Monthly Archives: பிப்ரவரி 2004

கணினி உபயோகங்கள்



For additional tech toons visit jklossner.com

எனக்குப் பிடித்தக் கதைகள்(73) – பாவண்ணன்

தேடியதும் கிடைத்ததும் – கரிச்சான் குஞ்சுவின் “நூறுகள்”

1)

பிறகு ஏதோ முடிவுக்கு வந்ததைப்போல பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று ரயிலிலிருந்து இறங்கினாராம். நிலையத்தை விட்டு பத்துநிமிட தூரம் நடந்து வந்து ஒரு விடுதிக்குள் தேநீர் குடிப்பதற்காக நுழைந்தாராம். பிறகு, வெகுஇயல்பாக அப்பையைத் திறந்து பார்த்தாராம். குழந்தைகளுக்கான ஒருசில ஆடைகள். சில புதிய காலணிகள். வண்ணக் காலுறைகள். ஒரு பொம்மை. சில ஆப்பிள்கள். கொய்யாப்பழங்கள். இவற்றுக்கிடையே கைக்குட்டையால் கட்டப்பட்ட நூறு ரூபாய்க் கட்டொன்றும் இருந்ததாம். யாரிடமிருந்தோ கைப்பற்றிக்கொண்டு ஓடோடி வந்ததைப்போன்ற எண்ணங்களும் பின்னாலேயே யாராரோ துரத்திக்கொண்டு வருவதைப்போன்ற எண்ணங்களும் ஒருசில நொடிகளுக்கு மனத்தை அழுத்தினவாம்.

“அந்தப் பயணமே யாரையாவது பார்த்துப் பணத்தைப் புரட்டி எடுத்துக்கொண்டு வருவதற்காகத்தான். பத்துப்பேரைப் பார்த்தோம். பார்க்காத அந்தப் பதினோராவது ஆள் தாமாகவே முன்வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளலாமே” என்று பதறும் தன் மனத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாராம். வீட்டுக்கு வந்ததும் அறையை மூடிக்கொண்டு பணத்தை எண்ணியிருக்கிறார். பத்தாயிரம் ரூபாய். அப்போதே மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு வந்தாராம். திரும்பிவரப் பேருந்துக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை அங்கேயே ஒரு வங்கியில் மகனுடைய பெயரில் போட்டுவிட்டாராம்.

எல்லாவற்றையும் சொல்லிமுடித்துவிட்டுத் தான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை என் முன்னால் வைத்தார். நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எழவில்லை. சரி என்கிற பதிலையே அவர் ஒரு பக்கம் முன்வைத்துக்கொண்டு தவறுதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து அவர் வாதங்களை அவரே நொறுக்கும்படி சரிதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களையும் அடுக்கினார்.

—-

2)

வாழ்வும் ஒரு சீட்டாட்டம் போலத்தான். வெற்றிக்கான சீட்டு கிடைத்துவிட்டால் ஆட்டத்தில் மகிழ்ச்சி பிறந்துவிடும். ஆனால் அச்சீட்டின் வருகையோ வராமையோ நம் கையில் இல்லை. அட்டைகளின் சுழற்சியில் யாருக்கு அது வருமோ , யாருக்கு அது பொருந்திப்போகுமோ என்பது இறுதிவரை தெரிவதே இல்லை. வாழ்வில் அடைகிற வெற்றிக்கும் இப்படி ஒரு வெற்றிச் சீட்டு தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த வெற்றிச் சீட்டு எந்த முயற்சியும் இல்லாமலேயே கிடைத்துவிடுகிறது. வேண்டாம் என்று உதறித் தள்ளினாலும் காலடிக்கு வந்து சேர்கிறது. வேண்டும் என்ற தவமிருப்பவர்கள் கைகளில் அகப்படுவதே இல்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போது வரும் எப்போது கைநழுவிப்போகும் என்பது தெரிவதும் இல்லை.

