Tag Archives: கிண்டல்

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

சொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்

சொல்வனம் பத்திரிகைக்கு என் கண்டனங்கள்!

தமிழரின் நாயகன், தமிழ் மக்களின் இதயத் துடிப்பான ரஜினியை புகைக்கு அடிமையானவர் போல் சித்தரித்து அதை அவர்களின் சிகரெட் கட்டுரைக்கு படமாகப் போட்டிருக்கிறார்கள்.

ரஜினி இப்பொழுதெல்லாம் பொதுவில் புகை பிடிப்பதே இல்லை. சினிமாவில் கூட எந்திரனாக நடிக்க ஆரம்பித்து விட்டதால் அவரிடம் இருந்து புகை வந்தால் அது மின் கோளாறினால் மட்டுமே.

நடிகனையும் கதாபாத்திரத்தையும் நாம் நிஜத்தோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. ராணி முகர்ஜியை முத்தம் கொடுக்கிறான் என்று பார்க்காமல், தன் மனைவியை சாகேத் ராம் உதட்டோடு உதடு கவ்வுகிறான் என்று பார்க்க வேண்டும். இது எப்போது தமிழ இலக்கியகர்த்தாக்களுக்கு உதயமாகி மனதில் நிலை நிற்குமோ?

எம் எஸ் சுப்புலஷ்மி வாயில் தம் வைத்துக் கொண்டிருப்பதாக காட்சியளித்தாரே… சிவாஜி எத்தனை படங்களில் இப்படி வந்தார்! அதை எல்லாம் முன்னுதாரணமாக இந்தப் பத்தியின் ஆசிரியர் துணை கொள்ளவில்லை. இதற்கு ஆசிரியர் குழு முழு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வ்வொரு படத்திற்கு அடியிலும், எந்த வருடன் வந்த திரைப்படம், யாராக நடித்த படம் என்று போட வேண்டும்.

மேலும் இந்தப் பதிவில் “எலி” போன்ற சமீபத்திய படங்கள் குறித்த பதிவுகளும் இல்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. அதில் வடிவேலு சிகரெட் கடத்தல்காரர்களை எம்ஜியார் போல் துரத்திப் பிடிப்பார். அது தமிழ் சினிமாவின் மைல்கல். கருத்தும் சித்தாந்தமும் கொண்ட கோலிவுட் காவியம். அதை ஏன் ஆசிரியர் இருட்டடிக்கிறார்?

”பத்த வச்சுட்டியே பரட்ட” என்பவர் கவுண்டமணி.

மாணிக்கம் புகை பிடித்ததில்லை; பாட்ஷா என்பது அவரின் மாற்று உருவம்; அதாவது இருமுனை சீர்குலைவு.பந்தயத்திற்காக வெறுமனே வாயில் பத்து முறை தூக்கிப் போட்டு பிடித்தவர் ”நினைத்தாலே இனிக்கும்” Roald Dahl – அதைக் காப்பியடித்த கே பாலச்சந்தர்.பொங்குவோம்! பொங்க வைப்போம்!!

அது கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே: “சார்… நீங்க அந்த வெண்குழல் சாம்பல் கூட்டை உதிர்ப்பதே அழகு”னு சொல்பவர்களுக்காக மட்டுமே – அவர் உதட்டை வத்தி தொடுவதில்லை. போதையும் உள்ளே செல்வதில்லை.

சுருக்கமாக பரமானந்தம்! பரபிரும்மம்!!

எண்பதுகளில் வறுமையின் காரணமாக பீடி பிடிப்பவரை குறிவைக்காதது ஏன்?

ரஜினி என்பவர் காசுக்காக புகை பிடிப்பவர்! காசு கொடுத்து புகை பிடிக்கும் ஒபாமாவை ஏன் சொல்லவில்லை?

சார்மினார், வில்ஸ் என்று விளம்பரத்திற்காக ஆடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏன் குறிவைக்கவில்லை…

கண்டிப்போம்!

கதாநாயகிகள் கால் மீது கால் போட்டுக் கொண்டு புகை பிடிப்பதை “லைட்ஸ் ஆன்” வினோத் என்றோ எழுதியிருக்கிறார். இந்த மாதிரி சரித்திர துணுக்குகளும் இந்தப் பதிவில் இல்லை. இப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்பட வேண்டும். என் வக்கீல்களை உசுப்பி விட்டிருக்கிறேன். அவர்கள் உங்கள் சார்பாக ஒவ்வொரு நாட்டிலும் இப்பொழுதே மானநஷ்டம் கோருவார்கள்.

ரவி நடராஜன் இவ்வாறு பரிந்துரைத்தார் என்றால் அவருக்கும் என் கண்டனங்கள். ரஜினி ரசிகர் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். அனைவரும் பொங்குங்கள். கொதித்தெழுங்கள். கறுப்புக் கொடி காட்டுங்கள். எங்கே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்? வாருங்கள்.

நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்

சொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…

Pigeons_Food_Humans_Ants_Pick_Eat_Throw_Snacks_LeftOvers_Animals_Birds

இதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.

மேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.

இந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:

1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”

இங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்!

2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”

இதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்!

ஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.

உன்னப் பெத்ததுக்கு உங்கப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!

Cat_Critic

மகள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். மகளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்று வருவதற்காக பள்ளிக்கு சென்றிருந்தேன். அவளுக்கு ஏதோ வேலை இருந்தது. பத்து நிமிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

காத்திருக்கும் அறையில், மகளின் வகுப்பில் படிக்கும், சக மாணவனைப் பார்த்தேன். அவனுக்கு வகுப்பு முடிந்துவிட்டது. பெற்றோருக்காகக் காத்திருக்கிறான். காத்திருக்கும் சமயத்தில் பல சமயம் அவனைப் பார்த்திருக்கிறேன். வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்பான். கடகடவென்று எழுதுவான். அன்று ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ என்று எழுதிக் கொண்டே இருந்தான். ஒரு முறை… இரு முறை… ஐந்தாம் முறை எழுதும்போது பொறுக்கவில்லை.

கேட்டுவிட்டேன். “ஏன் இப்படி ஏபிசிடி… எழுதிக் கொண்டிருக்கிறாய்? செல்பேசி வைத்திருக்கிறாய். அதில் ஏதாவது விளையாடலாம்; அரட்டை அடிக்கலாம். உன்னுடைய புத்தகப் பையில் கதைப் புத்தகம் இருக்கிறது. அதையாவது வாசிக்கலாம். நாளைக்கு அறிவியல் பரீட்சை இருக்கிறது. அதற்காவது படிக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு… எதற்கு ஏபிசிடி…?”

“எனக்கு இடது கைப் பழக்கமாச்சே! இத்தனை நாளாப் பார்க்கறீங்களே? இதைக் கூட கவனிச்சது இல்லியா? வலது கையிலும் எழுதிப் பழக்கிக் கொள்ளலாம்னு இந்தக் கையில் எழுதிப் பார்க்கிறேன். Ambidextrous கேள்விப்பட்டதில்லையா? லியனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டீன், லெப்ரான் ஜேம்ஸ், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்… எல்லாருமே இரண்டு கையிலும் சமமாக உபயோகிக்கக் கூடியவர்கள். நானும் அப்படி ஆகப் பார்க்கிறேன்.” என்றான்.

அது மாதிரி நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று நிலைத்தகவல் எழுதினால், ”நீயெல்லாம் எழுதறதுக்கு, உங்க அப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!” என்று எவர் எப்படி பாராட்டினாலும், தொடர்ந்து எழுதிப் பழகுங்கள். நீங்கள் எழுதுவதைப் பார்த்து, “அட… நான் இதை விட நன்றாக எழுதுவேனே!” என்று பலரை எழுத்துத்துறைக்கு கொண்டுவரும் உற்சாக டானிக் ஆக நீங்கள் இருக்கிறீர்கள்.

Jeyamohan’s Reply for always touching Sundara Ramasamy

The premise is this: somebody asks Jeyamohan a question: “Why are you always invoking Sundara Ramasamy in your katturai?” – What would be his reply… You can read it here

என் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:

சுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்?

Jeyamohan_New_Yorker_Cartoon

இரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்? இதெல்லாம் சீடனின் பணியா?

இந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.

எழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.

இன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராமசாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

எனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.

இந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.

நான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.
உலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் த்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.

இளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.

ஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷாவை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.

என் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.

இந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.

ஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.

இந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.

இந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால் அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. ஆண்களின் கண்கள்…
2. ஏன் விவாதிக்கிறேன்

அமெரிக்காவிலும் அறிஞர் அண்ணா நினைவு நாள்

இன்று அண்ணாவின் நினைவு நாள். அவருக்கு அமெரிக்காவில் கூட அணுக்கத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் கெண்ட்ரிக் லமார். அவரின் சமீபத்திய நினைவாஞ்சலியை கீழேக் காணலாம்.

இருவரின் ஊரும் ”கா”வில் அரம்பிக்கிறது. காம்ப்டனில் பிறந்து வளர்ந்தவர் கெண்ட்ரிக். காஞ்சீவரத்தில் பிறந்தவர் அண்ணா. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. லமாரின் பாடலைக் கேட்டு எல்லோரும் அந்த வேத வாக்கியத்திற்கு ஒப்புக் கொண்டு சாமியாடுவதை விழியத்தில் பார்த்திருப்பீர்கள்.

”It’s a revolution, I suppose
We’ll paint it red to fit right in”
– என்கிறார் கென்ட்ரிக். புரட்சித் தலைவருக்கு குரு என்னுடைய குருதானே என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

அதற்கு முன் கோவில் சுவர்களில் சிவப்பும் வெளுப்பும் இருக்கும். அதை மாற்ற தி.மு.க., அதிமுக, தே.மு.தி.க., என எல்லோர் கொடிகளிலும் சிகப்பை அறிமுகம் செய்து, பட்டி தொட்டியெல்லாம் கொள்ளையடித்தவர் அண்ணா.

”Bury me alive, bury me with pride”
– என்கிறார் லமர். அண்ணா இருக்கும்போதே பதவியாசை கொண்டு போட்டி நடந்ததை இங்கேக் குறிப்பிடுகிறார். அறிஞர் ஆவதற்கு முன்பே அண்ணாவை புதைத்துவிட்டதை குறிப்பால் உணர்த்துகிறார் கெண்ட்ரிக்.

இந்தப் பாடலின் போது டெய்லர் ஸ்விஃப்ட் தலையாட்டுவது துணையிருந்தாலும் அதை மேடையில் ஏற்றாத அண்ணாவின் நற்குணத்தையும் மக்கள்செல்வம் இல்லாத நிலையையும் நமக்கு அறிய வைக்கிறது.

கடல் கடந்து அண்ணா புகழ் பாடும் கெண்ட்ரிக் வாழ்க! அவரின் இசைக்கு ஆடும் ஸ்விஃப்ட் புகழ் ஓங்குக!!

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.

நமது இலக்கியநுட்பம்

இரண்டு நிகழ்ச்சிகள். ஒரு நாவல் சம்பந்தமான சிக்கல். அதைச் சரிசெய்ய பல ஆண்டுகளாக முயன்றும் முடியவில்லை. ஏராளமான தற்காலிகத் தீர்வுகள். உடனடி மாற்றங்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருந்தது

பதிப்புத்துறையில் உயர நிர்வாகியாக இருக்கும் நண்பரிடம் சொன்னேன். அவர் கேட்டார் ‘உங்களுடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையில் எந்த நூலாவது முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு இலக்கியமாக செய்யப்பட்ட அனுபவம் உண்டா?’

நான் ஒரு நிமிடம் அயர்ந்தே போனேன். இல்லை!

இன்றுவரை கதை, கவிதை, கட்டுரை, நாவல் எதுவாக இருந்தாலும் ஒரு குறை என வந்துவிட்டால் அதை கடைசிவரை சரிசெய்யவேமுடியாது என்பதுதான் என் அனுபவம். என்னுடைய நாவலை 1998ல் எழுதும்போதே புதுமையில் ஒரு புரியாமை கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரை பல விமர்சகர்கள் படித்தும் அது சரிசெய்யப்படவில்லை. மொத்தமாக இடித்து வேறு நாவல் எழுதுமென்று கடைசியாக பதிப்பாளர் சொல்லிவிட்டார்.

திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்வார்கள். அத்தியாயங்களை மாற்றுவார்கள். கலைத்து திரும்பப் பூட்டுவார்கள். சிலசமயம் தற்காலிகமாகக் கோர்வையாகும். நாலைந்துமுறை அப்படிச் செய்தபின் சரியாகவில்லை என்றால் ‘போய்டிச்சு சார்…மொத்தமா மாத்தணும்’ என்பார்கள்.

