ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.
இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:
டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார். அது மதுராந்தாகன். தகுதி இல்லாதவர். பணத்தினால் பதவியை அடைபவர். இதுவே மாந்திரீக யதார்த்தம்.
டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார். இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன். இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி. இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.
இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!
இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார். உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர். அது மதுராந்தாகன். தகுதி இல்லாதவர். இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது. அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.
இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.
கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர். அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர். அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.
உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர். அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர். அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார். அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார், அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர். பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.
நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான். அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர். ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர். அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர். அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.
அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார். டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும். இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம். நாடக மேடை. அரச சபை. அரசி என்பவள் நடிகை அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன். இயக்குநர் என்பவர் ராஜகுரு. அனிருத்த பிரும்மராயர். காதில் ஒதுவார். ஒதுவது புரிந்தத்தா?
இன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.
படத்தைக் குறித்து சில எண்ணங்கள்:
கோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே! நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.
பையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.
அம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.
கீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.
தமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.
“அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்
உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.
வாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.
சமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.
இதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.
விரிவான கட்டுரை வரும்.
மனுஷ்யபுத்திரன்
இன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.
இத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத்தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
இந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.
நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.
பல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது
நாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட முடியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.
சினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல
இன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.
நேற்றுப் பார்க்க வாய்த்தது.
சாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.
திருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.
பிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.
பொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.
ஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.
இறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.
அந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா? எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.
உண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.
சிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.
திரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் மனுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.
அது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.
அதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..
அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்
அர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.
வில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.
சாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.
திருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.
பிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்கிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.
ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.
அவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது?
அவர்கள்தான் மனநோயாளிகளாயிற்றே! கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, அவமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.
“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?
சாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.
அந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )
இப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.
அன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.
செத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.
பல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.
சினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.
படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).
நீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.
அரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.
பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.
வணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே!
மேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.
இறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.
அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.
அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.
இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.
நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.
எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.
இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.
முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.
வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.
அம்ஷன் குமார்
தோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறித்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.
தோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.
தோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.
1. நெட்ஃப்ளிக்ஸ்: இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாகப் பார்க்கக் கிடைக்கிறது. அரிதான தென்னிந்தியப் படங்கள் வரிசையில் இதை வைத்திருக்கிறார்கள். திதி, நிலா, ஒத்தாள், Revelations, விசாரணை என்று இந்தப் பட்டியலில் வித்தியாசமான கொத்துகளை சேர்த்திருக்கிறார்கள்.
2. சிங்கம்: இயக்குனர் ஹரி எடுத்த சிங்கம் படம் இப்படித்தான் போகும், நல்லதுதான் நடக்கும் என்று தெரியும். இருந்தாலும் பார்ப்போம். இந்தப் படத்திலும் இறுதியில் இப்படித்தான் முடியும் என்பது ஊகிக்க முடிகிறது.
3. குடும்பமா? சுயவிருப்பமா? : ’ரேடியோபெட்டி’ திரைப்படம் அருணாசலம் என்ற முதியவரை பற்றிய கதையாகும். அருணாசலம் தனது கடந்தகாலம் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பவர். குறிப்பாக தனது அப்பா அளித்த ரேடியோவில் இளமைக்கால மெல்லிசை பாடல்களை கேட்பதில் மகிழ்பவர். தனது குடும்பம், மெல்லிசை ஆகிய இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இரண்டில் ஒன்றை வாழ்நாள் முழுக்க இழக்க வேண்டும். அவர் எதை தேர்வு செய்வார் என்ற கதை களத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமே ’ரேடியோ பெட்டி’.
4. பியூட்டி அண்ட் தி பீஸ்ட்: இந்தியக் குடும்பங்களில் ஆண் என்பவன் என்ன சிரமங்கள் கொடுத்தாலும் பொறுத்துக் கொண்டு போவது மனைவிகளின் கடமை. இதுதான் டிஸ்னியின் கதை. ஒரு ராட்சஸன் இருப்பான்; அவன் இருக்கும் இடமோ அடர்ந்த காடு; மக்களற்ற தீவாந்தரத்தில் வசித்தாலும் அவனின் இல்லத்தரசி அவனுக்கு சமைத்துப் போடுவாள்; சிசுருஷை செய்வாள்; அவளுக்கும் வயதாகி இருந்தாலும் அவனுக்கான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள். ரேடியோபொட்டியும் அருணாச்சலம் என்னும் பீஸ்ட் ஒருவரின் கதைதான்.