எப்போதுமே தோல்வியைத் தழுவுகிறவர்தான் அவர். வாய்ப்பேச்சில் எப்படியாவது வெளியுலகில் காரியங்களைச் சாதிக்க முயல்பவர். கதை நடக்கும் நாளில் வெளியுலகில் தம் காரியத்தில் வெற்றி காண முடியாதபடி பெருந்தோல்விகள் காத்திருக்கின்றன. தன் படுக்கைக்கு நூறாவது பெண்ணை அழைத்துவந்ததை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் முதலாக சுந்தர காண்டத்தை நூறாவது முறையாகப் பாராயணம் செய்வதை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் வரை யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக காலமெல்லாம் தோல்வியையே தந்தபடியிருந்த சீட்டாட்டம் வெற்றியைத் தருகிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனிப்பட்ட அர்த்தம் எதுவுமில்லை. அவை வெறும் சொற்குவியல். அந்த உண்மையை நாம் கண்டடையும்போது நம் மனத்தில் “நூறுகள்” என்னும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதை ஆழமாக வேரூன்றுகிறது.

*

http://www.thinnai.com/ar0822035.html

‘நாவலும் யதார்த்தமும்’ – சுந்தர ராமசாமி

1.

பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் மேடைப் பேச்சுகளை உள்ளூர ஒரு அநாகரிகம் என்றுதான் என் மனம் மதிப்பிடுகிறது. தன் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து தான் விரும்பும் கருத்துக்களை பேச்சாளர் கூறுவது; அதற்கான நேரத்தையும் அவரே தீர்மானித்துக் கொள்வது; பேசி முடித்ததும் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தன் பேச்சைப் பற்றி என்ன அபிப்ராயம் என்பதை அறிய துளிகூட அக்கறை இல்லாமல் மற்றோரிடத்துக்குப் பேசப் போய்விடுவது. பேச்சாளர் என்ன நினைக்கிறார் என்பது கேட்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனால் பேச்சைக் கேட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பேச்சாளருக்குத் தெரிவதேயில்லை. அவருக்கு அதற்கான அக்கறையும் இல்லை. சிந்தனை உலகத்தைச் சார்ந்த இந்த ஒருவழிப் போக்குவரத்தைத்தான் நான் அநாகரிகம் என்கிறேன்.

—-

2.

எங்களுக்கு அந்தக் கவலை இல்லை என்று நீங்கள் சொன்னால் அதிகக் கவலை கொண்டிருக்கிறீர்களோ என்று நான் சந்தேகப்படத் தொடங்குவேன். ஏனென்றால் எந்த விஷயத்தைப் பற்றி நான் கவலை கொண்டிருக்கிறேனோ அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் யாராவது விசாரித்தால் எனக்கு அதுபற்றி கவலையில்லையே என்றுதான் சொல்வேன். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதுதானே மனித சுபாவம். மனிதர்களுக்குரிய அநேக சுவபாவங்கள் எனக்கும் உண்டு. என் பிம்பத்திற்கு அந்தச் சுபாவங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்டு.

—-

3.

ஒரு நாவலைப் படிக்கும்போது அது ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உறவு சாதகமானதா? பாதகமானதா? நிறைவைத் தரக்கூடியதா? அல்லது குறையுணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதா என்பதையெல்லாம் இரண்டாவதாகப் பார்க்க வேண்டியது. நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். நமக்குக் கட்டோடு பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். நண்பர்களைவிட அதிகமாக அவர்களை நினைத்துக் கொள்கிறோம். எதற்குச் சொல்கிறேன் என்றால் நமக்குப் பிடிக்கும் நாவல்கள்தான் நம்மைப் பாதிக்கின்றன என்பது அல்ல. பிடிக்காத நாவல்களும் நம்மைப் பாதிக்கின்றன. எதிர்மறையாகப் பாதிக்கின்றன. எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தாத நாவல் மனதிலிருந்து உதிர்ந்து போய்விடுகிறது. நேற்றுப் படித்து முடித்த ஒரு நாவல் இன்று மனதிலிருந்து உதிர்ந்துபோய்விட்டது; 20 வருடங்களுக்கு முன்னர் படித்த நாவல் மனதுக்குள் இன்றும் ஜீவகளையுடன் இருக்கிறது. ஏன் ஒன்று உதிர்ந்துபோயிற்று? ஏன் மற்றொன்று உயிர்ப்புடன் வாழ்கிறது? படைப்புச் சம்பந்தப்பட்ட அடிப்படையான பிரச்சனையே இதுதான்.

—-

(திருவண்ணாமலை, முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை – 16.8.1999)

http://www.thinnai.com/ar0815033.html

தமிழில் எழுதலாம் வாருங்கள்! – காசி

வலையில் பரப்பலாம் வாருங்கள்: “புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.”