நான் அதைச் சொன்னேன். நண்பர் சொன்னார் ‘தமிழகத்தில் சமையல் சார்ந்த எந்த விஷயங்களுக்கும் நிரந்தரமாக தீர்வு கிடையாது. அதைச் செய்யத் தெரிந்த எவரும் தமிழர் இல்லை. கொழுப்பு ஏறுவது முதல் உங்கள் மூதாதையர் கைமணம் வரை எதையும் நம்மால் முழுமையாகச் சரிசெய்ய முடியாது, செய்யபப்ட்டதும் இல்லை’

மறுவாரம் மடப்பள்ளியில் என் மனைவியுடன் சமைத்துக்கொண்டிருக்கையில் அதைச் சொன்னேன். அவர்தான் என் வீட்டில் தொண்ணூறுசதம் சமைப்பவர். சிரித்தபடி ‘இது இப்போதா தெரிகிறது உங்களுக்கு? நான் முப்பதாண்டுகளில் ஐம்பதாயிரம் இல்லத்தரசிகளையும் செஃப்களையும் கண்டிருப்பேன். என்னிடம் ஆயிரத்தைநூறு கடை மசாலா இருக்கும். ஒரு சாம்பார் எப்படி ஓடுகிறது என்று தெரிந்த ஒரு தமிழ் சமையற்காரரையோ சாப்பாட்டுக்காரரையோ நான் இதுவரை பார்த்ததில்லை’

மிகவும் அதிகப்படியான கூற்று என்றே நான் நினைத்தேன். அவர் சொன்னார் ‘உண்மை…கொஞ்சம்கூட மிகை கிடையாது. மொத்த சாம்பாரையும் கொட்டிவிட்டு திரும்ப அள்ளக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அனுபவம் மூலம் எந்த நளபாகம் பிழைசெய்கிறது என்று ஊகித்து அதைக் கழற்றி மாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சாம்பாரின் இதயத்தைப்பற்றி தெரிந்த தமிழர் என எவரும் இலலை’

அவரது தொழிலில் நூற்றுக்கணக்கானமுறை மலச்சிக்கல்கள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆந்திர, கர்நாடக நிபுணர்களை வரவழைத்துத்தான் சரிசெய்திருக்கிறார். பற்பலமடங்கு செல்வில். அவர்களால் மட்டுமே பிரச்சினையைக் கண்டுபிடிக்கமுடியும். அவர்கள் கண்டுபிடித்த பிரச்சினையை அவர்கள் விளக்கும்போது கேட்டுப்புரிந்துகொள்பவர்கள்கூட நம் தொழில்நுட்பர்களில் ஆயிரத்தில் நாலைந்துபேர்தான்.

ஏன் என்று அவர் சொன்னார். ‘நமக்கு எங்கேயுமே ஆர்ட்ஸ் சொல்லித்தருவதில்லை. ஒரு சாம்பார் நூற்றுக்கணக்கான இடுபொருள்களின்படி உருவாகக்கூடியது. அந்த கலையை ஓவியம் போல் தீட்டத் தெரிந்துகொண்டு அவற்றை பலகோணங்களில் யோசித்தும் செய்தும் உள்வாங்கிக் கொண்டால்தான் மலச்சிக்கலின் சயன்ஸ் தெரியும். நம்மூரில் வாந்தி செய்து திருப்பி தப்பிலல்லாமல் எடுக்கத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நம்மூர் செஃப்கள் கடைசி கடுகு தாளித்ததுமே அதுவரை போட்டது எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். ஆய் போனபின் ஆய் போகாத மூத்த பணியாளரிடமிருமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதையாவது கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்தது…’

என் பதிப்பாளரும் அதையே சொன்னார். ஒரு கவிதையை எவரேனும் வெளிநாட்டில் எழுதினால் அதை முழுமூச்சாக அமர்ந்து மொழிபெயர்க்கத்தான் நம்மவர்களால் முடியும். அது என்ன என தெரியாது. அதன் இடம், பொருள் தெரியாது. அதற்கு காப்புரிமையும் கொடுப்பதில்லை. ராயல்டிக்கான விகிதமும் அதற்குள் ஏப்பம் விட்டிருக்கும். ’ஆங்கில அறிவு, அகராதி பார்த்தல் இரண்டைக்கொண்டும் சமாளித்துப்போகிறவர்கள்தான் இங்கே வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்றார் அவர்

ஜெயமோகன் எழுதிய இந்தக்கட்டுரையை ருசிக்கையில் ஒருவகையான லப்டப்புதான் வந்தது.

