Tag Archives: வோட்டு

மீண்டும் டொனால்டு டிரம்ப் வருவதற்கான கால்கோள்

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தல் நடக்கும்.

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை லோக் சபா தேர்தல். நடுவில் உள்ளாட்சி, இடைத் தேர்தல் எல்லாம் இருந்தாலும் ஒரு வாக்குப் பதிவு முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர் தேர்தல் வாக்குறுதியை மசோதாவாக்க மக்களவை, மேல்சபை என்று அனுப்புவதற்குள் அடுத்த தேர்தல் முடிந்து அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கும்.

உலகின் பெரிய பொருளாதாரமாக சீனா வளர்ந்து நிற்கிறது. டொனால்டு டிரம்ப் இருந்த மட்டும் வாலைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவை ஆண்ட ருஷியா, ஜான் பைடன் வந்த பிறகு உக்ரைன் நாட்டை படையெடுத்து உலகா தாதா ஆகி நிற்கிறது. சமாதானம் செய்வது, நடுவராக இருப்பது எல்லாம் இந்தியாவின் கையில் இருக்கிறது. வட கொரியாவும் ஏவகணையாக விட்டுத் தள்ளுகிறது. வளைகுடாப் பகுதியில் ஈரான் பெரிய புள்ளியாக சர்வ வல்லமையுடன் கோலோச்சுகிறது.

இது அயல்நாடு சமாச்சாரம்.

உள்நாட்டில்… இன்னும் கேவலமான சூழல்!

வரலாறு காணாத பணவீக்கம். எகிறும் பெட்ரோல் விலை. வீடு வாங்க முடியாத சொந்த வளையில் குடிபுக முடியாத தலைமுறை. அமெரிக்காவைப் பார்த்தால் இங்கிலாந்தே தேவலாம் என்று சொல்லிவிடுவீர்கள்.

இந்த நிலையில் ஆளுங்கட்சியான டெமொகிராட்ஸ் – ஜனநாயகக் கட்சி தேர்தலை சந்திக்கிறது. அவர்கள் வைத்திருக்கும் ஒரே அஸ்திரம் – தனக்கான முடிவை பெண்களே எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் தேவையா? வன்புணரப்பட்ட மகளிர் உடலைக் கூட மசோதா போட்டு வேண்டாத மகவைப் பெற்றெடுக்க வைக்கும் அராஜகத்தை முன்வைத்து வாக்கு கேட்கிறார்கள்.

கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அதை ரத்து செய்து சட்டம் இயற்ற தங்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்கிறார்கள்.

எதிர்க்கட்சியான ரிபப்ளிகன் – குடியரசு கட்சி எந்த விஷயத்தைக் கையில் எடுப்பது என்று திணறும் அளவு தெரிவுகள். நிதி நிலைமையையும் பொருளாதார சரிவையும் முன் வைக்கிறார்கள். தட்டித் தடுமாறி நடந்து கொண்டு, குப்பாச்சு குழப்பாச்சு ஆக திணறிப் பேசி, எந்த முடிவையும் தீர்க்கமாக நடைமுறையாக்காத, கையாலாகாத ஜனாதிபதி ஜான் பிடன் தலைமையைச் சுட்டுகிறார்கள். டொனால்ட் டிரம்ப் மீண்டும் வந்து விடுவார் என்று நம்பிக்கை நட்சத்திரத்தைச் சொல்கிறார்கள். அமெரிக்காவின் எரிவாயுவையும் எண்ணெய் ஊற்றுகளையும் திறந்து டீஸல் விலையைக் குறைக்கிறோம் என்கிறார்கள்.

கிறித்துவ மதக் கொள்கைகளை கொடி பறக்க விடுவோம் என்னும் சித்தாந்தத்தின் பின்னணியில் வெள்ளையர்களும் கருப்பர்களும் ஒரே அணியாகத் திரண்டு இருக்கிறார்கள். கருச்சிதைப்பை எல்லா மாநிலங்களிலும் எப்பொழுதும் குற்றமாக்குவது… துப்பாக்கியை எங்கேயும் எவ்வாறும் எடுத்துச் செல்வது… பக்கத்து நாடுகளில் இருந்து கள்ளத்தோணிகளில் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்குள் புகுபவர்களை குடியேற விடாமல் துரத்துவது… வருமான வரியைக் குறைப்பது… தற்பால் விரும்பிகள் குழந்தைகளைத் தத்தெடுக்க விடாமல் தடுப்பது… அள்ள அள்ளக் குறையாத சமூகக் கொள்கைகள்.