சுவாரசியமான கேள்விகளுக்கு விடையளிப்பதாக வாக்கு கொடுத்து காசி ஆரம்பித்திருக்கிறார்.

கம்பீரம் – திரைப்பாடல் அறிமுகம்

நட்சத்திரங்கள்: சரத்குமார், லைலா, ப்ரணதி

இசை: மணி ஷர்மா

ஒரு சர்க்கரை நிலவேவும், ஆள்தோட்டா பூபதியும் கொடுத்த பின்பு மணி ஷர்மாவின் இசைக்குப் பெரிய ரசிகனாய் ஆகி யிருந்தேன். ஏழுமலை, நரசிம்மாவுக்குப் பிறகு ‘சித்தப்பா’ படத்துக்கும் இது போதும் என்பதாலோ என்னவோ அடக்கியே வாசித்திருக்கிறார்.

1. ஒரு சின்ன வெண்ணிலா கல்பனா 1/4 (பாடல் வரிகளுக்காக)

காதலனின் நினைப்பில் கசிந்துருகும் காதலி தாலாட்டுகிறார். காதலியின் தோழிகளும் கோரஸ் நடனமாடுகிறார்கள். தூக்கம் வராமல் கஷ்டப்படும்போது கேட்டால் பாடல் முடிவதற்குள் ‘கொர்’ விடலாம். தமிழ் சினிமா தத்துவத்தின் படி, இவ்வாறு ஆராதித்தால், இடைவேளைக்குப் பிறகு அனேகமாக ஹீரோயினுடன் சண்டையோ, அல்லது மனைவியின் அகால மரணமோ நிச்சயம். எம்.ஜி.ஆரின் வழித்தோன்றலாக, உதயசூரியனை குறித்தும் மறக்காமல் நினைவூட்டுகிறார்.

சிரிக்க வைக்கும் வரிகள்:



‘அந்தக் கோவில் கதவை மூடு

இவள் கைகூப்பும் கடவுள் நீதான்!

அடக் கண்ணீரே இல்லாக் கண்கள்

இனி என்னோட கண்கள்தானே!’

2. கண்ணின் மணியே எஸ்.பி.பி., குழந்தை வைஷாலி 2/4

ரொம்ப நாளைக்குப் பிறகு அப்பாவும் பையனும் பாடும் அழகிய மெலடி. நடுநடுவே வரும் குழந்தை குரலில், கொஞ்சம் ரங்கீலாவின் சிறுவன் டைப் ராப்பும் பொருத்தமாக இருக்கிறது.

குழந்தையின் கேள்வி வரிகள்:



‘மிக்கி மவுஸா மாறி டிஷும் போட வாப்பா…

உர்ருன்னுதான் எப்பவுமே இருப்பது ஏம்ப்பா?’

3. செம்பருத்தி பூவே ஸ்ரீனிவாஸ், கங்கா 1.5/4

சரத்தும் லைலாவும் வெளிநாட்டில் டூயட் பாடுகிறார்கள். நொடிக்கொரு சுற்றுலா தளம். ஜிகினா ஆடைகள். குழப்பமான உள்ளூர்காரர்களின் பார்வைகளுக்கு நடுவே ஆடுகிறார்கள். நாம PG-13 மட்டும்தானே பொதுவிடங்களில் செய்வோம், இவர்கள் கிட்டதட்ட R படத்துக்கான செய்கையெல்லாம் பப்ளிக்காக செய்கிறார்களே என வியக்கிறார்கள்.

சிந்திக்க சில வரிகள்:



‘மனசுக்குள்ள வந்து மைதா அரச்சியே

முரட்டுத்தனமே உன்ன நான் முறுக்கிக் காட்டட்டா’

4. சம்பல் காட்டு கொள்ளைகாரி சங்கீதா 1.5/4

வெண்குழல்விளக்குப் பிடிக்க நிச்சயம் தியேட்டருக்கு வெளியே சென்று வரலாம். அதற்குள், அரைகுறை ஆட்டத்தை ரசிக்கும் வில்லனின் குகைக்குள் சரத்குமார் புகுந்திருப்பார். தங்கர் பச்சானுக்கு ‘பத்திரக்கோட்ட மாமா’ தேவைப்படுவது போல் ‘கம்பீர’த்துக்கும் ஆட்டப் பாடல் அவசியம்தான் போல!

