Monthly Archives: பிப்ரவரி 2004

ஆட்டோகிராஃப் – திரைப்பாடல் (2)

இசை: பரத்வாஜ்

பாடகர்: சித்ரா

பாடலாசிரியர்: ???

F:

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஓவ்வொரு விடியலும் சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நும் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்

உடைந்து போகக் கூடாது

என்ன இந்த வாழ்க்கையென்ற

எண்ணம் தோன்றக் கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயம் இல்லை சொல்லுங்கள்

காலபோக்கில் காயமெல்லாம்

மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே

மண் மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம்

கண்ணில் என்ன நீரோட்டம்

ஓரு கனவு கண்டால்

ஆதை தினம் முயன்றால்

ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

வாழ்கைக் கவிதை வாசிப்போம்

வானம் அளவு யோசிப்போம்

முயற்சி என்ற ஒன்றை மட்டும்

முச்சு போல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு

லட்சியஙள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை

உறுதியோடு போராடு

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்

அவமானம் தடுத்தால் நீ எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா?

துக்கம் என்ன என் தோழா?

ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்

அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஆட்டோகிராஃப் – திரைப்பாடல்

பாடி இசையமைத்தவர்: பரத்வாஜ்

பாடலாசிரியர்: ???

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே

ஏதோ ஒன்றை தொலைத்தது போலே

ஏதோ மீண்டும் பிறந்தது போலே

தாயே என்னை வளர்த்தது போலே

கண்களின் ஓரம், கண்ணீர் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி

முதல் முதல் திருடிய திருவிழா வாட்ச்சு

முதல் முதல் குடித்த மலபார் பீடி

முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு

முதல் முதல் பார்த்த டூரிங் சினிமா

முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு

முதல் முதல் ஆக்கிய கோட்டாஞ்சோறு

முதல் முதல் போன சிகு புகு பயணம்

முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

முதல் முதலாக பழகிய நீச்சல்

முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்

முதல் வகுப்பெடுத்த மல்லிக டீச்சர்

முதல் முதலாக அப்பா அடித்தது

முதல் முதலாக சாமிக்கு பயந்தது

முதல் முதலாக வானவில் ரசித்தது

முதல் முதலாக அரும்பிய மீசை

முதல் முதலாக விரும்பிய இதயம்

முதல் முதலாக எழுதிய கடிதம்

முதல் முதலாக வாங்கிய முத்தம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை

கல்லூரியில் எனக்கு ஒரு உயிர்த் தோழன் இருந்தான். மிக நன்றாக படிப்பவன். எனது கல்லூரியில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. அடுத்தவனை விட அதிகமா என்பதே முக்கியம். ஒரு வகுப்பில் முதல் பத்து சதவீதத்தில் இருந்தாலே நூற்றுக்கு நூறு எடுத்தவாறு மதிப்பீடுவார்கள்.

என் உயிர்த் தோழனோ ஒவ்வொரு பரிட்சை முடிந்தவுடன் சோகமே உருவாகவும், தற்கொலை குழப்பங்களுடனும்தான் காணப்படுவான். முதல் வருடங்களில் மிகுந்த அக்கறையுடன் விசாரித்து ஆறுதல் அளித்து வந்தோம். திருத்திய தாள்கள் வந்தவுடன் அவனின் வருத்தங்களுக்குக் காரணம் தெரிய வரும். ஓரிரண்டு கேள்விகளில் சில இடங்களில் தவறு இழைத்ததற்கு, மன்னித்தோ மதிக்காமலோ, மார்க் போட்டு இருப்பார்கள். அந்தக் கேள்வியையே முயற்சி கூட செய்யாத நாங்கள் அவனை தேற்றி இருப்பதுதான் எங்களின் வெறுப்பு.

