Daily Archives: ஜூலை 28, 2004

இணையப் பொறுக்கன்

1. FriendTest.com – challenge your friends with your own custom quiz!: தேர்தல் நடத்தலாம். தேர்வு வைக்கலாம். கருத்துக் கணிப்பு கொடுக்கலாம். ஸ்பார்க்லிட் கொடுப்பது போல் ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், மேலும் ஒன்பது வினாக்கள் தொடுக்கலாம்.

2. LHS Bat Quiz: வௌவால்களை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? (சப்-டெக்ஸ்ட் எல்லாம் இல்லாமல்தான் கேள்வி கேட்கிறார்கள் 🙂 [என்னுடைய ஸ்கோர்: Batter than Average! You got six answers right, which shows you know more than the average person about bats.]

3. Snowboard Alley: ரொம்ப வேலை செய்துவிட்டீர்களா? ஐந்து நிமிடத்துக்காவது சம்மரில் பனிச்சறுக்கு விளையாட வாங்க!

4. Our favorite Weird Toon!: இளவரசியார் போட்ட படமும் இருக்கிறது.

5. TechTales::Tech Room: சோகக்கதை சொல்கிறார்கள்; கடிக்கிறார்கள்.

6. The Room: ருத்ரன் சொல்வதைப் போல் உளவியல் ரீதியாக கணிக்கிறார்கள். அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாவிட்டாலும், சுவாரசியமான அலசல்கள். குப்பைத்தொட்டி குறித்த குறியீடு, வெகு அற்புதம். அவசியம் ஒரு தடவை ரூமுக்குப் போய்ப் பாருங்க.

7. GPS Drawing Information: இணையத்தில் ஊர் சுற்றியும், உங்களுக்கு நேரம் நிறைய இருந்தால் அல்லது புதுக்காதலியுடன் ஊர் சுற்ற விரும்பினால், செய்து பார்க்க வேண்டிய பயனுள்ள பொழுதுபோக்கு.

8. Virtual Presents: வாழ்த்து அட்டை கொடுப்பதெல்லாம் பழைய டெக்னிக். இப்பொழுது உங்களுக்கு என்ன வேணுமோ, அதை அனுப்பி வைப்பதுதான் ஃபாஷன். கார் வேணுமா? இட்லி-வடை வேணுமா?

9. Defiance: Why it happens and what to do about it: பத்ரி இப்பொழுது எழுதியிருக்கும் மேட்டருடன் சம்பந்தமுடையது. நான் அடிக்கடி படித்து அசைபோடும் அட்வைஸ்.

10. இணையத்தில் கண்டது: Through clever and constant application of propaganda, people can be made to see paradise as hell, and also the other way around, to consider the most wretched sort of life as paradise. – Adolf Hitler (Mein Kampf)

கமல் கண்ட கனவு

சத்தியமாய் கதை எழுதும் முயற்சிதான்.

-பாஸ்டன் பாலாஜி



எனக்கு வரும் கனவுகள் பல உடனடியாக மறந்துபோகும். எனவே, பகிர்ந்து கொள்ளுதல் என்னும் பேச்சுக்கே இடமில்லை. நான் சொல்லப்போகும் கனவு இப்படி மறந்து போகாத பகலில் நிகழ்ந்த ஒன்று.

கனவை குறித்து விவரிப்பதற்கு முன், இடஞ்சுட்டி விடுதல் உங்களுக்குப் பொறுத்தமாக இருக்கலாம். முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி வரை ஸ்னேஹாவுடன் டூயட். பதிவானதற்கு அடுத்த நாள், நான் கண்ட கனவு இது. இதைப் போன்ற நிகழ்வுகளை என்னுடைய திரைப்படங்களில் திணிக்க இயலாது. பஸ்ஸில் தூங்கிக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில், காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்ட அவுட்டோ ர் ஷூட்டிங் இருகின்ற சினிமா நாள்.

என்னுடைய கனவுகளில் ஸ்னேஹாவோ, சிம்ரனோ வருவது கிடையாது. கனவுக்கண்ணன்கள் என்றும் யாரும் வந்து போவதில்லை. பல சமயம் கனவே வராது. நான் கனவு காணும் சக்தியை இழந்துவிட்டேனோ என்று கூட அச்சமாய் இருக்கும். நான் காணும் கனவுகள் எனக்கு எப்போதும் பலித்ததே கிடையாது. விழித்திருந்தால், நான் கனவுகள் காண்பதில்லை. திட்டம் போடுவதிலும், அதை நிறைவேற்றுவதற்கு உரியோரைத் தேர்ந்தெடுப்பதிலுமே என் நேரம் சென்று விடுகிறது.