கொஞ்சம் XXX காட்டும் வரிகள்:



‘இதோ இந்த இடுப்பு…

செங்கல் சூளை நெருப்பு

பஸ்மமாகத் தொட்டுக்கோடா டேய்!

ஒரே ஒரு சுண்டு விரல்

என்மேல வச்சுப்பாரு

ஒரு கிலோ எடை கூடும் டோய்’

5. நானாக நானிருந்தேன் விஜய் யேசுதாஸ், சுஜாதா 3/4

கிராமப்புற லொகேஷன். சுங்கிடிப் புடவையில் பாடலின் ஆரம்பத்தில் தோன்றும் லைலா, தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் தாவணி, அதுவும் இல்லாத பாவாடை-சட்டை என விதவிதமாக வெட்கப்படுகிறார். மணி ஷர்மாவின் அட்டகாசமான தெலுங்கு பீட் + சொக்கும் வரிகள் + காதல் தெறிக்கும் பாடகர்கள், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.



‘குறுத்தோலையாய் நானும் உன் வாசல் வந்து ஊஞ்சலாட

மாவிலையாய் நீ சேர்ந்து கொள்வாயோ?

தூரிகை உதடு நீதான்

காகிதக் கன்னம் நான்தான்

இரவும் பகலும் எழுதேண்டா’

பாடல்களைக் கேட்க இங்கே செல்லவும்.

நன்றி: தமிழோவியம்

வலைப்பூ வைரஸ்

கோழி சுரம், சார்ஸ் போன்று இணையத்தில் மட்டும் தோன்றியிருக்கும் நோய் உங்களைத் தாக்கிவிட்டதா?

10. கணினி திரை ஒளிர ஆரம்பிப்பதற்கு முன்பே வலைப்பதிவுகள், உங்கள் கண்களுக்குத் தெரியும்.

9. ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல், நான்கு தடவையாவது வலைப் பதிவீர்கள்.

8. உங்களுக்கென மூன்று வலைப்பதிவாவது இருக்கும்.

7. கேட்கும் பாடல், boss சொல்லும் வணக்கம், காலையில் ட்ரெயின் தவறவிட்டது என எதைப்பற்றியும் வலைக்குறிக்க விருப்பம்.

6. புதிதாக யாராவது இலவசமாக வலைப் பதிக்க வாய்ப்பளித்தால், பயனராகப் பதிந்து விடுவீர்கள்.

5. பத்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி பின்னூட்டம் பகுதியை நோட்டம் விடுவீர்கள். அரை மணிக்குள் பதில் எதுவும் வராவிட்டால், பதில் வராத சோகத்தையே வலைப்பதிய வேண்டும்.

4. தினசரி நூறு வலைப்பதிவுகளையாவது மேய்ந்து, மறுமொழி வாயும் வைத்து விடுவீர்கள். பதில் பெரிதாகத் தோன்றினால், அதை அப்படியே உங்கள் பதிவுக்கு புதிய கருவாக்கி விடுவீர்கள்.

3. வார்ப்புருவை வாரத்துக்கு ஒருமுறையும், பின்னூட்ட சேவகரை மாதத்துக்கு ஒரு முறையும், வண்ணக்கலவைகளை பத்து நாளுக்கு ஒரு தடவையும், வடிவமைப்பை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாற்றுவீர்கள்.

2. இன்று புதிதாக பார்த்த ஸ்மைலிகளையும், புதிய சின்னங்களையும் பின்னூட்டப் பெட்டிகளில் கொடுக்க வேண்டும்.

1. எட்டு விதமான வருகைப் பதிவேடோடு, அரட்டை பெட்டி, அறிவிப்புப் பலகை, செய்தியோடை, விருந்தினர் கணக்கெடுப்பு இத்யாதி வைத்துக் கொண்டிருப்பீர்கள்.

கொசுறு: அரசியல் சின்னமாக எங்கவது விளம்பரம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தால், வலைப்பதிவின் முகவரியை சுவரொட்டுவீர்கள்.

மூன்றுக்குக் கீழே ஆம் சொன்னால் – நீங்கள் கூகிள் மூலமாக இங்கு தடுக்கி விழுந்திருப்பீர்கள்.

