசீப்’ என்னும் லட்சணமான பெயரை பா ராகவன் என்று வெளிப்படுத்திக் கொண்டதால்தான், இணையத்து வாசகர்களின் உரிமையான இடித்துரைத்தல்களையும் schadenfruede அறிக்கைகளையும் பெற்று வருகிறார்.

    இன்னசண்ட் எரிந்த்ரா, பெரியாத்தா கருமாதி, எம்.டி. ராமனாதன் குரலில் பாட்டு கேட்பது போன்ற குந்தர் அண்ணனின் டின் ட்ரம் என்று பட்டியல்களும், விவரிப்புகளும், அனுபவங்களும் பகிர்வதைப் படித்தால் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகள் விளங்கியது.

    ‘புத்தகப்புழு’வில் பதினெட்டே முக்கால் மறுமொழிகளும் ராயர் காபி கிளப்பில் அறிமுகமும் கிடைத்த தைரியத்தில் ‘பாரா’வை சந்திக்க அழைத்தேன். தொய்வில்லாத பேச்சு. ‘ஏதாவது எழுதுங்க’ என்ன்னும் ஊக்குவிப்பு. வெங்கடேஷுடன் மறுதலிக்கும் கருத்துக்களில் வெளிப்படையான விவாதிப்பு. வலைப்பதிவுகளை நோட்டம் விட்டுக் கொண்டே அலுவலக server-இல் யாராவது ஊடுருவுகிறாளா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பது போல் மாலை நேரத்தில் நண்பர்களின் உரையாடலுக்கு நடுநடுவே பதிப்பகத்தின் முதல் ப்ரிண்டுகளையும், அலுவலக வேலைகளையும் தவறாமல் கவனித்தல்.

    அர்ஜுனன் அம்பை எடுத்ததுதான் தெரியும்; பாரா பான் பராக் ஜர்தாவை எடுப்பதுதான் தெரியும். பல லட்சம் மக்கள் படிக்கும் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோதும் எளிதாக சந்திக்க முடிந்தது. பத்திரிகைகளுக்கும் ஒப்புக்கொண்ட தொடர்களூம் எழுதவே நேரமில்லாத போதும், பதிப்பாசிரியராக திட்டமிட்ட புத்தகங்களும் எழுதியவர்களும் நெருக்குதல்களுக்கிடையேயும் ஜெயா டிவியில் கெட்டிமேளம் கொட்டுவதற்கு நடுவிலும் நண்பர்களூடன் உரையாடுகிற சந்தோஷத்துக்காகவே பல முறை தொடர்ந்து சந்திக்க வரவழத்தவர்.

    கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, கோவை மண்டல இருளர் ஆதிவாசி சமூகத்தினரை குறித்த ஓர் ஆய்வைச் செய்துவருவதாக சொல்லியிருந்தார். அக்டோபர் எட்டு பிறந்த நாளுக்கு, எப்பொழுது எனக்கு முடிகிறதோ அப்பொழுது தொலைபேசும்போது, அது ஃபிலிம் டிவிஷனுக்கான டாக்குமெண்டரி ஆகிவிட்டதா என்று விசாரிக்க வேண்டும்.

    ஒரு வித்தியாசமான பேட்டி | கிழக்கு பதிப்பகம் – பா. ராகவன் | Tamiloviam Tamil Ebooks | அலகிலா விளையாட்டு – நாகரத்தினம் க்ருஷ்ணா | மெல்லினம் – பாஸ்டன் பாலாஜி

    பாரா எழுத்தில் சேமித்ததில் சில…..

  • ஆரம்ப எழுத்தாளர்கள் கற்கவும் சந்தேகம் தீர்க்கவும் புதிய விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ளவும் இணையம் மிகச் சிறந்த கருவியாகச் செயல்படமுடியும். ஒரு உதாரணத்துக்கு இரண்டுபேரை மட்டும் சொல்கிறேன். மாலன், இரா. முருகன் போன்ற மிகச் சிறந்த படைப்பாளிகள் குழுக்களுக்கு வருகை தந்து / நடத்தித் தந்து உதவும் அற்புதமான காலகட்டமாக இது இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்? இணைய எழுத்தாளர்களில் எத்தனைபேருக்குத் தெரியும்? மாலன் மாதிரி ஒரு ஆசிரியர் வெகு அபூர்வம். அவரிடமிருந்து பயின்று பூத்தவர்கள் தான் இந்தத் தலைமுறை தமிழ்ப் பத்திரிகைத் துறையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர் அடையாளம் காட்டிய எந்த இடத்திலும் ஊற்று பீறிடாமல் இருந்ததில்லை.
  • மேஜிக்கல் ரியலிசம் என்கிற இலக்கிய உத்தியை ஒரு பூச்சாண்டி மாதிரி பயன்படுத்திக்கொண்டிருந்த தமிழ் எழுத்துலகுக்கு முதல்முறையாக அந்த உத்தியை அதன் அதிகபட்ச எளிமையுடன் அறிமுகப்படுத்தியவர் முருகன். சிறுகதைகளில் அவரடைந்த உயரங்கள் மிக அதிகம். ஆனால் யாராவது ஒருத்தர்? ஒருத்தராவது படைப்பின் சூட்சுமங்கள் குறித்து அவருடன் விவாதித்திருக்கிறார்களா? சந்தேகம் கேட்டிருக்கிறார்களா? கலந்துரையாடியிருக்கிறார்களா?
  • சாப்பிட்டுப் பல்குத்திக்கொண்டு என்னவாவது எழுதலாமா என்று யோசிக்கிற பார்ட்டைம் எழுத்தாளர்கள் வேறு. எழுத்தைத் தவிர வேறெதையும் எப்போதும் நினைக்கத் தெரியாத எழுத்தாளர்கள் வேறு.
  • ஊடகங்களை மாற்றிப் பார்க்கிறேன். உள்மனசு மாறவில்லை. எழுதுகிற ஒவ்வொரு சொல்லும் உயிரைத் தின்றுகொண்டுதான் இருக்கிறது. சாகாத எழுத்து சாத்தியமா என்கிற முயற்சியில் சாகும்வரை எழுதிக்கொண்டிருக்க நிச்சயித்திருக்கிறேன்.
  • தயவுசெய்து உங்கள் உடைந்த ஸ்கேலை என் பக்கத்தில் வைத்து அளந்துபார்க்காதீர்கள்.

    பாராவின் ‘அலகில்லா விளையாட்டு’ உபயம்:

  • அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.
  • உணர்ச்சி மிகுந்தால் அழுகை வருகிறது. கோபம் வருகிறது. சிரிப்பு வருகிறது. அறிவு மிகுந்தால் அமைதி வருகிறது. புத்தி விழித்துக்கொண்டு நாலையும் யோசித்துத் தெளிவு பெறுகிறது.
  • கூடியவரை நல்லது செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டியது தான். நமக்கே செய்துகொண்டாலும் நல்லது நல்லது தான்.
  • ஆனால் லட்சியம் உள்ளவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடிவிடுகிறதா என்ன?
  • More SMS Stuff from Vikatan 

    More SMS Stuff from Vikatan Posted by Picasa