Monthly Archives: ஏப்ரல் 2006

DMK Poster on ADMK Rule – Dinakaran

dinakaran

நன்றி: தினகரன்

Kaalachuvadu Technology Special

1. தமிழ் லீனக்ஸ் – வெங்கட்ரமணன் பேட்டி

2. யூனிகோட்/ஒருங்குறி – மாலன்

3. இணைய இதழ்கள் குறித்து பத்ரி

4. பயனர் அனுபவங்கள் – அ முத்துலிங்கம்

5. தமிழ் கணினியின் வளர்ச்சிப் பாதை


| |

10kg Rice – Free of Cost

இலவச அரிசி – ஜெயலலிதா அறிவிப்பு – BBC Tamil

எதிர்வரும் தமிழக சட்டமன்றத்தேர்தலில், அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொதுவினியோகத்துறையில் வழங்கப்பட்டுவரும் 20 கிலோ ரேஷன் அரிசியில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா திடீரென இன்று அறிவித்துள்ளார்.

மீதமுள்ள 10 கிலோ அரிசி தற்போதைய விலையான கிலோ அரிசி 3 ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அரிசி ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அந்த கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால் அது நடைமுறை சாத்தியமற்ற போலியான வாக்குறுதி என்று ஜெயலலிதாவும் அவரது கூட்டணி கட்சியினரும் கூறிவந்தனர்.

ஆனால், ரேஷன் அரிசி ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு வாக்காளர்களிடம் பரவலான வரவேற்பு கிடைப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் பின்னணியில், ஜெயலலிதாவின் இன்றைய திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக: 20 கிலோ ரேஷன் அரிசி = 40 ரூபாய் தேவைப்படும்.
அதிமுக: 20 கிலோ ரேஷன் அரிசி = 35 ரூபாய் தேவைப்படும்.

Manifesto Theater – Kalki

கல்கி தலையங்கம்தேர்தல் ஷோ!

தி.மு.கவில் சீட் தரவில்லையா… அ.தி.மு.கவுக்குப் போய்விடு; அ.தி.மு.கவில் சீட் தரவில்லையா…

தி.மு.கவுக்கு ஓடு! இதுதான் இன்று தேர்தல் டிரெண்ட்! கோபித்துக் கொண்டு போய்ச் சேர்கிற கட்சியில் டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ன.. பேப்பரில் போட்டோவுடன் செய்தி வெளியாக, டிக்கெட் மறுத்த கட்சியைப் பழி வாங்கியாகிவிட்டதல்லவா! இதைவிட வீர தீர பராக்கிரமம் நிறைந்த அரசியல் சேவை வேறென்ன இருக்க முடியும்!

தி.மு.கவுக்குள் பாக்யராஜ், சேடப்பட்டி என்று புதுமுகங்கள்புக, அங்கிருந்து வெளியேறிய நிர்மலா சுரேஷ், திருவாரூர் எம்.எல்.ஏ. அசோகன் போன்றோர் அம்மா புகழ்பாட அ.தி.மு.கவுக்குப் போகிறார்கள். “நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?” என்று பத்தாம் பசலித்தனமாக யோசித்துக் கொண்டிராமல், “இந்தக் கட்சி என்ன செய்தது எனக்கு?” என்று சிந்தித்துத் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் இவர்களல்லவா முற்போக்குவாதிகள்! தமது ரசிகர் மன்றத்தினருக்கு வேட்பாளர் வாய்ப்புத் தரப் படாததால் சரத்குமார் தி.மு.கவை விட்டு வெளியேறுகிறார். அக்கட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று இப்போது புலம்புபவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியை ஏற்றபோது அந்த உண்மை தெரிந்திருக்கவில்லை என்றால், அதற்கு அவரா பொறுப்பாக முடியும்? அவரை எம்.பியாக நியமித்த தலைமைதானே பொறுப்பு!