மாநிலங்களவை / ராஜ்ய சபா போன்ற செனேட் நிலைமை – 50 டெமோகிராட் மற்றும் 50 ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள்.
மக்களவை / லோக் சபா போன்ற காங்கிரஸ் நிலைமையும் இதே போல் இழுபறி தான். சற்றே சறுக்கினாலும் இப்போது இருக்கும் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) பெரும்பான்மையை இழந்து விடும்.

கடந்த இரண்டு வருடத்தில் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) காரகளால் ஒழுங்காக எந்த புதிய சட்டத்தையும் அமலாக்க முடியவில்லை. டொனால்ட் டிரம்ப் சதி செய்தார். அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்கள். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்று நிரூபிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.

சென்ற ஆட்சிக்காரர்களை குற்றஞ்சாட்டி ஆளுங்கட்சி ஜெயிக்க முடியாது. அடுத்த இரண்டாண்டுகளாவது ஜனாதிபதி ஜான் பிடென் அரசாட்சியிலும் நிர்வாகத்திலும் மக்கள் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்துவிட்டது.

இனி மேலாவது ஒழுங்காக ஆக வேண்டிய காரியங்களையும் உண்மையான பிரச்சினைகளுக்கான தொலைநோக்கு தீர்வுகளையும் உலக வெம்மையாக்கலையும் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) கையில் எடுக்குமா?

அல்லது பூச்சாண்டி டிரம்ப் வராரு என்று கிளிப்பிள்ளையாக புலம்பிக் கதறிக் கொண்டேயிருப்பார்களா?

அப்புறம் டிரம்ப் மீண்டும் உலகநாயகர் ஆவதை புடின் நினைத்தாலும் தடுக்க முடியாது!

அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்

எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.

ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.

சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.

–  சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்

–  அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்

–  தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்

அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.

அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.

தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.

பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.

அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!

அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.

அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.

காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.

நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.

போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,

பாபா

யாருக்கு வாக்களிப்பது? பத்திரிகைகளின் பரிந்துரை

இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.

இங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.

பெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.

இதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.

நியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.

தமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்

சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.

விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.

இந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்

இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.

வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.

வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.

கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.

இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்

ஜாதி: தேவையா? வேண்டாமா?

சில பதிவுகள்:

1. jeyamohan.in » Blog Archive » சாதி பேசலாமா?

2. jeyamohan.in » Blog Archive » சாதியுடன் புழங்குதல்…

3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்

சாதி ஏன் வேண்டும்?

  1. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு
  3. சம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு
  4. தொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு
  5. முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்?
  6. வத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு
  7. ஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது
  8. சாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு

ஜாதி ஏன் தேவையில்லை?

  1. சமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்
  2. இன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்
  3. பார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்
  4. மண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்
  5. லாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்
  6. அப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்
  7. க்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்
  8. பிரிவினையை விரும்பாததால்

“A caste-ridden society is not properly secular. When a person’s beliefs become petrified in caste divisions, they affect the social structure of the state and prevent us from realising the idea of equality which we claim to place before all else.” – Jawaharlal Nehru

கட்டம் கட்டப்பட்ட ஒபாமா

அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?

countyvotemap

நன்றி: National map of McCain-Obama presidential voting <em>by county</em> | Top of the Ticket | Los Angeles Times

எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?

obamaland

எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?

mccainland

நன்றி: Obamaland and McCainland

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:

1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?

இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.

2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?

1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.

2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.

3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.

4. தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.

6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா?

ஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வாக்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.

இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.

4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை?

இவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம்? இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்?

5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வடிவேலு.

ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.

பத்ரி

இந்த வார விருந்தினர்: மூஸ் ஹன்ட்டர்

ஆதியில் டைனோபாய் வந்தார். இப்போது மூஸ்ஹன்ட்டர்.

அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்குமுன் அவரைக் குறித்து பின்னணி கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து.

  • ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹில்லரி க்ளின்டன் வரவேண்டுமென்று விரும்பினேன். 2016 வரை ஒபாமா காத்திருந்திருக்கலாம்!
  • என்னுடைய பீச்சாங்கை பக்கம் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பம் வசிக்கிறார்கள். சோத்தாங்கை பக்கம் இந்தியர்கள். எதிர்த்தாப்பல வெள்ளக்காரங்க. அந்தப்பக்கம் இரானில் இருந்து வந்திருக்கிறவங்க. ஒரே வெரைட்டிதான்!
  • ஜான் மெகயின கீட்டிங் விவாகாரத்துல விசாரிக்கறப்ப இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

இனி அவர்:

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?

இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களான இவ்விருவரோடு சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர் என்று மொத்தம் ஐந்து பேர் களத்தில் உள்ளனர்.

ஆகியோரும் களத்தில் உள்ளனர். வெகுஜன ஊடகங்களில் அதிகம் பேசுப்படுவதில்லையாகையால் இவர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஆனாலும் இவர்களின் கட்சி சார்ந்து அவர்களுடைய கொள்கைகளை, திட்டங்களை ஓரளவு கணிக்கலாம்.

ரால்ப் நேடரைப் பற்றி ஓரளவு தெரியும். பலமுறை அவருடைய செவ்விகளை பசிபிகா, என். பி. ஆர். வானொலிகளில் கேட்டிருக்கிறேன். பத்திரிகைகளிலும் அவரைப் பற்றிப் படித்திருக்கிறேன்.

பாப் பார் இன் செவ்வியினை என். பி. ஆர். இல் கேட்டிருக்கிறேன். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர். இப்போது லிபர்டேரியன் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். லிபர்டேரியன் கட்சியின் கொள்கைகள் எனக்கு ஒத்து வராது.

பசுமைக் கட்சியின் இணைய தளத்தை மேலோட்டமாக மேய்ந்ததோடு சரி. ஆகையால் சிந்தியா மெக்கின்னியைப் பற்றி அதிகம் தெரியாது. சமீபத்தில் மூன்றாம் கட்சியினர் தேசிய பத்திரிக்கையாளர் கிளப்புடன் இணைந்து நடத்திய கூட்டத்தை C-SPAN இல் ஒளிபரப்பினார்கள். அதிலும் நேடரும், ரான் பாலும் பேசியதை மட்டும் தான் பார்க்க முடிந்தது. மெக்கின்னி பேசியதை பார்க்கவில்லை.

ஆக களத்தில் இருக்கும் வேட்பாளர்களின்-அவர்களுடைய கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்கள் ஆற்றிய பணிகள், அவர்களுடைய நேர்மை ஆகியவற்றை வைத்து முடிவு செய்ய வேண்டுமென்றால் என்னுடைய முதல் தேர்வு ரால்ப் நேடர் தான்.

அடுத்த தேர்வு ஒபாமா.

நான் இருக்கும் மாநிலத்தில் நேடருடைய பெயரைச் சேர்க்க வேண்டுமென்று மனு கொடுக்கப்பட்டதாக செய்தித் தாளில் படித்தேன். சாலையோரத்தில் ஓரிரு நேடர்/கன்சாலஸ் விளம்பரப் பலகைகளும் தென்படுகின்றன. அனேகமாக அவருடைய பெயர் வாக்குச்சீட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவர் பெயர் இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஓட்டு போடலாம் அல்லது ஒபாமாவுக்குப் போடலாம்.

நேடருக்கு விழும் வாக்குகள் அனேகமாக அதிருப்தி ஜனநாயக் கட்சியினரின் வாக்குகளாகத் தான் இருக்கும் (நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் ஆகவில்லை. இந்த நாட்டுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பின் சமீபத்தில் தான் குடியுரிமை பெற்றேன். முதல் முறையாக இப்போது தான் வாக்களிக்கப்போகிறேன்).

