Tag Archives: குற்றம்

Collectors – Daniel Alarcón – New Yorker

நியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.

தற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.

கொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.

ரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாதவன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.

காவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.

சிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

பெண்ணுரிமையும் சட்டங்களும்: சொந்த முடிவுகளை சுதந்திரமாக தேர்ந்தெடுத்தல்

ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்: http://www.jeyamohan.in/?p=29188

கருக்கலைப்பு-ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [இலக்கிய இடக்கரடக்கல்கள்]

//அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…//

கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல்…
கூட்டத்தைப் பெருக்க குடும்பத்தினரை கூட்டுவது போல்…
மதத்தை முன்னேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது போல்…
குழந்தைகளை நிறைய ஈன்றெடுங்கள் என்பது அந்தக் காலம்.

ஒன்றோ, இரண்டோ… ஒழுங்காய் வளர்த்தால் சிறப்பு என்பது இந்தக் காலம்.

இதில் எங்கே கொலை வருகிறது?

இந்தியாவில் கர்ப்பம் கலைப்பு என்றாலே பெண் குழந்தை என்றளவிலும், மேற்கில் (குறிப்பாக கிறித்துவ பெரும்பான்மையினர் கொண்ட நாடுகளில்) கருக்கலைப்பு என்றாலே தெய்வக்குத்தம் என்றளவிலும் எளிமையாக்க முடிகிறது.

அமெரிக்கா வந்த புதிதில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வெகு அருகில் ‘Planned Parenthood’ என்னும் வசதி வாய்ப்பற்றோருக்கான உதவி ஸ்தாபனம் இயங்கி வந்தது. தினசரி காலை ஏழு மணிக்கு சிலுவை தாங்கியவர்களும் உள்ளே ஆலோசனைக்குச் செல்பவர்களைக் கடுமையாகத் திட்டும் பதாகைகள் தாங்கியவர்களும் வந்து விடுவார்கள். அந்தத்  தன்னார்வ நிறுவனம் மூடும் எட்டு மணி வரை உள்ளே செல்வோரையும், வெளியே வருவோரையும் மிக மோசமாக வைவார்கள். கேட்கவே பயமாகவும், அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். ஒருவரைக் குறி வைத்துப் பத்துப் பதினைந்து பேர் சூழ்வார்கள்.

அதைக் கேட்போர் ஏற்கனவே நோய்க்கு உள்ளானவர்கள்; அல்லது பதின்ம வயதிலேயே, பள்ளிப் படிப்பு முடிக்காமலேயே கரு தாங்கியவர்கள்; மிக முக்கியமாக ஏழைகள். அவர்கள் இந்த அர்ச்சனையைக் கேட்கும் போது எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என நான் நினைக்கும் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தியதுண்டு.

ஏற்கனவே கிடைத்த பதிவுகளில் சில:

அ) பாலா – ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து –

ஆ) சிறில் அலெக்ஸ்கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்

இ) பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

ஈ) மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

முலைப்பால் குடிக்கும் சிசுக்களைக் கண்ட யேசு தன் சீடர்களிடம் “முலைகுடிக்கும் இந்தக் குழந்தைகள் சொர்க்கத்தில் நுழைபவர்களைப்போல “என்று சொன்னார் .

சீடர்கள் அவரிடம் “அப்படியானால் நாங்கள் குழந்தைகளாக மாறி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கலாமா?” என்றார்கள் .

யேசு அவர்களிடம் “எப்போது நீங்கள் இரண்டை ஒன்றாக்குகிறீர்களோ ,எப்போது நீங்கள் அகம் புறம் போலவும் , புறம் அகம் போலவும் , மேலே இருப்பது கீழே இருப்பது போலவும் ஆகிறீர்களோ , எப்போது நீங்கள் ஆண் ஆணும் பெண் பெண்ணும் அல்லாமலாகும்படி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஆக்கிக் கொள்கிறீர்களோ எப்போது நீங்கள் ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பல கண்களும் , ஒரு கைக்குப் பதிலாக இன்னொரு கையும் ஒரு பாதத்துக்கு பதிலாக இன்னொரு பாதமும் ஒரு சமானத்தன்மைக்கு பதிலாக இன்னொரு சமானத்தன்மையும் உள்ளவர்களாகிறீர்களோ அப்போது நீங்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பீர்கள்” என்றார் .

வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்

செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி:

3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை?

கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு தீர்வல்ல. சமூக ரீதியிலான மாற்றங்களை நிறைய செய்ய வேண்டும்.

உதாரணம்: கருப்பருக்கெதிராக கருப்பர் நடத்தும் குற்றங்கள்.அந்த சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்களை அதிகரித்தால் இது தானாக குறையும்.

பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மாநில அரசுகள் பல்கலைகழகங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை குறைக்கின்றன. நீண்டகால அடிப்படையில் இது தேசத்துக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் ஒபாமா பல்கலை மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் உதவித்தொகை வரவேற்கத்தகுந்த திட்டம் தான்.

அமெரிக்க பல்கலைகழகங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை போக்க வேண்டும். வேலைக்கு போகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் அதற்கேற்ராற்போல் மாற்ற வேண்டும்.

நிதி மட்டுமே உடனடி பிரச்சனையாக தெரிகிறது.மற்றபடி அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களே ஆகும். ஓரளவு உதவி செய்தால் அவையே தம்மை கைதூக்கி விட்டுக்கொள்ளூம்.

