Tag Archives: வாழ்க்கை

தேகயாத்திரை

Soul – Movie Review

வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்?

இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் ஷொஷோனி (Shoshoni) பிரிவினரிடம் புழங்குகிறது:

ஒரு ஊரில் ஓநாயும் நரியும் வசித்து வருகின்றன. ஓநாயின் பேச்சை எப்போதுமே குள்ளநரி கேட்காமல் நடந்து கொண்டிருந்தது. ஓநாய் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே குள்ளநரி செயல்படும். குள்ளநரியிடம், “இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வித்தை உனக்குத் தெரிய வேண்டுமா? அவர் வீழ்ந்த இடத்திற்கு அடியில் பூமியைத் துளைத்துச் செல்லும் அம்பை விட்டால், மாண்டவர் மீள்வார்!”, என ஓநாய் சொல்கிறது.

ஓநாய் என்ன சொன்னாலும் சிவப்புக் கொடி தூக்கும் குள்ளநரி, “அதெல்லாம் வேண்டவே வேண்டாம். செத்தவர் செத்தவராகவே இருக்கட்டும். இறந்தவரையெல்லாம் இப்படி உயிர்ப்பித்தால், பூமி பாரம் தாங்காது.” என்றது. அப்போதைக்கு அதற்கு “சரி” என்று தலையாட்டி வைக்கிறது ஓநாய். எனினும், தனிமையில் சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டுகிறது ஓநாய். குள்ளநரியின் மகனை முதல் பலியாகக் கொல்ல முடிவு செய்கிறது. இரவோடிரவாக கொன்றும் விடுகிறது.

காலையில் மகனின் மரணத்தைப் பார்த்த குள்ளநரி அரற்றி பிழற்றிக் கொண்டு ஓநாயிடம் கதறிக் கொண்டே வந்தது. “என் மகன் அகால மரணம் அடைந்துவிட்டான். அவனை உயிர்ப்பித்துத் தர முடியுமா? அவன் வீழ்ந்த நிலத்திற்கடியில் பாணத்தை விட்டு அவனை மீண்டும் நடமாட வைப்பாயா?” என்று இறைஞ்சுகிறது நரி. ஓநாய், “அதெப்படி? எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்று நீதானே நேற்று சொன்னாய்! உனக்கு மட்டும் எப்படி தனி நியாயம்?” எனக் கேட்க, சாவுத்துயரில் தோய்ந்த நரி, அன்றைய நாளில் இருந்து அந்த வித்தையை பலிக்காமல் போக சபிக்கிறார்.

டிஸ்னி நிறுவனத்தின் பிக்ஸார் கிளையின் அடுத்த படம் இது போன்ற இரு மாந்தரை மையமாக வைத்து “சோல்” (Soul – ஆன்மா) படத்தை வெளியிட்டு இருக்கிறது. வெள்ளித்திரைகளில் படம் வெளியாகவில்லை. சின்னத்திரையான டிஸ்னி+ மூலமே இதைப் பார்க்க முடியும். பியானோ வாசிப்பாளர் பெயர் ஜோ. சிறுவர்களுக்கு வாத்தியங்களைக் கற்றுத் தருகிறார். ஒரு பக்கம் பள்ளிக்கூடத்தில் நிரந்தர வேலை உறுதியாகும் வாய்ப்பு. இன்னொரு பக்கம், ஷ்ரேயா கோஸல் போன்ற ஆதர்ச + புகழ்பெற்ற பாடகியின் பக்கவாத்தியமாக விரும்பியதை வாசித்து ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளும் வாய்ப்பு. சாலை விபத்தில் கிட்டத்தட்ட இறக்கிறார். மரணத்தின் வாயிலில் அவ்வுலகம் செல்கிறார். அங்கே பல்வேறு உயிர்களையும் இன்ன பிற ஆன்மாக்களையும் சந்திக்கிறார்.

அவருக்கோ மீண்டும் பூமிக்குள் வந்துவிட ஆசை. இப்பொழுதுதான் வாழ்நாள் லட்சியம் சாத்தியம் ஆகப் போகிறது. காலையில் நிரந்தர வருமானம். மாலையில் கனவு உத்தியோகம். ஒவ்வொரு நாளும் விதவிதமாக இசையில் மூழ்கலாம். பியானோ வாசிப்பில் லயிக்கலாம். கேட்போரையெல்லாம் சொக்க வைக்கலாம். அந்த நேரம் பார்த்து மரணம். ஆசையில் மண்.

இன்னொரு பக்கம் அவ்வுலகத்தில் “22” என்னும் ஆன்மாவிற்கு மீண்டும் பூமிக்கு வரப் பிடிக்கவே பிடிக்கவில்லை. மனிதராகப் பிறந்து உண்டுண்டு உறங்குவதை வெறுக்கும் ஜீவன். மாயாப் பிறவி மயக்கம் அறுத்த அகவுயிர். ஓயாமல் இரவு பகலாய் உழைத்துக் கொட்டி, அதில் அர்த்தம் தேடுவதை ஒதுக்கும் ஆவி – “22”.

பிக்சர் படம் என்றால் குழந்தைகள் படம். என்றாலும், அதில் சினிமாவில் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் என் போன்றோருக்கு நிறையவே சரக்கு இருக்கும். சடாரென்று தூக்கத்தில் எழுப்பினால் கூட “அப்”, “இன்சைட் அவுட்”, “மான்ஸ்டர்ஸ் இன்க்” என்று அடுக்கி, அதன் தத்துவங்களை விலாவாரியாக ஆர்வமாக விளக்குவேன். ஒரு தடவைக்கு பல தடவை பார்த்தாலும் அலுக்காதவை.