4. விருது: தென் கொரிய பூஸான் திரைப்பட விழா போட்டி பிரிவிலும், ஸ்பெயின் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதும் வென்ற படம். ரோமானியா திரைப்பட விழா உள்பட பல்வேறு விழாக்களில் பங்கேற்ற படம். பல காலமாக விருதுக்காகவே எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள், காஞ்சிபுரம், குட்டி போன்ற சமீபத்திய தமிழ்ப் படங்கள் பார்த்து வருகிறேன். இருந்தாலும் இது தமிழகத்தின் அசல் கதை, இந்தியாவில் மட்டுமே எடுக்கக் கூடிய படம் என்று எதுவும் பளிச்சிடவில்லை. இந்த மாதிரி முதியவர்கள் எங்கும் எப்போதும் காணப்படுகிறார்கள். ஒரு ஐம்பதாண்டுகளாக இந்த சப்ஜெக்ட் — பரிதாபமான அனாதரவான பெற்றோர் என்னும் தேய்வழக்கு உலாவருகிறது.
5. சூது கவ்வும்: விஜய் சேதுபதி நடித்து நலன் குமரசாமி எடுத்த இந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ”தாஸ்’ கதாபாத்திரம் தன்னுடன் அழகி ஒருத்தி உரையாடுவதாகக் கற்பனை செய்து உடன் வைத்திருக்கும். அந்த “ஷாலு”வுடன் பேசுவது பைத்தியம் என்று அழைக்க வைத்தாலும் தாஸ் என்பவன் அதை சகஜமாக எடுத்துக் கொள்வான். இங்கே “ரேடியோ பெட்டி”யிலும் அந்த மாதிரி மனச்சிக்கலை மையமாக வைத்து எடுக்கிறார்கள். ஆனால், ”சூது கவ்வும்” இதே போன்ற உளச்சிக்கலை இன்னும் நுட்பமாக ஆழமாகப் பதியுமாறு சர்வ சாதாரணமாகத் திரையில் காட்டிச் சென்றார்கள். ரேடியோபெட்டியில் அதை போட்டுடைத்துச் சொல்கிறார்கள். முன்னது திரைப்படத்திற்கு உகந்த அணுகல். இரண்டாமவது எழுத்திற்கு சாலச் சிறந்தது.
6. பழைய நினைப்புதான் பேராண்டி: நொஸ்டால்ஜியா என்பது சொர்க்கமா அல்லது மீள வேண்டிய நரகமா என்பது உங்களின் அனுபவத்தைப் பொருத்தது. இதில் தன் அப்பா, அவர் உபயோகித்த சின்னச் சின்ன விஷயங்கள், பழைய வேலை, பால்ய காலம், முதலில் பார்த்த வேலை, அந்த வேலையில் நெடுங்காலமாக கூட பயணிக்கும் சக ஊழியன் என்று ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?
7. பொருள் என்பது பொருளல்ல? : இன்றைய ஐஃபோன், அல்லது செல்பேசியை எடுத்துக் கொள்வோம். இந்தக் கருவியை எங்கும் எடுத்துச் செல்லலாம்; எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு என்ன பாட்டு வேண்டுமோ கேட்டுக் கொள்ளலாம். அது ஒரு இருப்பு சார்ந்த பொருள்.
நான் நிரலி எழுதுபவன். அதே செல்பேசியில் உங்களுக்கு இந்தப் பாட்டு பிடித்து இருந்தால், இன்னொரு பாட்டும் பிடிக்கும் என்று பரிந்துரை சொல்லும் மென்கலன் எழுதுவேன். அந்த ஐ-பாட் என்பது பாட்டு கேட்க என்பதில் இருந்து வேறு பல பயன்பாடுகளுக்குத் தகுந்தவாறு மாற்றுவேன். வெறும் பாட்டுப் பெட்டிக்கான கருவி என்றில்லாமல், புகைப்படங்கள் பார்ப்பதற்கோ மற்றொன்றிற்கோ கூட உருமாற்றி உபயோகமாகுமாறு வடிவம் தரவைக்கக் கூடிய பொருள்.
