HBO Serials – “Getting On”: Doctors vs Nurses vs Patients

சன் தொலைக்காட்சி எதற்காக அதிகம் பார்க்கப்படுகிறது? கலைஞர் முன் நிகழ்த்தப்படும் கலை மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்காகவா? அல்லது வணக்கம் தமிழகம் போன்ற உரையாடல்களும் செய்திகளும் அறியவா? நிச்சயமாக, ராதிகா நடித்து, பாரா போன்றோர் எழுதும் நெடுந்தொடர்களுக்கத்தான்.

நான் எச்.பி.ஓ. பக்கம் ஒதுங்குவதும் HBOவின் சீரியல்களுக்காகத்தான்.

இந்த வருடம் மூன்று சுவாரசியமானதாகத் தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட True Detective ஏமாற்றவில்லை. அதைத் தனியாக கவனிப்போம்.

பிபிசி-யில் இருந்து அறிவுக்கடன் வாங்கி Getting On உருவாகி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் நடப்பதை வைத்து காமெடி செய்கிறார்கள். ER, Grey’s Anatomy போன்றவை மருத்துவமனையை இறுகிய முகத்துடன் அணுகி தமிழ்த் தொலைக்காட்சி போல் அழ வைத்து, நேஷனல் ஜியாகிரபி போல் உடலின் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்து, பி.பி.எஸ். போல் ஆவணப்படத்தின் ஆழத்துடன் நோய்களையும் சிகிச்சைகளையும் சொல்வதைப் பார்த்த கண்களுக்கு ஆறுதலாக இருந்தது.

முன்னாபாய் எம்பிபிஎஸ் பார்த்ததால் மட்டும் அல்ல… மருத்துவர்களை விட நர்ஸ்கள் மேல் நிறையவே மரியாதை உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கண்கூடாக பார்த்ததினால் இருக்கலாம். உறவினர்களை பார்க்க செல்லும்போது இராப்பகல் பாராமல் உழைக்கும் சிரத்தையை தரிசித்ததால் இருக்கலாம். எச்.பி.ஓ.வில் வரும் “கெட்டிங் ஆன்” அவர்களின் சிரமங்களை கீழிரக்காமல், நகைச்சுவையாக சித்தரிக்கிறது.

”அரட்டை அரங்கம்” ஆரம்பிக்கும் முன்பு விசுவும், “சம்சாரம் அது மின்சாரம்” ஆல்பர்ட்டு ஆவதற்கு முந்தைய கிஷ்மூவும் தோன்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சியில், மேல்நாட்டு கிஷ்மூ ஆங்கிலத்தில் பேசப் பேச, அதைத் தமிழில் விசு மொழிபெயர்ப்பார். அவர் “Peace” என்பார். விசுவோ, “பட்டாணி” என்பார்.

கொஞ்சம் போல் ஆத்திரமான கிஷ்மூ “Peace… Peace…”. விசு “பட்டாணி… பட்டாணி…”. இப்படியே நாலைந்து நிமிடம் எல்லா உணர்ச்சிகளிலும் வடிவங்களிலும் பட்டாணியும் அமைதியும் அல்லல்படும். அதைப் போன்ற எளிமையான துணுக்குகளும், வாழ்க்கையின் அபத்தங்களும், ஆராய்ச்சிகளின் வெற்றுணர்தல்களும், இன்ஷூரன்சின் அராஜகங்களும் போகிற போக்கில் கிண்டல் அடிக்க எச்பிஓ சரியான கன்னல்.

அமெரிக்காவிலும் அறிஞர் அண்ணா நினைவு நாள்

இன்று அண்ணாவின் நினைவு நாள். அவருக்கு அமெரிக்காவில் கூட அணுக்கத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் கெண்ட்ரிக் லமார். அவரின் சமீபத்திய நினைவாஞ்சலியை கீழேக் காணலாம்.

இருவரின் ஊரும் ”கா”வில் அரம்பிக்கிறது. காம்ப்டனில் பிறந்து வளர்ந்தவர் கெண்ட்ரிக். காஞ்சீவரத்தில் பிறந்தவர் அண்ணா. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. லமாரின் பாடலைக் கேட்டு எல்லோரும் அந்த வேத வாக்கியத்திற்கு ஒப்புக் கொண்டு சாமியாடுவதை விழியத்தில் பார்த்திருப்பீர்கள்.

”It’s a revolution, I suppose
We’ll paint it red to fit right in”
– என்கிறார் கென்ட்ரிக். புரட்சித் தலைவருக்கு குரு என்னுடைய குருதானே என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

அதற்கு முன் கோவில் சுவர்களில் சிவப்பும் வெளுப்பும் இருக்கும். அதை மாற்ற தி.மு.க., அதிமுக, தே.மு.தி.க., என எல்லோர் கொடிகளிலும் சிகப்பை அறிமுகம் செய்து, பட்டி தொட்டியெல்லாம் கொள்ளையடித்தவர் அண்ணா.

