Tag Archives: இறப்பு

தேகயாத்திரை

Soul – Movie Review

வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்?

இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் ஷொஷோனி (Shoshoni) பிரிவினரிடம் புழங்குகிறது:

ஒரு ஊரில் ஓநாயும் நரியும் வசித்து வருகின்றன. ஓநாயின் பேச்சை எப்போதுமே குள்ளநரி கேட்காமல் நடந்து கொண்டிருந்தது. ஓநாய் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே குள்ளநரி செயல்படும். குள்ளநரியிடம், “இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வித்தை உனக்குத் தெரிய வேண்டுமா? அவர் வீழ்ந்த இடத்திற்கு அடியில் பூமியைத் துளைத்துச் செல்லும் அம்பை விட்டால், மாண்டவர் மீள்வார்!”, என ஓநாய் சொல்கிறது.

ஓநாய் என்ன சொன்னாலும் சிவப்புக் கொடி தூக்கும் குள்ளநரி, “அதெல்லாம் வேண்டவே வேண்டாம். செத்தவர் செத்தவராகவே இருக்கட்டும். இறந்தவரையெல்லாம் இப்படி உயிர்ப்பித்தால், பூமி பாரம் தாங்காது.” என்றது. அப்போதைக்கு அதற்கு “சரி” என்று தலையாட்டி வைக்கிறது ஓநாய். எனினும், தனிமையில் சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டுகிறது ஓநாய். குள்ளநரியின் மகனை முதல் பலியாகக் கொல்ல முடிவு செய்கிறது. இரவோடிரவாக கொன்றும் விடுகிறது.

காலையில் மகனின் மரணத்தைப் பார்த்த குள்ளநரி அரற்றி பிழற்றிக் கொண்டு ஓநாயிடம் கதறிக் கொண்டே வந்தது. “என் மகன் அகால மரணம் அடைந்துவிட்டான். அவனை உயிர்ப்பித்துத் தர முடியுமா? அவன் வீழ்ந்த நிலத்திற்கடியில் பாணத்தை விட்டு அவனை மீண்டும் நடமாட வைப்பாயா?” என்று இறைஞ்சுகிறது நரி. ஓநாய், “அதெப்படி? எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்று நீதானே நேற்று சொன்னாய்! உனக்கு மட்டும் எப்படி தனி நியாயம்?” எனக் கேட்க, சாவுத்துயரில் தோய்ந்த நரி, அன்றைய நாளில் இருந்து அந்த வித்தையை பலிக்காமல் போக சபிக்கிறார்.

டிஸ்னி நிறுவனத்தின் பிக்ஸார் கிளையின் அடுத்த படம் இது போன்ற இரு மாந்தரை மையமாக வைத்து “சோல்” (Soul – ஆன்மா) படத்தை வெளியிட்டு இருக்கிறது. வெள்ளித்திரைகளில் படம் வெளியாகவில்லை. சின்னத்திரையான டிஸ்னி+ மூலமே இதைப் பார்க்க முடியும். பியானோ வாசிப்பாளர் பெயர் ஜோ. சிறுவர்களுக்கு வாத்தியங்களைக் கற்றுத் தருகிறார். ஒரு பக்கம் பள்ளிக்கூடத்தில் நிரந்தர வேலை உறுதியாகும் வாய்ப்பு. இன்னொரு பக்கம், ஷ்ரேயா கோஸல் போன்ற ஆதர்ச + புகழ்பெற்ற பாடகியின் பக்கவாத்தியமாக விரும்பியதை வாசித்து ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளும் வாய்ப்பு. சாலை விபத்தில் கிட்டத்தட்ட இறக்கிறார். மரணத்தின் வாயிலில் அவ்வுலகம் செல்கிறார். அங்கே பல்வேறு உயிர்களையும் இன்ன பிற ஆன்மாக்களையும் சந்திக்கிறார்.

அவருக்கோ மீண்டும் பூமிக்குள் வந்துவிட ஆசை. இப்பொழுதுதான் வாழ்நாள் லட்சியம் சாத்தியம் ஆகப் போகிறது. காலையில் நிரந்தர வருமானம். மாலையில் கனவு உத்தியோகம். ஒவ்வொரு நாளும் விதவிதமாக இசையில் மூழ்கலாம். பியானோ வாசிப்பில் லயிக்கலாம். கேட்போரையெல்லாம் சொக்க வைக்கலாம். அந்த நேரம் பார்த்து மரணம். ஆசையில் மண்.