‘அலகில்லா விளையாட்டின்’ நாயகனும் என்னுடைய தோழனுக்கு நிகராக சிந்திக்கிறான்; வருத்தப் படுகிறான்; அருகில் உள்ளவர்களின் அனுதாபங்களை கேட்டுப் பெறுகிறான். வாலிபத்தில் வாத்தியார்

பெண்ணை கைப்பிடிக்க முடியாததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருத்தப் படுகிறான். தனது குடும்பத்தை விட வேத குருவின் வீட்டிலேயே ஐக்கியப்பட்டு அங்கு நிகழும் விஷயங்களுக்கு விசனப்பட்டு விடை தேடி அலைக்கழியும் சுய விசாரணை பதிவுகள்தான் இந்த மின் புத்தகம்.

‘மேஜிகல் ரியலிசமோ’ என பயமுறுத்தும் ஆரம்பம். சாத்தானின் நரகத்தைதான் குளிர் தேசம் என்றும், இந்தியர்களின் அமெரிக்க வாழ்வையும்தான் பூடகமாக சொல்கிறாரோ என்னும் சந்தேகம். சீக்கிரமே அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து கைலாயத்தை இடஞ்சுட்டி விடுகிறார்.

துறவின் இலக்கணம், முதியோர்களுக்கு ஏற்படும் எண்ண அலைகள், ஆன்மாவின் வரையறை, துன்பங்களும் நினைவலையும், தன்முனைப்பும் வினைப்பயனும், பணத்துக்காக படிப்பா, அவலங்கள் மட்டுமே தெரியும் எழுத்துக்கள், வயதும் பக்குவமும், ஆசிரியரின் ஊக்கங்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியில் கேள்விகள் தொடுத்து, சமூகவியல் பார்வையிலும் விவரித்து, ஆங்காங்கே கதை என்னும் வஸ்து, தொட்டுக் கொள்ள நகர்கிறது.

அவனின் அப்பா இக்கால வழக்கத்தில் நகைக்கடையில் கை வைத்து முன்னேறுவதையும், தன் போதனைகளுக்கு சம்பந்தமில்லாத முற்றுப்புள்ளி வைக்காத குருவின் குழந்தைப்பேறு உடல் இச்சையும், வாழ்வைக் கண்டு பயந்து ஓடும் மனிதர்களையும், நமது புரிதலுக்கே பாரா விட்டு விட்டு, ஒதுங்கியே கதை நகர்த்துகிறார்.

இரண்டு பக்கங்களே வந்து போன அத்தையின் பாத்திர படைப்பு எதற்காக என்று உணரும் அளவு கூட, காந்தியை அலசும் ஐந்தாம் அத்தியாயம் எங்கே பொருந்துகிறது என்று இன்னும் எனக்கு புலப்படவில்லை. ஒரு தெளிவை நோக்கி கொண்டு செல்லப்பட்ட கதையும், தத்துவம் சார்ந்த அலசல்களும் திடீர் என ஒரு குலுங்கு குலுங்கி குருவின் துன்பங்களுக்கு ஒரு முடிவுரை, கைலாயப் பயணம் என சடாரென முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது. வாழைப்பழத்தை உரித்து, பழச்சாறும் எடுத்து, பாலும் ஸ்வீடெனரும் கலந்து வாயிலும் ஊத்துவார் என்னும் என் நம்பிக்கையில் மண்.

‘சம்போ சிவ சம்போ’, ‘ஓம் ஓம்’ என ஆங்காங்கே கொஞ்சம் உமா பாரதி வாடை. ஆனால், படு பாலைவன கதையின் நடுவிலும், வாய்விட்டு சிரிக்கக்கூடிய நகைச்சுவையும், பூரணியின் இதமான ஹீரோயின் வர்ணணைகளும், நாயரின் கேரளத்துத் தமிழும், திருவையாறின் தல புராணமும் நமக்கு ஒரு வெல்கம் ப்ரேக்.

ஹீரோவைப் பார்க்கும்போது திரைப்பட பித்தான எனக்கு ‘ஹே ராம்’ சாகேத் நிழலாடுகிறார். அது என்னுடைய சொந்த பாதிப்பா அல்லது பாராவின் பாத்திர படைப்பா எனத் தெரியவில்லை. ‘இருவர்’ படத்தில் பயத்தினாலோ, திமுக தலைவரினாலோ, பல முக்கிய வசனங்களுக்கு பதிலாக பிண்ணனி இசையே வந்து செல்லும். பூரணியிடம் பேச வேண்டிய சில இடங்களில் விவரிப்பே வருகிறது. உரையாடல் இடம் பெற்றிருந்தால் சுவைத்திருக்கும்.

பிரமாணம், சுருதி, தைஜஸன், 97 தையல்கள் என்று எல்லாம் நடுவில் வருகிறது. என்னைப் போன்றவர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே வாசிப்பார்கள். அருஞ்சொற்பொருள் வேண்டாம்; மற்ற புதுவரவுகளுக்குக் கொடுத்தவாறு ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கொடுத்திருக்கலாம். ஆனால், பௌத்த மடத்தில் 63 தத்துவங்களை விளக்குவது மாதிரி ஒரு அவார்ட் பட பிரசார நெடியை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

என் அம்மா அமெரிக்காவில் இருந்த பொழுது, ஒரு குண்டு மட்டுமே ஈராக்கில் வெடித்த ஒரு சாதாராண தினத்தில், என்னுடைய நிறுவனம் பொருளாதார நிலையில்லாமையின் பேரில் என்னுடைய வேலையை நீக்கி விட்டார்கள். அதற்குப் பின் வந்த பல்வேறு அமெரிக்க வேலை தேடும் முறையையும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களையும் விளக்க முருகரின் ‘மூன்று விரல்’ பயன்பட்டது. நான் படித்த சமயம் எனக்கு போரடித்த அந்த நாவல், அம்மாவை இரவு தூங்கவும் விடாமல் முடிக்க செய்தது.

அவ்வாறே ‘அலகில்லா விளையாட்டு’ம் பதினெட்டு உபநிஷதங்களும், நான்கு வேதங்களும், கம்யூனிசம், உலகமயமாக்கம், பௌத்த சமயம், இன்ன பிற சமய, பொருளாதார, வர்த்தகவியல் தத்துவங்களையும் டக்கென்று மூன்றே நாட்களில் அலச விரும்புவர்களுக்கு, கூடவே சத்தமாக சிந்தனையைத் தூண்டி வரும் அறிவு பெட்டகம்.

-பாலாஜி

27/நவ./2003

ரசிக்கும் வரிகள்:

* உயிரே போனாலும் சரி என்று தீர்மானம் செய்து விட்டால் உயிர் போகாது!

* தியானத்துக்கும் உறக்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிக்கொண்டிருப்பதைவிட புத்தியை இருட்டு மூலைகளில் முட்டிமோதவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதிலேயே பலது அகப்படும்.

* மனத்துக்கு ஏது வயசு? வெட்கம் மானம் இல்லாத மனசு. சொல்லில் இறங்கக் கூச்சப்படுகிற விஷயங்களையெல்லாம் விரித்துப்போட்டுக் குளிர் காய்கிற மனசு.

* அழகு தான் என்றாலும் அலுக்காதா என்ன?

* ஹிந்துதர்மம் ஒப்புக்கொண்டிருக்கிற ஒரே கம்யூனிசச் சிந்தனை அதுதான். ஒரு ஆன்மா தான். னால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்லது எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.

* “நாம இன்பம்னு நினைச்சுண்டு இருக்கறது வேற. நிஜமான இன்பம் வேற.”

* வாழ்க்கை தாற்காலிக நிம்மதிகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.

* “யோசிக்கத் தொடங்கியாச்சு. கேள்விகள் தோணறதுக்குள்ள படிச்சு முடிச்சுடணும்னு ஒரு கணக்கு இருக்கு. முதல்ல மனசுக்குள்ள ஏத்திண்டுடணும். அப்புறம் வயசுக்கு ஏற்ப கேள்விகள் வரும்.”