”Bury me alive, bury me with pride”
– என்கிறார் லமர். அண்ணா இருக்கும்போதே பதவியாசை கொண்டு போட்டி நடந்ததை இங்கேக் குறிப்பிடுகிறார். அறிஞர் ஆவதற்கு முன்பே அண்ணாவை புதைத்துவிட்டதை குறிப்பால் உணர்த்துகிறார் கெண்ட்ரிக்.

இந்தப் பாடலின் போது டெய்லர் ஸ்விஃப்ட் தலையாட்டுவது துணையிருந்தாலும் அதை மேடையில் ஏற்றாத அண்ணாவின் நற்குணத்தையும் மக்கள்செல்வம் இல்லாத நிலையையும் நமக்கு அறிய வைக்கிறது.

கடல் கடந்து அண்ணா புகழ் பாடும் கெண்ட்ரிக் வாழ்க! அவரின் இசைக்கு ஆடும் ஸ்விஃப்ட் புகழ் ஓங்குக!!

அறம் – ஆகாரம் – ஆகாத்தியம்

கல்ப காலம் கழித்து நேற்று அன்னா ஹசாரேவாக இருந்தேன்.

இதுதான் காரணம் என்றில்லை. கடையில் வாங்கும் பொறை போன்ற தானியக் கலவைகளின் மேல் கோபம் ஒரு காரணம். அதே அதே காலை உணவா என்னும் அலுப்பா என்பது இன்னொரு காரணம். காலை உணவைத் தவறவிடுவது மாபாதகம் இன்னொன்றில்லை என்று அறிந்தது மற்றொரு காரணம். அரசன் போல் பிரேக்ஃபாஸ்ட் உண்ணாவிட்டால், மதிய உணவு புசித்து உடல்நலத்தை கெடுக்க வேண்டாம் என்பது அடுத்த காரணம். உடம்பில் இருக்கும் கொழுப்பு கவனித்துக் கொள்ளும் என்பது முக்கிய காரணம்.

நேற்றைய தினம் அமாவாஸ்யை. பெற்றோரில் எவரையேனும் இழந்தவர்கள் இரவு சாப்பிடக் கூடாது. இரமலான் கூட வரப் போகிறது. ரம்ஜானுக்கு ஐந்து மாதம் இருக்கிறது என்றாலும், தேர்தல் வரும்போதா வேட்பாளர் களத்தில் இறங்குவார்? திங்களன்றுதான் ஏகாதசி கழிந்திருக்கிறது. உண்ணாவிரதத்திற்கு பெயர் பெற்ற அண்ணல் அரிச்சுவட்டில் உபவாசம் இருக்க உகந்த நாள்.

அம்பரீஷன் போல் துர்வாசர் யாரும் இங்கு வீட்டிற்கு அதிதியாக வரப் போவதில்லை. அவரவர்களின் இரயில் நிலையங்களிலும் பொதுச்சோலைகளிலும் வீடற்றோர் இன்னொரு பட்டினியை முடித்து எழுந்திருப்பர். அவர்கள் நிலைத்தகவல் இடும் காலம் வரும் முன் சோம வார விரதமும் இருந்துவிட வேண்டும்.

ஜெமோ எஃபெக்ட்: படிப்பதில் எல்லாம் வெண்முரசு

Benji_Chinelo_Short_Story_Fiction_Red_New_Yorkerநியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.

பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.

வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.

கதையில் இருந்து..

”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 2

முந்தைய பதிவு

1. ”கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.”

திரும்பிப் பார்ப்பது கிரேக்க தொன்மத்திலும் ஆதிசங்கரர் புராணக் கதைகளிலும் கூட அடிக்கடி வருகிறது. உதாசீனப்படுத்துவது ஒரு வகை என்றால், “உனக்கும் கீழே உள்ளவர் கோடி!” என சொல்வது கூட திரும்பிப் பார்ப்பதில் ஒரு வகை.

2. ஜெயமோகனின் மகாபாரதம் படிக்கும்போது உங்களுக்கு எந்த மாதிரி உணர்வு வருகிறது? கல்கியின் “பொன்னியின் செல்வன்” போன்ற அனுபவம் என நினைத்து; சுஜாதா எழுதிய சரித்திர நாவலான “இரத்தம் ஒரே நிறம்” போன்ற எதிர்பார்ப்புடன் துவங்கினால்; சாண்டில்யன் கதை படிப்பது போல் இருக்கிறது. ஜெயமோகனிடம் எனக்குப் பிடித்ததாக இருப்பது அவர் எழுதும் உளவெளிப்பாடுகளின் பதிவுகள். நம் மனம் என்ன நினைக்கிறது, ஏன் அவ்வாறு முடிவெடுக்கிறது என்பதற்கான தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை வெளிப்படையாக விவரிப்பது எனக்குப் பிடிக்கும். இங்கே கதை மட்டுமே ஓடுகிறது. சாண்டில்யனில் அதுவும் ஓடாது. ஆனால், இன்னும் கொஞ்சம் நிதானமாக மாரத்தான் துவங்கி இருக்கலாம்.