மூன்று-ஐந்து கேள்விக்கு ஆம் என்றால் – வலைப்பூ மயக்கத்தில் உள்ளீர்கள்.

ஆறு கேள்விக்கு மேல் ஆம் என்றால் – வலைப்பூவிற்கு அடிமையாகி விட்டீர்கள்…

நன்றி: பவித்ரா அரசி

இந்தியனென்று சொல்லடா… இந்தியில் பேசடா…

தமிழ் தழைக்குமா என்று இலக்கிய உலகில் இருபத்தி ஆறாம் முறையாக (நான் கணக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து) விவாதம் நடந்து கொண்டிருக்க, இந்த ஹிந்திகாரர்களை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது. இன்னும் பெயரிலிகள் கால் வைக்காத விரல் விட்டு எண்ணக் கூடிய வலைப்பதிவுகள் மட்டுமே (நானறிந்த வரையில்) உள்ளன. சேவாக் தன்மானம் பார்க்காமல் ஆங்கிலக் கேள்விகளுக்கு ஹிந்தியில் பதிலளிக்கிறாராம். அவர்களும் நியாயமான கோபத்துடன், ஆங்கிலப் பத்திரிகைகளை மொத்தமாக தாக்கியும், ஹிந்தியில் பேசுவதில என்ன அவமானம் என்றும் (நம்மைப் போன்றே) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…

எனக்கு ஒரு டவுட்: பந்து வீச்சாளர் ‘பாலாஜி’ தமிழில் பேசினால் இந்திய ஊடகங்கள் வறுத்தெடுப்பதை விடுங்கள்; இவர்காள் என்ன சொல்வார்கள்!

(பின்னறிவிப்பு: “நான் ஹிந்திக்கு எதிரியல்ல; ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவாளனுமல்ல”)

அட்வைஸ் கொடுக்க வயசு ஒரு தடையா?

©WONG MAYE-E/AP பதினேழு வயதே நிரம்பிய பாடகியானாலும் ஸ்டேசி ஆர்ரிகோ, ஆடை துறக்கும் சக பாடகிகளை கிண்டலடிக்கிறார். க்ரிஸ்டினாவும் ப்ரிட்னியும் பெண்ணினத்துக்கே இழுக்கு என்று சொல்லிவிட்டு, தான் ஒருபோதும் பாடல் விற்பதற்காகவோ, புகழ் பெறுவதற்காகவோ ஆடை குறைப்பு நடத்தமாட்டேன் என முழங்குகிறார். உண்மையான கவர்ச்சியான தன்னம்பிக்கை நிறைந்த மனதையும், மரியாதை தரக் கூடிய தோற்றத்தையும், பண்பட்ட நடத்தையையும் கொண்ட மதிக்கத்தக்க பெண்ணாக வேண்டும் என்னும் இவர் போன்ற எம்.டி.வி கால கலைஞர்களை பார்ப்பது அரிது.

உலக விற்பனை பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள இவர் பாடுவது என்ன பாடல் தெரியுமா? தற்கால கிறித்துவ போதகப்பாடலகள்!

எனக்குப் பிடித்த பத்து நடிகர்கள்

1. கிரீஷ் கர்னாட் – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?

2. நக்மா – ‘பாட்சா’ படம் ஒன்று போதுமே!?

3. பிரபு தேவா – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?

4. வடிவேலு – ‘ஊர்வசி… டேக் இட் ஈஸி ஊர்வசி’ பார்த்ததுண்டா!?

5. எஸ்.பி.பி. – – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?

6. ரகுவரன் – – ‘காதலன்’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?

7. நந்திதா தாஸ் – ‘அழகி’ படத்தில் பார்த்திருப்பீர்களே!?

8. சீமா பிஸ்வாஸ் – தலை பத்தில் இப்படித்தான் பெயர்கள் போட வேண்டும்!

9. நாகேஷ் – தலை பத்தில் இப்படித்தான் பெயர்கள் போடக் கூடாது

10. இயக்குநர் ஷங்கர் – ‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்’

பாட்டில் ஒரு விநாடி அசத்துவாரே…. பார்த்திருக்க மாட்டீர்கள்!

ஊக்கம்: மரத்தடி மடலில் சுரேஷ்

இருக்குமென்பார்… இருக்காது! இல்லாதென்பார்… கிடைத்து விட



Bush... another warrior from Texas