இன்னொரு பக்கம் அவ்வுலகத்தில் “22” என்னும் ஆன்மாவிற்கு மீண்டும் பூமிக்கு வரப் பிடிக்கவே பிடிக்கவில்லை. மனிதராகப் பிறந்து உண்டுண்டு உறங்குவதை வெறுக்கும் ஜீவன். மாயாப் பிறவி மயக்கம் அறுத்த அகவுயிர். ஓயாமல் இரவு பகலாய் உழைத்துக் கொட்டி, அதில் அர்த்தம் தேடுவதை ஒதுக்கும் ஆவி – “22”.

பிக்சர் படம் என்றால் குழந்தைகள் படம். என்றாலும், அதில் சினிமாவில் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் என் போன்றோருக்கு நிறையவே சரக்கு இருக்கும். சடாரென்று தூக்கத்தில் எழுப்பினால் கூட “அப்”, “இன்சைட் அவுட்”, “மான்ஸ்டர்ஸ் இன்க்” என்று அடுக்கி, அதன் தத்துவங்களை விலாவாரியாக ஆர்வமாக விளக்குவேன். ஒரு தடவைக்கு பல தடவை பார்த்தாலும் அலுக்காதவை.

அலுக்காத தன்மைக்கு அந்த அனிமேஷன் லாவகத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த “சோல்” படமும் நாக்கில் கரையும் மைசூர்பா என கண்ணில் கரையும் புத்திசாலித்தனமான காட்சிகள் கொண்டது. தொழில்நுட்பம் ஆகட்டும்; கலாபூர்வம் ஆகட்டும். இரண்டும் பார்ப்போரை ஏகாந்த நிலைக்குக் கொண்டுபோகிறது. அதுவும், இறப்பு, வாழ்க்கையின் பூரணத்துவம் போன்ற எசகு பிசகான கேள்விகளை எழுப்பும்போது கூட அந்த இருட்டு தெரியாமல் ரம்மியமாக செல்கிறது. காட்சிக்கேற்ற பரவச இசை; தத்ரூபமான இசை சபா மேடை; ஜோதியில் ஐக்கியமாவது; எல்லாமே சரியான பதத்தில் வந்திருக்கிறது. பியானோவும் ட்ரம்பெட்டும் எக்காளமிட்டு ஒன்றோடன்று போட்டி போடும் இசையமைப்பிற்கு என்னால், ‘பேஷ்’ மட்டுமே வைக்க இயலும். அதில் தோய்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரார்களாலேயே அதன் ஆலாபனைகளை உணர இயலும்.

எனவே, படத்தில் நான் உணர்ந்த தொன்மவியலுக்குள் சென்று விடுகிறேன்.

ஒரு கிளையில் உள்ள இரு பறவைகளாக ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சில உபநிஷத்துகள் காண்கின்றன. இங்கேயும் அந்த மாதிரி ‘22’ம் ஜோ என்னும் வாத்தியக்காரரும் வருகிறார்கள். ஜீவாத்மா என்னும் பறவை, மரத்தின் கனிகளை உண்கிறது. அதில் சில பழங்கள் இனிக்கும்; சிலது கசக்கும் – மாணாக்கர்களின் சேஷ்டை ‘ஜோ’ என்னும் இசை வாத்தியருக்கு வெறுக்கிறது; அதே சமயம் இசையை ரசித்து வாசிக்கும் மாணவரின் ஆர்வம் இனிக்கிறது. கச்சேரி வாய்ப்பிற்காக, ஒவ்வொரு சபா ஆக சென்று, வாய்ப்பு கேட்டு, மறுக்கப்படுவது வெறுக்கிறது; அதே சமயம் கிடைத்த வாய்ப்பில் பரிமளிக்கும் போது, கிடைக்கும் பார்வையாளர்களின் கைதட்டல், சந்தோஷம் – இனிக்கிறது. பரமாத்மாவிற்கோ இதில் எல்லாம் அபிலாஷை இல்லை. அது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும். இந்தப் பழங்களை, “சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்”, என்று ஒதுக்கும். இது ‘22’

ஜீவாத்மாவிற்கு எப்பொழுது பரமாத்மாவின் மகத்துவம் புரிகிறதோ, அப்போது இவ்வுலகின் துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுதலை அடைந்து முக்தி பேறடைகிறது. படத்திலும் ‘ஜோ’ அடைகிறார். இறுதியில் எல்லா பிக்ஸர் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் மோன நிலையை அடைந்துவிடும். அது பெரிய விஷயமேயில்லை. எப்படி, எவ்வாறு, எந்தப் பாதையில் சென்று உய்யலாம்? அந்தப் பாதையை, பரிணாம மாற்றத்தை, இந்தப் படம் சுவாரசியப்படுத்திச் சொல்லியிருக்கிறது.