3. ”அறம்” வந்தபிறகு இந்த சம்பவம் சார்ந்த நடைக்கு மாறிவிட்டாரோ? அல்லது அதுதான் இன்றைய தலைமுறைக்கு எடுபடுகிறதோ? அல்லது சட்டுபுட்டுனு எல்லாருக்கும் தெரிந்த கதைக்கு வருவதற்கான அவசரமோ? தினசரி வாசகர் வருகையைத் தக்கவைத்துக் கொள்ளும் விருப்பமோ?

4. ”அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன.”

பட்டால் மட்டுமே புரியும். எத்தனை சொன்னாலும், எவ்வளவு படித்தாலும் அனுபவம் போல் வருமா?

5. சுட்ட ஒவியங்களாகப் போடாமல், இதற்கென பிரத்தியேகமாகப் போடப்படும் படங்களைக் கண்டு கொண்டாட வேண்டும். அந்தக் கால விகடனில் சில்பி போல் இந்தக் கதைக்கான ஓவியங்களும் காலந்தோறும் பேர் சொல்லும். வெறுமனே கூட்டுக்கலவையாக பல்லிளிக்காமல், பிரதிபிம்பமாக மனிதர்களின் அவயங்களை மட்டும் கிறுக்காமல், படு சிரத்தையாக, அமர்க்களமாக வந்து கொண்டிருக்கிறது. நாளைய தேதியில் பளபளா தாளில் மினுக்கும் ஓவியங்களுக்காகவும் பலரின் காபி மேஜைகளை அலங்கரிக்கும் புத்தகமாக உருவாகிறது.

6. ”பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. ”

நான் இது வரை சீனப் பெருஞ்சுவரை நேரில் பார்த்ததில்லை. அங்கொரு செஞ்சிக் கோட்டையும் இங்கேயொரு லண்டன் பிரபுக்களின் பீரங்கி பாதுகாப்பு கொண்ட இருப்பிடங்களும் எங்கேயோயொரு ராஜபுத் அரண்மனையின் சிதிலமடைந்த மதில்களும் பார்த்திருந்தாலும், ஜெயமோகன் விவரிக்கும் அஸ்தினாபுரி கம்பீரமாக அதே சமயம் தத்துவார்த்தமாக எழுந்து நிற்கிறது.

7. ஆஸ்திகன் பகுதியை சன் டிவியின் முதல் வார மகாபாரதத்தில் பார்த்ததால், இன்னும் எளிதாக உள்வாங்க முடிந்தது. திரைக்காட்சியாக்கத்தில் கண்ட ஒன்றை, படிப்பது என்றுமே அந்த கதாபாத்திரத்தை உருவகப்படுத்த உதவுகிறது.

8. அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும்? யார் யார் வந்தார்கள்? எப்படி உட்கார்ந்திருந்தார்கள்? என்ன மாதிரியான அலங்காரம்? தாமதமாக வருபவர்களே முக்கியமானவர்களா? சுற்றுச்சூழலும் தட்பவெட்பமும் எங்ஙனம்? எங்கே நடக்கிறது என இடம் மட்டும் பெயர் சூட்டாமல், அந்த விவரிப்பிற்கு உயிர் தருகிறார் ஜெயமோகன்.

9. ஒவ்வொரு சொல்லும் ஆராயலாம். ஒரு பதமாக – அரணிக்கட்டை: பகுத்தறிவு: மரணத்திற்கு அப்பால் – 15

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 2

ஜெயமோகனின் வெண்முரசு – வேள்விமுகம்

தினம் ஒரு கதை எழுதுகிறார் ஜெயமோகன். அசகாய சூரன். யார் வேண்டுமானாலும் தினசரி ஒரு பகுதியாக மகாபாரதம் எழுதிவிடலாம். ஆனால், ஜெ.மோ. எழுதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தை இயக்குவது போல்…
ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்து ஆப்பிள், புதிய நுட்பத்தை அறிமுகம் செய்வது போல்…
எனக்கு புதிய இடத்தில் வேலை கிடைப்பது போல்…

எல்லாமே எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் எழவைக்கும் நிகழ்வுகள். வித்தியாசமாக இனி என்ன நிகழ்ந்துவிட முடியும் என நினைக்கும்போது அசத்தும் விஷயங்களைக் கொணர்பவை.