அலுக்காத தன்மைக்கு அந்த அனிமேஷன் லாவகத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த “சோல்” படமும் நாக்கில் கரையும் மைசூர்பா என கண்ணில் கரையும் புத்திசாலித்தனமான காட்சிகள் கொண்டது. தொழில்நுட்பம் ஆகட்டும்; கலாபூர்வம் ஆகட்டும். இரண்டும் பார்ப்போரை ஏகாந்த நிலைக்குக் கொண்டுபோகிறது. அதுவும், இறப்பு, வாழ்க்கையின் பூரணத்துவம் போன்ற எசகு பிசகான கேள்விகளை எழுப்பும்போது கூட அந்த இருட்டு தெரியாமல் ரம்மியமாக செல்கிறது. காட்சிக்கேற்ற பரவச இசை; தத்ரூபமான இசை சபா மேடை; ஜோதியில் ஐக்கியமாவது; எல்லாமே சரியான பதத்தில் வந்திருக்கிறது. பியானோவும் ட்ரம்பெட்டும் எக்காளமிட்டு ஒன்றோடன்று போட்டி போடும் இசையமைப்பிற்கு என்னால், ‘பேஷ்’ மட்டுமே வைக்க இயலும். அதில் தோய்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரார்களாலேயே அதன் ஆலாபனைகளை உணர இயலும்.

எனவே, படத்தில் நான் உணர்ந்த தொன்மவியலுக்குள் சென்று விடுகிறேன்.

ஒரு கிளையில் உள்ள இரு பறவைகளாக ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சில உபநிஷத்துகள் காண்கின்றன. இங்கேயும் அந்த மாதிரி ‘22’ம் ஜோ என்னும் வாத்தியக்காரரும் வருகிறார்கள். ஜீவாத்மா என்னும் பறவை, மரத்தின் கனிகளை உண்கிறது. அதில் சில பழங்கள் இனிக்கும்; சிலது கசக்கும் – மாணாக்கர்களின் சேஷ்டை ‘ஜோ’ என்னும் இசை வாத்தியருக்கு வெறுக்கிறது; அதே சமயம் இசையை ரசித்து வாசிக்கும் மாணவரின் ஆர்வம் இனிக்கிறது. கச்சேரி வாய்ப்பிற்காக, ஒவ்வொரு சபா ஆக சென்று, வாய்ப்பு கேட்டு, மறுக்கப்படுவது வெறுக்கிறது; அதே சமயம் கிடைத்த வாய்ப்பில் பரிமளிக்கும் போது, கிடைக்கும் பார்வையாளர்களின் கைதட்டல், சந்தோஷம் – இனிக்கிறது. பரமாத்மாவிற்கோ இதில் எல்லாம் அபிலாஷை இல்லை. அது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும். இந்தப் பழங்களை, “சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்”, என்று ஒதுக்கும். இது ‘22’

ஜீவாத்மாவிற்கு எப்பொழுது பரமாத்மாவின் மகத்துவம் புரிகிறதோ, அப்போது இவ்வுலகின் துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுதலை அடைந்து முக்தி பேறடைகிறது. படத்திலும் ‘ஜோ’ அடைகிறார். இறுதியில் எல்லா பிக்ஸர் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் மோன நிலையை அடைந்துவிடும். அது பெரிய விஷயமேயில்லை. எப்படி, எவ்வாறு, எந்தப் பாதையில் சென்று உய்யலாம்? அந்தப் பாதையை, பரிணாம மாற்றத்தை, இந்தப் படம் சுவாரசியப்படுத்திச் சொல்லியிருக்கிறது.

இந்தப் பாதை அடையும் வழி என்ன என்று உபநிஷத்துகள் என்ன சொல்கிறது? கடனே என்று காரியத்தை, கருமங்களை செய்யாதே என்கிறது. எளிதானவற்றையும் பிரயாசையின்றி செய்வதையும் விட்டுவிடு; சரியானதையும் ஷ்ரேயஸானவற்றையும் செய் என்கிறது. ஆன்மாவை நோக்கி உள்முகமாக பயணி என்கிறது. அனைவரிடத்தும் அன்பு செலுத்து; அவர்களிடம் அக்கறை கொள்; பொருத்தமான ஆன்மிக குருவைத் தேர்ந்தெடு; அவரிடம் கேள்விகளை முன் வை; அவரிடம் சந்தேக நிவர்த்தி பெறு என்கிறது.

அனுபூதி அடைவது எளிதல்ல. குருவின் சோதனைகளை செவ்வனே முடிக்க வேண்டும். கடைசியில் அவரவர்க்கு அவரவர் ஆத்மாவே குருவாகிறது. மனிதப் பிறவியில் ஞானமும் (சிரவண மனனம்) யோகமும் (நித்தியாசனமும்) அடையப்பெற்ற விவேகர்கள், தன்னை சர்வ சக்தியுள்ளவர் என்று அறிந்து கொள்கின்றார். (மேலும் வாசிக்க – பின் – இணைப்பு: யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை)

மீண்டும் “சோல்” திரைப்பட பார்வைக்கு திரும்புவோம்.

இறந்தோர் செலும் வரிசையில் ஜோதியில் ஐக்கியமாவதற்காக ஜோ என்னும் கதாபாத்திரம் காத்திருக்கிறது. அப்பொழுது, அந்த வரிசையில் இருந்து எகிறி குதித்து, இன்னொரு இடமான திரிசங்கு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த இடம் Defending Your Life என்னும் படத்தை நினைவூட்டியது. அதில் மரணித்த ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை மீண்டும் பார்ப்பார்கள். அதில் சிற்சில மாறுதல்களை செய்ய விரும்புகிறார்களா அல்லது தற்காப்பாக அவர்களின் முடிவுகளை ஆதரித்துப் பேசுவார்களா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட பயணம் அமையும்.