இந்தப் பாதை அடையும் வழி என்ன என்று உபநிஷத்துகள் என்ன சொல்கிறது? கடனே என்று காரியத்தை, கருமங்களை செய்யாதே என்கிறது. எளிதானவற்றையும் பிரயாசையின்றி செய்வதையும் விட்டுவிடு; சரியானதையும் ஷ்ரேயஸானவற்றையும் செய் என்கிறது. ஆன்மாவை நோக்கி உள்முகமாக பயணி என்கிறது. அனைவரிடத்தும் அன்பு செலுத்து; அவர்களிடம் அக்கறை கொள்; பொருத்தமான ஆன்மிக குருவைத் தேர்ந்தெடு; அவரிடம் கேள்விகளை முன் வை; அவரிடம் சந்தேக நிவர்த்தி பெறு என்கிறது.

அனுபூதி அடைவது எளிதல்ல. குருவின் சோதனைகளை செவ்வனே முடிக்க வேண்டும். கடைசியில் அவரவர்க்கு அவரவர் ஆத்மாவே குருவாகிறது. மனிதப் பிறவியில் ஞானமும் (சிரவண மனனம்) யோகமும் (நித்தியாசனமும்) அடையப்பெற்ற விவேகர்கள், தன்னை சர்வ சக்தியுள்ளவர் என்று அறிந்து கொள்கின்றார். (மேலும் வாசிக்க – பின் – இணைப்பு: யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை)

மீண்டும் “சோல்” திரைப்பட பார்வைக்கு திரும்புவோம்.

இறந்தோர் செலும் வரிசையில் ஜோதியில் ஐக்கியமாவதற்காக ஜோ என்னும் கதாபாத்திரம் காத்திருக்கிறது. அப்பொழுது, அந்த வரிசையில் இருந்து எகிறி குதித்து, இன்னொரு இடமான திரிசங்கு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த இடம் Defending Your Life என்னும் படத்தை நினைவூட்டியது. அதில் மரணித்த ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை மீண்டும் பார்ப்பார்கள். அதில் சிற்சில மாறுதல்களை செய்ய விரும்புகிறார்களா அல்லது தற்காப்பாக அவர்களின் முடிவுகளை ஆதரித்துப் பேசுவார்களா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட பயணம் அமையும்.

அந்த இடைப்பட்ட இடத்தில்தான் ஜோ கதாபாத்திரம் “22”ஐ சந்திக்கிறது. பல்வேறு பெரிய கைகளை பார்த்து பழம் தின்று கொட்டை போட்ட கதாபாத்திரம் “22”. மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், அன்னை தெரசா, கொபர்னிகஸ், மேரி ஆன்டொனெட், கார்ல் யொங் என்று பலர் “22”ஓடு கலந்துரையாடி, பூலோகத்திற்கு தயார் செய்ய முயன்று, பலரும் தோற்றோடியிருக்கிறார்கள். அந்த 22ன் வாயினாலாயே சொல்வதானால், “தெரஸாவையே அழ அழ ஓட்டியவளாக்கும் நான்!” அந்த ஆசிரியர்களால் முடியாததை ஜோ செய்கிறார். தன் உருவத்தில் 22ஐ சில மணித்துளிகள் நடமாட விடுகிறார். அதன் மூலமாக வாழ்வின் அற்புதத்தை உணர்த்துகிறார்.

ஆன்மாக்களின் ஆளுமைகளை உருவாக்கும் பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் கண்டறியும் இடம் தான் இந்த “கால்கோள் சந்தி” எனப்படும் The Great Before. ஆன்மாக்கள் இன்னும் முழுமையடையவில்லை. இரண்டும்கெட்டான்களாக அலைகிறது. அங்கிருக்கும் குருவானவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆன்மாக்களை, பக்குவப்படுத்திய பிறகு, பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதன் பின் அந்த ஆசிரியர்கள் “மகா உம்மை” எனப்படும் Great Beyondக்கு சென்று பிரும்மாண்ட பிரகாச ஒளியில் ஐக்கியமாகி விடுவார்கள்.

“கால்கோள் சந்தி”யில் குணாதிசயங்களைப் பொருத்தலாம்; விருப்பங்களை உருவாக்கிக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உந்து சக்தி வேண்டாமா? உங்களை இயக்க, உங்களின் ஒவ்வொரு நாளையும் உத்வேகமிக்கதாக ஆக்க, ஆற்றலின் முழு வீச்சையும் உணரவைக்கும் ஜீவாதாரம் எது? அதை அடையாளம் காண்பிக்க வேண்டியது குருவின் பொறுப்பு.

மனிதன் மீண்டும் ஜனனம் ஆவதை பஞ்சாக்னி வித்தை எப்படி சொல்கிறது என்று பார்க்கலாம். மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். அது வரும் பாதை:

  1. தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் ஜீவன் தயாராகிறது.
  2. ஜீவாத்மா மேகத்திற்குள் நுழைகிறது. நெருப்பை அணைக்கும் சக்தி மழை நீருக்கு இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி எனப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
  3. பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
  4. பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறது. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறது.
  5. ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் மனிதரும் அக்னி. அவரது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவர்களது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது. 

திரைப்படத்திலும் இந்த மாதிரி ஒவ்வொரு ஜீவனுக்கும் ஐந்து பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் பொருத்துகிறார்கள். ஆனால், விந்து என்பது எது என்பதை அந்த ஜீவனே கண்டறிய வேண்டும். அதைக் கண்டறிவதற்கு, குருவின் துணை தேவை என்பதை வலியுறுத்துகிறது.

பிரபஞ்சம் என்பது 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது என்று ஸாங்கியம் சொல்கிறது.

பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கர்மேந்திரியம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மஹாபூதங்கள் என்று மொத்தம் 24 இருக்கின்றன.

ஞானேந்திரியங்கள் என்பவை

  1. சப்தம் (காது)
  2. ஸ்பரிசம் (சர்மம்) / தோல்
  3. ரூபம் (கண்)
  4. ரஸம் அல்லது சுவை (வாய்)
  5. கந்தம் என்ற வாஸனை (மூக்கு)

ஜீவனே நேராகக் காரியம் செய்ய உதவுபவை கர்மேந்திரியங்கள்.

  1. வாய் பேசுவது
  2. பல காரியங்களைச் செய்ய உதவும் கை
  3. நடக்கிற கால்,
  4. மலஜல விஸர்ஜனம் செய்கிற அவயவம் / உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்)
  5. ஜனனேந்திரியம் / பிறப்புறுப்புக்கள் 

அருவத்தின் உருவ மாற்றமே தன்மாற்றம். நிலை மாற்றம் அலை. தன்னிலை மாற்றம் தன்மாற்றம். தன் தன்மையின் மாற்றம் தன்மாத்திரை. பஞ்ச தன்மாத்திரைகள்;

  1. சப்தம் / ஓசை
  2. ஸ்பர்சம் / தொடுதல்
  3. ரூபம்
  4. ரசம்
  5. கந்தம் / ஒளி

எல்லாவற்றுக்கும் ஆதாரமான – ஆத்மாவைப் ‘புருஷன்’ என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்வது ஸாங்கியம். அதுபோல், இந்தப் படம் ‘புருஷன்’. அதில் இருந்து கிடைப்பது ப்ரக்ருதி. திரைப்படம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. வாழ்வதைப் போலவே, இந்த அனுபவத்தை தவறவிட வேண்டாம்.

யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை

முன்பொரு சமயம் யது மகாராஜன் எங்கும் அச்சமின்றித் திரியும் ஓர் அவதூதரிடம், “உலக சுகபோகங்களில் ஈடுபாடு இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறதே எதனால்?” என்று கேட்டார். அதற்கு அவதூதன் கூறலானான், நான் பலரை எனது குருவாகக் கொண்டு அவர்களிடமிருந்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்களை ஆச்ரயித்து தெரிந்து கொண்டவை பல.

