Monthly Archives: ஜனவரி 2015

12 Years a Slave and Ferguson

பன்னிரெண்டு வருடங்களாக அடிமையாக வாழ்ந்த தன்னுடைய சொந்தக் கதையை சாலமன் நார்த்ரப் (Solomon Northup) சுயசரிதையாக எழுதியிருக்கிறார். பதினெட்டு வயது வரை கருப்பராக வளர்ந்த கதையை மைக்கேல் பிரவுன் எழுதவில்லை. அதற்குள் சுடப்பட்டு செத்துவிட்டார். முன்னது “12 Years a Slave” — என திரைப்படமாக வெளிவந்து ஆஸ்கார் விருது கூட வென்றிருக்கிறது. பெர்குசன் நகரத்தில் தெருவில் நடந்த குற்றத்திற்காக கொல்லப்பட்ட மைக்கேல் பிரவுனின் அகால மரணத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை செய்தித்தாள்களில் படிக்கிறோம்; தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இன்றும் மனதைப் பிசைகிறது.

கதாநாயகன் சாலமனின் கண்காணிப்பாளராக டிபீட்ஸ் (Tibeats) இருக்கிறான். சாலமனுக்கும் டிபீட்ஸுக்கும் பொதுவான மேற்பார்வையாளராக இன்னொருவர் உண்டு. சாலமனுக்கு வயது நாற்பதுகளில் இருக்கலாம். டிபீட்ஸ்க்கு இருபது கூட ஆகியிருக்காது. சாலமன் கருப்பர். டிபீட்ஸ் வெள்ளை. சிரத்தையாக பல மணி நேரம் வெயிலில் உழைத்து சாலமன் செய்து முடித்த மரவேலையை சின்னாபின்னமாக்கி விடுகிறான் டிபீட்ஸ். அந்த ஆத்திரத்தில் தன்னுடைய அதிகாரியை நோக்கி கையை நீட்டி விடுகிறார் சாலமன்.

டிபீட்ஸிற்கு ஆத்திரம் பொங்குகிறது. ‘கருப்பு நீக்ரோ நாய்! எப்படி எதிர்த்து பேசுவாய்!’ என கருவிக் கொண்டு, நாலைந்து பேரோடு திரும்பி வருகிறான். சாலமனை கழுவில் ஏற்றுகிறான். அதைப் பார்த்த சாலமனின் மேற்பாற்வையாளர் உடனே விரைந்தேறி வந்து, தன்னுடைய முதலாளியின் சொத்து பறிபோகாமல் இருப்பதற்காக சாலமனின் உயிரை மீட்கிறான்.

அதாவது கழுத்தில் சுருக்கு நெருக்குகிறது. கால்களோ மண் தரையில் உழலுகிறது. பாதம் தரையில் படாமல் விந்தி விந்தித் தரையைத் தொடுகிறார் சாலமன். சாலமனின் தாம்புக்கயிறை அவிழ்ப்பதற்கு, மேற்பார்வையாளனுக்கு உரிமையில்லை. சாலமனின் கழுத்தில் தொங்கும் தூக்குக் கயிறை நீக்குவதற்கு முதலாளி வர வேண்டும். அது வரை குற்றுயிராய் இருக்கும் சாலமன் தன்னுடைய மூச்சைத் தக்கவைத்துக் கொள்ள குதியங்காலில் நின்று எட்டு மணி நேரம் போராட வேண்டும்.

அவனைச் சுற்றி உலகம் எப்பொழுதும் போலவே இயங்குகிறது. திரையில் அந்தக் காட்சி மூன்று, நான்கு நிமிடங்கள் அப்படியேக் காட்டப்படுகிறது. எட்டு மணி நேர மூச்சுத் திணறலைக் காண்பிக்க மூன்றே மூன்று நிமிடம் பார்ப்பது கூட மனதைக் கூச வைக்கிறது. சாலமன் கூட வேலை பார்க்கும் சக அடிமைகள் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடுகள் பாட்டுக்கு மேய்கின்றன. கதிரை அறுக்கிறார்கள். வாளியில் தண்ணீர் கொண்டு போய் தொட்டியில் நிரப்புகிறார்கள். எவருக்கும் ஒரு சக மானிடன் நாக்கு வறண்டு சாவின் விளிம்பில் தத்தளிப்பது பொருட்டாகவே இல்லை.

இதே போல் மைக்கேல் பிரவுன் நான்கு மணி நேரம் அனாதையாக சாலையில் கேட்பாரற்று பிணமாக இருந்திருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார் பிரவுன். நண்பருடன் காரில் உலா வந்தபோது, காவல்துறையினரால் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலமுறை சுடப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தும் சுடப்பட்டார். இறுதியாக நெற்றிப்பொட்டில் சுடப்பட்டதால் இறந்தார். இறந்தவரின் சடலம், இறந்த இடத்திலேயே தொடுவாரற்று, சீந்துவாரற்று நான்கு மணி நேரத்திற்கு மேலாக நூறு டிகிரி கோடை வெயிலில் அனாதராவாக இருந்திருக்கிறது.

1840களில் சாலமன் அனுபவித்த கொடுமை இன்றும் மைக்கேல் பிரவுன்களுக்குத் தொடர்கிறது. அன்று நடந்ததை திரையில் பார்க்கிறோம். இப்படியும் கூட சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடுதல் கண்டும், காணாத சொரணையற்றவர்கள் இருந்தார்களா என்று நாணுகிறோம்.

1840ல் சாலமன் கழுத்திற்கு தூக்குக் கயிறு மாட்டப்பட்டது ஒரு குறியீடு. வெள்ளையனை எதிர்த்தால், எஜமானனை கை நீட்டிப் பேசினால், கொல்லப்படுவீர்கள் என்று அனைத்து கருப்பு அடிமைகளுக்கும் உணர்த்துவதற்காக சாலமனுக்கு தூக்குக் கயிறு போடப்பட்டு, எட்டு மணி நேரத்திற்கு மேலாக உயிர் ஊசலாட விடப்படுகிறது.

இன்று 2014. அதே அமெரிக்கா. கருப்பராக இருந்து கொண்டு சாலையில் நடமாடினால் ஆபத்துதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். சில மாதம் முன்பு ஃப்ளோரிடா மாநிலத்தில் டிரெவான் மார்டின் என்னும் இளைஞன். சென்ற வாரத்தில் மிஸௌரி மாநிலத்தில் மைக்கேல் பிரௌன். வெள்ளைத்தோல் இல்லாதவர் தைரியமாக நிமிர்ந்து நடந்தால் என்னவாகும் என்பதை பாடம் கற்பிக்க இவர்களை உதாரண புருஷர்கள் ஆக்குகிறார்கள்.

சாதாரணமாக இதற்கு சொல்லப்படும் காரணங்கள், ‘காக்க… காக்க’ போன்ற போலீஸ் திரைப்படங்களில் சொல்லப்படுவதுதான்: “என்கவுன்டர்” என்பது இல்லாவிட்டால் சட்டம் – ஒழுங்கு சீர்குலையும். இவ்வாறு கண்டவுடன் சுடுவதால் மட்டுமே கேங் (gang) எனப்படும் ரவுடிக் கும்பல்களை ஒழிக்கமுடிகிறது. பயங்கரவாதிகள் பெருகிவிட்ட இன்றைய அச்சம் நிறைந்த துப்பாக்கிகள் எங்கும் எவருக்கும் கிடைக்கும் சூழலில், பாதுகாப்பை நிலைநிறுத்த, இதுபோன்ற வருமுன்காப்போன் தற்காத்தல்களை தவிர்க்க இயலாது – போன்று பற்பல சொல்லப்படுகின்றன.

