Obama 2nd Term start: State of the Union 2013


நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.