அந்த இடைப்பட்ட இடத்தில்தான் ஜோ கதாபாத்திரம் “22”ஐ சந்திக்கிறது. பல்வேறு பெரிய கைகளை பார்த்து பழம் தின்று கொட்டை போட்ட கதாபாத்திரம் “22”. மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், அன்னை தெரசா, கொபர்னிகஸ், மேரி ஆன்டொனெட், கார்ல் யொங் என்று பலர் “22”ஓடு கலந்துரையாடி, பூலோகத்திற்கு தயார் செய்ய முயன்று, பலரும் தோற்றோடியிருக்கிறார்கள். அந்த 22ன் வாயினாலாயே சொல்வதானால், “தெரஸாவையே அழ அழ ஓட்டியவளாக்கும் நான்!” அந்த ஆசிரியர்களால் முடியாததை ஜோ செய்கிறார். தன் உருவத்தில் 22ஐ சில மணித்துளிகள் நடமாட விடுகிறார். அதன் மூலமாக வாழ்வின் அற்புதத்தை உணர்த்துகிறார்.

ஆன்மாக்களின் ஆளுமைகளை உருவாக்கும் பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் கண்டறியும் இடம் தான் இந்த “கால்கோள் சந்தி” எனப்படும் The Great Before. ஆன்மாக்கள் இன்னும் முழுமையடையவில்லை. இரண்டும்கெட்டான்களாக அலைகிறது. அங்கிருக்கும் குருவானவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆன்மாக்களை, பக்குவப்படுத்திய பிறகு, பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதன் பின் அந்த ஆசிரியர்கள் “மகா உம்மை” எனப்படும் Great Beyondக்கு சென்று பிரும்மாண்ட பிரகாச ஒளியில் ஐக்கியமாகி விடுவார்கள்.

“கால்கோள் சந்தி”யில் குணாதிசயங்களைப் பொருத்தலாம்; விருப்பங்களை உருவாக்கிக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உந்து சக்தி வேண்டாமா? உங்களை இயக்க, உங்களின் ஒவ்வொரு நாளையும் உத்வேகமிக்கதாக ஆக்க, ஆற்றலின் முழு வீச்சையும் உணரவைக்கும் ஜீவாதாரம் எது? அதை அடையாளம் காண்பிக்க வேண்டியது குருவின் பொறுப்பு.

மனிதன் மீண்டும் ஜனனம் ஆவதை பஞ்சாக்னி வித்தை எப்படி சொல்கிறது என்று பார்க்கலாம். மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். அது வரும் பாதை:

  1. தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் ஜீவன் தயாராகிறது.
  2. ஜீவாத்மா மேகத்திற்குள் நுழைகிறது. நெருப்பை அணைக்கும் சக்தி மழை நீருக்கு இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி எனப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
  3. பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
  4. பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறது. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறது.
  5. ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் மனிதரும் அக்னி. அவரது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவர்களது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது. 

திரைப்படத்திலும் இந்த மாதிரி ஒவ்வொரு ஜீவனுக்கும் ஐந்து பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் பொருத்துகிறார்கள். ஆனால், விந்து என்பது எது என்பதை அந்த ஜீவனே கண்டறிய வேண்டும். அதைக் கண்டறிவதற்கு, குருவின் துணை தேவை என்பதை வலியுறுத்துகிறது.

பிரபஞ்சம் என்பது 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது என்று ஸாங்கியம் சொல்கிறது.

பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கர்மேந்திரியம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மஹாபூதங்கள் என்று மொத்தம் 24 இருக்கின்றன.

ஞானேந்திரியங்கள் என்பவை

  1. சப்தம் (காது)
  2. ஸ்பரிசம் (சர்மம்) / தோல்
  3. ரூபம் (கண்)
  4. ரஸம் அல்லது சுவை (வாய்)
  5. கந்தம் என்ற வாஸனை (மூக்கு)

ஜீவனே நேராகக் காரியம் செய்ய உதவுபவை கர்மேந்திரியங்கள்.

  1. வாய் பேசுவது
  2. பல காரியங்களைச் செய்ய உதவும் கை
  3. நடக்கிற கால்,
  4. மலஜல விஸர்ஜனம் செய்கிற அவயவம் / உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்)
  5. ஜனனேந்திரியம் / பிறப்புறுப்புக்கள் 

அருவத்தின் உருவ மாற்றமே தன்மாற்றம். நிலை மாற்றம் அலை. தன்னிலை மாற்றம் தன்மாற்றம். தன் தன்மையின் மாற்றம் தன்மாத்திரை. பஞ்ச தன்மாத்திரைகள்;

  1. சப்தம் / ஓசை
  2. ஸ்பர்சம் / தொடுதல்
  3. ரூபம்
  4. ரசம்
  5. கந்தம் / ஒளி

எல்லாவற்றுக்கும் ஆதாரமான – ஆத்மாவைப் ‘புருஷன்’ என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்வது ஸாங்கியம். அதுபோல், இந்தப் படம் ‘புருஷன்’. அதில் இருந்து கிடைப்பது ப்ரக்ருதி. திரைப்படம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. வாழ்வதைப் போலவே, இந்த அனுபவத்தை தவறவிட வேண்டாம்.

யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை

முன்பொரு சமயம் யது மகாராஜன் எங்கும் அச்சமின்றித் திரியும் ஓர் அவதூதரிடம், “உலக சுகபோகங்களில் ஈடுபாடு இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறதே எதனால்?” என்று கேட்டார். அதற்கு அவதூதன் கூறலானான், நான் பலரை எனது குருவாகக் கொண்டு அவர்களிடமிருந்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்களை ஆச்ரயித்து தெரிந்து கொண்டவை பல.

1. ப்ருத்வி – பொறுமையும் மன்னித்தருளும் குணமும் விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் கற்போம். பூமியை எங்கு வேண்டுமானாலும் தோண்டலாம். மூத்திரம் அடிக்கலாம். மலஜலம் கழிக்கலாம். அல்லது வீடுகள் கட்டலாம். மண்ணில் இருந்து புதையல் எடுக்கலாம். பூமியிலுள்ள அனைத்தும் எப்படிப் பிறருக்குப் பயன்படுகிறதோ அவ்வாறு சாதுக்கள் தான் பிறருக்கு உரியவன் என்று உணர வேண்டும்.
2. வெற்பு – பிறரின் நன்மைக்காக வேலை செய்வது எப்படி என்பதை மலைகளிடம் இருந்து கற்கலாம். மலைகளில் இருந்து மரங்களும் மூலிகைகளும் நதிகளும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மற்ற விலங்குகளுக்குப் பயன்படுகின்றன. உன் வாழ்க்கை பிறருக்காக இருக்கட்டும். மேலும், மலைகள் என்பவை தனிமையை அடையாளப்படுத்துபவை. அமைதியாக இறை சிந்தனையில் ஈடுபட மலைகள் உதவுகின்றன.

3. காற்று போல யோகியானவன் குண தோஷங்களால் கறைபடாதவனாக அதாவது பற்றற்றவனாக இருக்க வேண்டும்.
4. ஆகாயம் போல் ஆத்மா பிரபஞ்சமெல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமரை இலை நீர் போல இருக்க வேண்டும்.
5. நீரைப் போல் யோகி தூயவனாய், குணமுற்றவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிமையாகப் பழகுதல் வேண்டும். பார்ப்பது, பேசுவது, தொடுப்பது ஆகியவற்றால் அண்டினவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
6. அக்கினியைப் போல் அழுக்கற்றவனாய் ஒளியுடன் விளங்க வேண்டும்.
7. சந்திரனில் தேய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுபோல் ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடையாது.
8. சூரியன், கடல் நீரைக் கிரகித்து மழையாகப் பொழிவதைப் போல் யோகி இந்திரியங்களால் விஷயங்களைக் கிரகித்து அதைத் தகுதி உள்ளவன் கிடைக்கும் போது அவனிடம் கொடுத்து, கொடுத்ததை மறந்துவிட வேண்டும்.
9. மாடப்புறா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது போல் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளுவான்.
10. மலைப்பாம்பு போல் தன் முயற்சி இன்றி கிடைத்ததைப் புசித்து உதாசீனனாய் இருக்க வேண்டும்.

11. பாம்பு – நாகம் தனியே வாழும்; தனியே பயணிக்கும். சில சமயம் எலிப் பொந்துகளில் வசிக்கும்; எங்கோ, எப்படியே, யார் வீட்டிலோ வாழும். நாகம் மிகவும் பாதுகாப்பாக தன் அடிகளை எவரும் அறியாவண்ணம் எடுத்துவைக்கும். உங்களின் இமைத்துடிப்பே, பாம்பிற்கு, உங்களை அடையாளம் காட்டிவிடும். அது போல், நீயும் மாயை குறித்து எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வுடன் இரு.

12. குளவி – கூட்டில் இருக்கும் பூச்சியானது, சதாசர்வ காலமும் குளவியையே நினைத்துக் கொண்டிருக்கிறது. குளவியைக் கண்டு பய உணர்ச்சியையும் விரோதத்தையும் வளர்த்துக் கொள்கிறது அந்தப் பூச்சி. அதன் பின், முழுதாக வளர்ந்த பின், அது குளவியாகவே மாறி விடுகிறது. அதே போல் நித்தியத்துவத்தையும் சத் அறிவையும் பேரின்பத்தையும் (சச்-சித்-ஆனந்த-விக்ரஹ) சொரூபமாகக் கொண்டவரை உள்ளத்தில் நிலை நிறுத்தியவர், பாவங்களில் இருந்து விடுதலை அடைகிறார்கள்.
13. கடலைப் போல், பகவானிடம் மனதைச் செலுத்தி ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், இல்லாத போது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது.
14. விட்டில் போல் அழியாமல் இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும்.
15. தேனீயைப் போல் முனிவன் கிரகஸ்தர்களைச் சிரமப்படுத்தாமல் தேவையான அளவே பெற்று உண்ண வேண்டும். அடுத்த வேளைக்கு என்று சேர்த்து வைத்தால்  கூட்டில் தேன் போல் அழிவு ஏற்படும். மேலும் சாஸ்திரங்களுடன் சாரத்தை மட்டும் அறிந்து வாழ வேண்டும்.
16. பிடியின் (பெண் யானை) காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆண் யானை போல் ஸ்திரீ பந்தத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது.
17. இனிய கானம் கேட்டு மயங்கிய மான் வேடனால் பிடிபட்டு அவதியுறுவதுபோல் பகவத் குணங்களை மட்டுமே கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய நேரக்கூடும்.
18. தூண்டில் மீன் உணவை விரும்பி முள்ளில் சிக்கிக் கொள்வதுபோல் நாவடக்கம் (சுவையின் மீது ஆசை) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவனே.