துர்சொப்பனங்கள் அவ்வப்போது எட்டி பார்ப்பதுண்டு. என்னுடைய படத்திற்கான க்யூவில் நான் நிற்பதாகவும், தடியடி வாங்குவதாகவும்; ஆஸ்கார் விருதினைப் பெறச் செல்லும்போது படிக்கட்டில் வேட்டி தடுக்கி விழுவதாகவும்; பல்லாயிரக்கணக்கான முதலைகளுக்கு நடுவே, நானும் வாய் திறந்து, கண்மூடி, மிருகக்காட்சி சாலையில் வசிப்பதாகவும்; விமானத்தில் தனியே பறக்கும்போது, விமானி இல்லாததைக் கண்டு பயந்துபோய், கதவைத் திறந்து, மேகத்தில் தொத்திக் கொள்வதாகவும்; வீட்டு சாவி இல்லாத இரவில், ஆள் அரவமற்ற தெருவில், ஆடை கிழிந்து, அலங்கோலமாக ஓடும்போது, திடீர் சூரியன் உதிப்பதாகவும் என்று நிறைய.

ஆனால், அவற்றை சொல்லி, உங்களின் சுபதினைத்தை நாசமாக்க நான் விரும்பவில்லை. கெட்ட சொப்பனம் கண்டால், எழுந்து, தண்ணீர் குடித்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். நல்லது கண்டால் தூங்கக் கூடாது, கெட்டது கண்டால் தூங்கிப் போக வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. முழித்திருந்தால் வேலை செய்யவேண்டும். அவ்வளவே.

என் கனவை குறித்து சொல்லிவிடுகிறேன். இந்தக் கனவு சூரியன் இருக்கும் பகல்வேளையில்தான் ஆரம்பிக்கிறது. நானும் என்னுடைய நண்பரும், கம்பிகள் போட்ட தியேட்டர் வாசலில் நிற்கிறோம். என் தோற்றத்தைப் பிறர் காணக்கூடாது என்பதற்காக, ‘சத்யா’வின் தாடியும், ‘ஆளவந்தானின்’ மொட்டையும் கொண்டு காணப்படுகிறேன். கூட இருக்கும் நண்பர், பார்ப்பதற்கு ‘பாய்ஸ்’ சித்தார்த் மாதிரி இருந்தார். எங்களுக்குப் படத்திற்கான டிக்கெட் கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் பார்க்கப் போகும் படத்தை குறித்தோ, கடந்து செல்லும் இளைஞர்களை குறித்தோ, கம்பிக்கு வெளியே இருக்கும் கூட்டத்தை குறித்தோ பேசிக் கொண்டிருக்கலாம்.

யாருக்கும் என்னை அடையாளம் தெரியாத அந்த அதிகாலை ஏழு மணி காட்சியில், ஒருவன் மட்டும் என்னைப் பார்த்து விடுகிறான். ‘நீங்க கமல்தானே?’ என்னும் அவனின் மகிழ்ச்சியான கண்டுபிடிப்பு எனக்கு சந்தேஷம் தருகிறது. முகத்தில், தோற்றத்தில் இவ்வளவு மாற்றம் செய்தாலும், என்னை அடையாளம் கொண்டு விசாரிக்கும் அவனுக்கு ‘ஆம்’ என்கிறேன்.

எனக்கு வழக்கமான பயம் வருகிறது. என்னுடைய நடிப்பு, திரை ஆளுமை, இயக்குநர் பாணிகள், சினிமா என்று பாராட்டிப் பேசும் மற்றொரு ரசிகன் வந்துவிட்டானே என்ற பயம். இரண்டு நிமிடம் பேசி, கை குலுக்கி, போட்டோ பிடித்துக் கொண்டு, முகத்தைக் கிள்ளி, சினிமா டிக்கெட்டின் பின் கையெழுத்து வாங்கி, நாலு தடவை நன்றி சொல்லி, தானும் பிரபலத்தை சந்தித்த கதையை நண்பர்களிடம் பிரஸ்தாபிக்கப் போகும் இன்னொரு ஜீவனோ என்னும் பயம்.

ஆனால், நான் ஏற்கனவே சொன்னேனே, இது நல்ல கனவு. இவன் என்னுடைய ‘தீராநதி’ படைப்பை விசாரிக்கிறான். ஞானக்கூத்தன் கவிதையை அலசுகிறான். தொழில்நுட்பத்தை விட்டுவிட்டு இலக்கியம் பேசுகிறான். என்னுடைய கவிதைப் புத்தகம் எப்போது வெளிவருகிறது என்று ஆர்வமாய் கேட்கிறான். இது போன்ற ஆழ் அலசல்கள் வலையுலகில் கிடைப்பதை விவரிக்கிறான். இண்டர்நெட்டில் தமிழ் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது முதல் எங்கு கோலோச்சுகிறது என்பது வரை அலசுகிறான். என்னை சந்திக்க வருபவர்களிடம் இருந்து, மாறுபட்டு, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்காமல், சிறந்த படம், சிறந்த ஹீரோயின் என்று லிஸ்ட் கேட்காமல், நிருபரைப் போல் அந்தரங்கக் குடைசல்கள் இல்லாமல், வெற்றுப் புளகாங்கிதங்களில் சிரிப்பை நிரப்பாமல், என்னுடைய நல்ல ரசிகன் ஒருவனைப் பார்த்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டுதான் இருந்தேன்.

கடைசியாக, தான் சார்ந்திருக்கும் இணைய இலக்கிய குழுவில் என்னை உறுப்பினராகும்படி வலியுறுத்தி என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் திருடும்வரை அந்தக் கனவு நல்ல கனவுதான்.