புத்தகக் குறிப்புகள் – ஆர். பொன்னம்மாள் (6)


ஈசாப் நீதிக் கதைகள் பாகம் 1,2: 1998 மார்ச்சில் கங்கை புத்தக நிலையத்தாரால் பிரசுரிக்கப் பட்டவை. பொறுக்கு எடுத்த நவமணிகள். முதல் பாகத்தில் 19 கதைகளும் (96 பக்கம்), இரண்டாம் பாகத்தில் 22 கதைகளும் (103 பக்கம்) இருக்கின்றன. ஒரு கதையில் கழுகு செய்த நன்மைகளும், பசி நட்பை மறக்கச் செய்த விதமும் சொல்லப் பட்டிருக்கிறது. குட்டிக் குட்டிக் கதைகளை மாணவர் மூலமாக நிகழ்கால உவமானக் கதைகள் கூறி விளக்கி யிருக்கிறார். இது என் தாய்க்குக் கை வந்த கலை. இந்த 25 வயதுக் குழந்தை விரும்பிப் படித்த கதைகள்.

பண்டிகை, பலகாரம், மந்திரம் மகிமை: 1983 அக்டோபரில் அம்பாள் பதிப்பக வெளியீடு. 224 பக்கங்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் செய்ய வேண்டிய பலகாரம், பூஜா மந்திரம், வழிபாட்டு முறை, அதன் மகிமை எல்லாம் அடங்கியுள்ள நூல். மொத்தம் 19 பண்டிகைகள் உள்ளன. தமிழ்ப் போற்றிகளும் உண்டு.

ஸ்ரீசித்ரகுப்த பூஜை: 1997 ஏப்ரலில் கிரி ட்ரேடிங் ஏஜன்ஸியால் வெளியிடப் பட்ட நூல். 32 பக்கங்கள்.

அரிச்சந்திர புராணம்: வானதி அவர்களின் மைந்தரான திரு. ராமநாதன் கேட்டு எழுதிப் பிரசுரித்த புத்தகம் இது. அரிச்சந்திரன் பொய் சொல்லி வருணனை ஏமாற்றினான் என்ற செய்தி எனக்கு முதல் அதிர்ச்சி. அவர் எப்படிப் சத்தியவானன் ஆனான் என்பது சுவாரஸ்யமான கதைப் போக்கு. 123 பக்கங்களில், 15 அத்தியாயங்களில் தர்ப்பையைக் கழுத்தில் கட்டிப் பிள்ளையை விற்ற விசுவாமித்திரரின் மனைவியை சந்திக்கலாம். திரிசங்கு, நிமி இவர்களோடு தூங்கியதற்காக சபித்த வசிஷ்டரையும் காணலாம்.

பிள்ளையை விற்ற அஜீகர்த்தன், விசுவாமித்திரரின் வளர்ப்புப் பிள்ளை சுனச்சேபன் ஆகியோரும் உலவுகிறார்கள். முப்பது விதமான நரகங்கள் விஸ்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாபம் செய்ய மனம் நடுங்கும் அவைகளைப் படித்தால். இதே போல் சொர்க்க விபரங்களும் தரப் பட்டிருக்கின்றன. பாதாள உலகமும் வர்ணிக்கப் படுகிறது. இவற்றை யெல்லாம் எமதர்மனே அரிச்சந்திரனுக்குச் சொல்கிறார்.

(சிறு குறிப்பு வளரும்)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.