19. திருமணமாகாத பெண் வீட்டில் தனியே இருந்தபோது, அவளின் வருங்கால மாமனார் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் சில காய்கறிகள் மட்டுமே இருக்கின்றன. சோறு பொங்க அரிசி இல்லை. பெற்றோரும் இல்லத்தருகில் இல்லை. சாதம் வடிப்பதற்காக பிச்சை கேட்டு வீடு வீடாகச் செல்கிறாள். அவள் கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். அந்த சத்தத்தை உணரும் அவள், “இந்த வளையல் ஒலி கேட்டால் எங்களின் ஏழ்மை நிலை புகுந்த வீட்டாருக்குத் தெரிந்துவிடும். சோற்றுக்காக பிச்சை எடுப்பது அறிந்துவிட்டால், தன் மகனுக்கு இந்த வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.” என நினைத்து, எல்லா வளையல்களையும் அகற்றிவிடுகிறாள். ஜன-சங்க-த்யாக அத்வைத-தியாக: கடவுளை ஒப்புக் கொள்ளாதவரிடமிருந்து தூர இருப்பாயாக. அபவாதம் பேசுவோருக்கு நீ குழந்தையாகத் தென்படுவாய். அவர்களிடம் விரிவாக விவாதித்தோ விளக்கியோ யாதொரு பயனுமில்லை. மாமனாருக்குத் தெரியக் கூடாது என்று வளையலை நீக்கியது போல் பக்தியில் நாட்டம் இல்லாதோரிடம் இருந்து உன் பக்தி ஆபரணத்தை அபவாதிகளிடமிருந்து விலக்கி கொள். ஒரே ஒரு வளையலைக் கையில் கொண்ட பெண்ணைப் போல், துறவி ஆனவன் தனிமையாகவே இருக்க வேண்டும்.

20. தன் எச்சிலில் இருந்தே சிலந்தி வலை பின்னும். வலையில் மாட்டிய பூச்சிகளை உண்ணும். வலையின் தேவை முடிந்தபின், அந்த வலையை விடுவித்து தன்னுள்ளேயே சேர்த்துக் கொண்டு விடும். அதே போல் கடவுள் தன் மாயவலையினால் உன்னை உலாவ விடுகிறார். பின் அவருள்ளே எல்லாமே ஐக்கியமாகிறது. அவரின் விருப்பத்திற்கேற்ப அவரின் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்துவார் என்பதை அறி. அதன் பின் அவருள்ளேயே உன்னை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.
21. மாமிசத்தைக் கொத்திச் சென்ற மீன்குத்தி மற்ற பறவைகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்தைக் கீழே போட்டவுடன் அப்பறவை நலம் பெற்று விடும். ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.
22. தனக்குத் தானே விளையாடிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குழந்தை போல் தன்னில் தானாகவே ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்றேன்.
23. பிங்களை என்ற வேசி தன் தொழிலில் வெறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாவையே அளிக்கும் அச்சுதனை நாடி அடையாமல், அந்திய புருஷனைத் தேடி ஓடுகிறேனே? என்று ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.
24. அம்பு தொடுக்கும் வில்லாளி இலக்கின் மீது கவனமாக இருப்பது போல், ஆத்ம சொரூபத்திலே ஒன்றி விட்டவன், வெளியிலே தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றையும், உள்ளே நடப்பவற்றையும் கூட அறிய மாட்டான். ஆகவே யோகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை அடக்கி, வைராக்கியத்தாலும் பகவத் தியானத்தாலும் வெற்றி பெறுவான்.

பொண்டாட்டீஸ் ஆர் அஸ்

  1. குறும்படத்தின் துவக்கத்தில் வரும் அறிவிப்புகள், இந்தப் படம் முழு நீள நகைச்சுவைப் படம் என கபர்தார் செய்கிறது.
  2. வேட்டையாடு விளையாடு, சி.எஸ்.ஐ மியாமி போல் பதினாறு, முப்பத்திரண்டு என்று நொடிக்கு நொடி பல் அடுக்கு பிரிவாக விரிந்து மாறும் குட்டித்திரைகள், விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள், என காட்சியமைப்பிலும் அரங்கப் பொருள்களிலும் நல்ல கவனம் செலுத்திய தயாரிப்பு.
  3. கொலாஜ் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு துணுக்கு காட்சி, அதன் மேல் நாலைந்து சம்பவங்கள் என்று வசனங்கள் குறைவாக இருப்பது பலே!
  4. ஒரே சமயத்தில் அஷ்டலஷ்மியாக நாலைந்து நபர்கள் வெவ்வேறு சட்டகங்களில் வெவ்வேறு லஷ்மிகளாக தோன்றியிருப்பது சிரத்தை.
  5. உயிர்ப்போலி (க்ளோனிங் டிராக்கர்) உருவாக்கும் கணித்திரையாகட்டும்; அலுவல் திட்டத்தில் வரும் உளுத்தம் பருப்பு, தயிர் ஆகட்டும்; கோப்புகளையும் கணினி இடைமுகத்தையும் பாவ்லா காட்டாமல், உண்மையாகவே தயாரித்திருக்கிறார்கள்.
  6. பெண்ணுக்கு ஆண் குரல் மாற்றம் எல்லாம் கச்சிதமாக இருந்தாலும், ஹேமா ஏன் அவ்வளவு மோதிரம் அணிந்திருக்கிறார் என்பதும், லஷ்மி ஏன் சீமந்தம் போல் அத்தனை வளையல் அணிந்திருக்கிறார் என்பதும் அவிழாத முடிச்சு.
  7. உணர்ச்சிகரமான தருணங்களில் ஆங்கிலத்தில்தான் வசனம் அமைந்திருக்கிறது என்பது நெருடல்

 

Clone_Pondaatis R Us

அஞ்சலி – ஆபிச்சுவரி

நண்பனின் தாத்தா மறைந்து போனார். அவருடைய அஞ்சலிக் குறிப்பை அனுப்பி இருந்தாள்.