கடைசியாக பொருள் என்பது நம் அபிலாஷைகளுக்கு உருவம் தருகிறது. வினாயகரின் குட்டி விக்கிரகமாக இருக்கலாம், சிலுவையாக இருக்கலாம்; அது உங்களின் நம்பிக்கை சார்ந்தது. இந்தச் சிலுவையை இடியும் மின்னலும் கூடிய சமயத்தில் பிடித்துக் கொண்டால், அறிவியல்பூர்வமாக ஆபத்தாகக் கூட இருக்கலாம். ஆனாலும், ஆழ்மனம் சொன்னால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மழையில் இருந்து தப்பிக்க வைத்ததாகச் சொல்வோம். அருணாசலத்திற்கு ரேடியோபெட்டி அந்த மாதிரி உள்விருப்பம் சார்ந்த பொருள்.
படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.
2. காட்சியாக சொல்லப்பட வேண்டிய கதை எல்லாம், கடைசி ஐந்து நிமிடத்தில் டெலி ப்ராம்ப்டரைப் பார்த்து படிக்கும் மிஷ்கினால் ஓவர் ஆக்ட் செய்யப்படுகிறது. கொடுமைடா சாமீ.
3. ‘முகமூடி’ எடுத்தவரின் அடுத்தகட்ட வீழ்ச்சியாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
4. ஒரு இயக்குனருக்கு தன் போதாமைகளும், அடுத்தவரின் திறமையை சிறப்பாக வெளிக்கொணரும் ஆளுமையும் இருக்கவேண்டும். இத்தனை திறமையான பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் மிஷ்கின் தான் மட்டுமே போதும் என்னும் அகங்காரத்தில் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார்.
5. ரேப் சீன் வைத்தால் அதில் காமம் தலைதூக்கக் கூடாது. எண்பதுகள் வரை வந்த பெரும்பாலான தமிழ்ப்படங்களில் வல்லுறவு காட்சிகள் காதல் காட்சிகள் போல் படமாக்கப் பட்டிருக்கும். அந்த மாதிரி அந்த பிச்சைக்காரியின் லட்சணமான முகம் கூட இந்தப் படத்தில் பாவப்பட வைக்காமல், ‘குழந்தை விவாகம் செய்து கொண்டாளோ?’ என பிற எண்ணங்களில் பார்வையாளரை மூழ்கடிக்கிறது.
6. தயவுசெய்து இதை திரைப்பட விழாக்களிலோ, வெளிநாட்டினருக்கு தமிழ்ப்பட அறிமுகமாகவோ சொல்லிவிட வேண்டாம். டாகேஷி கிட்டானோ, டாரன்டினோ என்றெல்லாம் டகால்டி விட்டு என்ரான் போல் மோசடியாக சீட்டுக்கட்டு ராஜாக்களைக் கொண்ட கோலிவுட் என்று தப்பாகக் கருதி, மொத்த தமிழ் சினிமாவையும் எள்ளி நகையாடிவிடுவார்கள்
7. அரிதான விஷயங்களைப் பாராட்டினால் மட்டுமே நாம் நினைவில் நிற்போம். பலரும் தூற்றும் விஷயங்களை, நாமும் கிண்டலடித்து கீழே தள்ளினால், இலக்கிய விமர்சகராக மாட்டோம். ஜாய்ஸ் குறித்தும் எலியட் குறித்தும் ஹெமிங்வே குறித்தும் அறிய நாம் எட்மண்ட் வில்சனை நாடுகிறோம்; காஃப்காவைக் குறித்து ஆராயவேண்டுமானால் வில்சனைத் தொட மாட்டோம். என்றாலும், நாம் அனுபவித்த நரகத்தை இன்னொருவரும் அனுபவிக்கக்கூடாது என்பதால், இந்தப் படத்தைப் பாராட்டாதீர்கள் என்கிறேன்.
