Daily Archives: மே 19, 2004

இந்திய புத்தகங்கள் வாங்கும் இடங்கள்

புத்தகம் வாங்குவதற்காக சில இணையத்தளங்கள்.

1. இந்தியா க்ளப்

அழகாக வகைபடுத்தியுள்ளது ரசிக்கத்தக்கது. என்ன வாங்க வேண்டும் என்று குறிக்கோளோடு வருவது ஒரு ஜாதி; பொழுதுபோகாமல் உள்ளே வந்தவர்களுக்கும் வழி காட்டுகிறது இந்தத் தளம்.

2. ஃபர்ஸ்ட் & செகண்ட்:

கஸ்டமர் கேள்விகளுக்கு சுடச்சுட பதில், விளக்கம் என என்னை மிகவும் கவர்ந்த தளம். வாரம் ஒரு புத்தகம் அல்லது மாதம் ஒரு புத்தகம் என்று புக் கிளப் நெறிபடுத்துவதும் இங்கு உபயோகமானது. எல்லா உறுப்பினரும் குறிப்பிட்ட நூலை படித்து முடித்து, இரண்டு வரி பேசி, (நேரில் சந்திக்க முடியாவிட்டால் இணையத்தில் தட்டி) கலந்துரையாடுவதும் இனிமை.

3. காந்தளகம்:

நண்பர் ஒருவர் உபயோகித்துள்ளார் என்பது தவிர வேறு எதுவும் பெரியதாக அறியேன். அனைத்து புத்தகங்களுக்கும் ஒரு catalaog மாதிரி இருப்பதால் மிகவும் பயனுள்ளது. ஆனால், shipping காசு அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து.

அதை விட அதி முக்கியமாக, தவணை அட்டையை பயன்படுத்தி வாங்க முடியாது. இங்கு உள்ளவர்களுக்கு (இந்திய) ரூபாயில் செலவு கணக்கைக் காண்பிப்பதை விட (அமெரிக்க) டாலரில் எவ்வளவு ஆகும் என்று சொன்னால் கம்மி போல் தோன்றும் 🙂

4. ரீடிஃப்

டாலரில் காண்பிக்கிறார்கள். ரீடிஃப் ஒரு பெரிய நிறுவனம் போன்ற எண்ணத்தை விதைத்திருக்கிறார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகமான தளம்.

5. சிலிகான் இந்தியா:

தற்சமயம் எனக்கு மிகவும் பிடித்த தளம். தினசரி மடலில் குட்டி முன்னுரையுடன் முகப்புப் படத்தையும் கொடுத்து நாய்க்கு ரொட்டித் துண்டு போல் உள்ளிழுப்பார்கள். அமேசான் அளவு மதிப்பீடுகளும், விமர்சனங்களும் கொடுக்காவிட்டாலும் பெஸ்ட் செல்லர்ஸ் வைத்திருப்பது, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கொஞ்சம் குறிப்புகள் என்று புத்தகங்களை வாங்கத் தூண்டும்படி அமைத்திருக்கிறார்கள்.

வலைப்பதிவுகளின் தலை பத்து தலைவலி பட்டியல்

Jeremy Zawodny’s blog:

1. மறுமொழி தருவதற்கு வசதி செய்து தராமல் விட்டு விடுவது.

2. சொந்தமாக எதுவும் எழுதாமல், ஏற்கனவே படித்த பதிவுகளின் சுட்டிகளைத் தந்தே காலத்தை ஓட்டுவது.

3. வலைப்பதிவுகளில் வலைப்பதிவதின் அருமை பெருமைகளை குறித்து மட்டுமே எழுதுவது.

4. ஆங்கிலப் பதிவுகளுக்கே பெரும்பாலும் பொறுத்தமென்றாலும், எழுத்துருவை தக்கினியூண்டு சைஸில் வைத்துக் கொள்வது; இயங்கு எழுத்துரு பயன்படுத்தாவிட்டால், எவ்வாறு தமிழைக் காண்பது என்பதற்கு உதவி பக்கங்களின் சுட்டி தராமல் இருப்பது.

5. ‘என்னைப் பற்றி’ என்று எந்த குறிப்பும் இல்லாமல் மொட்டையாய் வைத்திருப்பது.

6. (Blogroll குறித்து சொல்லியிருக்கிறார்; அதில் எனக்கு உடன்பாடில்லை; ஆதலால் பில் [#15] சொல்வதை வழிமொழிகிறேன்:) மற்றவர்கள் எப்படி வலைப்பதிய வேண்டும் என்று சதா அறிவுறுத்துவது.

7. என்னால் இன்று வலைப்பதியவே முடியவில்லை; நான் ரொம்ப பிஸியாக்கும் என்று வழிசலாக தினசரி வலைப்பதிவது.