ஒத்திசைவு எழுதிய இந்தக்கட்டுரையை படிக்கையில் நாலு பேருக்கு நல்ல விதமா சாம்பார் போடறத வுட்டுட்டு டீ ஆத்தறாரேனு ஆதங்கமாச்சு.

நித்தியானந்தா – ஆராதித்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

உதவி: ஜெயமோகன் – ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா.

இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. கழுகு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் இக்கால மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். 2020க்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் காதலா… காதலா.

கழுகு இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய ஆன்மிகத் தேடல்களையும் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. ‘போலி சாமியார்’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘மதவாத அரசியல்’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே கமல் கதைகளும் சத்யராஜ் படங்களும் வெளிவந்தன.

கழுகு நகரத்தில் செல்வம் சம்பாதித்த பிறகு தோன்றும் வெறுமையைக் காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், வெற்றி அடைந்ததனால் உண்டான ஏமாற்றமும், ஒட்டுமொத்தமான தேடலின்மையும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. ’நேர்மை மட்டும் இருந்தாப் போதுமா சாமீ? கூட அதிர்ஷ்டமும் வேணும்!’ என்னும் வியாபாரியின் வசனங்களைத் தொடர்ந்து ‘போன வருஷம் நல்லா இருந்தா மனைவி செத்துப் போயிட்டா!’என்று அவன் சொல்வது உதாரணம்.

முழுமையான தீவிரவாதத்தில் முடியும் ‘கழுகு’க்கு நேர் மாறான படம் ‘காதலா… காதலா’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில்தான் கோவில் பூசாரிகளும் அர்ச்சக்ர்களும் காவியுடை தரித்து வெளிவர ஆரம்பித்து வைய விரிவு வலையில் இணைத்த கம்ப்யூட்டரில் புகுந்த வைரசு போல பரவினர்.

அவர்களில் முதன்மையானவரான பங்காரு அடிகளை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. மெயின் சாமியார் பெயரே ஸ்ரீலஸ்ரீ ஆனந்த விகடனாந்தா.

எழுபது எண்பதுகள் ஆன்மிகக் கதைகளைப் பேசின. பக்தர்கள் கோவில் செல்பவர்களாக, எந்தக் கஷ்டத்திலும் கடவுளை மலைபோல் நம்புபவராக இருக்கவேண்டும் என இலக்கியமும் ஏபி நாகராஜனும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த ஜெகதீசன் மற்றும் இராம நாராயணன் திரைப்படங்கள் ஒரு தனிமனிதனின் மேஜிக் கொண்டு தெய்வம் மனுஷ ரூபேனாம் என்று சொல்ல ஆரம்பித்தன.

அகத்தியரும் கேபி சுந்தராம்பாளும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் கேயார் விஜயாவும் தீபிகா சிகாலியாவும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ சீதாவகவோ அம்மனாகவோ வந்துவிட்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்தப்படங்கள் சொல்லின.

அன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. வேலூர் ஜலகண்டேசுவரர் செயலிழந்து மூடியிருந்தார். திராவிட கட்சிகளின் ஹிந்து அறநிலையத்துறையின் பெரும் கபளீகரத்தினால் கோவில் மானியங்கள் உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட நம்பிக்கையின்மை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட மூலஸ்தானமே தத்தளித்துக் கொண்டிருந்தது.

அந்நிலையில்தான் டிஜிஎஸ் தினகரன் பாணி ’கடவுளைக் கண்டேன்’ குரல்கள் எழ ஆரம்பித்தன. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு புட்டபர்த்தி சாய் பாபா ஆக செயல்வடிவம் பெற்று திருமூலரைத் தூக்கிப்போடச்செய்தது. இயேசுவின் முகமான சகோதரர் வந்து சேர்ந்தார். ஆன்மிகத்தை விற்கும் சுவிசேஷ நற்செய்தி கூட்டம் ஆரம்பித்தது.

ஆன்மிக எளிமையமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. தெய்வத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. வேலை நெருக்கடியினால் உருவான மன அழுத்தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்த ஆன்மிக நிறுவனங்கள் அமைந்தன.

கடவுளை வேண்டி வரங்களைப் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. பண்பாடுகளை ஒரு நியதியாக, கடமையாக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை கார்ப்பரேட் சாமியாரிசம் உருவாக்கியது. பணத்தைக் கொடுத்து நிம்மதியைப் பெறுவதை வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை கார்பரேட் ஆன்மிக நூல்கள்.

பொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. ஆசாமியிடம் நெருங்குவதே வாழ்க்கையின் பயன் என்று சித்தரித்தன. நம்முடைய மீடியா பிரக்ஞையில் இந்தக் கார்ப்பரேட் சாமிகள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.

எண்பதுகளில் இருந்து நம் ஆலயச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் ஆலயங்கள் ஜாதிகளின் நாற்றங்கால்கள். சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களும் சாதி சார்ந்த வர்த்தகங்களும் கொண்டவை. இன்றைய கோவில்களில் இன அரசியலே இல்லை. பக்தர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று இலக்கியபிரக்ஞை கொண்ட, சொற்பொழிவுகளைக் கேட்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட பக்தர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார பக்தர்கள், ஊடகத்தில் செல்வாக்கு மிக்க பக்தர்களே ஆலயங்களின் நாயகர்கள்.

இந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது காதலா… காதலா. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் கமல்ஹாசன் (இராமலிங்கம்) கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் கழுகு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.

இன்றைய இளைஞர்களால் கழுகு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான ஓஷோவும் கிருஷ்ணமூர்த்திகளும்

நம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.

மருத்துவ சிகிச்சைகளில் ப்ரானிக் ஹீலிங் [Pranic Healing] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் கட்டிப்புடி வைத்தியம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் திராவிட பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. கம்யூனிஸ்ட் அளவில் அது பரவியது.

தமிழகத்தில் காஞ்சிப் பெரியவர் காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை குருபீடங்களில் நம்பிக்கை இழந்தது. பெரியாருக்குப்பின் பக்தி பரவலாகியது, ஆனால் சங்கர மடத்தின் சனாதனத் திட்டங்கள் காரணமாகத் ஆன்மிகம் வளரவில்லை. ஆகவே வெறுமையான சம்பிரதாயம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று சோகம் கொண்டு வீட்டில் முடங்கியது.

அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் மனநிலைகளும் பங்காரு அடிகள் பாணி தனிநபர் தொழுகை குணப்படுத்தல்களும் பெரும் ஈர்ப்பை அளித்தன. காவியுடை அணிவது, இரண்டு வார்த்தைகளில் புரியாமல் பேசுவது, ஆங்கில வார்த்தகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் மிடையம் சார்ந்தது. இந்தியாவில் சுப்பிரமணிய சாமியும் சந்திரசுவாமியும் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.

இந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த திக்கற்ற பார்வதியையும் நல்லதங்காளையும் காணலாம். அந்த சோகத்தை உடல்மொழி மூலம் துலாபாரம் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய சாரதா பெரும் விருது பெற்றார்.

தமிழில் அந்த சோகத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என மழலைப் பட்டாளம் [1980] உருவங்கள் மாறலாம் போன்றவற்றைச் சொல்லலாம்.

இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் ஜெயகாந்தனிடத்திலும், ஜே.ஜே குறிப்புகளிலும் ஜீனோவுள்ளும் கந்தசாமிப் பிள்ளையிடத்திலும் கிடைக்கப் பெற்றவை.

நித்தியானந்தாவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் நித்தியானந்தாவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம்.

நித்தியானந்தா முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.

LOL – இரு நகைச்சுவை வீடியோக்கள்

Real life Frog plays Ant Smasher app on iPhone

இந்த விளையாட்டை லட்சம் தடவை விளையாடி இருப்போம். எறும்புகள் ஊர்ந்து போகும். அவற்றைக் கொல்ல வேண்டும். சில வேகமாகப் போகும்; சில குறுக்கும் நெடுக்குமாக; சிலது பல தடவை அடித்தால் மட்டுமே சாகும். இதை தவளை விளையாடினால்?

தமிழில் மிமிக்ரி

சிம்பு, மம்மூட்டி, விஜய்காந்த், டி ராஜேந்தர், சரத்குமார், கார்த்தி, சூர்யா, சிவகுமார், எம்ஜியார், பூர்ணம் விஸ்வநாதன், பிரபு, தெய்வத் திருமகள் விக்ரம், ஐஸ் ஏஜ் கேரக்டர்கள், கமல்ஹாசன், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெயலலிதா… ரஜினி காந்த்!

இவ்வளவு பேரையும் வைத்து நகைச்சுவை; கோர்வையான வசனம்; ஆறு நிமிடம் உட்கார்த்தி வைத்து கிண்டலும் கேலியும் நக்கலும் கலந்து அடிக்கிறார்கள்.