அவ்வப்போது தோன்றுபவற்றை எழுதி வைக்கலாம். முதல் பகுதி குறித்து

  1. அம்மா ஆர். பொன்னம்மாள் எழுதிய கதையொன்றில் ஆஸ்திகரை கேள்விப்பட்டிருக்கிறேன். நாஸ்திகருக்கு எதிர்ப்பதம் ஆஸ்திகர் என்பது தவிர வேறு எதுவும் இவரைக் குறித்து என்னுடைய நினைவில் ஆழமாகப் பதியவில்லை. “தீபம்” பக்கங்களைப் புரட்டினால் அல்லாது தொலைபேசும்போது கேட்டால் ஏதாவது மேட்டர் கிடைக்கும். விசாரிக்க வேண்டும்.
  2. முதல் பகுதியில் நிறைய பெயர்கள். கத்ரு-விற்கும், வினதை-க்கும் நடுவே கிடந்த ஓரகத்தி சண்டைகளை ஏற்கனவே கேட்டிருப்பதாலும், அருணனும், கருடனும் அறிந்திருப்பதாலும், அந்தப் பகுதிகளைப் படிக்க சிரமமில்லை. ஆனால், சுவாரசியமுமில்லை.
  3. இந்தப் பத்தியில் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவையாக அந்த வரம் தரும் பகுதி அமைந்திருக்கிறது. மேட்ரிக்ஸ் படத்திற்கு பிறகு “What is your purpose in life?” வேரூன்றிய மாதிரி, கல்வியா / செல்வமா / வீரமா-விற்கு பதில், “உள்ளிருந்து எழும் கனல், அதை அடைய அடைய அடுத்ததை நோக்கும் தாகம்” என்னும் வேண்டுகோள் – புதிய கீதை ஒன்று.
  4. ஜரத்காரு – மின்மினி – பிண்டம் – பித்ரு…விற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கலாமோ? சுண்டுவிரல் அளவில் நடமாடும் மூதாதையர்களைக் கண்டு நாம் பயப்படுகிறோம். அவர்களுக்கு திவசம் போடுகிறோம். வாழைக்காய் கொடுக்கிறோம். அவர்களும் அந்தக் கன்றுக்குட்டியையும் எண்ணெயையும் வைத்துக் கொண்டு கடைத்தேறுகிறார்கள்.
  5. வரமோ… சாபமோ… கொடுத்ததற்குப் பின்னேயே கவலை கொள்கிறோம். ஆத்திரம் வந்தால் திட்டிவிடுவது ஆகட்டும்; அன்பு பெருகினால் வைரமாலை வாங்கி விடுவது ஆகட்டும். சிந்திய வார்த்தைகளையும் வாங்கிய கடனையும் அடைப்பது பெரும்பாடு என்பதை மகாபாரதத்தைப் பார்த்தும் அமெரிக்கா புரிந்துகொள்ளவில்லை.
  6. ’தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது.’ : )
  7. கடிதம் இல்லாமல் ஜெ.இன்-னா? – http://www.jeyamohan.in/?p=44023 :: http://mahabharatham.arasan.info/2014/01/1.html
  8. இவ்வளவு பெரிய கதையில் அயர்ச்சியூட்டும் பிரயோகங்கள்… ஒரே மாதிரிக் கதைகளை வேறுவேறு விதமாக சொல்வது… பத்தாண்டுகளாக தொடர்ச்சியான மொழிநடை! பிரமிக்க வைக்கிறார்.
  9. ’உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’ – இது ஜெயமோகனை நோக்கி சொல்லப்பட்டாலும் சரியே!

நூல் ஒன்று – முதற்கனல் – 1

அ. முத்துலிங்கமும் தற்கால உலக இலக்கியமும்: சிறுகதைகள்

விடுமுறையில் ரெண்டு கதைகள் படித்தேன். இரண்டுமே பயங்கர எதிர்பார்ப்போடு படித்தேன். இரண்டுமே திருப்தியான கதைகள்.

1. http://www.newyorker.com/fiction/features/2013/10/21/131021fi_fiction_munro
முதியோர் இல்லம் அனுப்ப படுபவரின் வாழ்க்கையை சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ. இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்.

2. http://harpers.org/archive/2013/10/sic-transit-2/
இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.

தமிழில் அ முத்துலிங்கம் கொஞ்சம் இவர்களை எட்டிப் பிடித்து தாண்டிக் கூட விடுகிறார் இங்கே:
http://amuttu.net/viewArticle/getArticle/334

சிறுகதை: பாவண்ணன் – பாதை

முதியோரை நாம் எப்படி நடத்துகிறோம்? வயதான பிறகு தோன்றும் கனவுகளுக்கு என்ன அர்த்தம்? மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது?

பாவண்ணனின் “பாதை” கதை இவற்றை பேசுபொருள்களாகக் கொண்டிருக்கின்றன.

தமிழில் முக்கியமான சிறுகதை எழுதும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஒரு நடையில் தேர்ந்த பிறகு இன்னொரு நடைக்குத் தாவிடுகிறார்கள். அதாவது, எனக்கு சி/சி++/சி# நன்றாக நிரலி எழுத வரும். அவற்றில் திறமைசாலி ஆனவுடன், சீக்வல், எஃப்# என்று வேறு நுட்பத்திற்கு சென்று பயில்வேன். அந்த மாதிரி எதார்த்தம் முடிந்த பிறகு மாயாஜாலம்; அதன் கூடவே அதிபுனை, அறிபுனை என்று கூடு விட்டு கூடு பாய முயல்கிறார்கள்.

சில சமயம் அவர்கள் அந்த புதுப் பகுதியிலும் வெற்றி காண்கிறார்கள். புதிய வாசக்ர்களை ஈர்க்கிறார்கள். தங்களைப் படிக்கும் நுகர்வோர் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது சாதகமான விஷயம்.