இப்படி ஆயா ராம்கள் கயா ராம்களாக தமிழக அரசியல் பிரமுகர்கள் அணி மாறி – கட்சி மாறி நடைபோடும் கேளிக்கையைப் பார்த்துவிட்டு சினிமா துறையினர் சும்மா இருப்பார்களா? வெள்ளித் திரையிலிருந்து கட்சிப் பிரசாரத்துக்குப் பளபளப்பைச் சுமந்து வருகிற நடிகைகளின் அணிவகுப்பு அட்ராக்ஷன் கண்ணைப் பறிக்கிறது! சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் இன்றிச் சுயமாக வசனம் பேசும் ஆற்றல் இவர்களுக்கு இல்லாவிட்டால் என்ன? அரசியல் மேடைகளில் “இவர்கல் கொட்டி முளக்கி நமது பொன்னான வாக்குகலை அல்லிக்கொல்லாமலா” போய்விடுவார்கள்! பிரசார பீரங்கிகளும் பரிவார தேவதைகளும் கலக்குகிற கலக்கில் நாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடப் போகிறதே என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மெகா சீரியல் ரேஞ்சில் மூளைச் சலவை செய்யும் தேர்தல் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இலவச கலர் டீ.வி என்கிற இமாலய புரட்சியைத் தாங்கி வரும் தி.மு.க. அறிக்கை, ஒரு மெகா பட்ஜெட் கனவு சீனைக் காட்சிப்படுத்த… அ.தி.மு.க. அறிக்கைகள் மத்திய அமைச்சர்களையும் தேர்தல் கமிஷனையும் எதிர்த்துச் சீறிப் பாயும் ஸ்டண்ட் சீனாகத் திகழ, ம.தி.மு.க. அறிக்கை மீனுக்குத் தலையாகவும் பாம்புக்கு வாலாகவும் காமெடி டிராக் காட்ட, தே.மு.தி.க. அறிக்கை வீடு தேடி வரும் ரேஷன் சென்டிமெண்ட் காட்டி இலவச அரிசி மழை பொழிய, பா.ஜ.க. அறிக்கை கிளைமேக்ஸாகச் சங்குபிடித்து ஊதுகிறது கள்ளுக்கடைகளைத் திறக்கப்போவதாக!

இப்படி எல்லா கட்சிகளும் தலைவர்களும் ஷோ காட்டிக் கொண்டிருக்க, தேர்தல் களம் ரஜினி படத்தைத் தூக்கிச் சாப்பிடும் கேளிக்கை அம்சங்களுடன் மின்னிக் கொண்டிருக்கிறது.

“அது சரி, தமிழ்நாடு முன்னேற வேண்டாமா?”

என்று சீரியஸாகக் கேட்கும் அப்பாவிகளுக்கு பதில் இருக்கிறது: யார் ஆட்சிக்கு வந்தாலும் அள்ளிவிடப் போகும் இலவசங்களுக்குத் தமிழக ஏழை – பாழைகள்தானே உழைத்துக் களைத்து கூடுதல் வரி செலுத்த வேண்டும். உழைத்த களைப்பில் தாங்கள் ஏழைகள் என்பதுகூட அவர்களுக்கு மறந்துபோய்விடாதா என்ன?

அந்த ஏழைகள் பரம ஏழைகளாகவே தொடர, தமிழக அரசியல்வாதிகளும் அவர்களுக்குக் கறுப்புப் பணம் அருளும் தமிழக தொழில் – வர்த்தக முதலைகளும் முன்னேறத்தானே போகிறார்கள்!

Dalit’s State in Tamil Nadu’s (un)Reserved Constituencies

இன்றைய பிபிசி தமிழோசையில் இருந்து:

பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் :: தலித் பிரிவைச் சார்ந்த மக்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப் பிரிவை சேர்ந்த மக்களுக்காக தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் தலித் பிரிவுகளைச் சார்ந்த வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

பொதுத் தொகுதிகளில் தலித்துகள் நிற்பதற்கு தடை ஏதும் கிடையாது என்றாலும் பெரும்பாலான சமயங்களில் அரசியல் கட்சிகள் தத்தம் கட்சிகளில் உள்ள தலித் மக்களுக்கு பொதுத் தொகுதிகளில் நிற்க வாய்ப்புக் கொடுப்பதில்லை. இந் நிலையில் பொதுத் தொகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இரண்டு தலித் வேட்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த பெட்டகமத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

தயாரித்து வழங்கியவர்: டி என் கோபாலன்.

பிபிசியை இன்றே கேட்கத் தவறியவர்களுக்காக, ஒலிக்கோப்பு: மெகா அப்லோட்

எம்பி3 பதிவை இறக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு சில குறிப்புகள்:
1. மெகா அப்லோட் தட்டியவுடன் ‘Please Wait for 45 Seconds’ என்று படுத்துவார்கள்.

2. காலமெல்லாம் காத்திருந்தபின் ‘AdBrite’இன் விளம்பரம் பிரதானமாகத் தெரியும். (MegaUpload Links என்று சோத்தாங்கை பக்கம் கேர்ள்ஃப்ரெண்ட், முடிகொட்டல், மங்காத்தா விளம்பரங்கள் தெரியும்.)

3. விளம்பரங்களில் தடுமாறி சுட்டாமல், ஆரஞ்சு மிட்டாய் கலர் ‘X‘ அழுத்தி அந்த சாளரத்தை மட்டும் மூடவும்.

4. திரை விலகியதும் ‘Click here to download’ என்னும் பொத்தான் கிடைக்கும்… அப்பாடா… இறக்க ஆரம்பித்த பின் குளம்பி அருந்த செல்லலாம் (Filesize: 12.2 MB).

பிகு: டோட்டல் ரெக்கார்டர், மெகாஅப்லோட் போன்ற படுத்தல்கள் இல்லாத ஒலிப்பதிவு செய்யும் நிரலி, கோப்புகளை ஏற்றும் வலையகம் சொல்வோருக்கு முன்கூட்டிய வணக்கங்கள்.


| |

சரத்குமாரும் ராதிகாவும் அ.தி.மு.க.வில்

எம்.பி.பதவி ராஜினாமா: ஜெயலலிதாவுடன் சரத்குமார்- ராதிகா `திடீர்’ சந்திப்பு: அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

டெல்லி மேல்-சபை எம்.பி.யும், நடிகருமான சரத்குமார் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அதன் பின்பு சரத்குமார் கட்சியில் ஓரம் கட்டப்படுவதாக புகார்கள் எழுந்தது. அவரது ரசிகர்களும் தங்களுக்கு கட்சியில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் சரத்குமார் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். ரசிகர் மன்றத்தினர் எடுத்த முடிவு தி.மு.க.வினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு சரத்குமார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சரத்குமார் திடீரென ராஜினாமா செய்தார்.

இதுபற்றி அவர் கருணாநிதிக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், `கட்சியில் தங்களை சார்ந்த சிலரே எங்களை அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகாவுக்காகவும் சில காலம் தாங்கி கொண்டேன்.

தங்களது இயக்கத்தில் தற்போது வாய் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள். எனவே நான் இந்த இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சரத்குமாரின் முடிவுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தென்மாவட்டங்களில் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி வாழ்த்தினர். மேலும் தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்ட சரத்குமார் நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இன்னும் சிலர் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.

இதனால் சரத்குமார் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியது.

இந்த நிலையில் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் திடீரென சிங்கப்பூர் சென்றனர். அங்கு ராதிகா நடத்தி வந்த ராடன் டி.வி. அலுவலக தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அவர்கள் இன்று காலை சென்னை திரும்பினார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதாக அவரது ரசிகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தென்மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கார், வேன்களில் இன்று காலையிலேயே மதுரை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.

அவர்கள் `சுப்ரீம் ஸ்டார் வாழ்க.. அண்ணன் நாட்டாமை வாழ்க…’ என்று வாழ்த்து கோஷம் எழுப்பியபடி விமான நிலையத்தை சுற்றி சுற்றி வந்தனர்.

காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரும் விமானம் வந்தது. அது மதுரை மண்ணை தொட்டதும் ரசிகர்களின் வாழ்த்து கோஷம் விண்ணை எட்டியது. அப்போது சரத்குமாரும், ராதிகாவும் விமானத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை ரசிகர்கள் தயாராக இருந்த காரில் ஏற்றி மதுரை சங்கம் ஓட்டலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

சங்கம் ஓட்டலுக்கு வந்ததும் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. அதன் பின்பு சரத்குமாரும், ராதிகாவும் `பச்சை நிற உடை’ அணிந்தபடி வெளியே வந்தனர்.

அப்போது ஓட்டலுக்குள் இருந்த நிருபர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ரசிகர் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும், அ.தி.மு.க.வில் சேரப் போகிறீர்களா? என்றும் கேட்டனர்.

அதற்கு சரத்குமார், `தேனியில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை சந்திக்க செல்கிறேன். சந்திப்பு முடிந்த பின்பு உங்களை சந்திப்பேன்’ என்று கூறி விட்டு விறுவிறு வென வெளியே வந்தார். அவருடன் ராதிகாவும் சென்றார்.

இருவரும் அங்கிருந்து ஒரு தனி காரில் தேனி நோக்கி புறப்பட்டனர். காரை சரத்குமாரே ஓட்டி சென்றார். அவரது கார் வெளியே சென்றதும் ரசிகர்களும் தாங்கள் வந்த வேன், கார்களில் ஏறி அவரை பின் தொடர்ந்தபடி சென்றனர்.

1.20 மணிக்கு அவர்கள்ப தேனி சென்றடைந்தனர். தேனி என்.ஆர்.டி. நகரில் தங்கி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவர்கள் சந்தித்தனர். அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சரத்குமாரும், ராதிகாவும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். பிறகு மூவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே டெல்லி மேல்சபை எம்.பி. பதவியை சரத்குமார் ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்தார்.

எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் சரத்குமார் அதை கடிதம் வாயிலாக கருணாநிதிக்கு தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

Nallakannu Mini-Interview : Dinamalar

Dinamalar Report on CPI Leader Nallakannu

வெளியான இதழ்: தினமலர்

Thanga Vettai

சுடுசோறு – இதன் இலக்கணக் குறிப்பு என்ன?

. பெயரெச்சம்
. வினைத்தொகை
. வினையெச்சம்
. வினைச்சொல்

தங்கவேட்டையில் நேற்று பாடலாசிரியர்களும், பின்னணிப் பாடகர்களும் கலந்துகொண்ட ரம்யா நிகழ்ச்சி. முதன்முதலில் தமிழ் அகராதி வெளியிட்டவர், ஒப்பிலக்கணம் கொடுத்தவர் போன்ற எம்.ஏ.த்தனமான கேள்விகளுக்கு நான் எளிதாக விடையளித்து, என்னுடைய இலக்கிய புலத்தை மனைவிக்கு ஃபிலிம் காட்டிக் கொண்டிருக்கையில், என்னை சறுக்கிவிட மேற்காணும் கேள்வி உதவியது.

உங்களுக்காவது சரியான பதில் தெரியுமா?

நிகழ்ச்சியில் இருதயா இந்தக் கேள்விக்கு நொடி கூட யோசிக்காமல் சரியான விடையை சொன்னார். திருமுருகாற்றுப்படையை எழுதியவர் திருவிளையாடியது போல் அரங்கினுள், எவராவது முன்கூட்டியே சொல்லி வைத்திருப்பார்களோ என்று பொறாமைப்படவைக்கும் அளவு instantaneous வேக பதில் கொடுத்தார்.

  • போன பிறப்பில் கேபி சுந்தராம்பாளாக இருந்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறார் ‘மன்மத ராசா’ மாலதி.
  • பிஜிஎம் இல்லாமலே ஹரீஷ் ராகவேந்திராவின் குரல் திரையிசைக்கு ஒப்பாக மிளிர்கிறது.
  • ‘நான் எழுதினதிலே எனக்குப் பிடிக்காத பாடல் என்று எந்தப் பாடலுமே கிடையாது’ என்று அசல் கலைஞனுக்குரிய பெருமிதத்துடன் ‘கொக்கோ கோலா ப்ரௌவுன் கலருடா (போடாங்கோ)’ போன்ற பாடல்களை எழுத்தாணிய கலைக்குமார் பகிர்ந்தார்.
  • ஸ்ரீலேகா பார்த்தசாரதி ஏன் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை? குறைந்தபட்சம் ‘த்ரிஷா’ போன்ற அக்கா நடிகைகளுக்குத் தங்கச்சியாகவாவது வேடம் கட்டலாமே…
  • விஜய் யேசுதாஸ் ஏன் இன்னும் ஹீரோ ஆகவில்லை? (கு.ப. சிம்பு போன்ற தம்பி நடிகர்களுக்கு அண்ணன் ஆ.வே.க.?)
  • மேட்ச் ஃபிக்ஸிங் நடத்தினால், தமிழ்மணத்தில் போலி நட்சத்திர வாக்களித்தால், தப்பிக்கிற மாதிரி தப்பு செய்யவேண்டும். தங்கவேட்டையை சுவாரசியமாக்க, இந்த மாதிரி celebrity போட்டிகளில் இரு அணிகளுக்கும் சம அளவில் வென்று வருவதை இன்னும் கொஞ்சம் இலை மறை கனியாக நடத்தலாம்.
  • தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் தங்கங்கள் மட்டுமாவது நேரத்தோடு உரியவர்களை சென்றடையுமா?

    | |

  • Dalit Writer Ravikumar Interview – Dinamani.com

    எழுத்திலிருந்து முழு நேர அரசியலுக்கு – பொன். தனசேகரன்

    மக்கள் சிவில் உரிமைக் கழகம் மூலமும் தலித் இயக்கம் மூலமும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ் கருத்துலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகக் கருதப்பட்ட ரவிக்குமார் (45) விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    “திருமாவளவன்தான் என்னை வற்புறுத்தி போட்டியிடச் செய்துள்ளார். அவர் போட்டியிட இருந்த தொகுதியை எனக்கு அளித்துப் போட்டியிடச் செய்ததை எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்” என்கிறார் ரவிக்குமார்.

    கொள்ளிடம் அருகே மாங்கணம்பட்டு என்ற ஊரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பட்டதாரி.