– எப்படி இறந்து போனார் என்பது முதல் வரி.
– அவருடைய மகன், மகள், மருமகன், பேரக் குழந்தைகள், கொள்ளூப் பேத்திகள் எல்லாம் இரண்டாம் பத்தியை நிறைத்து இருந்தார்கள்.
– எங்கே பிறந்தார், யாருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார், எப்போது மணம் புரிந்தார் என்பதெல்லாம் இன்னொரு பத்தி.
– எவருக்கு பணி புரிந்தார், எப்பொழுது ஓய்வு பெற்றார், எத்தனை போரில் சண்டை போட்டார், எந்த ஊரில் வசித்தார் என்பது அடுத்த பத்தி.
– அவருக்கு என்ன பிடிக்கும் என்பது ஒரே ஒரு வரி.
– எங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தலாம், என்றைக்கு பத்து, கிரேக்கியம் என்பதெல்லாம் இறுதி வாக்கியங்கள்.

218 வார்த்தைகள் இருந்தது.
15 வாக்கியங்கள்.
6 பத்திகள் பிரிக்கப்பட்டு இருந்தது.
to, as, during, before, and, of, in என நிறைய விகுதிகள் அடைத்து இருந்தது.
விருந்தினர் பதிவேட்டில் இரண்டு பேர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

நகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை

பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.

தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.

இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.

வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.

Proverbs: Umbrella

’வெளியே விரியும்; வீட்டிற்குள்ளே சுருங்கும்’

மகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.

எனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

இப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
– பலூன். வெளியில் போனால் பறக்கிறது.
– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி
– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.

எதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.

கடைசியாக துப்பு கொடுக்க ஆரம்பித்தேன். “மழை.”

மகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”

“தமிழில் சொல்லு…”

“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.

மக்கள் தொடர்பில்லாத தனிமை – மூழ்குதலும் மகிழ்தலும்

டொரொண்டோ / நியூ ஜெர்சி இளையராஜா கச்சேரி முதல் சென்னை கிரிக்கெட் மேட்ச் வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் ஹாயாக இருந்து கொண்டு டிவியில், பல பரிமாணத்தில், கையில் நமக்குப் பிடித்தமான பியருடன், பழக்கமான சோபாவில் சாய்ந்து கொண்டு பார்ப்பது பிடிக்குமா? அல்லது, கூட்டத்தில் முண்டியடித்து, வெப்பமோ, பனியோ பொறுத்துக் கொண்டு ரசிப்பது உங்களுக்கு பிடிக்குமா?

இரண்டாவதுதான் பிடித்திருக்கிறது என்கிறார் யாஹு.காம் தலைவர்.

வீட்டில் இருந்து வேலை பார்க்கக் கூடாது. நான் சொல்லவில்லை. எனக்கு வீட்டில் இருந்து அலுவல் பார்ப்பது பிடிக்கும். கவனச் சிதறல் எல்லாம் இருக்காது. சொல்லப் போனால், அலுவலகம் செல்லாத அன்றுதான் சோறு / தண்ணி மறந்து வேலையில் மூழ்கி இருப்பேன்.

எங்கிருந்தாலும் வேலை என்பதற்கு தடா போட்டவர் யாஹூவின் மெரிஸா மேயர்.

இதற்கு மூன்று காரணங்களை சொல்கிறார்கள். அவர் கூகிள் நிறுவனத்தில் இருந்து மாற்றலாகி யாஹுவிற்கு வந்தவர். கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற கணினி கலாச்சாரத்தில் எப்பொழுதுமே அதிக உழைப்பிற்கு மதிப்பு. எந்நேரமும் ஆபீஸ், எப்பொழுதும் கம்ப்யூட்டர் என்றிருப்பதே கணிப்பொறியாளரின் லட்சணம்.

கூகிள்.காம் ஆரம்பித்தபோது, அங்கிருந்த லாண்டிரி, 24 மணி நேர சாப்பாடு கடை, உறங்குவதற்கான உயர்தர படுக்கைகள் போன்றவை சிலாகித்து கொண்டாடப்பட்டன. அலுவலிலேயே குளித்து, அங்கேயே பல் தேய்த்து, தோய்த்து வாழ்வதை நடைமுறையாக்க கூகுள் நிறையவே சிரமப்பட்டது.

மேற்சொன்ன கூகுல் கலாச்சாரத்திற்கு நேர் எதிராக இரண்டாவது காரணம். மெரிசா மேயர் உங்களுக்கான சொந்த வாழ்க்கையை விரும்புகிறார். வீட்டில் இருந்து வேலை பார்த்தால் சதா சர்வகாலமும் வேலை இடையூறு செய்து கொண்டே இருக்கும். ஆனால், அலுவல் சென்றால் மட்டுமே அலுவல்; வீட்டில் இருக்கும் நேரம் சொந்த விஷயம் என்று வகுத்துக் கொண்டால், நிம்மதி கலந்த உற்சாகம் பிறக்கும்.

கடைசி காரணம் இந்தியா அவுட்சோர்சிங். நீங்கள் அலுவலுக்கு சென்று நேரிடையாக முகத்தைக் காண்பிக்காவிட்டால், எதற்காக அமெரிக்கர்களை வேலைக்கு வைக்க வேண்டும்? எல்லோரையும் பிலிப்பைன்ஸ், கென்யா என்று சல்லிசான தொழிலாளர் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடலாம். பணிமனைக்கான கட்டிட செலவும் பராமரிப்பு பட்ஜெட்டும் மின்சாரமும் கிடையாது. எல்லோரும் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாக பேசிக் கொண்டே வேலையை நடத்தி முடிக்கலாமே… எனவே, ஒழுங்கா வந்து சேருங்க என்கிறார் யாஹுவின் மெரிசா மெயர்.