ஆனால், பாவண்னன் இப்படி எல்லாம் குரங்கு போல் கிளை பாய்வதில்லை. இது எனக்குப் பிடித்த விஷயம். எடுத்துக் கொண்டதில் முழுமையாக பரிமளிப்பது மகிழ்ச்சி தருகிறது.

இன்னும் சிலர் ஜே.பி.சாணக்யா, பெருமாள் முருகன் போன்றோர் அலைபாயாமல் ஒரு அலைவரிசையிலேயே இயங்கினாலும், அவரவர்களின் முதல் பருவத்தின் சிறுகதைகள் போல் தற்கால புனைவுகள் கவரவில்லை. இவர்களுக்கு கதை எழுதும் வித்தை கைவசப்பட்டிருப்பதால் கதை நன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் கதை வாசித்து முடித்த பிறகு ஏதோ தவறவிட்டது போல் இருக்கும். பாவண்ணன் இந்த வகைக்குள்ளும் இன்றளவும் சிக்காமல் இருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.

நீங்களும் கதையைப் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை சொல்லுங்களேன்…
http://puthu.thinnai.com/?p=23838

தொழில்நுட்பத்தை விற்கும் நுட்பம்

வேலை குறைவாகவும் வலை நிறைவாகவும் இருந்த காலம். அன்று மட்டும் காலையிலேயே ஏதோ தலை போகிற பிரச்சினை. நுழைந்ததும் நுழையாததுமாக என்னுடைய மேலாளர் வாயிலிலேயே தடுத்தாட்கொண்டு, “உன்னுடைய அரைகுறை ஆடைகள் தாங்கிய கன்னியர் புகைப்படங்களைப் பார்த்து விட்டு, செட்டில் ஆனபிறகு என்னுடைய அறைக்கு வந்து சேர்… முக்கிய வேலை காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் சென்று விட்டார்.

தட்ஸ்தமிழோ, தமிழ் சிஃபியோ, யாஹூ செய்திகளோ, ரீடிஃப் தகவல் மையமோ… எந்த வலையகத்தைத் திறந்தாலும் இடப்பக்கத்தில் கவர்ச்சிப் படமும் வலப்பக்கத்தில் கிளுகிளுப்பும் ஈசானிய மூலையில் கிசுகிசுவும் மட்டுமே நிறைந்த வலைக்காலம் அது. அப்படி தமிழக நிகழ்வுகளை அறியும் தாகத்தில் இருப்பவனை, காலையில் வந்தவுடன் ஜெயமாலினி படத்தில் கண் விழிப்பவன் என்று சொல்லிவிட்டாரே என்னும் தர்மசங்கடம் கலந்த குற்றவுணர்வுடன் கணினியைத் திறந்தேன்.

குறைவாக வேலை இருந்தாலும் பக்கத்து இருக்கை ஜான் கணினியில் இருந்து ’க்ளிக்…க்ளிக்’ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அப்படி என்னதான் எலியை வைத்துக் கொண்டு விளையாடுகிறான் என எட்டிப் பார்த்தேன். பெண்களின் புகைப்படங்களாக இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒவ்வொன்றிற்கும் ஒன்றில் இருந்து பத்துக்குள் மதிப்பெண் போட்டுக் கொண்டிருந்தான்.

மணப்பெண் பார்ப்பதற்கு கல்யாணத் தரகர் வைத்திருக்கும் ஆல்பம் போல் அடுக்கு அடுக்காக புகைப்படங்கள் வந்து கொண்டே இருந்தது. ஒருவருக்கு தரவரிசையில் ஐந்தோ, ஆறோ, ஏழோ க்ளிக்கினால், தானியங்கியாக அடுத்த புகைப்படம் தோன்றியது. ஒருவருக்கு ஒரு எண் கொடுத்துவிட்டால், அடுத்த ஆளின் படம் வரும். அடுத்தடுத்து தொடர் சங்கிலியாக ரகவாரியாக நிழற்படங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்தத் தளத்தின் பெயர் ’நான் அம்சமாக இருக்கிறேனா?’ (“Am I Hot or Not?”) இது 2000ம் ஆண்டிற்கு முந்தைய பொற்காலம். வைய விரிவு வலையின் துவக்க காலம். “பையனுக்கு தொந்தி” என்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்லி பத்துக்கு ஒரு மார்க் போடலாம். பொண்ணு பிடிக்கல” என்று போய்க்கொண்டே இருக்கலாம். ’ஏன் பிடிக்கவில்லை… அவளுக்கு ஒரு மனம் இருக்காதா! அது நோகாதா?’ என்றேல்லாம் சஞ்சலமடைய வேண்டாம்.

இதன் பின்தோன்றலாக இன்றைய யூ டியூப்.காம் தொடங்கியது. ’ஹாட் ஆர் நாட்’ பார்த்தபிறகு யூடியூப் துவங்கியதாக ஜாவேத் கரீம் சொல்கிறார். யார் வேண்டுமானாலும், எவரின் புகைப்படத்தை வேண்டுமானாலும் வலையில் ஏற்றி, பலருக்கும் காட்சிப்படுத்தலாம் என்பதை ஹாட் ஆர் நாட் முன்னிறுத்தியது. அதுவரை, காப்புரிமையைக் கண்டு பயந்த வலையகங்கள், ஒவ்வொருவரும் சொந்தமாக எடுத்த படங்களை மட்டுமே தளத்தில் ஏற்றலாம் என்ற விதிமுறையை வைத்திருந்தது. ஹாட் ஆர் நாட் இந்த விதியைத் தளர்த்தி, ‘உங்களின் முன்னால் காதலி படத்தை இங்கே கொடுத்து பழி தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று அழைத்தது. அதைப் பார்த்த ஜாவேத், ‘அசையாத படங்களுக்கு பதில் அசையும் படங்களைக் கொடுத்தால்!’ என்று யோசித்ததில் யூ ட்யூப் பிறந்தது.

ஹாட் ஆர் நாட்.காம் மூலம் ஊக்கம் பெற்று உருவான இன்னொரு கோடீஸ்வரர் ஃபேஸ்புக் கொடுத்த மார்க் சக்கர்பர்க். ஹார்வார்டு பல்கலையில் படித்த பொழுது சக மாணவர்களை ஒப்பிட ஃபேஸ்மாஷ் நிரலியை உருவாக்கினார் மார்க் சக்கர்பர்க். ”ஆஷா அழகா? ஆயிஷா அதிக அழகா?” என்று இருவரை பக்கத்தில் வைத்து ஒப்பிட்டு வரும் கேள்விக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து கல்லூரி மாணவர்களின் புகைப்படங்களையும் திருடியோ, திருடவைத்தோ பெற்றுவிட்டார். அதே நபர்களுக்கு, உங்களின் நண்பர் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தார் என்பதை அறியும் வசதியெல்லாம் பின்னர் வந்தது. புகைப்படங்களுக்குக் கீழே பின்னூட்டங்களும் சூடாக இட முடியும். அவற்றையெல்லாம் படிக்கவோ, அலசவோ நேரம் இல்லாவிட்டால், பிடிச்சிருக்கு/பிடிக்கலை என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ’தி ஃபேஸ்புக்’ துவங்கியபோது, ‘பிடிக்கவில்லை’ நீக்கப்பட்டு, ‘லைக்’ மட்டும் நிலைத்திருக்கிறது.

பெண்களை முகப்பில் போட்டு வியாபாரம் செய்வது இணையம் வந்த பிறகு வந்தப் பழக்கமல்ல. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அரைகுறை ஆடைப் பெண்களை அட்டையில் போட்டு புகையிலையை விற்பது புகழ் பெற்றிருந்தது. ஆனால், வலைத்தளங்களின் புகழைப் பரப்ப வியாபாரத்திற்கு வருகையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சூட்சுமத்தை அனைவருமே பயன்படுத்துகிறார்கள்.

இணையத்திற்கு மட்டுமல்ல. ‘பூத் பேப்’ (Booth Babes) என்பது கலாச்சாரத்தில் ஊன்றி நிற்கும் தொன்மம். விளையாட்டுக்களை விற்கும் இடமாக இருக்கட்டும். புது கார்களை அறிமுகம் செய்வதில் ஆகட்டும். அல்லது மைக்ரோசாஃப்டின் நவீன விண்டோஸ் எட்டு.ஒன்று துவக்கம் ஆகட்டும். மந்திரா பேடி போல் வர்ணணையாளரை நாம் நிச்சயம் பார்க்கலாம். புன்சிரிப்புடன் ஆண்களை நேசமாக அழைத்து, அவர்களின் ஜாதக விவரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்கள் துணை நிச்சயம் தேவைப்படுகிறது. பெரும்பாலான மாநாடுகளுக்கு ஆண்களே அனுப்பப்படுவதும், மேற்கத்திய உலகில் நிரலி எழுதுவதில் ஆண்களின் ஆக்கிரமிப்பு நீடித்து இருப்பதாலும் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

எங்கெல்லாம் வியாபாரம் நடக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஏமாறவும் பெரும் வாய்ப்பு இருக்கிறது. ஃபேஸ்புக் மூலம் பொய் முகத்தைக் காட்ட நிறைய வாய்ப்பு அமைந்திருக்கிறது. தன்னை இளம்பெண்ணாகவும், தனது இக்கட்டில் இருந்து மீள பணம் தேவை என்றும் கட்டமைத்து பணம் பறித்தவர்களின் செய்திகளை மாதத்திற்கு ஒரு முறையாவது தினசரிகள் வெளியிடுகிறது. இவர்கள் எல்லோரும் அதிகாரபூர்வமாக ஏமாந்தவர்கள். குட்டு வெளிப்பட வேண்டாம் என்று கம்மென்று இருப்பவர்கள் ஏராளம். தவணை அட்டையை தந்துவிட்டு காசை இழப்பது, கல்யாணம் செய்து கொள்வார் என நம்பி வங்கிக்கணக்கில் இருந்து பட்டுவாடா செய்வது என்று எப்படி எல்லாம் கறக்க முடியுமோ அப்படி எல்லாம் திருட இணையமும் பாலியல் இச்சையும் வழிசெய்து தந்திருக்கிறது.

கிரெக்ஸ் லிஸ்ட் (Craigslist) மூலமாக ஏய்த்தவர்களுக்கென்றே முன்னூறு பக்க புத்தகம் எழுதலாம். மேலும் பாலியல் பரீட்சார்த்தங்களை சுலபமாக செய்து பார்க்க கிரெக்ஸ் லிஸ்ட் சிறந்த சோதனைச்சாவடியாக இருக்கிறது. மாட்ச்.காம் (Match.com) போன்ற வலைப்பக்கங்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால்தான் உள்ளே வரலாம் என பணம் பிடுங்கிகளாக வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நயா பைசா இல்லாமல் நுழைய கிரெக்ஸ்லிஸ்ட் அனுமதிக்கிறது. இது கள்வர்களுக்கும் கொண்டாட்டாம். கணினியையேக் கட்டிக்கொண்டு அழுபவர்களுக்கும் கொண்டாட்டம்.

இந்தியாவில் ஈ-பே (e-bay)யை விட பாஸி.காம் (Baazee.com) புகழ்பெற்றிருந்தது. ‘பாஸி’ தளத்தில் பள்ளி மாணவியின் செக்ஸ் வீடியோவை விற்றதற்காக பாஸி.காம் நிறுவனத்தின் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைது அருமையான முன்னுதாரணமாகத் தோன்றுகிறது. டாக்டர் பிரகாஷ் போல் சொந்தமாக படம் பிடிக்காதவர் அவ்னிஷ் பஜாஜ். பலான படத்தைக் கூட தானே நேரடியாக விற்காமல், இடைத்தரகராக தொடுப்பு மட்டும் கொடுத்தவர். ஓரளவு செல்வாக்கும் பணபலமும் உடையவர். ஈ-பே (eBay).காம் என்னும் அமெரிக்க கம்பெனியின் கீழ் இயங்குபவர். எதையும் செய்து தப்பித்து, பதுங்கி, ஒதுங்கி, அடக்கி, ஒளிந்து விடலாம் என்று எண்ணுபவர்களை கொஞ்சமாவது யோசிக்க வைத்திருக்கும்.

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டாலும், திருடரை ஒழிக்க ஆப்பிள் முடிவு கட்டியது. ஐ-போனில் பலான விஷயம் செய்ய முடியாது என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. எந்தவித செக்ஸ் சமாச்சாரமும் ஆப்பிள் கடை (apps) மூலமாக விற்கவோ வாங்கவோ முடியாது. அந்த மாதிரி பலான தளங்களுக்கும் செல்வதற்கான தடையை நிரலியிலேயே வைத்துக் கொண்டிருந்தது. பச்சிளம் பாலகரிடம் கூட நம்பிக்கையாக ஆப்பிள் ஐபோனைத் தரலாம். அவரால் லட்சுமணன் ரேகாவை மீறி பெரும்பாலும் தப்புதண்டா செய்ய முடியாது. அப்படித்தான் இரும்புக்கோட்டையாக ஆப்பிள் ஐஓஎஸ் இருந்தது. ஆனால், சில காலம் முன்பு துவங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி இப்பொழுது கிட்டத்தட்ட முழுவதுமாக திறந்த வழியாக்கி விட்டிருக்கிறது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் வலையகங்களைத் திறந்தால் வஞ்சியரின் வண்ணப்படங்கள். இன்றோ, செல்பேசியின் அப்ளிகேஷன்களை தரவிறக்க சென்றால் விதவிதமாக 17+ தரச் சான்றிதழுடன் அழைப்புகள். கணினித்திரை மாறியிருக்கிறது. நுட்பம் மாறியிருக்கிறது. உள்ளடக்கம் கூட முப்பரிமாணத்தில் தத்ரூபமாக உயிர் பெற்றிருக்கிறது. ஆனால், விற்கும் வழியிலோ சந்தையாக்கத்திலோ முகப்பில் தோன்றும் பெண்களின் ஆடைகளிலோ மாற்றம் நிகழவில்லை.

Ideas for future Jeyamohan column in The Hindu

மூலப்பதிவு: தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது – எழுத்தாளர் ஜெயமோகன்

இரண்டாம் உலகப் போரில் ஒரு போஸ்டரைப் பார்த்தேன். ஐம்பதாயிரம் மனிதர்களின் ஒரு வருட உழைப்பை ஜலதோஷம் விழுங்கி விடும் என்று சொன்னது அது. பரபரப்பாக புகைப்பதால் ஒரு வருடத்தில் இரண்டரை நாள்தான் வீணாகும். அதிலும் பாதி சிகரெட் பிடித்தால், ஒரு நாளாக்கிவிடலாம்.