அமெரிக்காவில் வருடந்தோறும் ஆயிரம் பேராவது இப்படி காவல்துறையினரால் சுடப்பட்டு இறக்கிறார்கள். இவர்களில் எவ்வளவு பேர் நிஜமாகவே ஆபத்தானவர்கள், எவ்வளவு பேர் அனாதைகள், எவ்வளவு பேர் மைக்கேல் பிரவுன் சந்தர்ப்பவசத்தால் செத்தவர்கள் என்பதை உள்ளூர் காவல் அமைப்புகள் தெரிவிப்பதில்லை. எனவே, தெளிவான தகவல் கிட்டுவதில்லை. ஆனால், காவல்துறையினாரால் நிறுத்தப்பட்டால், சகல மரியாதையுடன் முன்ஜாக்கிரதையாக, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்தையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றாவிட்டால், ‘பயங்கரவாதி பிடிபட்டான்’ எனத் தலைப்பு செய்தி ஆகாமல் நாம் தப்பிப்போம்.

1853ல் “பன்னிரெண்டு ஆண்டு அடிமை” புத்தகமாக வெளிவந்தது.

அப்போதைய அமெரிக்காவில் வடக்கு பகுதி – அடிமை முறையை ஆதரிக்கவில்லை. ஆனால், தெற்குப் பகுதிகளில், அடிமை முறை சட்டபூர்வமாக அமலில் இருந்தது. கருப்பராக இருந்தால், விலையாளாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கு பத்திரங்கள் தேவையாக இருந்தது. சுதந்திரம் பெற விரும்பிய ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நியு யார்க் நகரத்திற்கு தப்பித்து விட்டாலும், கையில் அதற்குரிய சாட்சியங்கள் இல்லாவிட்டால், மீண்டும் அடிமை சேவகத்திற்கே அனுப்பப்படுவார்.

இந்தக் காலகட்டத்தில் சாலமன் நியு யார்க் மாநிலத்தில் மனைவியுடனும் மகனுடனும் மகளுடனும் வசித்து வருகிறார். அவருக்கு வயலின் வாசிக்க மிகவும் பிடிக்கும். அந்த வயலினை வாசிப்பதற்காக நிறைய சம்பளமும் வாஷிங்டன் வரை ஊர் சுற்றவும் சர்க்கஸ்காரர்கள் அவரை அழைக்கிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையுடனும், தன்னுடைய வயலின் திறமையை ஊர் ஊராகச் சென்று வெளிக்காட்டும் வாய்ப்பும் கிடைத்த சந்தோஷத்தில் சாலமனும் ஒப்புக் கொள்கிறார். ஆனால், சாலமனை போதையேற்றி, அதன் பின் அந்த போதை மயக்கத்திலேயே அடிமையாக்கி விற்று விடுகிறார்கள் அந்த சர்க்கஸ்காரர்கள்.

இந்த சமயத்தில் அமெரிக்காவின் தலைநகரத்தின் புகழ்பெற்ற காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டல் கட்டிமுடிக்கப்படவில்லை. அதாவது அமெரிக்கா என்னும் நாடு இன்னும் முழுமையாகவில்லை. தன்னுடைய சித்தாந்தமான ‘சுதந்திரம்’ என்பது பிரகடனத்தில் மட்டுமே இருந்த காலம். வெள்ளை ஆண்களுக்கு மட்டுமே முழுச் சுதந்திரம் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்த விடுதலை சாற்றுரையை குறிக்கும் விதமாக, அந்த ‘கேப்பிடல்’ கட்டிடம் பாதி கட்டி, மீதி தொக்கி நிற்கும் காட்சி காட்டப்படுகிறது.

இன்று 2014. அமெரிக்க காங்கிரஸ் கூடும் இடமான ‘கேப்பிடல்’ கட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பெண்களும் வாக்களிக்க சட்டத்தில் உரிமை கிடைத்துவிட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாம இருக்கிறார்.

ஆனால், அவர்கள் கட்சி நிலைமை எப்படி இருக்கிறது? கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.

எட்டாண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் புஷ் இருந்தார். அப்பொழுது இராக் போரில் பதின்ம வயதினர் எக்கச்சக்கமாய் காவு கொடுக்கப்பட்ட காலம். அதை முன்வைத்து, இராக் போரை வாபஸ் பெறுவதை வாக்குறுதியாக வைத்து டெமொகிராட் கட்சி வாகை சூடியது.

அதைப் பின் தொடர்ந்து, இரண்டாண்டு கழித்து அடுத்த தேர்தலில் பராக் ஒபாமா வென்றார். இப்பொழுது மொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்திருந்தது. அதை மீட்க, ஆளூங்கட்சியைத் தோற்கடிப்போம் என எதிர்க்கட்சியாக கோஷம் போட்டார். நிதிநிலை மோசடிகளை உருவாக்கிய குடியரசுக் கட்சிக்கு எதிரான அலை, இந்தத் தேர்தலில் வீசியது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அலை வீசும். சாமானிய மக்களுக்கு உரிமை வேண்டும் என்றும் வருமான வரியே கூடாது என்றும் போராடிய ‘டீ பார்ட்டி’ அலை வீசியது. அதன் பின் பெருநிதிக்கிழார்களிடம் இருந்து சட்டசபையை மீட்டு, சாமானியனுக்கு உதவும் அரசாங்கத்தைக் கோரும் ‘ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட்’ போராட்டம் உதவியது.

கடைசியாக நடந்த தேர்தலிலும் அலை உண்டு. ஒரு பக்கம் ஒபாமாவின் சேமநல நிதித் திட்டத்தை விரும்புபவர்கள் ஒன்று கூடினார்கள். அரசாங்கமே வேண்டாம் என்று சொல்பவர்களும், சட்டம் எதிலும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கருதுபவர்களும், இந்த உடல்நலக் காப்பீட்டை மறுதலித்து இன்னொரு அணியில் குடியரசுக் கட்சி பக்க சாய்ந்தார்கள்.

ஆனால், இந்தத் தேர்தலில் எந்த அலையுமே வீசவில்லை. ஒபாமாவின் சேமநலத் திட்டத்தை அனைவரும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். ஈராக் போர் முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்தும் வீரர்கள் திரும்பி, ஆளில்லா தூரயியங்கி விமானங்கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொருளாதாரம் தலை நிமிர்ந்துவிட்டதால் ‘டீ பார்ட்டிக்காரர்’களும், ‘ஆக்குபை வால் ஸ்ட்ரீட்’காரர்களும் வேலையில் அமர்ந்துவிட்டார்கள்.

இந்த மாதிரி விட்டேற்றியான காலத்தில் மக்களை உசுப்பேத்துவது எப்படி? ஒவ்வொரு வாக்காளரையும் வோட்டுச்சாவடிக்கு அனுப்புவது எப்படி? தங்களுடைய ஆதார பலத்தை நிரூபிப்பது எப்படி? அதற்கும் ஃபெர்கூசன் போராட்டங்கள் உதவுகின்றன. பராக் ஒபாமாவிற்கு மவுசு குறைந்து விட்டது. அவரின் டெமோகிரட்ஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட இந்த மாதிரி நடவடிக்கைகள் உதவும்.

கம்பரின் இராமாயணத்தில் ‘கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காவவேலான்’ என்னும் பிரயோகம் வெகு பிரசித்தமானது. ஏற்கனவே கண் பார்வையற்ற ஒருவன், தன்னுடைய பார்வையைப் பெறுகிறான். உலகத்தின் ஒவ்வொரு அதிசயத்தையும் பார்க்கிறான். சூரியன் உதிக்கும் காலையையும், பறவைக் கூட்டத்தின் ஒருங்கையும், நாணல்களின் அலையோரத்து அசைவையும் ரசிக்கிறான். பின், கண் பார்வை பறிபோகிறது.