8. போரடிக்கும் படம் என்பதால் மட்டும் விமர்சிக்கவில்லை. வித்தியாசமான காட்சியமைப்புகள் என்பதால் மட்டும் நிலைக்கூடிய படமில்லை. மேஜிக் நிகழவேண்டும். ராஜா இருக்கிறார். பூடகமான சங்கதி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அசத்துகிறார். ஆனால், அவியலில் அவியல் சுவைக்க வேண்டும். இது லட்டுவும் பாகற்காயும் பீட்சாவும் போட்ட அவியல். சகிக்கவில்லை.
9. பாடல்கள் இல்லை. ஐட்டம் சாங் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. கூடவே படமும் படமாகவில்லை.
10. திரைப்படங்களில் லாஜிக் பார்ப்பவன் நானில்லை. ஆனால், அந்தந்தப் படங்களில் நம்பவியலாத விஷயங்கள் நம்பக்கூடிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். ’ஜோக்கர்’ படம் தலைப்பில் ஜோக்கடித்தாலும் படு சீரியசாக செல்லும்; ஆனால், இந்தப் படம் முழுக்க காமெடியாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆதார முடிச்சான — மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்பு ஏன் தேவை?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
பதிப்பாளர்: பேசாமொழி பதிப்பகம்
எழுதியவர்: திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின்
விலை: ரூ.600.00
சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.
சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue
இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.
நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.
குட்டிப் புலி படம் பார்த்தேன். அந்தப் படத்தின் சாமுத்ரிகா லட்சணத்தைக் கண்டு ஆச்சரியப்படலாம். வெற்றிகரமான மசாலா சினிமாவிற்கு பதின்மூன்று விஷயங்கள் இருக்கவேண்டும்.
2. திரையில் நம்மையே பாக்குற மாதிரி ஹீரோவோ (ஹீரோயினோ) இருக்கணும்: படிக்காத ஹீரோ; பக்கத்து வீட்டுப் பைங்கிளி தானாகவே வந்து காதல் செய்யுற ஹீரோ; கைநிறைய காசு கொடுத்து செலவழிக்கச் சொல்லுற அம்மா இருக்கும் ஹீரோ.
3. செண்டிமெண்ட் நிறைந்த கதை: அம்மா பாசம் இருக்கா: செக்… அடி வாங்குறானா: √ அனாதையைக் காப்பாத்துறானா: √ நியாயத்தைத் தட்டிக் கேட்குறானா: √
4. படம் முழுக்க தடக் தடக் அபாயம்: சினிமாவின் முதல் காட்சியிலேயே அந்த எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கப் போகும் அபாய அணுகுண்டு டிக் டிக் கேட்க ஆரம்பிக்க வேண்டும். திரைக்கதையின் துவக்கத்திலேயே பார்வையாளன் சீட் நுனிக்கு வர வேண்டும். இங்கே ஹீரோவும் கொலை செய்வானா, ஜெயிலுக்குப் போவானா என்பது தோன்றுகிறது. சசிகுமாரும் இளைய தளபதி விஜய் அல்ல. செத்துக் கூடப் போய்விடலாம் என பயப்பட வைக்கிறது.
5. கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ரசனை: ஷங்கருக்கு இது பிரும்மாண்டமாகப் படலாம். தெலுங்கர்களுக்கு இது மூன்று நான்கு நாயகிகளாகத் தோன்றலாம். ரஜினிக்கு ஸ்டைலாக இருக்கலாம். சசிகுமாருக்கு எண்பதுகளின் நாஸ்டால்ஜியா. இளையராஜா பாடல்கள்; தாவணி போட்ட ஸ்ரீதேவி நாயகி.
படம் ஹிட் ஆவதற்கான பாக்கி எட்டு சூட்சுமம் கூட சொல்லலாம்… ஆனால், சசிகுமார் இதெல்லாம் பார்த்து பார்த்து படம் செய்வார் என்பது திரைக்கதையின் அரசியல், இரண்டு பொண்டாட்டி நியாயம், பார்ப்பனர்களை இழிவுபடுத்தல் என்றெல்லாம் ஆராய்வதற்கு ஒப்புமானம்.
மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.
காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.
இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.
நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.
வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.
எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.
”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.
சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.
விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.
Never knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.
முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.
அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.
கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழுதிய எளிய வரிதான்
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde