Daily Archives: ஓகஸ்ட் 17, 2006

Terrorist’s Tactics : Manipur Bomb Blast in ISKCON Temple

Dinamani.com – Editorial Page

இப்போது தேவை இரும்புக்கரம்!

இந்திய சமூகத்தின் ஒற்றுமையையும் ஐக்கிய உணர்வையும் தகர்க்க, மீண்டும் ஒரு குண்டுவெடிப்பை மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நிகழ்த்தியுள்ளனர் பயங்கரவாதிகள். கடந்த முறை மும்பையில் பொது மக்கள் நிரம்பி வழியும் புறநகர் ரயில்களில் குண்டுகளை வெடித்துப் பலரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோல சமூக மோதல்கள் ஏதும் நிகழவில்லை. அன்று நமது மக்கள் காட்டிய உறுதியும் நிதானமும், பொறுமையும் விவேகமும் பயங்கரவாதிகளின் தந்திரங்களைத் தூள் தூளாக்கின. மீண்டும் அதே தந்திரத்தை இப்போது அவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இந்த முறை மணிப்பூரில் கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் குண்டு வெடிப்பை நடத்தியதன் மூலம், மக்களிடையே மோதலைத் தோற்றுவிக்கும் தங்கள் நோக்கத்தை அவர்கள் ஒளிவு மறைவு ஏதுமின்றி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டனர். நமது மக்களது விவேகத்தின் முன் இந்த முறையும் அவர்கள் தோற்றார்கள்.

இந்த குண்டு வெடிப்பில் பத்து வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் இறந்துள்ளனர். கோயிலின் அர்ச்சகர் மற்றும் சில வெளிநாட்டவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளதால் சாவுத் தொகை மேலும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின் அந்தக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்கு வந்திருந்தபோது கையெறி குண்டை பயங்கரவாதிகள் வீசியதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இதை மீறி இப்படி ஒரு தாக்குதல் நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இன்றைய சூழலில், கடந்த காலத்தைப்போல பயங்கரவாதத்தை ஏனோதானோ என்றபோக்கில் அணுகும் நிலை இனியும் நீடிக்கக் கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்புகளையும் நவீனத் தொழில்நுட்பத்தையும் அமெரிக்காவுக்கு இணையாக உருவாக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. பிறரது உயிரையும் உணர்வுகளையும் மதிக்காதவர்கள் எந்தவிதப் பரிவுணர்வுக்கும் அருகதையற்றவர்கள்.

பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை அரசு கடுமையாக்கும்போது எதிர்க்குரல் எழுப்புவோர் இப்படிப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழக்கையில் நாசூக்காகப் பட்டும் படாமலும் பேசுவதையும் எழுதுவதையும் எந்த உரிமையில் சேர்ப்பது?

தருமத்தின் நாயகனான கண்ணன் பிறந்த தினத்திலிருந்தே அவன் உயிரைப் பறிக்க அசுர சக்திகள் முயன்றதையும் அவை தொடர்ந்து தோற்றதையும் கடைசியில் கண்ணனின் கரங்களில் அதருமமே வடிவான கம்சன் இறந்ததையும் இந்த தேசத்தில் காலம் காலமாக மக்கள் கதையாகச் சொல்லிவருகின்றனர். அறம்தான் நம் அனைவரையும் காக்கின்றது என்ற நம்பிக்கை நமது நாட்டின் அடித்தளமாக இயங்குகிறது. அறம் தன்னைக் காக்கிறவர்களைக் காப்பாற்றும். அழிப்பவர்களை அழிக்கும் என்பதே நமது நம்பிக்கை.

தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்புக்கு எந்தப் பயங்கரவாதக் கோஷ்டி காரணம் என்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தால் என்ன? அடிப்படையான தேசிய ஒருமைப்பாட்டுக்கும் மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்துக்கும் வெடிவைப்பவர்கள் என்ற அளவில் அனைத்துப் பிரிவு பயங்கரவாதிகளும் ஒன்றே. தீமையின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக நமது மக்கள் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கைகோர்த்து நிற்கவேண்டிய காலம் இது. நிற்போம் உறுதியாக!

Frustrated Kallipaalayam Dalits Vacate their Native Village

Dinamani.com – TamilNadu Page

அடிப்படை வசதிகளுக்குப் போராடி பலனில்லை! கிராமத்தை காலிசெய்து வெளியேறினர் ஹரிஜனங்கள்

எம்.ஷேக் முஜிபுர் ரகுமான்

தாராபுரம், ஆக. 18: அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படாததால் ஹரிஜன காலனி மக்கள் வீட்டைக் காலி செய்ததுடன் கிராமத்தைவிட்டே வெளியேறி விட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்; ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்படியும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.

தாராபுரத்தில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது கள்ளிப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஹரிஜன காலனியில் மொத்தமுள்ள 15 வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

பொங்கலூர் பேரவைத் தொகுதியில் (தொடர்புள்ள தேர்தல் அலசல்: அப்பிடிப்போடு: தேர்தல் அலசல் – 2006 -கோயம்புதூர்
) – குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது இக் கள்ளிப்பாளையம். நிலத்தடி நீரில் “ப்ளோரைடு’ கலந்துள்ளதால் குடிக்க, குளிக்க, சமைக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இக்கிராமம் தவிர ராசிபாளையம், அழகியபாளையம் ஆகிய ஊர்களில் இதேநிலை நீடிக்கிறது. இப்பகுதி மக்களின் ஒரே நீர் ஆதாரம் அமராவதி – காங்கயம் கூட்டு குடிநீர் திட்டம் மட்டுமே.

குடிநீர்த் தட்டுப்பாடு

கள்ளிப்பாளையத்தில் உள்ள மேனிலைத் தொட்டியில் ஓரளவு குடிநீர் பெற்று வந்த இம்மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அமராவதி- காங்கயம் கூட்டுக் குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தினர். இதன் பலனாக பொங்கலூர் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.50 லட்சம் செலவில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. எனினும் குடிநீர் கிடைக்கவில்லை.

பொதுமக்கள் குறைகேட்பு நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை.

கள்ளிப்பாளையத்தில் இருந்து நொச்சிப்பாளையம், நல்லிமட்டம் ஆகிய ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் சென்றே குடிநீர் எடுத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள். ஹரிஜன மக்களுக்கு வாகன வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி, சாக்கடை வசதி ஏதும் செய்து தரப்படவில்லை.

பல்வேறு போராட்டம் நடத்தியும் பயன் இல்லாததால் வேறு வழியின்றி தங்களது வீடுகளைக் காலி செய்து கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் ஹரிஜன மக்கள். இதே நிலை தொடர்ந்தால் அந்த கிராமத்தில் வசிக்கும் பிற சமூகத்தினரும் வீட்டைக் காலி செய்து விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கடந்த 6 மாதங்களுக்கு முன் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். ஒரே வாரத்தில் குடிநீர் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

இக்கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகச் செல்கிறது. இதை சீரமைத்தால் மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்கலாம் என்றார். இது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, ஏதும் பேச மறுத்து விட்டனர்.

National Awards – Amitabh & Sarika Wins?

தேசிய சிறந்த நடிகர் அமிதாப் & சரிகாவுக்கு சிறந்த நடிகை விருது – Dinamani.com

சிறந்த நடிகர் – அமிதாப் பச்சன்
சிறந்த நடிகை – (நடிகர் கமல்ஹாசனிடமிருந்து பிரிந்து வாழும் நடிகை) சரிகா
சிறந்த படம் – (வங்காள மொழியில்) கல்புருஷ்
சிறந்த ஆங்கிலப்படம் – 15 பார்க் அவென்யூ

அகில இந்திய அளவில் சிறந்த திரைப்படம் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவுக்கு தலைவரான சரோஜாதேவி தனது குழுவினருடன் தேர்வு விபரங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் அளித்தார்.

பிளாக் என்ற இந்திப்படத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் இனப்படுகொலையை சித்தரிக்கும் பர்ஸானியா என்ற படத்தில் நடித்ததற்காக நடிகை சரிகாவுக்கு கிடைத்துள்ளது.

தேர்வுக்குழு தனது முடிவை அமைச்சகத்திடம் ஒப்படைத்தாலும் முடிவு அறிவிப்பதில் சட்டச்சிக்கல் உருவாகியுள்ளது. தணிக்கை செய்யப்படாத படங்களையும் போட்டிக்கு பரிசீலிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தவிட்டிருப்பதால் இந்தச் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துடன் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.


| |