சேவகம் மட்டுமே செய்து வாழ்ந்த வம்சாவழியில் வந்த சாலமன் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறான். தன் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு, தன்னுடைய விருப்பமான துறையில் ஈடுபாடு என நினைத்தபடி வாழ்முடிகிறது. பின் அதை இழக்கிறான்.

இழந்ததை எவர் கண்டுகொண்டார்கள்? சாலமப் இவ்வாறு விலையாள் ஆகிப்போனது யாருக்கு தெரியும்?

ப்ரூகல் வரைந்த இகாரஸின் வீழ்ச்சி (http://en.wikipedia.org/wiki/Landscape_with_the_Fall_of_Icarus) ஓவியம் நினைவிற்கு வருகிறது. நம்முடைய அனுமான் போல் இகாரஸும் அசகாய சூரர். சூரியனைத் தொட்டுவிட நினைக்கிறார். ஆனால், இறக்கைகள் இல்லை. அதனால் என்ன! கோந்து போட்டு பிரும்மாண்டமான இறக்கைகளை ஒட்டிக் கொள்கிறார். அப்பாவின் அறிவுரையைக் கேட்காமல், பகலவனை நோக்கிப் பறக்கிறார். கதிரோன் ஒளியின் வெபந்த்தில் மெழுகு கரைகிறது. ஐகாரஸ் கடலில் வீழ்கிறான்.

ஐகாரஸின் கால்களை மட்டும் கடலில் காண்கிறோம். அதுவும் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே தெரியும். ஓவியத்தின் முகப்பில் குதிரை உழவர் தெரிகிறார். கொஞ்சம் போல் சென்றால் வானத்தைப் பார்க்கும் மேய்ப்பன் புலப்படுகிறார். யாருடைய கால்களோ, தண்ணீரில் தத்தளிப்பது அதன் பின் தெரிய வரலாம். சொந்த உயிர் வாடுவது நமக்குத் தெரிவதேயில்லை. நம் வாழ்க்கையின் அர்த்தமற்ற தருணங்களிலேயே நாம் லயித்து மூழ்கிவிடும்போது, மைக்கேல் பிரவுன் சுடப்படுவதை நாம் கண்டுகொள்வதேயில்லை.

பெர்கூசன் நகரத்தில் சுடப்பட்ட மைக்கேல் பிரவுனுக்கும் பன்னிரெண்டு ஆண்டுகள் அடிமையாக இருந்து மீண்டும் சுதந்திரம் பெற்ற சாலமன் நார்த்ரப்பிற்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.

முதலாமவர் ஃபிரான்சிஸ்கோ கோயாவின் ‘மே மூன்றாம் தேதி, 1808’ (http://en.wikipedia.org/wiki/The_Third_of_May_1808) ஓவியத்தின் நாயகன் போல் நிராயுதபாணியாக துணிந்து எதிர்த்து நின்றவர். தான் சுடப்படுவோம் என்பதைத் தெரிந்து இருந்தாலும், பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தியவர்.

ஆனால், சாலமன் நார்திரப் வளைந்து கொடுக்கத் தெரிந்தவர். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தவர். அவசரமாக ஆத்திரத்தில் முடிவெடுக்காமல், பொறுமை காத்தவர். அவர் எழுதிய புத்தகத்திலேயே கூட பருத்தியை எவ்வாறு பறிப்பது என்பது குறித்தும், கறும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் விலாவாரியாக அனுபவித்து எழுதியிருக்கிறார். நாயைப் போல் நடத்தப்பட்டாலும், நல்ல காலம் என்றாவது பிறக்கும் என்னும் நம்பிக்கையைக் கைவிடாதவர்.

அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாகவோ, பதின்ம வயதினருக்கான புத்தகப் பரிந்துரையாகவோ, அடிமை வாழ்விற்கு உதாரணமாக – இரு புத்தகங்களை முன்வைக்கிறார்கள்: Narrative of the Life of Frederick Douglass and The Interesting Narrative of the Life of Olaudah Equiano.

இந்தப் புத்தகங்கள் எல்லாமே மொழியாளுமையையும் அறிவுக்கூர்மையையும் முன்னிறுத்துகின்றன. படிப்பினால் முன்னேறலாம். வாசிப்பை விசாலமாக்கினால் பதவி கிடைக்கும். அதன் மூலம் சுயத்தை அடையாளம் காணலாம். அதனால் தங்களைக் கட்டியிருந்த தளைகள் அறுகின்றன.

சாலமன் நார்திரப்போ, ஏற்கனவே கற்றறிந்த, எழுதப் படிக்கத் தெரிந்தவர். அவருக்கு, எழுத்துக் கூட்டி பாலபாடம் படித்து, அதன் பிறகு பெரிய பெரிய நூல்கள் வாசித்து முன்னேற வேண்டிய நிலை இல்லை. ஆனால், தன்னுடைய வாசிப்பறிவை பகிரங்கமாக்கினால், சவுக்கடி மட்டுமே மிஞ்சும். எனவே, பட்டறிவை சொல்லாமல் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

ஒரு வகையில் நானும் அவ்வாறே பொதுவில் நடந்து கொள்கிறேன். அலுவலில் அரசியல் பேசுவதில்லை. மைக்கேல் பிரவுன் குறித்தோ, ஹமாஸ் குறித்தோ, அலுவல் சார்ந்த தொழில்துறையாளர்கள் கூடும் சந்திப்புகளில் வாய் திறப்பதேயில்லை. மௌனமாக பொதுவான நுட்பங்கள் குறித்தும் வானிலை குறித்தும் விளையாட்டு குறித்தும் அளவளாவுகிறோம். சில சமயம் உறவினர்கள் புழங்குவதால், ஃபேஸ்புக்கிலும் கூகுள் பிளஸ்சிலும் கூட அமைதி காக்கிறேன்.

—-

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் இன்னொரு மிக முக்கியமான பாத்திரம் பாட்ஸி (Patsey). சாலமனைப் போலவே பாட்ஸியும் இன்னொரு கலைஞர். இவர் சின்னக் குழந்தை. பதின்மூன்று வயது இருக்கும். அந்த வயதிற்கேயுரிய அழகும் குறும்பும் உற்சாகமும் ததும்புகிறது. சோளகொல்லை பொம்மைகளை விதவிதமாக செய்கிறார்.

காலை முழுவதும் பருத்தியை பறிப்பது. மாலையில் எஜமானனின் தாசியாக இருப்பது. வன்சிறை என்பதால் தாசிகளுக்குக் கிடைக்கும் சன்மானமும் கிடைக்காது. எஜமானனின் விருப்பத்திற்குரியவராக இருப்பதால், எஜமானியிடமிருந்து அடியும் வதையும் வன்மத்துடன் கொடுக்கப்படுகிறது. சாலமனைப் போல், ‘என்றாவது விடுதலை கிட்டும்! குடும்பத்தோடு இணைவோல்.’ என்னும் நம்பிக்கை ஆதாரமும் கிடையவே கிடையாது.

பாட்ஸியின் கதையைப் படித்தால் தலைமுறை தலைமுறையாக அடிமைப்பட்டிருக்கும் கதை தெரியவரும். வாழ்க்கை வருங்காலம் இருட்டு குகையாக மட்டுமே தெரிவதை உணரமுடியும். உயிரை விட முடியாத அவலமும் இரண வேதனையை தினமும் அனுபவிக்கும் சவுக்கடியும் சித்திரவதை பயமும் நிறைந்த இருட்டுகள் புலப்படும்.

அதை எதிர்த்துதான் கோயாவின் The Third of May 1808 (http://en.wikipedia.org/wiki/File:El_Tres_de_Mayo,_by_Francisco_de_Goya,_from_Prado_thin_black_margin.jpg) மைக்கேல் பிரவின் நிற்கிறான். செத்து பிழைத்தது போதும் என்று நெஞ்சை உயர்த்துகிறான்.
-பாலாஜி
———————

Minecraft

மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானது.

ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன.

Star_Wars_XKCD

அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே அவற்றை வாசிப்பது கீக் பட்டத்திற்கான எல்.கே.ஜி. படிக்கட்டு. ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக், டாக்டர் ஹூ எல்லாம் பார்ப்பது யூகேஜி. ஜப்பானிய மாங்கா படங்கள், நெட்ஃப்ளிக்ஸின் இண்டு இடுக்கில் ஒளிந்திருக்கும் மேட்ரிக்ஸ் கார்ட்டூன் என மூன்னேறலாம். எக்ஸ் பாக்ஸ், ப்ளேஸ்டேஷன் எல்லாம் வைத்துக் கொண்டு, அதன் புகழ்பெற்ற, பெறாத கணி விளையாட்டுகளில் சாதனையாளர் பட்டம் பெறுவது கீக் பள்ளிக்கூடத்தைத் தாண்ட வைக்கும். நேரப்பயணத்தை (time travel) திட்டமிடுதல்; டஞ்சன்களும் டிராகன்களும் விளையாட்டை ஒருங்கிணைத்தல் ; Tor உபயோகித்து இணையத்தின் உள்ளரங்குகளில் உலவுதல்; காமிக் கான் (Comic-Con) கூட்டத்திற்கு தவறாமl செல்லுதல்; எப்பொழுதும் ஹவாய் செப்பலுடன் (சாலையில் தண்ணீர் ஊற்றினால் பனிக்கட்டி ஆகிவிடுமே, அந்தக் கடுங்குளிரில் கூட) முண்டா பனியனில் தலை சொறிய வைக்கும் சொற்றொடருடன் எவரொருவர் உலா வருகிறாரோ – அவரே முழுமையான கீக்.

இதன் ஒரு அங்கமாகத்தான் மைன்கிராஃப்ட் (Minecraft) எனக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இது எந்த மாதிரியான விளையாட்டு?

Minecraft_Large_Fortress_Buildings_Game_Of_thrones_Westeros_Kingdoms

சதுரம் சதுரமாக பொட்டிகளை உடைத்து, அதை சேமித்துக் கட்டும் கலை. உங்களால் பிரும்மாண்டமான கோட்டை எழுப்ப முடியும். கோவில் கட்டலாம். மாபெரும் மலைகளை உருவாக்கலாம். தோண்டத் தோண்ட வளரும் ஆழ்துளைகளில் பூதங்களை உலவ விடலாம். திடீரென்று சாத்தான்கள் எட்டிப் பார்க்கும். வெள்ளம் வரலாம். எரிமலைக்குள் விழுந்து விடலாம். தப்பித்து ஓட வேண்டும். இருட்டிய பிறகு, பாதுகாப்பாக இருக்க, அரண்கள் ஏற்படுத்த வேண்டும். மற்றபடிக்கு, மற்றவர்கள் என்னவெல்லாம் கட்டியிருக்கிறார்கள், எப்படியெல்லாம் கற்பனைகளை கணித்திரையில் மிரட்டியிருக்கிறார்கள் என பராக்கு மட்டுமே கூட பார்த்து காலம் கழிக்கலாம்.

எல்லா விளையாட்டுகள் போலவே கற்றுக் கொள்ளுதல் மிக எளிது. கற்றுக் கொண்ட பின், இன்னொருவரைப் போல், அந்தக் கட்டிடத்தைப் போல் நாமே நமக்குத் தோற்றுவிக்க வேண்டும் என எண்ணுவதும் எளிது. அதை உருவாக்குவது, உருவாக்கியதைப் பாதுகாப்பது, நண்பர்களை அழைப்பது, என் ஒன்றன் பின் ஒன்றாக பதினாறு மில்லியன் மக்களைக் கணினியில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மைன்கிராஃப்ட். ஒரே ஒரு விளையாட்டைக் கொண்டு நூறு மில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டி இருக்கிறார்கள்.

Minecraft_World_Games

மார்கஸ் பெர்ஸ்ஸ்ன் (Markus Persson) என்பவரால் 2009ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. ”இதென்ன, வெட்டுவதும், தோண்டுவதும்?!” என வந்த புதிதில் வெகு சிலரே உபயோகித்தார்கள். 2011 வாக்கில் அரசல் புரசலாக அலுவலில் பேசிக் கொண்டார்கள். ”சிவந்த கண்களுக்கு என்ன காரணம்? ஃபைட் கிளப் மாதிரி எங்காவது சென்றாயா?” என சகாக்களைக் கேட்டபோது குசுகுசுவென ‘மைன் கிராஃப்ட்’ விடை கிடைக்கப் பெற்றேன்.

துவக்கத்தில் கணினி வல்லுநர்களுக்கு மட்டுமே மொழுதுபோக்காக இருந்த விளையாட்டு, இப்போது, மெதுவாக, பல்வேறு புனைவுலக கலைஞர்களின் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. பதின்ம வயதில் எவரைக் கேட்டாலும் ஒரு நாளில் பத்து மணி நேரமாவது உலகை சிருஷ்டிப்பதில் செலவழிக்கிறார்கள்.

வெட்டிய சதுக்கங்களையும் மரக்குச்சிகளையும் கொண்டு விதவிதமாக கருவிகளை உருவாக்குவதில்தான் மைன்கிராப்ட் விளையாட்டின் சூட்சுமம் இருக்கிறது. உங்களுக்குத் தரப்பட்ட 3×3 தளத்தில், நீங்கள் சேமித்த பொருள்களை கலந்து கட்டி, புதுமையான ஆயுதங்களை வடிவமைக்க வேண்டும். சமையற்குறிப்புகள் மாதிரி இந்த இரகசியங்களை சொல்லிக் கொடுக்கவே சில வலையகங்கள் இருக்கின்றன. அவையும் கை கொடுக்கும்.

Minecraft_Crafting_Table_Tools_Construction_Recipes

இதற்கெல்லாம் எது ஆரம்பம்? தமிழில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், அதன் மூலம் எங்கே என தேடுவோமே… அந்த மாதிரி மைன்கிராஃப்டின் ஆதி மூலம் எங்கே இருக்கிறது?

அதன் பெயர் டிவார்ஃப் ஃபோர்ட்ரெஸ் (Dwarf Fortress). உங்களின் கணித்திரையெங்கும் வண்ண வண்ணமாக எண்ணும் எழுத்தும் இருக்கும். இது ஓவியங்களும் படங்களும் அறவே இல்லாத பத்திர பூமி. சித்திரக்குள்ளர்கள் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு மதிற்சுவர்கள் எழுப்ப வேண்டும்; மீன் பிடிக்க வேண்டும்; வேட்டையாட வேண்டும்; சமைக்க வேண்டும்; அரிய கனிமங்களை சேமிக்க வேண்டும். நாச சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கில் கூட என்னை அடிக்கடி ‘ஃபார்ம்வில்’ (FarmVille) விலையாட வா… வா… என அழைக்கிறார்கள். அந்த விளையாட்டும், கிட்டத்தட்ட இதே தாத்பர்யம்தான்.

ஆனால், சில வித்தியாசங்கள் உண்டு!

சாதாரணமாக கணினி விளையாட்டு என்றால் அதில் வரும் மிருகங்களின் நகம் கூட ஜொலிக்கும். மேற்படி குள்ளர்களின் கோட்டையில் வைரமும் வைடூரியமும் கூட வெறும் “£” குறி காட்டி முடித்து விடுகிறார்கள். பயமுறுத்தும் நட்டுவாக்கலிகளுக்கு பழுப்பு நிறத்தில் “S”. படுக்கையைக் குறிக்க வெளிறிய மஞ்சள் நிற “+”. மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் பச்சை நிற புள்ளிகளும் முக்கோணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். சிரிப்பான்களைக் கொண்டு குள்ளர்களை அடையாளம் காண்கிறோம். ‘கற்பனையை விட எது பெரிய பயமுறுத்தும் சக்தி’ என்பதுதான் இதை உருவாக்கியவரின் வாதம்.