* உள்முக நாட்டம் உள்ளவன் தன் மொழியை மனத்துக்குள் அடக்கவேண்டும். மனத்தை, விழித்துக்கொண்டிருக்கிற புத்தியில் அடக்கவேண்டும். புத்தியை ஆனந்தமயமான ன்மாவில்

ஒடுக்கவேண்டும். ஆன்மாவை அமைதிப்பெருங்கடலான இறைவனிடம் ஒடுக்கவேண்டும்.

* விடிந்தால் உத்தியோகம். தேதி ஆனால் சம்பளம். வேளைக்குச் சாப்பாடு. விழுந்து புரள பெண்டாட்டி. அவ்வப்போது சந்தோஷம். அளந்து அளந்து பூரிப்பு. கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடலாம்.

* அடிக்கடி கஷ்டம் என்றாலும் ஆற்றிக்கொள்ளவும் வழிகள் உண்டு. அம்மாவின் மடி. மனைவியின் தோள். குழந்தையின் சிரிப்பு.

* எத்தனை நாளுக்கு முன்னே நடந்து ஒரு மனிதர் மேய்த்துக்கொண்டே போகமுடியும்? ஆடுகளுக்கு என்றைக்குத்தான் சுயமாகப் பாதை புரியும்?

* தெரிந்தோ தெரியாமலோ பலபேருக்குப் பலவிதமாக நாம் கடன் பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் படுகிற கடன்களை எண்ணிப்பார்க்கத் தீராது என்று தோன்றுகிறது.

* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.

* “ஆமா கல்யாணத்தைப் பண்ணிண்டவாள்ளாம்தான் என்ன சாதிச்சுப்பிடறா? தோள்ள ஒண்ணு. கையிலே ஒண்ணு. என்னவோ போர்க்களத்துலே சாதிச்சவாளுக்கு வீரப்பதக்கம் குத்திவிடறாமாதிரி. ”

கிடைக்குமிடம்: தமிழோவியம்

நன்றி: திண்ணை

ஜி. நாகராஜன்

‘குப்பைகளை மேயாமல் தெரிந்து கொள்ள வேண்டியவர்களைத்

தெரிந்து கொள்ளாத நஷ்டத்திற்கு ஆளாகாமலிருக்கும் சௌகரியத்தை

நண்பர் கிருஷ்ணன் நம்பியால் அனுபவித்து வருவதாக’ சுரா சொல்கிறார்.

அதே போல் எனக்கு ஜி.என்னை அறிமுகப்படுத்தி புத்தகத்தையும் கடனாகக்

கொடுத்த நண்பர் மாதுவுக்கு நன்றி.

புத்தகத்தில் இருந்து…

ஜி. நாகராஜன் படைப்புகள்

காலச்சுவடு பதிப்பகம்

ரூ. 145/-


‘கண்டதும் கேட்டதும்’ – ஒரு சுய விமர்சனம்

இத்தொகுப்பில் அடங்கியுள்ள என் கதைகளில் முழுமையாக சிறுகதை

இலக்கணத்தைப் பெற்றிருக்கும் ஒரே கதை ‘யாரோ முட்டாள் சொன்ன

கதை’. மற்றவை எல்லாம் (‘மிஸ் பாக்கியம்’ தவிர) வெறும் முயற்சிகளே.

ஆங்கிலத்தில் சொல்வதென்றால் அவற்றை sketches, vignettes என்று

கூறலாம். இம்முயற்சிகளிலும் என்னுடைய ஆற்றலையும் பல்வேறு

குறைபாடுகளையும் காணலாம் என்பது வேறொரு விஷயம். இந்த

அடிப்படையில்தான் நண்பர் சுந்தர ராமசாமியின் முன்னுரை அமைந்தது

என்று நம்புகிறேன்.