1. ப்ருத்வி – பொறுமையும் மன்னித்தருளும் குணமும் விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் கற்போம். பூமியை எங்கு வேண்டுமானாலும் தோண்டலாம். மூத்திரம் அடிக்கலாம். மலஜலம் கழிக்கலாம். அல்லது வீடுகள் கட்டலாம். மண்ணில் இருந்து புதையல் எடுக்கலாம். பூமியிலுள்ள அனைத்தும் எப்படிப் பிறருக்குப் பயன்படுகிறதோ அவ்வாறு சாதுக்கள் தான் பிறருக்கு உரியவன் என்று உணர வேண்டும்.
2. வெற்பு – பிறரின் நன்மைக்காக வேலை செய்வது எப்படி என்பதை மலைகளிடம் இருந்து கற்கலாம். மலைகளில் இருந்து மரங்களும் மூலிகைகளும் நதிகளும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மற்ற விலங்குகளுக்குப் பயன்படுகின்றன. உன் வாழ்க்கை பிறருக்காக இருக்கட்டும். மேலும், மலைகள் என்பவை தனிமையை அடையாளப்படுத்துபவை. அமைதியாக இறை சிந்தனையில் ஈடுபட மலைகள் உதவுகின்றன.

3. காற்று போல யோகியானவன் குண தோஷங்களால் கறைபடாதவனாக அதாவது பற்றற்றவனாக இருக்க வேண்டும்.
4. ஆகாயம் போல் ஆத்மா பிரபஞ்சமெல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமரை இலை நீர் போல இருக்க வேண்டும்.
5. நீரைப் போல் யோகி தூயவனாய், குணமுற்றவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிமையாகப் பழகுதல் வேண்டும். பார்ப்பது, பேசுவது, தொடுப்பது ஆகியவற்றால் அண்டினவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
6. அக்கினியைப் போல் அழுக்கற்றவனாய் ஒளியுடன் விளங்க வேண்டும்.
7. சந்திரனில் தேய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுபோல் ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடையாது.
8. சூரியன், கடல் நீரைக் கிரகித்து மழையாகப் பொழிவதைப் போல் யோகி இந்திரியங்களால் விஷயங்களைக் கிரகித்து அதைத் தகுதி உள்ளவன் கிடைக்கும் போது அவனிடம் கொடுத்து, கொடுத்ததை மறந்துவிட வேண்டும்.
9. மாடப்புறா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது போல் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளுவான்.
10. மலைப்பாம்பு போல் தன் முயற்சி இன்றி கிடைத்ததைப் புசித்து உதாசீனனாய் இருக்க வேண்டும்.

11. பாம்பு – நாகம் தனியே வாழும்; தனியே பயணிக்கும். சில சமயம் எலிப் பொந்துகளில் வசிக்கும்; எங்கோ, எப்படியே, யார் வீட்டிலோ வாழும். நாகம் மிகவும் பாதுகாப்பாக தன் அடிகளை எவரும் அறியாவண்ணம் எடுத்துவைக்கும். உங்களின் இமைத்துடிப்பே, பாம்பிற்கு, உங்களை அடையாளம் காட்டிவிடும். அது போல், நீயும் மாயை குறித்து எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வுடன் இரு.

12. குளவி – கூட்டில் இருக்கும் பூச்சியானது, சதாசர்வ காலமும் குளவியையே நினைத்துக் கொண்டிருக்கிறது. குளவியைக் கண்டு பய உணர்ச்சியையும் விரோதத்தையும் வளர்த்துக் கொள்கிறது அந்தப் பூச்சி. அதன் பின், முழுதாக வளர்ந்த பின், அது குளவியாகவே மாறி விடுகிறது. அதே போல் நித்தியத்துவத்தையும் சத் அறிவையும் பேரின்பத்தையும் (சச்-சித்-ஆனந்த-விக்ரஹ) சொரூபமாகக் கொண்டவரை உள்ளத்தில் நிலை நிறுத்தியவர், பாவங்களில் இருந்து விடுதலை அடைகிறார்கள்.
13. கடலைப் போல், பகவானிடம் மனதைச் செலுத்தி ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், இல்லாத போது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது.
14. விட்டில் போல் அழியாமல் இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும்.
15. தேனீயைப் போல் முனிவன் கிரகஸ்தர்களைச் சிரமப்படுத்தாமல் தேவையான அளவே பெற்று உண்ண வேண்டும். அடுத்த வேளைக்கு என்று சேர்த்து வைத்தால்  கூட்டில் தேன் போல் அழிவு ஏற்படும். மேலும் சாஸ்திரங்களுடன் சாரத்தை மட்டும் அறிந்து வாழ வேண்டும்.
16. பிடியின் (பெண் யானை) காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆண் யானை போல் ஸ்திரீ பந்தத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது.
17. இனிய கானம் கேட்டு மயங்கிய மான் வேடனால் பிடிபட்டு அவதியுறுவதுபோல் பகவத் குணங்களை மட்டுமே கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய நேரக்கூடும்.
18. தூண்டில் மீன் உணவை விரும்பி முள்ளில் சிக்கிக் கொள்வதுபோல் நாவடக்கம் (சுவையின் மீது ஆசை) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவனே.