கற்பனையில் எதை வேண்டுமானாலும் உண்டாக்கலாம் என்பதற்கு இந்த விளையாட்டு முன்னோடியாக இருந்தது. இங்கிருக்கும் நாலைந்து மூலப் பொருள்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான பாதைகளும் வழிகளும் குழப்பங்களும் உருவாக்கலாம் என்பதை இந்த ஆட்டம் நடைமுறையில் விளக்கியது.

இன்னொரு முக்கிய வித்தியாசம்: பெரும்பாலான கணினி விளையாட்டுக்களில் முடிவு என்று ஒன்று இருக்கும். கடைசி குகை, இறுதி கதவு என்று ஒன்று கண்டுபிடித்தால்… அவ்வளவுதான். ஆட்டம் முடிந்தது. பள்ளிக்காலத்தில் ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா அடும்போது, பன்னிரெண்டாம் கட்டத்தை முடித்தவுடன் வெறுமையாக இருந்தது. “இதற்குத்தானே ஏமாற்றி விளையாடினாய் பாலாஜி!” என சோகம் கலந்த கோபம் வந்தது. அதெல்லாம் இந்த இந்த மைன்கிராஃப்ட் போன்ற விளையாட்டுகளில் ஏற்படாது. கட்டுங்கள். கட்டியதை சீரமையுங்கள். பிறர் கட்டுவதைப் பாருங்கள். பயணித்துக் கொண்டே இருங்கள் என்பதுதான் இதன் இலட்சியம்.

Markus_Notch_Persson_minecraft1

மார்க்க்ஸ் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் போது அவருடைய பள்ளி ஆலோசகரிடம் செல்கிறார். அவருடைய ஆலோசகரும், “கல்லூரியில் என்ன படிக்கப் போகிறாய்? என்னவாகப் போகிறாய்?” என வினவுகிறார். இவரோ, “எனக்கு கணினி விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்! எனவே அவற்றை எழுதப் போகிறேன்!” என சொல்கிறார். பள்ளி ஆச்சாரியரும் அவருக்குத் தெரிந்த நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி அந்த வழியில் சென்றால் உருப்பட மாட்டாய் என உபதேசித்து அனுப்பியிருக்கிறார்.

இவருடைய வழிகாட்டுனர் சொன்னதையும் மீறி காலை 9 முதல் ஐந்து வரை அலுவலில் வேலை பார்த்துவிட்டு, குளிரான ஸ்வீடனின் இரவு நேரங்களில் மைன்கிராஃப்ட் உருவாக்குகிறார் மார்க்கஸ். அதன் வெற்றியின் வாசனையை சற்றே முகர்ந்தவுடன் வேலையை விட்டு விட்டு முழுக்க இறங்குகிறார். அவருடன் பணிபுரிபவர்கள், இந்த மாதிரி ஸ்திரமான உத்தியோகத்தை விட வேண்டாம் என அறிவுறுத்தலை புறக்கணித்து களத்தில் முழுமூச்சாக இறங்குகிறார்.

இன்று மைன்கிராஃப்ட் அலுவலகத்தில் மொத்தம் பதின்மூன்றே பேர்கள்தான் வேலை செய்கிறார்கள். இத்தனைக்கும் ஆண்டிராய்ட், ஐ போன், ஐ பேட், எக்ஸ் பாக்ஸ், என எல்லாக் கருவிகளுக்கும் மைன்கிராஃப்ட் கிடைக்கிறது.

ஆனால், மைன்கிராஃப்ட் என்றால் மார்க்கஸ் மட்டும்தான் தெரிகிறார். விளையாட்டு குழுமங்களில் இவருடைய புனைப்பெயர் நாட்ச் (Notch). நாட்ச் என்றால் நவீன மொழியில் ’யேசுவிற்கு இன்னொரு பெயர்’ என்று அர்த்தமாகிறது. திரைப்படங்களில் யாருடைய இயக்கம் என பார்க்கிறோம், கிறிஸ்டொபர் நோலன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என்றால் தனி மரியாதை. ஃபாக்ஸ் வெளியிடுகிறதா, சோனி தயாரித்ததா என கவனிப்பதில்லை. ஒலிக்கோப்பு வாங்கும்போது, இளையராஜாவா, ஏ. ஆர். ரெஹ்மானா எனப் பார்க்கிறோம். எச்.எம்.வி. வெளியிட்டிருக்கிறதா, எக்கோ போட்டிருக்கிறதா என்பது முக்கியமேயல்ல. ஆனால், கணினி விளையாட்டில் அப்படி கிடையாது. எந்த நிறுவனம் வெளியிடுகிறதோ, அவர்களின் பெயரே பிரதானமாக இருக்கும். EA என்கிறார்கள்; ஜிங்கா என்பார்கள்; ஆக்டிவிஷன் என்பார்கள். மார்க்கஸ் வந்த பிறகுதான் ‘இது மார்க்கஸ் உருவாக்கம்’ என்கிறார்கள்.

st_alphageek_minecraft4_f

மைன்கிராஃப்டில் இருக்கும்போது, ‘உலகம் ரொமப் பெருசு மாமே!’ என எண்ணவைக்கிறது. இத்தனை பேர் நிறைந்த பொம்மை ஜகம் கண் முன்னே விரியும் போது, ‘என்னத்தப் பார்த்து, எதக் கட்டி, எப்படி எல்லாத்தையும் முடிக்கப் போறே!’ என மலைப்பு வரும். கூடவே இரவு முழுக்க, விடிய விடிய நாமும் ஏதாவது புத்தம்புதியதாக உருவாக்கும் உந்துதல் அடைகிறோம்.

மகாபாரதம் மாதிரி மைன்கிராஃப்ட் உருவாகியிருக்கிறது. ஆங்காங்கே கிளைக் கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. போர் உண்டு. வரைபடங்கள் உண்டு. வில்லன்கள் உண்டு. கண்ணக் கட்டிய மன்னனாக கதை எங்கே ஆரம்பிக்கிறது, எப்பொழுது முடியும் என்றும் தெரியவில்லை. ஆபத்துகளும் இரகசிய பாதைகளும் வரங்களும் சாபங்களும் நிறைந்திருக்கின்றன. மொத்தத்தில் பொழுது போவதே தெரிவதில்லை.

மைன்கிராஃப்ட் குறித்த ஆவணப்படம்: https://www.youtube.com/watch?v=wxrrKkfRHvs

http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game/viewall
http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game
http://www.wired.com/2013/11/minecraft-book/all/
http://www.polygon.com/2014/4/29/5665834/minecraft-sales-15m-copies-pc

அரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்

வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்

http://www.moneylife.in/article/foreign-funding-and-the-maharajas-among-ngos/37943.html

– பேராசிரியர் ஆர் வைத்தியநாதன்

கோடிகள் ஈட்டும் இலாப-நோக்கற்ற நிறுவனங்களுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று அறிய முடியாத என்.ஜீ.ஓக்களுக்கும் உகந்த பூமியாக இந்தியா இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு வரவாகும் தொகையில் பெருமளவு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்துவம் கொண்டவர்களால் நடத்தப்படும் வியாபாரங்களுக்கும் செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. அதைக் குறித்த கட்டுரை:

இந்தியா ஒரு விசித்திரமான நாடு. உத்தியோகபூர்வமாக இங்கு 20 பங்கு சந்தைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றுள் இரண்டு மட்டுமே இயங்குகின்றன. மும்பை பங்கு சந்தையில் [பி.எஸ்.ஈ] பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 9,000. இதில் குறைந்த பட்சம் 3,500 பங்குகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே விற்கப்படுகின்றன. அதிகம் வாங்கி/விற்கப்படும் 50 பத்திரங்கள் மட்டும் கிட்டத்தட்ட மொத்த சந்தையின் மூன்றில் இரண்டு மடங்கை ஆக்கிரமித்திருக்கினறன. உண்மையில் 250 முதல் 300 “முக்கிய” பங்குகள் மட்டுமே  வர்த்தகத்தில் புழங்குகின்றன. இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மூலம் வெளியிடப்பட்ட இந்திய பத்திர சந்தை புள்ளிவிபரங்களின் சமீபத்திய கையேட்டில் மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை சொல்வதை நீக்கி விட்டது! குறையும் எண்களின் பிரச்சினையைத் தீர்க்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது.