4. உலக வர்த்தகம்: ஒத்துழைக்கும் கொலம்பியாவோடு முரண்டு பிடிக்கும் ஒபாமா ஒத்துக் கொள்ளாத கொள்கை கொண்ட வெனிசுவேலாவோடு சரிசமமாக அமர்வேன் என்கிறார். ஏற்கனவே சட்டைப்பையில் அமர்ந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் போவது அமெரிக்காவுக்கு ஷேமமா? புவிவெம்மையைக் கட்டுபடுத்தும் விதமாக நாப்ஃதாவை மீண்டும் பேரம் பேசுவது, அமெரிக்கத் தொழிலாளர் நலனுக்காக தென் கொரிய கார் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று ஒபாமா முன்வைக்கும் கொள்கைகள், அமெரிக்காவை தனிமைப்படுத்துமா?

நாப்தாவில் தொழிலாளர் உரிமை, மற்றும் சுற்றுப்புர சூழல் காப்பு ஆகியவற்றை சேர்ப்பேன் என்கிரார் ஒபாமா. கொலம்பியாவில் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் அதனுடன் சுதந்திரவணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறேன் என்கிறார்.

இதெல்லாம் டெமக்ராடிக் கட்சியினரின் பெட் புராஜெக்ட்கள். அடுத்த நாடுகளை முதலில் இதுபோல் அமெரிக்கா வலியுறுத்துவது அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல்தான். சுற்றுப்புற சூழலுக்கு செலவு செய்யும் அளவுக்கு கொலம்பியா, மெக்சிகோவிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இது போன்ற பர்சனல் அஜெண்டாக்கள் அமெரிக்காவின் நலனுக்கு எள்ளளவும் உகந்ததல்ல.

5. நிதி கட்டுப்பாடு: மெகயின் என்னதான் சொல்கிறார்? கடந்த ஆண்டுகளில் ‘கட்டவிழ்த்துவிடு’ என்று தீவிரமாக இயங்கியதும், சடாரென்று பத்து நாளைக்கு முன் சடன் ப்ரேக் அடித்து, தன் நிலையை மொத்தமாக மாற்றியதும் என்பதாக இருப்பதில் எந்தப் பாதை இன்றைய நிலையில் வால் ஸ்ட்ரீட்டை வழிக்குக் கொண்டுவரும்?

ஆலன் கிரீன்ஸ்பான் காலத்து பப்பிள் எக்கானமியின் விளைவுகள் இன்று உணரப்படுகிறது. மெக்கெயின் மட்டுமல்ல, வேறு யாருமே அன்று நடந்த தவறுகளின் விளைவுகளை சரியாக யூகித்திருக்க முடியாது.

பான்னி மே, பிரட்டி மாக்கை கிரடிட் ஸ்கோர் சரியாக இல்லாதவர்கள், மற்றும் மைனாரிட்டி இனத்தவரை குறிவைத்து வீட்டுகடனுதவி அளிக்க செய்து டெமக்ராடிக் கட்சியினரின் ஓட்டுவங்கியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பில்க்ளின்டனை தான் வீட்டுகடனுதவி சந்தை சரிந்ததற்கு முதலில் குற்றம் சுமத்தவேண்டும்.

மெக்கெயின் பெயிலவுட் பாக்கேஜ் விவகாரத்தில் ஆடியது டிராமா. அது சரியாக வேலை செய்யவில்லை. மற்றபடி மெக்கெயினிடம் ஸ்திரமான பொருளாதார கொள்கை இல்லை. அலாஸ்காவில் கினறு தோண்டினால் எண்னை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 2012க்காக காத்திருக்கிறேன்.

நன்றி: செல்வன்.

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

ஓல்ட் இஸ் கோல்ட்… புதிதாக சேர்க்கப்பட்ட குறிச்சொற்களுடன்

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.

முக அழகிரி – பன்ச் பர்த்டே

Host unlimited photos at slide.com for FREE!

அழகிரி பிறந்தநாள்: அமைச்சர்கள் பங்கேற்பு & 4 ஆயிரம் பேருக்கு உதவி

1. தலைவருக்கு தா கிருட்டிணனை மட்டுமல்ல; கேக்கையும் கட் பண்ணத் தெரியும்.

2. கேகேஎஸ்.எஸ்.ஆர் என்று கேக்கை பெயருக்குள் வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா? முக மகன் மனதில் இடம் பிடிக்க வேண்டாமா!

3. ஸ்டாலினுக்கு பிடித்த இளைய தளபதி பாட்டு: ‘மதுரைக்குப் போகாதடீ’

4. அழகிரிக்கு பிடித்த பாட்டு விஜய் பாட்டு: ‘மச்சான் பேரு மதுர… நீ நின்னு பாரு எதிர’

5. ‘அட்டாக் பாண்டி’ இல்லாவிட்டாலும் இந்த அழகிரிக்கு வெட்ட தெரியும்.

6. ஜாமீனுக்குள் மீனு சிக்கலாம்; ஆனா அழகிரி சிக்க மாட்டான்.

7. சுழல்விளக்கு பாதுகாப்பு வச்சிண்டிருக்கிறன் எல்லாம் அமைச்சரும் இல்ல; நலத்திட்டங்கள் நல்குபவன் எல்லாம் நாட்டாமையும் இல்ல!

8. நேரில் வந்து வாழ்த்து சொல்றவன் நாளைய அமைச்சர்; போனில் ஹேப்பி பர்த்டே சொல்றவன் நேற்றைய அமைச்சர்.

9. முதல்வருக்கு வாழ்த்துச் சொல்லாட்டி பிழைச்சுரலாம். ஆனால், மூத்த மகன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதவன் நீடிச்சதா சரித்திரம் இல்ல!

10. கருத்தாகக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சியும் கண்ணுமண்ணு தெரியாம கழகத்தை மட்டும் கண்ணா நினைக்கிற தொண்டரும் உயிரோடு இருந்ததா சரித்திரம் இல்ல!