Tag Archives: கமல்

உசேனி நட்சத்திரம்

என்றுமே நட்சத்திர எழுத்தாளர்களுக்கான வாசகர் பட்டாளம் அதிசயிக்க வைப்பவை.

அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்;
கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்;
மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்;
தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்

லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.

சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.

இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.

1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது.
அவள் அப்படித்தான்
தப்புத் தாளங்கள்
சிகப்பு ரோஜாக்கள்
பைலட் பிரேம்நாத்
தாய் மீது சத்தியம்
மனிதரில் இத்தனை நிறங்களா
வண்டிக்காரன் மகன்
ஸ்ரீ காஞ்சி காமாட்சி
தங்கரங்கன்
கண்ணாமூச்சி
அதிர்ஷ்டக்காரன்

இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்

உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

மணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”

ஏதோவொரு காரணத்தால் “நாயகன்” படத்தை மீண்டும் பார்த்தேன். சில குறிப்புகள்

  1. பிசி ஸ்ரீராம்: விடி ஸ்டேஷனில் எங்கோ துவங்கும் கேமிரா அந்தச் சின்ன பையனில் போய் நிற்கும் துவக்கத்தில் இன்றும் பிரமிக்கிறேன்.
  2. தீம் மியுசிக்: படம் நெடுக குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஒரே பின்னணி இசை. அதனாலேயே எல்லாத் தப்பும் கண்ணை மறைக்கிறது
  3. கார்த்திகா: படத்தின் பலமே, பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான நடிகர் தேர்வு. அதுவும் இவர்
  4. நாசர்: எம்புட்டு ஒல்லியாக, இளமையாக இருக்கிறார்!
  5. அஞ்சலிக்கு முன்பே இத்தனை குழந்தைகளை வைத்து படம் எடுக்கிறார் மணி.
  6. நம்மாளு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கூட இருக்கிறாரே!
  7. விஜயனை உங்களுக்குத் தெரியும். ஆர்.ஜே. ரத்னாகரை இன்னொரு விஷயத்திற்காக பார்த்திருக்கிறேன். இவரைப் போன்ற அதிகாரிகளையும் மேலாளர்களையும் எப்படித்தான் ஒரே படத்தில் நடிக்க வைத்தாரோ!
  8. ஏ,ஆர்.எஸ்., ஜனகராஜ் என்று அதிகம் நடித்துவிடும் அபார நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருந்தவர், கமலிடம் கோட்டை விட்டார்.
  9. படத்தின் வன்முறையை இப்போது பார்த்தால் கூட அதிர்கிறது.
  10. கள்ளக் கடத்தலையும் பாலியல் தொழிலையும் இவ்வளவு கவர்ச்சிகரமாகக் காட்ட முடியுமா?

பாரதிராஜா படங்கள்

தலை பத்து குறிப்புகள்:

  1. அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
  2. தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
  3. நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
  4. வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
  5. இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ்  வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
  6. மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
  7. ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
  8. படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
  9. எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
  10. அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
ஆண்டு படம் குறிப்புகள்
1977 16 வயதினிலே முதல் படம்
1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா
1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படிதான்!!

நல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு

1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்
1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி
1980 நிழல்கள் வைரமுத்து உதயம்

வறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு

1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை

என்றாலும், மீண்டும் ரசிக்கலாம்

1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….
1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது
1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா?
1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்
1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும்! டும்!! டும்!!!
1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo
1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை
1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்
1986 கடலோரக் கவிதைகள் கொடுமை
1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே!
1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்
1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்
1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா?
1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா?
1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்
1993 கிழக்குச் சீமையிலே மீட்சி
1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்
1995 பசும்பொன் முடியல
1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.
1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்
1999 தாஜ் மஹால் பையன் வேணும்
2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.
2003 ஈர நிலம் மகனுக்காக
2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக
2008 பொம்மலாட்டம் அப்பாடா! இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு
2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்

 

 

கமலின் தூங்காவனம்: விமர்சனம்

நந்தவனம் x பாலைவனம்

  • அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
  • சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.

Posters_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

தீவனம்

  • நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
  • பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்

சஞ்சீவனம்

  • சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
  • சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.

சீவனம்

  • வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
  • இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.

Thungavanam_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

வனம்

  • கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
  • மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?

பிருந்தாவனம்

  • பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
  • ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.

யெளவனம்

  • நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
  • பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.

தாருகாவனம்

தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.

Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.

Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

உபசீவனம்

  • சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
  • கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
  • தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.

தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்

கமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
Thoonga_VanamTelugu_-Kamal-Cheekati-Rajyam

உத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.

பாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.

வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

திருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.

ஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.

போதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.

வின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.

த்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.

தன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.

வின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.

மூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.

இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.
Sleepless_Night_French_Movies_Films_Thoongavanam_nuit-blanche-2
குழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.

ஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும்? எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.

Sleepless_Night_Thoonga_Vanam_Kamal_nuit_blanche

Uttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம்

Kamal_Movies_UthamaVillan_uttama-villain

சினிமாவில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் தமிழர். திரையில் நாயகர் நியாயத்தைத் தட்டிக் கேட்டால், நிஜத்திலும் அவ்வாறே இருப்பார் என நினைப்பர் தமிழர். சமீப காலத் தமிழ்ப்படங்களில் அந்த வகை கதாநாயகர்களை உரித்துக் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ அவ்வகையில் வந்த படம். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அதே ரகத்தில் இன்னொரு படம்.

கமலுக்கு எந்த மாதிரி திரைப்படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும்? நடனத்தில் பரிமளித்த சலங்கை ஒலி, கடைசியில் இறந்து போகும் குணா, இரு வேடத்தில் தோன்றிய ஆளவந்தான் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ”உத்தமவில்லன்” திரைப்படத்தில் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. பழங்கால வேடத்தில் உத்தமனாகவும் நிகழ்கால கதாநாயகன் மனோரஞ்சன் ஆகவும் இரு வேடத்தில் கமல் வருகிறார். வித்தியாசமான நடனத்தை அபிநயம் செய்பவராக நடிக்கிறார்.

கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்தக் கட்டுரையில் சொந்த விஷயங்களும், தனிப்பட்ட அனுபவங்களும் நிறைந்து இருக்க வேண்டும். அந்த மாதிரி நேர்மையாகவும் உண்மையாகவும் எழுத்தில் இருந்தால் மட்டுமே, அந்தக் கட்டுரையோ அல்லது கதையோ வாசகரின் மனதில் தங்கி நிலைத்திருக்கும். வேறொருவருக்கு நிகழ்ந்ததை புனைவாக்கினாலும் கூட அதில் கொஞ்சமேனும் சொந்த ஆசாபாசங்களை உணர்வுகளாக வடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தால், புனைவுக்குரிய சுவாரசியத்தையும் உருவாக்கி விடலாம்.

’உத்தம வில்லன்’ படத்தில் நாயகன் மனோரஞ்சனுக்கு நடிகன் கதாபாத்திரம். அறுபது வயது ஆகிவிட்டாலும், தொந்தியும் தொப்பையும் குலுங்கினாலும் கூட, இருபது வயது நாயகிகளோடு ஆட்டம் போடும் கதாபாத்திரம். நாலு சண்டை, ஐந்து பாட்டு, ஏ / பி / சி வர்த்தகத்திற்கான வியாபார வித்தகங்கள் கொண்ட திரைப்படத்தில் நடித்து தள்ளுகிறார். திடீரென்று ஒரு நாள், தன்னுடைய பெயர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் வினா எழுகிறது. தனக்கு துவக்க காலத்தில் நல்ல படங்களைக் கொடுத்து சிறப்பான நடிகன் என்று பலரும் பேச வைத்த 83 வயதான இயக்குநர் மார்க்கதரிசியிடம் செல்கிறார்.

மார்க்கதரிசியோடு இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவில் மூன்று காதல்கள். முதல் காதல் நிறைவேறவில்லை. இரண்டாவது மனைவி மட்டும் காதலிக்கும் இல்லத்தரசி காதல். மூன்றாவது மூத்த வயதில் இளவயதினரை பாசத்துடனும் காமத்துடனும் பற்றும் ஒவ்வாக் காதல்.

திரைப்படத்தில் வரும் மூன்று காதல் போல் மூன்று தந்தையர்களும் உண்டு. முதல் தந்தை மாமனார் பூர்ணசந்திர ராவ் ஆக வரும் கே விஷ்வநாத். இரண்டாவது தந்தை நாயகன் மனோரஞ்சன். மூன்றாவது தந்தை ஜேகப் ஜக்கரியா ஆக வரும் ஜெயராம்.

மாமனார் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர். தன் மகள் நலத்தை எண்ணி சிந்தித்து செயல்படுபவர். மகளுக்காக மாப்பிள்ளையை உருவாக்கியவர். ஒன்றுமில்லாத ஏழை ஆறுமுகத்தை காதல் இளவரசன் மனோரஞ்சன் ஆக்கியவர்.

மனோரஞ்சனுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை மனோன்மணி. கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மனோன்மணி என்று தனக்கு ஒரு மகள் இருப்பதையே அறியாதவர். காதலில் பிறந்த குழந்தையை சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் கைவிட்டவர். இன்னொரு குழந்தை முறையாகப் பிறந்த குழந்தை. ஆனால், அந்த மகனுடனும் பெரியதாக அன்னியோன்யம் எதுவும் வளர்க்காதவர். தான் உண்டு, தன் நடிப்பு உண்டு, தன் முதிய காதலிகள் உண்டு என்று சுயலவாதியாக வாழ்க்கையைக் கொண்டாடுபவர்.

மூன்றாமவர் ஜேகப் சக்கரியா. ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் அமரிக்கையாக வந்து போகிறார்.

திரைப்படத்தில் மூன்று பேரைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.

முதலாமவர் எம் கிப்ரான். படத்தின் பாடல்களில் பாரம்பரியமும் இருக்க வேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப கேட்கக் கூடிய துள்ளலாகவும் பாய வேண்டும். கதையோடும் இழைந்தோட வேண்டும். அவை எல்லாம் சாத்தியமாக்கி உள்ளார்.

தாலி கட்டிய மனைவியாக ஊர்வசி வருகிறார். ஆஸ்பத்திரி காட்சி மட்டுமே அவருடைய உயிர் ஊட்டத்திற்கு அத்தாட்சி. மைக்கேல் மதன காமரஜனில் பழக்கமான ஜோடி. கமலின் நிஜ வாழ்வில் சரிகா அவரை விட்டுப் பிரிந்ததை நினைவுறுத்தும் குணச்சித்திரம்.

மூன்றாவதாக சொக்கு செட்டியாராக வரும் மேனேஜர் எம் எஸ் பாஸ்கர். இவருக்குக் கொடுக்கப்பட்டதை ஒழுங்காகச் செய்யாவிட்டால்தான் செய்தி. கிரேசி மோகன் தனமான மொழிமாற்ற வசனங்களை சர்தார்ஜியுடன் சேர்ந்து கலகலக்கிறார். ‘அழுதா உங்களுக்கு நல்லாயில்ல!’ என்று மனோரஞ்சன் சொன்னாலும் அந்தக் காட்சியிலும் இயல்பான உடல்மொழியும் அவருக்கே பிரத்தியேகமான அன்றாட இயல்புகளின் பிரதிபலிப்பாலும் ”சொக்கு” நிலைத்திருப்பார்.

திரைப்படத்தின் மிகப் பெரிய பலவீனம் ‘உத்தமன்’ கதாபாத்திரம் வந்து போகும் நாடகீய தருணங்கள். அந்தப் பழங்காலக் கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்திருக்கின்றன. ராஜா – ராணிகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் கூட தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்த் திரைப்படத்தில் கிரீடம் வைத்து, கவசம் தைத்து, உத்தரீயணம் தரித்து, பஞ்சகச்சம் கட்டி சினிமா எடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி பாவ்லா அரசர்களைக் கிண்டல் செய்வதில் பாடலில் ‘புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி!’ என்று கோடிட்டு கிண்டலும் செய்கிறார்கள்.

அந்த மாதிரி நுண்ணிய நகைச்சுவை புரிகிறது. ஆனால், ‘ஜிகர்தண்டா’ போல் தமிழ் சினிமாவிற்குள் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை நக்கல் அடித்த காட்சியமைப்போ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை. “நான் புத்திசாலி!” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்!”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்!”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்!” என்று காதில் வந்து கத்துவது போல் படம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அன்னநடை இடுகிறது.

குறுநில மன்னர்களைப் பற்றியும் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் இலட்சணங்களை தோலுரித்து, அதே சமயம் காமெடியும் கலந்து கொடுத்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போல் வெளிப்படையாக அரசியலும் பேசவில்லை. அந்தப் படத்தில் உக்கிரபுத்தன் என்னும் வீரன் ஒருவனும் புலிகேசி என்னும் கோழை மன்னனும் இருந்தார்கள். உத்தம வில்லனில், அந்த இருவரும் ஒருவராகவே வருகிறார்கள். ஆனாலும், இந்த நாடகத்தை இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு, சன் தொலைக்காட்சி படத்தொகுப்பாளரிடம் கொடுத்தால், அரை மணி நேரமாக வடிவேலுவின் காட்சிகளை சுருக்கித் தந்திருப்பார். அது இந்தப் படத்தை விட சுவாரசியமாக இருந்திருக்கும்.

கமலுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம். நிரலி எழுதுபவர் எனக்கு ஜாவா தெரியும், ஆரக்கிள் தெரியும், ரூபி தெரியும் என்று அடுக்கி, தன்னுடைய பயோ டேட்டா சொல்லிக் கொள்வார். அது போல் நான் நடிகனாக நடித்து இருக்கிறேன். தந்தையாக வந்திருக்கிறேன். கதக்களி ஆடி இருக்கிறேன். ஆண்ட்ரியாவோடு கொஞ்சி இருக்கிறேன். பூஜாவை கண்ட இடங்களில் தொட்டு இருக்கிறேன். மூளைக்கட்டி வந்தவனின் வேதனையைக் காட்டி இருக்கிறேன். – இப்படி பட்டியல் போட்டு, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

திரையரங்கில் இருந்தவர்கள் சிரித்த இடங்களில் எல்லாம் எனக்கு தமிழ் வசனம் புரியவில்லையோ என்று சந்தேகப்பட்டு ஆங்கிலத் துணையெழுத்துக்களைப் படித்தால், அப்பொழுதும் சிரிப்பு உண்டாகவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மொழிமாற்றாமல், சூழலுக்குத் தக்கவாறு மொழிபெயர்க்கிறோம் என்று சம்பந்தமே இல்லாமல் இஷடத்திற்கு தங்களுடைய காவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் நிஜமாகவேத் தேவலாம். நன்றாக இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதுதான் பிரச்சினை. படத்தின் முக்கிய பிரச்சினையும் கூட.

நான் கூட எனக்குத் தெரிந்த கிரேக்கத் தொன்மம், சமீபத்தில் ஹார்ப்பர்ஸ் இதழில் படித்த சிறுகதை என எல்லாவற்றையும் இங்கே நுழைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் இந்தப் பதிவில் இடமில்லை. மணி ரத்னம் எடுத்த ஓகே கண்மணி போல் சுருக்க சொல்ல வேண்டாம். ஆனால், நிறைய வெட்டி எறிந்திருக்கலாம். வளவளா வசனத்தைப் பாதியாகக் குறைத்து, கொட்டாவியை தடுத்திருக்கலாம்.

இவ்வளவு சொல்லி விட்டு, திரைப்படத்தில் தேவையில்லாமல் வரும் ”அல்லா” வசன விளிப்பையும், மனோன்மணியின் கழுத்தில் தொங்கும் சிலுவையும், ‘நாங்க கிறிஸ்டியன்ஸ்! எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம்!” என்னும் பொதுமைப்படுத்தல்களையும் சொல்லாமல் செல்வது இழுக்கு. தொந்தி பெருத்த பிராமணர்கள் சாப்பிடுவதைக் காட்டுவது ஃபோர்டு பவுண்டேஷன் பாட்டாளிகளுக்கு உழைக்கிறது என்று நிறுவுவது போல் துருத்திக் கொண்டெல்லாம் இல்லை. கமல் படமென்றால் காமம் இருக்கும். நாராயண தூஷணையும் பார்ப்பான் பாஷிங்கும் இருக்கும் என்பது “அவர்கள்” எழுதிய விதி.

படத்தின் முதல் பலவீனம் ‘அகோ வாரும் பிள்ளாய்’ என பியூ சின்னப்பா ரக வசனங்கள் என்றால், கே பாலச்சந்தர் இன்னொரு முட்டுக்கட்டை. அவரை இந்த வயதில் இப்படி படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு லீலா சம்சனைத் தெரியும் என்று மணி ரத்னம் அவரை உபயோகித்தால், கொஞ்சமாவது பொருந்துகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க கான்ஸ்டபிள் ஆகத்தான் இருக்க வேண்டுமா?

குண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும் பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் நரசிம்மர் செத்து விடுகிறார். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வருவார்… வருவார்… என பிரகலாதன் போல் நானும் அஷ்டாவதானி என்னும் வித்தகாதி வித்தக கமலுக்காக படம் நெடுகக் காத்திருந்தேன்.

இப்பொழுது அடுத்த கமல் படத்தில் ஆவது மீள்வார் எனக் காத்திருப்பேன்.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?

வரலாறு, சலங்கை ஒலி, சந்திரமுகி & காதலன்

கல்லூரி காலத்தில் வந்த ‘ஹம் ஹே ரஹி பியார் கே’ இந்திப் படத்தில் தென்னிந்திய நடன கலைஞர் சந்திரன், நடன கலைஞராகவே நடித்திருப்பார். இவர் சுதா சந்திரனின் அப்பா.

கிட்டத்தட்ட ‘விஸ்வரூபம்’ கமல் போலவே நளினமான அபிநயங்கள் மிகுந்த கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார்கள். அவருக்கு ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கும். அவரின் கை முத்திரைகளும் முகபாவங்களும் பிடிக்காததால் வீட்டை விட்டு ஹீரோயின் ஓடுவதில் கதை துவங்கும்.

இருபதாண்டுகள் கழித்தும் பரதநாட்டியம் கற்ற ஆண்களை இப்படித்தான் தமிழ் சினிமா வரையறுக்கிறது. அழகான நாயகி, சாஸ்திரீய கலை கற்றவனின் நடை, உடை பாவனைகளை வெறுப்பாள் என்று சொல்கிறது.

Kamal’s விஸ்வரூபம் FAQ

அ) படம் எப்படி?
நல்லாருந்துச்சு. சுவாரசியமாப் போகுது.

ஆ) எது பிடிச்சிருந்தது?
பிராமணப் பொண்ணு சிக்கன் சாப்புடறது; முதல் சண்டைக் காட்சி; ஆப்கானிஸ்தான் லொக்கேஷன்

இ) என்ன இருந்திருக்கலாம்?
ஆண்ட்ரியாவுடன் டூயட்; கோடை கால ஆடை அணிந்த ஹீரோயின்; அப்புறமாய் கொஞ்சம் கதை

ஈ) குழந்தைகளைக் கூட்டிப் போலாமா?
செக்ஸ் வச்சுக்கறதுனா என்னன்னு கேப்பாங்க; கை வேறு கால் வேறா வருவதைப் பாத்து பயப்படலாம்

உ) இயக்குநர் கமலுக்கு எவ்வளவு மார்க்?
விருமாண்டி அளவு உணர்ச்சி இல்லை; ஹே ராம் அளவுக்கு சரக்கும் இல்லை. இருந்தாலும் ஃபோகஸ் இருப்பதால் எழுபது.

ஊ) இஸ்லாமியர்கள் ஃபீலிங் ஆகிறார்களே?
பனியில் நடந்தா பார்த்து நடங்க; அல்லது வழுக்கிரும்னு சொல்லுற மாதிரி, மார்க்கத்தில் பார்த்து நடக்க சொல்லுறாரோனு நெனச்சேன். அந்த மாதிரி அட்வைஸ் கூட இல்ல. டைட்டில் மட்டும் வலமிருந்து இடம் வருவது மாதிரி சின்னச் சின்ன நகாசு மட்டுமே.

எ) கார் சேஸிங் இருக்காமே?
அதற்கு பதிலா இன்னும் கொஞ்சம் கேரக்டர் டெவலப்மெண்ட் செஞ்சிருக்கலாம்.

ஏ) துப்பாக்கி, எந்திரன் – ஒப்பிடுக.
விஜய் படம் புத்திசாலித்தனம். ரஜினி படம் பிரமிப்பு. கமல் படம் இரண்டும் கலந்து வந்திருக்கணும்; ஆனா, டைரக்டர் பேச்ச கேட்கமாட்டாரே

ஐ) என்னோட அமெரிக்க நண்பருக்கு போட்டுக் காட்டலாமா?
இது தூய இந்தியருக்கு மட்டுமே ரசிக்கக் கூடியது. அவர்களுக்கு புதுசா எதுவும் சரக்கு இல்லை. போர்ன் ஐடெண்ட்டியும் ட்ராஃபிக்கும் பாக்குற கும்பலுக்கு விசுவரூபமெல்லாம் சரிப்படாது

ஒ) ஆக்டர் கமலுக்கு எவ்வளவு மார்க்கு?
உறுத்தாம வந்து போகிறார். தேய்வழக்காக வசனகர்த்தா சொல்லுறத கூட சகிக்க வைக்கிறார். முக்கியமா அந்த பயங்கரவாதி கெட்டப்புக்காகவே நூற்றுக்கு நூறு போடலாம்.

ஓ) நெஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?
தீவிரவாதிகளுக்கு புது புது ஐடியா எல்லாம் கொடுத்திருக்காரே

ஔ) “தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன்… விதை இல்லாமல் வேர் இல்லையே’ போல் கவித்துவமாக சிந்தனை சொல்லுப்பா…

புறாவில் என்ன பாகுபாடு என்பது பயலாஜிஸ்டுக்குத்தான் தெரியும்; அது போல் மனிதனின் பிரிவுகள் அறிவியலாருக்கு மட்டுமே புலப்பட வேண்டும். புறா கோவில் மாடத்திலும் தங்கும்; அங்கிருந்து மசூதிக்கும் பறக்கும். நாயகனும் அவ்வாறே.

உலகம் ஒரு நாடக மேடை; சினிமா ஒரு வாழ்க்கை பாதை

விஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.

விவகாரமான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.

கடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.

‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.