நம் இளைய தலைமுறை ஏராளமாக நோய்வாய்ப்படுகிறது. ஆனால், சீக்கு சொல்லி விடுப்பு எடுப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஜலதோஷம் பரவலாகிவருகிறது. கொசு நிறைந்த சூழலில் தொற்று நோயே அசௌகரியத்திற்கு தோற்றுவாய் என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் கொசுவே இங்கே நோயின் ஊற்றாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

டெங்குவும் சிக்குன்கன்யாவும் பரவுவதால் சிகரெட் கைவிடப்படுவதைக் கண்டு, அன்புமணி இராமதாஸும் முகேஷ் ஆவணப்படத்தைக் கட்டாயமாக்கினார். விளைவாக, குழந்தைகள் வில்ஸ் ஃபில்டரை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் புகைக்கின்றனர். ஆனால், மாரடைப்பும் நடுவயதில் வருவதாலே சிகரெட்டில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

டாஸ்மாக் சரக்கு அல்லது கஞ்சாவை எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அவற்றுக்கு அடிமையாகின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் சிகரெட்டைக் கற்கின்றன. அதாவது, போதை எளிதாக அடைவதற்கு மட்டுமே. தட்டுத்தடுமாறி புனைவு உருவாக்கவும் ஓரளவு கிறுக்கவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

Cigarette_Smoker_Puff_Hukkah_Mosquito_Repellant_Cigars_Lady_Kill_Cancerஅவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் கொசுவர்த்திச் சுருள் புகையையும் சிகரெட் புகையையும் எதிர் கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு நோயில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலப் பழக்கம் தேவைப்படுகிறது. ஆகவே, எதிர்ப்பு சக்திக்கு உதவாமல் வெறுமே கிளுகிளுப்புக்காக மட்டுமே புகைக்கப்படும் ஆறாம்விரலாம் வெண்குழல் சுருட்டை விட்டுவிடுகிறார்கள்.

வாய்க்கும் சுருட்டிற்குமான உறவு என்பது ஒரு கைப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வட்டமாகப் புகை விடுவது நமக்கு இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், பதின்ம வயதில் ரவுண்டு ரவுண்டாக சுருளவைக்கும் வெள்ளாவிக் கொணர்வது மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

செயின் ஸ்மோக்கிங் என்பது இன்னும் சிக்கலானது. சரித்திரவியலாளரான வில்லியம் டியுராண்ட் (Will Durant) “மாற்றம் வீட்டிலே துவங்க வேண்டும் என எனக்கு உதித்த நேரத்தில் இருந்து, உலகத்தை மாற்ற எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்கிறார். நீங்கள் “அண்ணாமலை” படம் பார்த்து இருப்பீர்கள். அதில் மகன் ரஜினிக்கு சுருட்டு ஆசை உண்டு. அவரின் அந்தப் பழக்கத்தை முறியடிக்க நாள் முழுக்க சுருட்டை மட்டுமே புகைக்க விடுவார் அப்பா ரஜினி. அந்த மாதிரி சித்திரவதையை சுயபோகத்திற்கு நினைத்துப் பாருங்கள்.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு கொசுக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. டெங்கு கொசுவிற்கு விளைக் களம் தூய நீர். அது அழுக்கு நீரில் இருப்பதில்லை. தமிழ் நாட்டில் தண்ணீர் பற்றாக் குறையால் குடிநீர் வீடுகளில் பாத்திரங்களில் சேகரிக்கப் படுகிறது. இது சரியாக மூடப் படாதபோது மற்றும் தேங்கும் மழை நீரிலிருந்து இக்கொசுக்கள் பரவுகின்றன. கொசுவை அடிப்பதில் நம் உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது.

கையை அடித்தாலும் சரி… கைவிரல்களுக்கு நடுவில் வைத்தாலும் சரி… புகை என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், விரலில் இடுக்கக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் கொசுவர்த்திச் சூழலிலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் பழக்கமாகக்கொண்ட புகை அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் வழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.

Mosquito coil and burner.நான் பதின்மூன்றாண்டு காலமாக புகைக்கிறேன். புகைக்கும் வேகத்தில் பற்றவைக்க முடியும் என்னால். கண்ணெதிரே சிகரெட் தெரிகிறது, என் கைகளில் நேவி கட்-கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. கொசுவர்த்திப் போட்ட இடத்தில் நான் சரளமாக புகைக்கவும் செய்வேன். ஏன் சிகரெட்டை இவ்வாறு கொசுவர்த்தியாலேயே செய்யக் கூடாது?

பெட்டிக் கடைகளில் இதை விற்றால், வீட்டிற்கு ஒரே ஒரு டார்டாயிஸ் வாங்கினால் போதும். அவர்கள் சிகரெட்டை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக இழுக்க அது உதவும் அல்லவா? நாம் மார்ல்போரோ புகைக்கும்வரை கொசு தள்ளியே இருக்கும். காசும் மிஞ்சும். ஜலதோஷம் வந்தால் மூக்கால் பேசுவது என்போம். இது மூக்கால் சிக்கன்குன்யாவை தடுக்கும் தந்திரம்.

உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.