Tag Archives: தோழி

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

நனவூஞ்சல்

கல்லூரியை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக எல்லோரையும் ஒன்று சேர்க்கும் வைபவம் நடக்கிறது. ஏற்கனவே 96 பார்த்து, அந்தக் கடுப்பில் இருந்தவனை இந்த விழா சுணங்க வைத்தது. 96 மாதிரி, கபீர் சிங் (நீங்கள் தெலுங்கர் என்றால் அர்ஜுன் ரெட்டி) மாதிரி எல்லாம் இனக் கவர்ச்சி என்றவன், இன்றும் பாலுணர்வு என்பவன் நான். நாளைக்கு என்ன நடக்கும் என்பது ரஜினிக்கேத் தெரியாது… எனக்கு என்ன நினைப்பு இருக்கும் என்பதை குணாவே உணர்வார்.

ரீயுனியன் சபலம் இருந்தாலும் விடவில்லை. இணைய எழுத்தாளன்; கௌரவமான உத்தியோகம்; யாருக்குத் தெரியும் சொல்வனம்.காம் பத்திரிகைக்கு எழுதுவதற்குக் கூட பிலானியில் ஆள் கிடைக்கலாம்! போக வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.

அப்பொழுது வாட்ஸப் குழுவில் இணைத்தார்கள். அந்தக் கால புகைப்படங்களைப் போட்டார்கள். எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது; கொண்டாட்டங்களில் திளைத்த தருணங்களில் க்ளிக்கியது… அதையெல்லாம் பார்த்தால் அப்படியே நினைவோடையும் நனவூஞ்சலும் கொஞ்ச வேண்டுமே!?

இல்லை.

சற்றே வயிற்றைப் பிசைந்தது. எதை மதித்திருக்கிறோம்?

பணம்… செல்வாக்கு… ஸ்டைல்… பெண்களை அலட்சியப்படுத்தி மயக்கும் வித்தை… தற்பாலுணர்வு போன்ற சிறுபான்மையை கூனிக் குறுக வைக்கும் நடத்தை. தலித்தை பார்ப்பானும் பார்ப்பனனை மற்ற சாதியினரும் சாதிக் கண்ணோட்டம் மட்டுமே கொண்டு கணிக்கும் குறுகிய பார்வை.

எதைக் குறித்து பேசிக் கொண்டோம்? எப்படி மற்றவர்களை மதிப்பிட்டோம்? #மீடு இயக்கமோ, அறச்சீற்றமோ — எவ்வளவு அக்கறையையும் புரிதலையும் விவாதிக்கும் தன்மையும் இன்றாவது கொண்டிருக்கிறோம்?

பசுமையான நினைவுகள் என்று மனதில் ஏதோ மூளையின் மூலையில் எங்கோ தங்கி இருக்கிறது. அது அப்படியே பாசி பிடித்து இருக்கட்டும். இன்று போய் கருத்து சொன்னால், “உன் டெசிக்னெஷன் என்ன? என் பெஸ்ட் செல்லர் என்ன? உன் வால்யூவேஷன் என்ன?” என்று மட்டுமே சீர் தூக்கும் சமூகம் போதனையை விரும்பாது. உன்னால் என்ன காரியம் ஆகும், என்ன ஆதாயம் கிடைக்கும், எவ்வாறு வருமானம் பெருகும், எங்ஙனம் நெட்வொர்க் விரிவடையும் என்றே உன்னை கணிப்பிடும்.

உனக்கு அன்று அது முக்கியமானது என்பதை உணர்த்தினார்கள். இன்று எது உனக்கு முக்கியம் என்பதைப் புரிந்த பிறகும் நண்பர்களின் அருகாமைக்கும் தோழிகளின் தோற்றக் கவர்ச்சி எட்டிப் போன செல்ஃபீக்கும் என்ன வாத பரிபாலனம் கிட்டப்போகிறது?

போகாமல் இருப்பது – விட்டுப் போனதை எண்ணி நெஞ்சம் நிறைந்தது.

உடனுறை விக்கினமூர்த்திகள்

சொல்வனத்தின் அசோகமித்திரன் சிறப்பிதழ் நடுவே அனுக்ரஹாவின் ’டைகர்’ சிறுகதையும் கிடைத்தது. நியூ யார்க்கர் போன்ற இடங்களில் எளிதில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்த சிறுகதை. அதன் தொடர்ச்சியாக…

ஔவையார் சொன்னது போல் உலகத்தில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. ஹாஸ்டலில் வசிப்போர்; ஹாஸ்டலில் வசிக்காதோர்.

முனிசிரேஷ்டர்களைப் போன்றோர் ஹாஸ்டலில் வசிப்போர். அவர்களுக்கு தவம் செய்வது மட்டுமே குறிக்கோள். யார் ஹோமகுண்டத்தைத் தயார் செய்தார்கள், ஆகுதிக்கான அவிஸ் எப்படி உண்டானது என்றெல்லாம் கவலையில்லை. அதே போல், ஹாஸ்டல்வாசிகளும் படிப்பு அல்லது தங்கள் குறிக்கோளுக்கான பாதை அமைப்பது மட்டுமே இலட்சியம். யாருடைய சோப்பு, என்ன நேரத்தில் சாப்பாடு என்பதெல்லாம் பொருட்டேயல்ல.

“பார்த்திபன் கனவு” படத்தில் வரும் டயலாக் போல், “வீடு என்ன மியூசியமா? வைத்தது வைத்த இடத்தில் அலங்காரமாக பொருந்தியிருக்க!” என்பது பெரும்பாலான மைலாப்பூர் வர்க்க நடுத்தர வருமான குடும்பங்களுக்குப் பொருந்தும். சொல்லப் போனால் அவர்கள்தான், முதல் முதலாக மேலாண்மையில் புகழ்பெற்ற ”Effective shop floor oranization” என்பதை பயன்படுத்தியவர்கள். அந்தந்தப் பொருள் ஒருங்கே கோர்த்து பொருத்தமாக வைத்திருப்பதை விட, இந்தப் பொருள் எதற்குத் தேவையோ அதை பயன்பட்டிற்கு அருகாமையில் வைப்பது என்னும் நுட்பத்தை “போட்டது போட்டபடி கெடக்கு” என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஹாஸ்டல்வாசிகளுக்கு பின்னிரவுகளில் படிப்பைத் துவங்குவதுதான் விருப்பமாக இருக்கும். உணவு அசுத்தமானது என்று சொல்லுமாறு எதையும் சமைக்கும் கட்டாயத்திலும் அவர்கள் இல்லை. படிக்கும் நேரத்தைத் தவிர்த்து கொஞ்சம் கல்லூரி சம்பந்தமான வேலை; அதையும் விட்டால் அரட்டை; அப்படியும் நேரம் கிடைத்தல் உறக்கம்; அதற்குப் பிறகு கடுமையான அண்டார்டிகா குளிர்காலத்தில் மின்சாரமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் வாய்க்கப் பெற்றால் அறையை சுத்தம் செய்யலாம். பெரும்பாலான சமயங்களில் சிரத்தையை வருங்காலத்திலும் அசிரத்தையை புறத்தோற்றத்திலும் அமைத்துக் கொள்வதற்கு மின்தட்டுப்பாடு கூட காரணம்.

டெல்லியில் இருந்தபோதும் சரி… பெங்களுரில் இருந்தபோதும் சரி… தொண்ணூறுகளில் விலைவாசியும் வீட்டு வாடகையும் இவ்வளவு எகிறவில்லை. எப்பொழுதுமே வீட்டை வாடகைக்கு எடுத்து விடுவோம். அதன் பிறகு இரண்டு பெட்ரூமானால் நான்கைந்து பேர்; மூன்று பெட்ரூமானால் ஆறேழு பேர் பிடிப்போம். கிட்டத்தட்ட ஒத்த மனது கொண்டவர்கள்; பைசா பைசாவாகக் கணக்கு பார்த்து வட்டி போட்டு பைசல் பண்ணாதவர்களாக, சமைக்கத் தெரிந்தவர் ஒருத்தர், பாத்திரம் கழுவ மட்டுமே தெரிந்த ஒருத்தர் என்று கலவையாகத் தேர்ந்தெடுப்போம். அனேகமாக ஓரிரு பெண்களும் அமைந்து விடுவார்கள். எல்லோருக்கும் மாதத்திற்கு ஐநூறு ரூபாய் வாடகை வரும்.

எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே பகுதியில் வேலைக்குப் போவதால், திரும்பி வீட்டுக்கு வருவதிலும் சிக்கலில்லை. ஒருவருக்கு வேலை தாமதமானால், இன்னுமொருவராவது அவருக்காக அலுவலில் தாமதித்தே அவருடன் கிளம்புவார். இதனால், இரவு பத்து மணிக்கு பெண் தனியாக வந்தால் எதிர்கொள்ளும் சிரமங்களும் தவிர்க்கப்பட்டது.

பெண்களும் கூட இருப்பதால் அவர்கள் சொல்லியோ, அல்லது அவர்களுக்கு பயந்தோ அல்லது அவர்களின் உதவியானாலோ அறைகள் ஓரளவு ஒழுங்காக சுத்தமாகவே இருக்கும். இந்தக் கதையில் வரும் பேயிங் கெஸ்ட் பிரச்சினையை தொடர்ச்சியாக எதிர்கொண்டதில்லை. அந்தவகையில் எனக்குப் பெரிய கொடுப்பினை. ஆனால், அலுவல் சம்பந்தமாக பிறரோடு வீட்டைப் பகிர்ந்தபோது, கொடுமையான விஷயங்களை சந்தித்து இருக்கிறேன். நிச்சயமான பெண்ணுடன் போனில் பேசுவதை ஒட்டுக் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர்கள், இரண்டு டாலர் பிரெட் பாக்கெட்டில் இருந்து இரு ரொட்டிகளை எடுத்ததற்காக ஒரு டாலர் தர வேண்டும் என்று வசூலித்தவர்கள், என்று விதவிதமாக எரிச்சலூட்டுபவர்கள் அறிமுகமானார்கள்.

இன்றைய நிலையில் பாதுகாப்பு என்பதை விட சௌகரியம் என்பது மட்டுமே பேயிங் கெஸ்ட் ஆக பெண்களை வசிக்க வைக்கிறதோ?

நண்பர்களும் தொடர்புகளும்: அந்தக் கால அந்தரங்கம்

தெருவில் நடக்கிறப்ப, சோபி காலே-க்கு யாரோ தவறவிட்ட டயரி கிடைக்கிறது. தெரிந்தவர் டயரியை புரட்டக் கூடாது என்றுதான் எழுதப்படாத விதி இருக்கிறது. தெரியாதவரின் டயரியை படிக்கலாம். தெரியாதவரின் பெயர் பியர் டி.

டயரியைப் புரட்டிப் பார்க்கிறார். நிறைய முகவரி இருக்கிறது. கூடவே முகவரியில் வசிப்பவர்களின் தொலைபேசிகளும். இதெல்லாம் நடந்த காலம் ஜூன் 1983. எனவே, செல்பேசியில் முகப்புத்தகம் பார்க்காத காலம். கையில் குறிப்பேடு வைத்து எழுதி சேமித்த காலம்.

கிடைத்த டயரியை தொலைத்தவரிடம் சேர்க்கிறார். சேர்ப்பதற்கு முன்பாக, தனக்கும் ஒரு ஜெராக்ஸ் போட்டு வைத்துக் கொள்கிறார்.

பியர் டி பார்த்து பார்த்து சேகரித்த முகவரிகளின் உரிமையாளர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சோபி-க்கு ஆர்வம். பியர் டி-யின் தொடர்புகளை தொலைபேசியில் அழைக்கிறார். அவர்களிடம் சென்று டயரிக்கான சொந்தக்காரரைப் பற்றி பேசுகிறார். அதை பத்திரிகையில் வெளியிடுகிறார்.

சோபி காலே சேர்கரித்த வம்புகள் இப்பொழுது பிரென்சு வழியாக ஆங்கிலத்திற்கு வந்தடைந்திருக்கிறது.

The Address Book | Harper’s Magazine

என் ஃபேஸ்புக் பக்கத்து தோழரையோ, டிவிட்டர் பின்பற்றியையோ சோபி காலே தொடர்பு கொண்டால் புத்தகம் எழுதும் அளவு சங்கதி கிடைத்திருக்காது. ஆனால், சமூக வலைப்பின்னல் 2.0ன் தாத்பரியம் புரிந்திருக்கும்.

அ) குடும்ப விவரங்கள், தேடல் விருப்பங்கள், சிந்தனை ஓட்டம் எல்லாம் மின்மடலை குடைந்தால்தான் கிடைக்கும்.

ஆ) நாலாயிரம் நண்பர்களில் நாலு பேரை நேரில் சந்தித்திருக்கிறேன்.

இ) தொழில்நுட்பத்தில் அர்ச்சுனர்; வாசிப்பில் பெஞ்சமின் பிராங்கிளின்; தலைமைப் பண்பில் ஜார்ஜ் வாஷிங்டன். மொத்தத்தில் காந்தியும் ஹிட்லரும் கலந்த மாண்புடன் பழகுபவர் என்று அறியலாம்.