இதே பாணியில், நாம் இந்தியாவில் இயங்கும் இலாபத்திற்காக இயங்காத அல்லது அரசு சாரா நிறுவனங்களை (என்.ஜி.ஓ) ஆய்வு செய்ய முடிவு செய்தோம். கல்வி போதனைத்துறையில் இருப்பதால், நாம் சராசரியாக ஆய்வுக்கு எடுக்காத விஷயங்களை விசாரணைக்கு எடுத்தோம்! இந்த மாதிரி சமயங்களில் தூங்கும் கும்பகர்ணனை எழுப்ப வேண்டாம் என்பதுதான் தேசிய வழக்கு.

NGOக்கள் என்றால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இவர்கள் VOs எனப்படும் தொண்டு நிறுவனங்களின் கோப்பு அல்லது தன்னார்வ நிறுவனங்கள் (VAs).  மிக சமீபத்தில் தன்னார்வ அபிவிருத்தி நிறுவனங்கள் (VDOs) என்றும் அழைக்கப்படுகிறார்கள். மற்றும் அரசு சாரா அபிவிருத்தி நிறுவனங்கள் (NGDOs) அல்லது இலாப நோக்கற்ற நிறுவனங்கள் (NPIs) என்றும் பிரிகிறார்கள். பல்வேறு இந்திய மொழிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சமமான பெயர்கள் உள்ளன. இந்தி தொண்டு நிறுவனங்கள் சுயம்சேவி சன்ஸ்தாயேன் அல்லது ஸ்வயம்ஸேவி சங்காத்தன் என அழைக்கப்படுகின்றன.

1860 சங்கங்கள் பதிவு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னதாக, தன்னார்வ நடவடிக்கை, மத மற்றும் கலாச்சார பண்பாட்டை முக்கியமாக பின்பற்றியது. பின்னர், இலாப நோக்கற்று இயங்கும் துறை சார்ந்து பல்வேறு சட்டங்கள் அமலாகின. இதன் தொடக்க புள்ளியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 19வது ஷரத்தில் குடிமை உரிமைகள் பல அங்கீகரிக்கப்பட்டது. அதில், “அமைப்புகள் அல்லது சங்கங்களின் அமைக்க ….” உரிமை தரப்பட்டது . இது இலாபம் ஈட்டா துறைக்கு பொருத்தமான சட்ட விதிகளை சட்ட அடிப்படையில் அமைக்கிறது. சட்டபூர்வமாக பதிவு செய்யாத ஒரு நிறுவனம் தன்னுடைய இலாப நோக்கற்ற, தன்னார்வ அல்லது நற்பணி தொடங்கும் நோக்கத்தை அனுமதிக்கவும் குழுவாக இயங்கவும் கட்டாயமற்ற விதிகளும் இதில் உள்ளன. இந்த விதிகள் என்.ஜி.ஓ.வின் விருப்ப இயல்புக்கு ஏற்ப இயங்க சுதந்திரம் தருகின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையால், பதிவு செய்யாத தன்னார்வ அமைப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்ட (UNDP) மற்றும் ஐ.நா. தொண்டர்கள் (UNV) திட்டமும் UNDP யின் தில்லி அலுவலகத்தில் ஜனவரி 2006 ல் ஒரு கருத்துக்களம் ஏற்பாடு செய்தன. இலாபம் ஈட்டாத நிறுவனங்கள் (NPIs) குறித்த சிக்கல்களை விவாதிக்கவும் ஐ.நா. கையேடு செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் பற்றி பேசவும் சிஸ்டம் ஆஃப் நேஷனல் அக்கவுண்ட்ஸ் [System of National Accounts (SNA)] கீழ் கூடினார்கள்.

உலகம் முழுவதும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான (NPI) ஐ.நா. கையேட்டை செயல்படுத்தும் முயற்சியில் ஒரு அங்கமாக இந்தக் கூட்டம் அமைந்தது. இந்தக் கூட்டத்தில் திட்ட கமிஷன், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், UNV தலைமையகம், மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிவில் சமூகம் கல்வி மையத்தின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த அரங்கில், ஐ.நா. குடியுரிமை ஒருங்கிணைப்பாளரும், UNDP இந்தியா குடியுரிமை பிரதிநிதியும் தேசிய பொருளாதாரத்திற்கு NPIகளின் பங்களிப்புகளை அறியும் பொருட்டு ஐ.நா. கையேட்டை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னார்வ துறை நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான முக்கிய பங்கை ஆற்றுகின்றன என்றும்; கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சியில் என்.பி.ஐ.க்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கருத்துக்களத்தில் இந்தியாவில் இயங்கும் NPIக்களுக்கு ஐ.நா. கையேட்டை அமல்படுத்த வேண்டும்; மற்றும் நாட்டில் செயல்படும் NPI கணக்குகளை தொகுக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய ஆலோசனை கவுன்சில் மறைமுகமான வழிகாட்டுதலின் கீழ், மே 2007 ல் தன்னார்வத் துறைக்கான தேசிய கொள்கை உருவானது. சுயாதீனமாக இயங்கவும், சொந்தமாக வழிவகுத்து தீர்க்கமாக இயங்கும் தன்னார்வ துறையை ஊக்குவித்தது. மாறுபட்ட இந்திய சமூகத்தைப் போலவே, மாறுபட்ட மனிதர்களை அதிகாரத்திலும், வடிவத்திலும் பதவி செயல்பாடுகளிலும் கொண்டு, அதை செய்ய முடியும் என்று நம்பியது. இந்திய மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்  என உறுதி மொழி கோரியது. இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் அடையாளத்திற்கு பங்கம் இல்லாமல், அரசாங்கம் மற்றும் தன்னார்வத் துறை இடையே ஒரு புதிய உறவு கண்டுபிடிக்க ஒரு செயல்முறை தொடக்கமாக அமைகிறது (GOI / திட்டக்குழு, 2007) . அதன்படி, இதை செயல்படுத்தினால் இலாபம்-சாரா துறையின் செயலில் ஈடுபடும் தன்மையினால், தொண்டுச்சூழல் பரவலாகப் பெருகி, சமூக விவகாரங்கள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் , இந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ‘ன் இரண்டாவது ஆட்சிக்கால தொடக்கத்தில், தன்னார்வ அல்லது அரசு சாரா நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் நிதி நடவடிக்கைகளில் சுதந்திரமாக இயங்கவும் முழுமையான அதிகாரம் இருந்தன என்பதை அறியலாம்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல சட்டங்களின் கீழ் பதிவு செய்யலாம் அல்லது எந்தவொன்றிலும் பதிவு செய்யாமல் இயங்கலாம் –  எதிலும் பதிவு செய்யாமல் இயங்குவதே அதிகமாக காணப்படுகிறது.