8. மேய்ந்த வலைப்பதிவுகளின் தாக்கமாகவே தன்னுடைய பதிவுகளை வைத்திருப்பது. பின்னூட்டங்கள் மட்டுமே வலைப்பதிவாகாது.

9. ஆர்எஸ்எஸ் செய்தியோடை (RSS) கொடுக்காமல் இருப்பது.

10. பின் தொடரும் வசதியை (TrackBack) சரியாக உபயோகம் செய்யாதது.

எரிக் இவற்றை தலை பத்து கருத்துகணிப்பின் மூலம் வரிசைப் படுத்தியுள்ளார். தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று தனியாக ஒரு தலை பத்து கொடுக்கலாம். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியலாமா 🙂

தமிழகத்தை முன்னேற்றுவாரா முதல்வர்?

ஜெயலலிதா இரண்டாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்குவதுதான் தனது லட்சியம் என்றார். அதற்காக இதுவரை என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.

1. சென்னையை தொழில் முதலீட்டைக் கவரும் நகரமாக மாற்ற ரூ. 1,800 கோடியில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

2. கிராமப்புற கட்டமைப்புக்கு ரூ. 2,000 கோடி.

3. மூன்று இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலம்.

4. இரண்டு இடஙளில் ஆயத்த ஆடை தயாரிப்பு மையம்.

5. இரண்டு இடஙளில் தோட்டக்கலை மையம்.

6. மாநிலத்தில் 62% மக்களின் விவசாயம் சார்ந்த நிலையை மாற்றுவதற்காக, தொழிற்துறையில் புதிய திட்டங்கள்.

சமீபத்திய இந்தியா டுடே- தமிழில் அவரது ஆட்சியின் பற்றி எரியும் தலை பத்து பிரசினைகளாக சொல்லப்படுபவை:

1. விவசாயம்:

  • காவிரி டெல்டா பகுதியில் நெல்கொள்முதலை நிறுத்தியது.

  • இலவச மின்சாரத்தை ரத்து செய்வது.

2. தண்ணீர்:

  • கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பம்.

  • ஏரி/குளங்களை சீர் செய்தல்.

3. தொழில் துறை

  • நேரடியாக சந்திக்கமுடியாமை.

  • BPO போன்ற திட்டங்களுக்கு சலுகை தரவில்லை.

4. மெகா திட்டங்கள்:

  • தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

  • சேது சமுத்திரம் மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.

  • கூடன்குளம் முடியவில்லை.

  • நாங்குநேரி (திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது) தொழில் பூங்கா கிடப்பில் இருக்கிறது.

  • பம்பா-அச்சன்கோவில் நதிநீர் இணைப்பில் முன்னேற்றம் இல்லை.

  • சென்னை பறக்கும் ரயில் திட்டம் இன்னும் முடியவில்லை.

5. உள் கட்டமைப்பு:

  • 51.18% கிராமங்களே (சாலைகளால்) நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

  • போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மயமாக்குவது

6. ஆரம்பக் கல்வி

  • 75% குழந்தைகள் 18 வயதிற்குள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்.

  • தனியார் பள்ளிகளின் தரம் மற்றும் பணம் பிடுங்கும் போக்கு.

7. சுற்றுச் சூழல்:

  • மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் அதிகம்.

  • பாலாற்றுப் படுகை மொத்தமாகப் பாழாகி விட்டது.

  • 25,000 ஹெக்டேர் காடுகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுகிறது.

8. சுற்றுலா:

  • தமிழகம் என்றால் ஜெ-கலைஞர் சண்டைதான் நினைவுக்கு வருவதாக சொல்கிறார்கள்

9. நெசவாளர் பிரச்னை:

  • கஞ்சித்தொட்டியில் ஒரு வேளைக் கஞ்சிக்காக நிற்கிறார்கள்.

  • இலவச வேட்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டது.

  • பஞ்சு விலையேற்றம்.

  • அதீத மின் கட்டணம்.

  • நவீன முறைகளுக்கு மாறவில்லை.

  • கோவையில் 15/20 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.

10. பெண்கள் பிரச்னை:

  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே முண்ணனி வகிக்கிறது.

  • தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தொடர்பு கொள்ள உரிய வசதிகள் இல்லை.

  • பெண் போலீசார் சென்சிட்டிவாக இல்லை.

இந்தப் பட்டியலையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பு நோக்க வேண்டும். வளரும் நாடுகளின் குறியீடுகள் (economic indicators) கூட ஒப்பிட்டு அலசலாம்.

ஆதாரம்: இந்தியா டுடே, ரீடிஃப்.காம், கல்கி.