‘தீராக்குறை’ வாசகர்களிடத்து எந்த ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்தக்

கூடியதல்ல. அது நமது உள்ளத்தில் ஏதோ மூலையை இலேசாக

நெருடுகிறது; அவ்வளவுதான். ‘தீராக்குறை’யின் நடையிலுள்ள சிக்கனமும்

எளிமையும் சிலருக்குப் பிடிக்கலாம்.

ஆசிரியரின் வெற்றி கண்ட சிறுகதையாக ‘மிஸ் பாக்கிய’த்தைப் பார்க்கலாம்.

அதாவது சிறுகதையாக விமர்சிக்கப்படும் தகுதியைப் பெறுகிறது என்பதையே

‘வெற்றி கண்ட சிறுகதை’ என்பதன் மூலம் உணர்த்துகிறேன். அது

குறைபாடில்லாத நல்ல சிறுகதை என்று கூற முடியாது. பள்ளி ஆசிரியர்

என்ற முறையில் அதனைச் சிறுகதை என்று பார்த்தால் 40% தருவேன்.

……

வைகை, ஆகஸ்டு – செப்டம்பர் 1978


பொன் மொழிகள்

சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன் மொழிகளை’ தங்கள் கதைகளிலேயே

புகுத்தி விடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழிகளே’ இல்லை

என்று ஒரு நண்பர் குறைபட்டுக் கொண்டார். எனவே, உதிரியாகவாவது

சில ‘பொன் மொழிகள்’ உதிர்க்கிறேன்.

1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க

முடிகிறது. அதாவது இரண்டுக்கும் கிட்டத்தட்ட சம ஆயுள்.

2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர

அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.

3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான்

தேசபக்தியைப் பொறுத்துக் கொள்ள முடிகிறது.

……

இன்னும் தேங்காய் துவையல், பெண்ணின் கற்பு, உலக அமைதி,

எள்ளுருண்டை, ‘காலி சிந்த்’ புடவை, பல்லாங்குழி ஆட்டம், பொய்ப்பல்,

இத்யாதி இத்யாதி பற்றியும் ‘பொன் மொழிகள்’ தர முடியும்

ஞானரதம், மே 1972


பரத்தையர் பற்றி

‘அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா,

குரூபியா, முரடனா, சாதுவானவனா, என்றெல்லாம் கவலைப்படாது

அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்புவித்துக் கொள்கிறாலே அந்தச்

சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க

முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு

உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து

கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் ‘தேவடியாள்’ என்பதை ஒரு

வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை. வேண்டுமென்றால்

தி. ஜானகிராமனது ‘கோவில் விளக்கு’ என்ற சிறுகதையையோ அல்லது

ஏஜின் ஓனீலின் ‘அன்னா கிறிஸ்டி’ நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்…

பரத்தை மாதவியின் நல்லியல்புகள்தானே மணிமேகலையிடத்துக்

குடிகொண்டன.

சதங்கை, ஏப்ரல் 1984


நாகராஜனின் உலகம்சுந்தரம் ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு

அரை டன் கழித்துக் கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம்

நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில்

இவர் உருப்படி ஒன்று கூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்

கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை.

புரட்டி பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ! அசிங்கம்!’ என்று சொல்லி விட்டார்களாம்!

அவர் மீது இந்த உலகம் காட்டிய அக்கறை ஒரு புறமிருக்கட்டும்.

தன்னுடைய அனுபவ உலக்த்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர

அக்கறையின் விளைவுகள் இக்கதைகள்.

கதைகளை சொல்லிக் கொள்ள வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும்

உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது

இவருக்குத் தெரியும். பின்கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று

வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப் பார்க்கிறார்;

இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான், தான் செய்த ஒரே காரியம்

என்ற பாவத்துடன்.

……

‘யாரோ முட்டாள் சொன்ன கதை’யை அவர் நிகழ்த்திக் கொண்டு போகும்

முறையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. நிகழ்காலத்தில் இரண்டு கீற்று,

நிகழ்ந்து முடிந்தவை இரண்டு கீற்று, இப்படி முடைகிறார் ஆசிரியர்.

‘கண்டதும் கேட்டதும்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற முன்னுரை.

12 ஏப்ரல் 1971


முன்னுரைசி. மோகன்

‘நாளை

மற்றொரு நாளே’
நாவல் ஜி நாகராஜனுடைய பிரதானமான படைப்பு.

திருவாளத்தான் வேலைகள் செய்து வாழும் கந்தனின் ஒரு நாளைய

வாழ்க்கையை அகப்படுத்தும் நாவல். கார்கோட்டை நகரில் ஒரு

ஞாயிற்றுக்கிழமை அது. தன் குடிசையில் காலைக் கனவிலிருந்து

விழித்தெழும் கந்தன், மறுநாள் காலை லாக்கப்பில் மீண்டுமொரு

அதிகாலைக் கனவிலிருந்து விழித்தெழுவது வரையான ஒரு நாளின்

நிகழ் சம்பவங்களும், நினைவிலிருந்து கிளர்ந்தெழும் கடந்த காலச்

சம்பவங்களும், கிளைக் கதைகளுமாக நெய்யப்பட்டு கந்தனின் 12

ஆண்டு கால வாழ்க்கையை வடிவமைத்திருக்கும் நாவல்.

“நீங்க வாழ்க்கையில் எதைச் சாதிக்கணும்னு திட்டம் போட்டிருக்கீங்க?”

என்று கேட்கும் முத்துச்சாமியிடம், “எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா

வயத்துல வந்து பொறந்தேன்” என்று சிரித்தபடிக் கூறும் கந்தன், தூங்கிக்

கொண்டிருந்த தன்மீது பானையை வீசியெறிந்து உடைத்து நொறுக்கிவிட்டு

சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்ட மகன் சந்திரனைப் பற்றி

நினைக்கும்போது, “அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை

மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகாரமாகவோ

தோன்றுகிறது” என்று சிலாகித்துக் கொள்ளும் கந்தன், 12 ஆண்டுகளுக்கு

முன்னர் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்குமென்று எண்ணி விலைப்பெண்ணாக

வாழ்ந்த மீனாவைத் தற்செயலாகக் கோவிலில் சந்தித்த மாத்திரத்திலேயே

மணக்க எண்ணி மணந்து கொண்டு பின்னர் மீனாவை விலைப் பெண்ணாகத்

தொழில் புரிய வைக்கிறான்.

……

ஜி நாகராஜன் படைப்புகளின் முழுமையான தொகுப்பு இது. இத்தொகுப்பில்

‘நாளை மற்றொரு நாளே’ (நாவல்), குறத்தி முடுக்கு (குறு நாவல்), 33

சிறுகதைகள், ‘நிமிஷக்

கதைகள்’
என்ற தலைப்பில் நான்குக்

குட்டிக்கதைகள் இவற்றோடு கட்டுரைகள், உதிரிக் குறிப்புகள்,

விமர்சனப் பார்வைகள் என சில உரைநடை எழுத்துகளும் இடம்

பெற்றிருக்கின்றன.

……

ஜி.என் தன் சிறுகதைகளில் பல்வேறு வாழ்நிலைக் கலன்களைக்

கையாண்டிருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் வளமான மரபில் ஜி.

நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதாலேயே

முக்கியத்துவம் பெறுகிறது. அதிர்ச்சிக்காகவோ, கிளர்ச்சிக்காகவோ,

பரபரப்புக்காகவோ எழுத்தில் காட்டிய துணிச்சல் இல்லை இது.

வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ,

இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ

இன்றி அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் துணிச்சல்.

ஜனசக்தி வாரமலரில் இவருடைய அணுயுகம் கதை

பிரசுரமாவதிலிருந்து இவருடைய படைப்புலகம் விரியத் தொடங்குகிறது.

இவருடைய எழுத்துகள் சரஸ்வதி, சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை,

ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட்

வீக்லி ஆ·ப் இந்தியா போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.


நன்றி: தமிழோவியம்