இலாப நோக்கற்ற நிறுவனங்களைப் பதிவதற்கு, பல்வேறு வகையான சட்டங்கள் இருக்கின்றன:

  • சங்கங்கள் பதிவு சட்டம், 1860;
  • இந்திய அறக்கட்டளைகள் சட்டம், 1882;
  • பொது அறக்கட்டளை சட்டம், 1950;
  • இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956

இலாப நோக்கற்ற மத நிறுவனங்கள் கீழ் பதிவு செய்யும்போது:

  • சமய அறநிலைய சட்டம், 1863;
  • தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920;
  • முஸல்மான் வக்ஃப் சட்டம், 1923;
  • வக்ஃப் சட்டம், 1954
  • பொது Wakfs (வரம்பு நீட்டிப்பு) சட்டம், 1959

“சங்கங்களின் சங்கங்கள் பதிவு சட்டம் / மும்பை பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு” அடியில் 2009 ஆம் ஆண்டு வரை மட்டும், மொத்தம் 33 லட்சம் சங்கங்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் 22.58 லட்சம் சங்கங்களைப் பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் மாநில இயக்கம் [DESs]  தகவல் சேகரிக்க முடிந்திருக்கிறது அவற்றுள் 21 லட்சம் சங்கம் தொடர்பான தகவல்களை கணினிமயமாக்க முடிந்திருக்கிறது.

மாநிலங்கள்தோறும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் தேடி மத்திய புள்ளியியல் அலுவலகம் (சி.எஸ்.ஓ) மக்களை அனுப்பிய போது, அது அவர்களில் இலட்சக்கணக்கானோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் சரிபார்க்க முயன்ற 22 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்,வெறும் 6.95 லட்சம் பேரை மட்டுமே காண முடிந்தது.

இந்த புள்ளிவிவர கணக்குகளில், தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920, கீழ் பதிவு செய்த இலாப நோக்கற்ற நிறுவனங்களை சேர்க்கவேயில்லை. அதையும் கூட்டிக்கொண்டால், இன்னும் சில பல ஆயிரங்களை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இந்திய கம்பெனி சட்டம் 1956 இருக்கிறது. அதன் மேல் அறக்கட்டளைகள் அமைக்க உதவும் மற்ற சட்டங்களின் கீழ் இலாபமடையா  நிறுவனங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

மேலும் இந்தத் தொகைகளில் கிராமங்களில் இயங்கும்  பல குழுக்கள் மற்றும் சங்கங்களையும், வழக்கமாக குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது பிரச்சாரங்களுக்கு பெரிய நிறுவனங்களில் ஒரு அங்கமாக அவ்வப்போது தோன்றுவதையும் சேர்க்கவில்லை.  இவை அந்தந்த நேரங்களில், தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் இயக்க, வெகுஜன சார்ந்த குழுக்கள் என குறிப்பிடப்படுகிறது. PRIA மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் செய்த ஆய்வின்படி இந்தியாவின் மொத்த தன்னார்வ நிறுவனங்களில் கிட்டத்தட்ட 50% எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த பதிவு குழுக்கள் வகைப்படுத்தும் போது பழமையான சங்கங்கள் பதிவு சட்டம் குருடாகிறது. அனைத்து பதிவு சமூகங்களையும் அதே வழியில் நடத்துகிறது. இந்த அட்டவணையில் அதி இலாபகரமான பள்ளிகளும், கொள்ளையாக சம்பாதிக்கும்கல்லூரிகளும், மிகுகொழிப்பில் இருக்கும் மருத்துவமனைகளும் நாட்டின் விளையாட்டு சங்கங்களும் அடங்கும். இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு சாரா என்ஜிஓ என்பதை நினைவில் கொள்ளவும். இந்திய தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ) ஒரு அரசு சாரா என்.ஜி.ஓ.

சி.எஸ்.ஓ. சர்வேயில் இருக்கும் முக்கிய கண்டுபிடிப்புகள்:

சி.எஸ்.ஓ. கருத்துக்கணிப்பு மூன்றே மூன்று பிரிவை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன:

  • ஆய்வு சங்கங்கள் பதிவு சட்டம் 1860
  • பம்பாய் பொது அறக்கட்டளைகள் சட்டம், 1950
  • இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 – 25 பிரிவு

– இவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஆய்வில் இடம்பிடித்தன.

முதல் கட்டத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் 31.7 லட்சம் NPIகள் இந்தியாவில் பதிவாகின. இதில் 58.7% கிராமப்புறங்களில் உள்ளன. பெரும்பாலான NPIகள் சமுதாய, சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள், கலாச்சார சேவைகள், கல்வி, சுகாதார சேவைகளில் ஈடுபட்டுள்ளன.

1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட NPIகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய காலகட்டமான அந்த நேரத்தில், உலக வல்லரசுகளும் இந்தியாவில் ஆர்வம் காட்ட தொடங்குகிறன.

  • 1970 ம் ஆண்டு வரை 1.44 லட்சம் சங்கங்கள் மட்டுமே பதிவு செய்திருந்தன.
  • அதன் பிறகு 1971 ல் இருந்து 1980 வரையான காலத்தில் 1.79 லட்சம் சங்கங்கள் பதிவு செய்துகொண்டன.
  • 1981 இல் இருந்து 1990 வரை காலத்தில் 5.52 லட்சம் பதிவானார்கள்.
  • 1991 இல் இருந்து 2000 வரையிலான காலத்தில் 11.22 லட்சம் பதிவு பெற்றார்கள்.
  • 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு மட்டும் 11.35 லட்சம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செயல்படாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய எந்த ஷரத்தும் இல்லை. எனவே முதல் கட்ட கணிப்பில் சங்கங்கள் எண்ணிக்கை மற்றும் பதிவு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கின்ற பதிவேடுகள் அடிப்படையில் ஆய்வு அமைகிறது.

18 லட்சம் சங்கங்களை இரண்டாம் கட்ட ஆய்வில் விஜயம் செய்தோம். இந்தத் தொகை பதிவு செய்தவர்களில் 57.6% சதவிகித சங்கங்கள் ஆகும். இவற்றில், 4.65 லட்சம் சங்கங்களுக்கு தகவல் கிடைக்கும். அவர்கள் பின்வரும் தலை மூன்று துறைகளில் ஈடுபட்டனர்:

  • சமூக சேவைகள் (35%)
  • கல்வி மற்றும் ஆராய்ச்சி (21%)
  • கலாச்சாரம் & உல்லாசம் (15%).

முதல் மூன்று நடவடிக்கைகளில் மட்டும் 71% பதிவு செய்த சங்கங்கள் பங்களிக்கின்றன.

தரவுகளின் அடிப்படையில் மொத்த ஜனசக்தியில் தொண்டர்களும் இருக்கிறார்கள்;  சம்பளத்திற்கு அமர்த்தும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். மொத்தம் 144 லட்சம் பேர் உழைக்கிறார்கள். இவர்களில் 11 லட்சம் பேருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது.  சி.எஸ்.ஓ. கணக்குப்படி அவர்களின் செயல்பாட்டு செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் தொகையைக் கொண்டு பொருளாதார உற்பத்தியை மதிப்பிட்டால் ரூ. 41, 292 கோடி அளவிற்கு வரும்!

லாபம் ஈட்டா நிறுவனங்களை இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956 கீழும் பதியலாம். நிறுவன விவகார அமைச்சகத்தினால் பட்டியலிடப்பட்ட 2,595 நிறுவனங்கள் தொடர்பான நிதி தரவுகள் பெறப்பட்டு, அவையும் பகுப்பாய்வு செய்யப்பட்டது. எனினும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் எத்தனை  தொழிலாளர் ஈடுபட்டனர் என்ற தகவலையும் அந்த அமைப்புகளின் நோக்கங்களுக்காக எவ்வளவு ஊதியம் கிடைத்தது போன்றவற்றையும் அறிய முடிவதில்லை.