உங்களுக்கு கல்லூரிக்கு சென்று வகுப்பில் அமர்ந்து வாசிக்க விருப்பமா? அல்லது ஆன்லைன் பல்கலைக்கழகங்களில் விழியம் பார்த்து டிகிரி வாங்க விருப்பமா?

அசோசியேஷன் தேர்தல்

பழம் நழுவி பாலில் விழுந்து நான் பார்த்தது இல்லை. ஆனால், தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கும் வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.

முள்கிரீடம், அம்பு படுக்கை, பாம்பு புற்று மேல் அரியாசனம் – இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அந்தப் பதவி அப்படிப்பட்ட பதவி.

சனி வக்கிரமாகி குரு நீசமாகி கஷ்டதசையில் அமெரிக்கா வலம் வந்த காலம். கடந்த தடவை பொருளாளராக பதவி வகித்தவர், அவருடைய வீட்டிற்கு செய்த சிசுருஷைகள் கண்டு சுற்றுப்புறத்தாரும் அண்டைவீட்டாரும் பொங்கி எழுந்த காலம். பசும்புல்லின் வளர்ச்சி ஆறரை இன்ச் அளவை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறுபது டாலர் அதிகம் தர விரும்பாத காலம்.

நிதிப் பற்றாக்குறை, கூட்டுக் களவாணி ராஜ்ஜியம், கொள்ளையடிக்கும் நிர்வாகம் எல்லாவற்றையும் தனி மனிதனாக தட்டிக் கேட்க புறப்பட்டேன். குலதெய்வங்களான இண்டெர்னெட் போராளி வினவு, சிறுபத்திரிகை தீவிரவாதி செயமோகன், சினிமா தளபதி விஜய் எல்லோரையும் வணங்கி வீராவேசமாக உள்ளே புகுந்தேன்.

சினிமாவை விமர்சிப்பது சுலபம். எடுப்பது கஷ்டம் என்பது போல் வரவு செலவு கணக்கை லகானுக்குள் அடக்குவது பெரிதினும் பெரிய கஷ்டம்.

ஒரு பக்கம் எங்கள் வீட்டில் கூரை ரிப்பேர். வாசலில் பூசணிப்பூ முளைக்கவில்லை. அண்ணந்து உயர்ந்த மரம் எங்கள் தலையில் விழுவதற்கு முன் நீக்கு. சிறார்கள் விளையாட பூங்கா அமை. சூப்பர் ஃபாஸ்டாக ஓட்டுபவர்களை மிதவாதியாக்க வேகத்தடை வை என்று விண்ணப்ப மயம்.

இன்னொரு பக்கம் எதிர் வீட்டு நாய் என்னைக் கடிக்க வருகிறது. பச்சை கேட் மாமி என் வீட்டை எட்டிப் பார்க்கிறாள். அவர்கள் சமையலில் இந்திய மசாலா என்னை குமட்ட வைக்கிறது என்று புகார் மயம்.

‘நீயா நானா’ கோபிநாத்தை அழைத்து வந்து இரு பக்கமும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம். விசுவை அழைத்து வந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று நாடகம் போட வைக்கலாம். குறைந்த பட்சம் மணி ரத்னம் வந்தால் ‘அஞ்சலி’யாவது எடுப்பார்.

எங்களுக்கு எடுபிடியாக வேலை செய்யும் ப்ராபெர்டி மேனேஜரும் லேசுப்பட்டவர் இல்லை. எலெக்ட்ரிசீயன் பல்ப் மாற்றினதற்கு ஐநூறு டாலர். புல் பிடுங்கியதற்கு ஆயிரம் டாலர் என்று செமையாக கணக்கு காட்டிக் கொண்டிருந்தார்.

தட்டிக் கேட்டால், வீரபாண்டிய கட்டபொம்மனாக, ‘எங்களுடன் வயலுக்கு வந்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா? அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா?’ என வக்கணையாக பேசினார்.

எனக்கு சின்ன வயதில் இருந்தே ஔவை வாக்கின்படி

சிக்கனமும் கைப்பழக்கம் டூத்பேஸ்ட் பிதுக்கலும் நாப்பழக்கம் எச்சில்கையால் காகம் ஓட்டாத மனப்பழக்கம் – நித்தம் நடக்கும்போது சில்லரைப் பொறுக்கும் பழக்கம் நெஞ்சழுத்தமும் பொறுமையும் கஞ்சம் பிறவிக் குணம்

அவ்வாறே கேட்டதெற்கெல்லாம் இல்லை, முடியாது, இயலாது, இப்பொழுது நேரம் சரியில்லை, அப்புறம் பார்க்கலாம், ஆகட்டும் யோசிக்கலாம் என்று மன்மோகனாமிக்ஸ் கடைபிடித்து மௌனம் சாதித்தேன்.

அப்படியும் ஏதாவது கூடி வரும் போல் தெரிந்தால், ஷரத்து போட்டாச்சா, அந்த வேலை செய்வேன் என்றாரே… அது காண்டிராக்டில் இல்லையே என்று ஏதாவது சாக்குபோக்கு கண்டுபிடித்தேன்.

இப்படியாக ஈராண்டுகள் இனிதே கழிந்தன.

சுத்தமான கை. கறாரான நடவடிக்கை. கண்கட்டி பாம்பான இறுக்கிப்பிடி பட்ஜெட். இம்மியளவும் இடம் கொடுக்காத மேற்பார்வை. எனக்கே மூச்சு முட்டுமளவு மைக்ரோ…அல்ல… நேனோ மேனேஜ்மெண்ட்.

நல்ல வேளை. என் கீழே பணியாளர்கள் யாரும் அலுவலில் வேலை பார்க்கவில்லை. ஒரே வாரத்திலோ, ஒரே நாளிலோ ஓடியே போயிருப்பார்கள்.