  • கண்காணிப்பின் அரசியல்,
  • கட்டிலில் கிடக்கும் மரணம்,
  • மால்கம் எக்ஸ்,
  • கடக்க முடியாத நிழல்,
  • கொதிப்பு உயர்ந்து வரும்,
  • வன்முறை ஜனநாயகம்,
  • தலித் என்ற தனித்துவம்,
  • பணிய மறுக்கும் பண்பாடு…
    என்று இவரது நூல்களின் பட்டியல் தொடரும். கதை, கவிதை, மொழிபெயர்ப்பு, இலக்கியம், பத்திரிகைகள் என இவரது எழுத்துலகம் விரிந்தது. தமிழ்நாட்டில் 10-வது நிதிக் குழுவின் துணைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

    விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டவர் அவர். “முழுநேர அரசியலில் இறங்க முடிவெடுத்தது சரியான முடிவு. தேர்தலில் போட்டியிடுவதற்காக எனது சிண்டிகேட் வங்கிப் பணியை விடவில்லை” என்கிறார் ரவிக்குமார்.

    “எழுத்தாளராக இருந்து சுதந்திரமாகச் செயல்பட முடிந்த அளவுக்கு கட்சி அமைப்பில் உங்களால் செயல்பட முடியுமா” என்று கேட்டதற்கு,”எந்த ஒரு சுதந்திரமும் ஒரு வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது. எழுத்தாளரின் படைப்பாக்கமும் கற்பனையும் அரசியலில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும், எழுத்துச் சுதந்திரத்துக்கும் அரசியல் இயக்கத்தில் செயல்படுவதற்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதவில்லை” என்கிறார் அவர்.

    “தேர்தல் அரசியலின் வரையறைகளை உணர்ந்தே இருக்கிறோம். ஜாதி ஒழிப்பு என்பது எங்களது இறுதி இலக்கு. தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் கட்சி வேட்பாளர்கள், சட்டமன்றத்தில் தலித் மக்களின் உரிமைக் குரலை பிரதிபலிப்பதில்லை. தலித் இயக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், அம்மக்களுக்கான உயிர்நாடிப் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்ப முடியும். எனவேதான் சமூக இயக்க தளத்திலிருந்து அரசியல் தளத்தை நோக்கி நகர்ந்துள்ளோம்” என்பது ரவிக்குமாரின் கருத்து.

    காட்டுமன்னார் கோவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அத்தொகுதியை மாதிரி தொகுதியாக்கிக்காட்டுவேன் என்று கூறுவதுடன் அதற்காக வைத்திருக்கும் பல்வேறு திட்டங்களையும் விளக்குகிறார் ரவிக்குமார். எழுத்துக் களத்தில் தனது தனி முத்திரையைப் பதித்த ரவிக்குமார், தேர்தல் அரசியலில் எப்படி இயங்கப் போகிறார் என்பதை இனிமேல் பார்க்க வேண்டும்.

  • Subramaniam Swamy’s Election Manifesto – Dinamani

    தைரியமான தேர்தல் அறிக்கைதினமணி

    பெரும்பாலான மக்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கு மாற்று கருத்து கூறும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. ஆனால் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கட்சித் தேர்தல் அறிக்கையில் தைரியமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

    ரேஷன் கடைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதற்கு மாற்றாக அவர் முன்வைத்துள்ள திட்டம் சிறப்பான திட்டம்தான் என்றாலும் அது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

    தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்ற நெஞ்சை நிமிர்த்தி கூறியுள்ளார்.

    கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்தான் நாடாளுமன்ற தோல்விக்கு காரணம் என்று கருதி முதல்வர் ஜெயலலிதா அதை கைவிட்டதோடு பாஜக ஜனதாகூட அதற்கு பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. ஆனால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

    ஓட்டுக்காக ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு சிறுபான்மையினரை தாஜா செய்ய முயற்சியில் ஈடுபட்டிருக்க இவரோ சிறுபான்மையினர் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தேவையற்ற அளவுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக குறை கூறியுள்ளார்.

    எல்லாவற்றுக்கும் மேலாக ஜயேந்திரர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. அந்த வழக்கை ஜோடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். ஜயேந்திரர் கைது விவகாரம் குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரே கட்சி ஜனதா கட்சி மட்டுமே.

    அவர் கூட்டணி சேர்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சி கூட தேர்தல் அறிக்கையில் ஜயேந்திரர் கைது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று அடித்துச் சொல்லியுள்ளார்.

    தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் இருந்து வித்தியாசமான கருத்துகளை முன்வைத்துள்ளார் சுப்பிரமணியசுவாமி.