சங்கங்கள் பதிவு சட்டம் 1860 , மும்பை டிரஸ்ட் சட்டம் மற்றும் இந்திய நிறுவனங்கள் சட்டம் (பிரிவு 25), 1956 கீழ் இயங்கும் சங்கங்களை மட்டும் ஆய்வுக்குட்படுத்த  சி.எஸ்.ஓ.  முடிவு செய்தது. பெரும்பாலான NPIகள் சங்கங்கள் பதிவு சட்டம் 1860ன் கீழ் பதிவு செய்யப்படுவதுதான் இதற்கு காரணம். பல்வேறு மத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் என்னும் குடையின் அடியில் இருக்கும் என்.ஜீ.ஓ.க்களை இந்த ஆய்வில் சேர்க்கவில்லை. அவர்கள் தொகை பூதாகரமானது.

நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் ஏற்பாட்டை பெரும்பாலான மாநிலங்கள், ஒழுங்காக அமலாக்குவதில்லை என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. சங்கங்களே பதிவாளர் அலுவலகத்தில் நிதி அறிக்கைகளை சமர்ப்பித்தாலும் கூட, அந்த தகவல்களை பராமரிக்க எந்த நடைமுறையும் கிடையாது.

அரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்:

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒரு வகையினர் உள்துறை அமைச்சகத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அயல்நாட்டு பங்களிப்பு விதிமுறைகள் விவகார சட்டம் [FCRA] கீழ் இந்த தனியார் அறக்கட்டளைகள் வரும்.  அதே போல் வெளிநாட்டு அரசு நிறுவனங்களின் நிதி கிடைக்கும் என்.ஜி.ஓ.க்களை யூரோ அல்லது டாலர் தொண்டு நிறுவனங்கள் என அழைக்கிறார்கள்.
2011-2012 ஆம் சிறப்பம்சங்கள்:

1. FCRAவின் கீழ் 31 மார்ச் 2012 வரை மொத்தம் 43,527 சங்கங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2011-12 ம் நிதியாண்டில், இரண்டாயிரத்திற்கும் மேலான கூட்டமைப்புகள் பதிவு பெற்றன. 304 நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பங்களிப்புகளை பெற முன் அனுமதி வழங்கப்பட்டது.

2.  22,702 அமைப்புகளில் இருந்து  ரூ. 11,546.29 கோடிகளுக்கு வெளிநாட்டு பங்களிப்பு என  மொத்தம் ரசீது பதிவாயின. [இவற்றில் கணக்கில் வராமலும் குறைவாகக் கணக்கு காட்டும் நோக்கும் பொதுவானது]

கடந்த பத்தாண்டு போக்கு:

வருடம்

பதிவு செய்த அமைப்புகள்

அறிவிக்கும் அமைப்புகள்

வெளிநாட்டு வருமானம்

[ரூ.  ₹ கோடிகளில்]

2002-2003

26404

16590

5,046.51

2003-2004

28351

17145

5,105.46

2004-2005

30321

18540

6,256.68

2005-2006

32144

18,570

7,877.57

2006-2007

33937

18,996

11,007.43

2007-2008

34803

18796

9,663.46

2008-2009

36414

20088

10,802.67

2009-2010

38,436

21,508

10,337.59

2010-2011

40,575

22,735

10,334.12

2011-2012

43,527

22,702

11,546.29

மொத்தமாக

2002 -2012

97,383.53

 

ஆதாரம்: உள்துறை அமைச்சகம் –வெளிநாட்டினர் துறை, FCRA பிரிவு

3. அயல்நாட்டு நிதியில் மிக அதிகமான நன்கொடைகள்

  • தில்லிக்கு வந்தன – ரூ. 2,285.75 கோடி
  • தமிழ்நாடு (ரூ. 1, 704,76 கோடி)
  • ஆந்திர பிரதேசம் (ரூ. 1, 258,52 கோடி)

4. மாவட்டங்களுக்கு மத்தியில் மிக அதிகமான நன்கொடைகள்

  • சென்னை – ரூ. 889.99 கோடி
  • மும்பை (ரூ. 825.40 கோடி)
  • பெங்களூர் (ரூ. 812.48 கோடி)

5. கொடை நாடுகளின் பட்டியலில்

  • அமெரிக்கா (ரூ. 3, 838.23 கோடி)
  • இங்கிலாந்து (ரூ. 1, 219,02 கோடி)
  • ஜெர்மனி (ரூ. 1, 096,01 கோடி).

6. வெளிநாட்டு நன்கொடையாளர்கள் பட்டியலில்

  • Compassion International, அமெரிக்கா (ரூ. 183.83 கோடி),
  • Church of Jesus Christ of Latter day Saints, பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை (எல்.டி. சர்ச்), அமெரிக்கா (ரூ. 130.77 கோடி)
  • Kinder Not Hilfe (KNH), ஜெர்மனி (ரூ. 51.76 கோடி).

7. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜீ.ஓ.) மத்தியில் அதிக அளவு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றவர்கள்

  • இந்திய உலக பார்வை, சென்னை, தமிழ்நாடு, (ரூ. 233.38 கோடி)
  • நம்பிக்கை சர்ச் இந்தியா பத்தனம்திட்டா, கேரளா (ரூ. 190.05 கோடி)
  • கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை, அனந்தப்பூர், ஆந்திரா (ரூ. 144.39 கோடி)

8. வெளிநாட்டு பங்களிப்பு பெற்ற துறைகளில்

  • ஊரக வளர்ச்சி (ரூ. 945.77 கோடி)
  • குழந்தைகள் நலன் (ரூ. 929.22 கோடி)
  • கட்டுமானம் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் பராமரிப்பு (ரூ. 824.11 கோடி)
  • ஆராய்ச்சி (ரூ. 539.14 கோடி)
  • மேலே குறிப்பிட்டுள்ளதை விட மற்ற செயல்பாடுகள் – ரூ. 2, 253,61 கோடி

நடைமுறை செலவுகளுக்குத்தான் [கட்டிடம் / கார்கள் / ஜீப்புகள் / கணினி / கேமராக்கள் முதலியன] தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிகவும் செலவு செய்கின்றன என்பது இதில் கவனிக்க வேண்டிய தகவல்.

காலத்தின் தேவை:

வெளிநாட்டு நிதி பெறும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புலனாய்வு பணியகம் (IB) அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பின்னணியில், இந்தத் துறையை  முழுமையான அலசலுக்குள்ளாக்க அறிஞர் சபை தேவை. இந்த நிபுணர்கள் குழுவில் IBயைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்க போன்ற பிற நாடுகளின் அனுபவங்களை பயன்படுத்தலாம். என்.ஜி.ஒ.க்களுக்கான ஆட்சி கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். இந்திய நிறுவனங்களுக்காக 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய சமூக பொறுப்புணர்வு பங்களிப்புகளின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மீள்பார்வை நோக்கலாம். வெள்ளையனின் சுமையாக இல்லாமல் இருப்போம்!

 

(ஆசிரியர் ஐஐஎம் பி  நிதி பேராசிரியர் – கட்டுரை அவரின் தனிப்பட்ட கருத்து)

(ஆர் வைத்தியநாதன், நிதி மற்றும் ஆளுகை பேராசிரியர், மூன்று தசாப்தங்களாக ஐ.ஐ. எம் பெங்களூர் பல்கலையில் கற்றுத்தருகிறார். தொடர்ச்சியாக மிகவும் பிரபலமான ஆசிரியர்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறார். இந்திய பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கமாக சிறிய தொழில் முனைவோர்களும் குடும்பங்களும் அடங்கியிருப்பதைக் கொண்டு,  பேராசிரியர் வைத்தியநாதன் இந்தியா Uninc என்னும் கூற்றை உருவாக்கினார். பேராசிரியர் வைத்தியநாதன் செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசனை பலகைகளில் அமர்ந்திருக்கிறார்.)