2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் நேடர் போட்டியிட்டிருக்காவிட்டால் (குறிப்பாக ஃப்ளோரிடாவில்) கோர் தோற்றிருக்க மாட்டார் என்று ஜனநாயகக் கட்சியினர் கடும்கோபம் அடைந்தனர். ஆனால் நேடருடைய வாதம் நியாயமாகத் தான் இருக்கிறது:

“நான் பேசிய பிரச்சினைகளை கோர் பேசியிருந்தால் எனக்கு கிடைத்த வாக்குகள் அவருக்கு கிடைத்திருக்கும். ஆகையால் என் தப்பு இல்லை. அது கோர் இன் தவறு தான்” என்கிறார். இம்முறையும் தன்னுடைய இணையதளத்தில் சில பிரச்சினைகளைப் பட்டியலிட்டிருக்கிறார், அவற்றைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசி தனக்குக் கிடைக்கப் போகும் வாக்குகளை தம் பக்கம் திருப்பிக்கொள்ளலாம் என்கிறார்.

“நேடர் எப்படியும் வெற்றிபெறப் போவதில்லை. ஒரு வாக்கை ஏன் வீணாக்க வேண்டும்” என்று கேள்வி எழலாம்.

பிரச்சினை என்னவென்றால் நான் வசிக்கும் தென் மாநிலம் சிகப்பு நிரையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மெக்கெய்ன் – ஒபாமா வாக்கு வீதம் 55-35 என்ற அளவில் உள்ளது. ஆகையால் ஒபாமாவும் இங்கு வெற்றிபெறப் போவதில்லை.

அவருக்கு போட்டாலும் என் வாக்கு வீண் தான் (வாக்கு வீணாகக் கூடாது என்பதற்காக மெக்கெய்னுக்கு போட முடியுமா?).

“ஒபாமா இங்கு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் எவ்வளவெனில், இங்கு வெற்றிபெறுமுன் அவர் வேறு 45 மாநிலங்களில் வெற்றி பெறவேண்டும். அப்படியொரு அலை இப்போது வீசவில்லை” என்கிறார் ஓர் உள்ளூர் அரசியல் பேராசிரியர் (1984 தேர்தலில் ரீகன் 49 மாநிலங்களில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் தோற்ற/தோற்கப்போகும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் பெண் என்பது மட்டும் தான். ஆனால் ஒபாமாவின் கவர்ச்சி ரீகனின் கவச்சிக்கு இணையானதாக இல்லை என்பதால் 45 ஐ எட்ட முடியாது).

என் அண்டை வீட்டுக்காரர்களில் ஒரு பக்கம் கறுப்பர், அடுத்த பக்கம் இந்தியர். எதிர் வீடுகளில் ஒருவர் வெள்ளையர் இன்னொருவர் ஈரானியர். எல்லோருமே ஒபாமாவுக்குத் தான் வாக்களிக்கப்போவதாக கூறுகிறார்கள். வெள்ளையர் தன் வீட்டின் முன் ஒபாமா/பைடன் விளம்பரத் தட்டி கூட வைத்திருக்கிறார். நானும் ஒபாமா என்றுதான் சொல்லிவைத்திருக்கிறேன் (ஆனால் நான் வசிக்கும் நகரம் கடைந்தெடுத்த கன்சர்வேடிவ் நகரம்).

ஆனால் உண்மையில் ரால்ப் நேடரா அல்லது ஒபாமாவா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த நாட்டில் இரு கட்சி ஆதிக்கத்தை மாற்ற ஏதோ நம்மாலான முயற்சி.

இருந்தாலும் இந்த தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஒன்று, முதல் முறையாக கறுப்பர் அதிபராவார் அல்லது ஒரு பெண் துணை அதிபராவார் என்று சொல்லப்படுகிறது.

பசுமைக் கட்சியின் வேட்பாளர் சிந்தியா மெக்கின்னி/ரோசா க்ளமெண்டி வெற்றி பெற்றால் இரண்டு சிறப்புகளும் ஒரேசேர கைகூடும். 🙂

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

'நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?' – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:

வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.

விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric – Horserace

மேலும் விவரங்களுக்கு: And Then There’s Joe – The Caucus Blog – NYTimes.com