ஆனால், இடை விடாத கேள்விகளும், அந்த கேள்விகளுக்கான விடைகளிலும் சில விஷயங்கள் புரிந்தன.

முக்கியமான மூன்றை மட்டும் பட்டியலிடலாம்.

முதலாவதாக, ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு லட்சியம்தான். தங்கள் வீடும், தங்கள் வீட்டின் சுற்றுப் புற பசுமைகளும் சிறப்பாக கவனிக்கப் பட வேண்டும்.

கூடவே காசும் பார்க்க வேண்டும். மாமன், மச்சான், ஒன்று விட்ட சித்தப்பா, தேவாலயத்தில் கூட தொழும் தோழர் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை பிடித்து தரவேண்டும்.

கடைசியாக தெரிந்து கொண்டது: நியாயமாகவும், நிதானமாகவும், துளி நகைச்சுவை உணர்வுடனும் செயல்பட்டால், சங்கடமான வினாக்களையும் இயல்பான பட்டிக்காட்டான் போன்ற அக்கறையுடன் எழுப்பினால், அனைவரையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையினரையாவது தன்மயமாக்கலாம்.

பதவிக்காலம் போன வாரத்தோடு முடிவிற்கு வந்தது. ஆசை என்னை விடவில்லை. மறுபடியும் நிற்கத் தூண்டியது. ஜெயிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.

இருந்தாலும், போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகினால், ஆடுகளத்திற்கு போகாத சேவலாக கருதப்படுவேன் என்னும் சுய அபிமானம் கலந்த பெருமிதம் வேறு நெய் ஊற்றி வளர்ந்தது.

ஐந்து பேர் குழுவிற்கு எட்டு பேர் போட்டி. எதிர்த்து நின்றவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். எனக்கோ, ‘இல்லை… இல்லை’ என்று சொன்னவர்களிடம் போய் நிற்பதா என்னும் நம்பிக்கையான அச்சம், படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரை துணைக்கு அழைத்தது.

அப்பொழுதுதான் ஒபாமாவை நினைத்தால் பெருமையாக இருந்தது. சுற்றிவர அவரை கெக்கலி இடும் ரிபப்ளிகன் காங்கிரஸ். ஒரு காரியத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடும் குடியரசு கட்சி எம்.பி.க்கள். அப்படி இருந்தும் மீண்டும் வாக்கு கேட்கிறார்.

‘ஒன்றுமே செய்யவில்லை’ என்று சொல்வோரிடம் செய்ததையும் செய்யாமல் விட்ட போர்களையும் விளக்குகிறார். அதற்கு தன்னம்பிக்கையும் வேண்டும். செயலூக்கமும் வேண்டும். போயும் போயும் உள்ளூர் சங்கத் தேர்தலை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது ரொம்பவே அதிகம்தான். எனவே, நான் ஒபாமா போல் திண்ணக்கமாக பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

தேர்தல் நாளில் பதற்றமாக இருந்தது. தோற்றவுடன் முகத்தை எவ்வாறு புன்முறுவலுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழகினேன். கூட உழைத்த தன்னார்வலர்களுக்கு நன்றியுரையை தயாரித்தேன்.

எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு நிஜமாகவே துடிப்புடன் கூடிய ஆர்வம் மிகுந்தது. இனி முழு வேகத்துடன் தட்டிக் கேட்கலாம். கடுமையாக புழுதி பறக்க தொடை தட்டி முழங்கலாம். உள்ளே நடந்த குழாயடித் தகராறுகளையும் தகிடு தத்தங்களையும் வெட்ட வெளிச்சமாக்கலாம். எல்லோரின் சங்கதியும் அம்பலம் ஏறும். என் கை மட்டுமே சுத்தமான கை என்று அன்னா ஹசாரேயாக அலம்பல் செய்யலாம்.

நான் மீண்டும் ஜெயித்தவுடன், ‘என்னை அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே’ என சொல்லவில்லை. ஆனால், அடுத்த எலெக்சனுக்குள் தனி வளை பார்த்து போய் சேரவேண்டும்.

நியு யார்க் நகரத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: கச்சேரி – பட்டுத்துவம்

செல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து

இணையத்தில் கண்டது:

அ) Mohamed Hashmath  –  Yesterday 11:35 AM (edited Yesterday 11:36 AM)

ஆ) செல்ஃபோனில் காதலித்துப்பார்

உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாட்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரனாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல் ஃபோனில் காதலித்துப்பார்

உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்ட் காள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Missed Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Missed Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல் போனில் காதலித்துப்பார்

கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஆகணுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்

ஏர்டெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுத்துக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சைக்காரனாவாய் இல்லை கடன்காரனாவாய்

இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்..

அசல்

கவிப்பேரரசு வைரமுத்து – காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம் விளங்கும்….
உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்…..
தபால்காரன் தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்…
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்…
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!

வாழ்க்கையில் வெல்லவே ‘டேக் இட் ஈஸி பாலிசி’

லோகத்தில் இரு விஷயங்கள் சிரமமானவை.

1. இன்னொருவரின் மண்டைக்குள் உங்கள் எண்ணத்தை விதைப்பது

2. இன்னொருவரின் பணத்தை உங்கள் கைக்கு வரவைப்பது

.
.
.
.
.

முதலாமவதில் வெற்றி பெறுபவர் –ஆசிரியர்

இரண்டாமவதில் வெற்றி காண்பவர் –முதலாளி

இரண்டிலும் கலக்குபவர் –மனைவி

அடுத்தவரின் விருப்பத்தை தன் கைக்காசு போட்டு நிறைவேற்றுபவர் – ‘இல்லத்தரசர்’

(இணையத்தில் வாசித்தன் மொழியாக்கம்)