Tag Archives: கற்பனை

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

இரு கவிதைகள்: நிஜமும் கற்பனையும்

Activism is the rent I pay for living on the planet. -Alice Walker

disney_pixar_cars_Movies_Trains

மகளின் பாடப் புத்தகத்தைப் படித்தால் பல திறப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக சொன்னால், என்னுடைய பள்ளிக்காலத்தில், ஆங்கில இலக்கியத்திற்கு இன்னும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்திருக்கலாம்.

இரண்டு கவிதைகள் வாசிக்கச் சொன்னார்கள்:

1. The Song of Wandering Aengus by William Butler Yeats : The Poetry Foundation
2. The Railway Train, by Emily Dickinson

படித்து விட்டீர்களா? இப்பொழுது கேள்வி நேரம்:

இந்த இரண்டுக் கவிதைகளிலும் உண்மையும் மாயையும் எங்கு கலக்கிறது? இந்த இரு ஆக்கங்களில் இருந்து நேரடியாக விளங்கிக் கொள்ள முடிவதையும் பூடகமாகப் புரிவதையும் விவரி.

எமிலி டிக்கன்ஸனின் கவிதைக்கு ‘புகைவண்டி’ என்று தலைப்புக் கொடுக்காவிட்டால், அந்தக் கவிதை எதைக் குறித்து எழுதப்பட்டது என்பதே புதிராக இருந்திருக்கும். அந்தக் கவிதை எழுதியபோது, எமிலி, எந்தத் தலைப்பும் வைக்காமல், கவிதையை வெளியிட்டிருக்கிறார். ”அது பல மைல்கள் ஓடுவதை பார்க்க விரும்புகிறேன்” என்று துவங்கும் முதல் வரியே, அந்தக் கவிதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். எமிலி எழுதியவாறே, இந்தப் புத்தகத்தில், எமிலியின் கவிதையை தலைப்பு இன்றி கொடுத்திருந்தால், அந்தப் புதிரை விடுவிப்பதில் சுவாரசியம் இருந்திருக்கும்.

எனக்கோ, தலைப்பு தெரிந்துவிட்டது. இப்பொழுது எமிலி எதைக் குறிப்பிடுகிறார் என்பது துவக்கத்திலேயே போட்டுடைக்கப்படுகிறது. கடைசி வரியில் தொழுவம் (stable) என்கிறார். எனவே குதிரையையும் இரயிலையும் ஒப்பிடுகிறார் எனப் புரிந்து கொண்டேன். இதன் பிறகு இந்தக் கவிதையில் எங்கே அசல் முடிகிறது… எங்கே அரூபம் துவங்குகிறது என்பதில் பெரிய குழப்பம் இல்லை.

Boanerges என்னும் புரியாத குறியீடு வருகிறது. அது தெரியாவிட்டாலும் கவிதை புரியும். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த விடை: Boanerges என்றால் இடியின் மகன்கள். குதிரை போன்ற துள்ளலான கனைப்பைக் குறிக்க, கிறித்துவ விவிலியத்தில் யேசு கிறிஸ்து பயன்படுத்தும் சொல்லாக்கம். )

எமிலி கவிதையின் தலைப்பை சொல்லியிராவிட்டால் சுவாரசியம் இருந்திருக்கும். ‘புகையிரதம்’ என்று போட்டு உடைத்தபின் நேரடியாக ஒரே ஒரு அர்த்தம் விளங்குகிறது. உயிரற்ற புகைவண்டிக்கு, உயிரூட்டமுள்ள குதிரையை ஒப்பிட்டு கவிதை வளரும்போது நிஜம்; பிக்ஸாரும் (Pixar films) டிஸ்னியும் எடுத்த படம் போல் கார்களுக்கும் பொறிகளுக்கும் பிரத்தியேகமான உலகம் இருக்கும் என்பது கற்பனை.

Swan_Celtic_Irish_Goddess_aengus_Mythology_Strory_Paintings_Art

அடுத்ததாக வில்லியம் பட்லர் யீட்ஸ் எழுதிய ’அலைபாயும் ஏங்கஸ்’ கவிதை. எமிலியின் எளிமையான சந்தக்கவியை விட இந்தக் கவிதை எனக்கு பிடித்து இருந்தது. நல்ல புனைவைப் படித்தால், ‘ஏதோ புரிகிற மாதிரி இருக்கு… ஆனால், சொல்ல முடியல’ என்னும் தொண்டையில் மிடறும் நிலைப்பு புரிகின்ற புன்முறுவலை தோன்ற வைக்கிறது.

வனாந்திரத்திற்குள் சென்றவன், ஏதோவொரு காட்டுக் கனியை ஓடையில் விட்டெறிய, அதற்கு கெண்டை மீன் சிக்குகிறது. அதை வறுப்பதற்கு அடுப்பு மூட்டினால், மீனோ, பருவப்பெண்ணாக மாறி, அவனின் பெயர் சொல்லி விளித்து அழைத்துவிட்டு, மரங்களின் நடுவில் ஓடி மறைந்துவிட்டது. அவளைக் கண்டுபிடிப்போம் என்னும் நம்பிக்கையில் கிழவராகிய பின்னும் தாருகாவனத்தில் தவம் போல் தேடுகிறேன் என கவிதை முடிகிறது.

இந்தக் கவிதையில் Aengus என்பது புரியாத பெயர். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த கதை: அயர்லாந்து நாட்டின் கெல்ட்டிய இனத்தவருக்குரிய தொன்மத்தில் ஆங்கஸ் கடவுள் ஆக இருக்கிறார். இளமைக்கும் அழகுக்கும் உரிய சம்ஸ்கிருத மன்மதன் போல் காதற் கடவுள். ஆங்கஸின் கனவில் தினசரி அந்தப் பெண்மணி வருகிறாள். அவனை பசலை நோய் பீடிக்கிறது. அவனால் தன்னுடைய காதலியை நேரில் காண இயலவில்லை. உறக்கத்தில் வரும் தேவதையைத் தேடித் தேடி அலைகிறான். அவளோ ஒரு வருடம் அன்னமாகவும் அடுத்த வருடம் மானுடப் பெண்ணாகவும் வலம் வருபவள். அவளை நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீந்தும் வெள்ளி நீரோடையில் மிகச்சரியாக கண்டுபிடிக்கிறான். அவளை அடையாளம் கண்டுகொண்ட அடுத்த நொடியே அவனும் அன்னமாக மாறி அவளுடன் பிருந்தாவனம் செல்கிறான். )

தன்னுடைய கவிதையின் துவக்கத்தில், யீட்ஸ், இவ்வாறு சொல்கிறார்: ‘ஏனென்றால், என்னுடைய தலைக்குள் தீப்பிடிக்கும் ஜ்வாலை கழன்று கொண்டிருந்தது’. ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் தணிக்கவியலா ஆர்வம் இருக்கும். அந்த நெருப்பு எரிந்து கொண்டேயிருக்கும். அந்த ஆர்வம் என்பது நிஜம். அது கொழுந்து விட்டெறியும் அக்னியாக தோன்ற வைப்பது கவியின் பொய்.

ஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகளில் மீன்கள் பெண்ணாக மாறுவதைக் கேட்டிருக்கிறேன். கவிஞர் யீட்ஸ், அந்தக் கதைகளைப் படித்து, அவற்றையும் தன்னுடைய ஐரிஷ் தொன்மத்தையும் இங்கே கலந்திருக்கலாம்.

பற்றுக்கோல் என்பது குச்சியாக முதல் வரியில் வருகிறது. அந்தக் குச்சியில் கல்வி என்பதைக் கவ்வி கனியாக சொருகிக் கொள்கிறார். அதைக் கொண்டு அகப்படவியலா கண்டுபிடிப்பான, மீனைப் பிடிக்கிறார். அந்த விருந்தை உண்பதற்காக தயாரிக்கும்போது, உரு மாறி தப்பித்து ஓடி விடுகிறது. அந்த உரு மாற்றத்தைத் தேடித் தேடி காலம் ஓடி விடுகிறது. முதிய வயதிலும் அந்த கிடைக்கவியலாப் பெண்ணைத் தேடி மோகம் தலைக்கேறி அலைக்கழிக்கிறது. காட்டில் கனிகள் உண்டு. வேறு மீன்கள் உண்டு. அதில் நாட்டம் இல்லை

மனதிற்குப் பிடித்த வேலையை மூப்படையும் வரை செய்ய நினைப்பது அசல் விருப்பம். அந்த எண்ணம் மாயமானாக கண்ணாமூச்சி ஆடுவது கூட அசலில் நிகழ்வதே. இந்த நிஜத்தை, இளவயது காதலைத் தேடி பரிதவிப்பதற்கு ஒப்பிடுவதாக நினைப்பது கனவு லோகம்.

நன்றாக எழுத என்ன தேவை?

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.

பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.

ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.

இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.

நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?

ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.

இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.