19. திருமணமாகாத பெண் வீட்டில் தனியே இருந்தபோது, அவளின் வருங்கால மாமனார் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் சில காய்கறிகள் மட்டுமே இருக்கின்றன. சோறு பொங்க அரிசி இல்லை. பெற்றோரும் இல்லத்தருகில் இல்லை. சாதம் வடிப்பதற்காக பிச்சை கேட்டு வீடு வீடாகச் செல்கிறாள். அவள் கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். அந்த சத்தத்தை உணரும் அவள், “இந்த வளையல் ஒலி கேட்டால் எங்களின் ஏழ்மை நிலை புகுந்த வீட்டாருக்குத் தெரிந்துவிடும். சோற்றுக்காக பிச்சை எடுப்பது அறிந்துவிட்டால், தன் மகனுக்கு இந்த வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.” என நினைத்து, எல்லா வளையல்களையும் அகற்றிவிடுகிறாள். ஜன-சங்க-த்யாக அத்வைத-தியாக: கடவுளை ஒப்புக் கொள்ளாதவரிடமிருந்து தூர இருப்பாயாக. அபவாதம் பேசுவோருக்கு நீ குழந்தையாகத் தென்படுவாய். அவர்களிடம் விரிவாக விவாதித்தோ விளக்கியோ யாதொரு பயனுமில்லை. மாமனாருக்குத் தெரியக் கூடாது என்று வளையலை நீக்கியது போல் பக்தியில் நாட்டம் இல்லாதோரிடம் இருந்து உன் பக்தி ஆபரணத்தை அபவாதிகளிடமிருந்து விலக்கி கொள். ஒரே ஒரு வளையலைக் கையில் கொண்ட பெண்ணைப் போல், துறவி ஆனவன் தனிமையாகவே இருக்க வேண்டும்.

20. தன் எச்சிலில் இருந்தே சிலந்தி வலை பின்னும். வலையில் மாட்டிய பூச்சிகளை உண்ணும். வலையின் தேவை முடிந்தபின், அந்த வலையை விடுவித்து தன்னுள்ளேயே சேர்த்துக் கொண்டு விடும். அதே போல் கடவுள் தன் மாயவலையினால் உன்னை உலாவ விடுகிறார். பின் அவருள்ளே எல்லாமே ஐக்கியமாகிறது. அவரின் விருப்பத்திற்கேற்ப அவரின் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்துவார் என்பதை அறி. அதன் பின் அவருள்ளேயே உன்னை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.
21. மாமிசத்தைக் கொத்திச் சென்ற மீன்குத்தி மற்ற பறவைகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்தைக் கீழே போட்டவுடன் அப்பறவை நலம் பெற்று விடும். ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.
22. தனக்குத் தானே விளையாடிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குழந்தை போல் தன்னில் தானாகவே ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்றேன்.
23. பிங்களை என்ற வேசி தன் தொழிலில் வெறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாவையே அளிக்கும் அச்சுதனை நாடி அடையாமல், அந்திய புருஷனைத் தேடி ஓடுகிறேனே? என்று ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.
24. அம்பு தொடுக்கும் வில்லாளி இலக்கின் மீது கவனமாக இருப்பது போல், ஆத்ம சொரூபத்திலே ஒன்றி விட்டவன், வெளியிலே தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றையும், உள்ளே நடப்பவற்றையும் கூட அறிய மாட்டான். ஆகவே யோகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை அடக்கி, வைராக்கியத்தாலும் பகவத் தியானத்தாலும் வெற்றி பெறுவான்.

அஞ்சலி – ஆபிச்சுவரி

நண்பனின் தாத்தா மறைந்து போனார். அவருடைய அஞ்சலிக் குறிப்பை அனுப்பி இருந்தாள்.

– எப்படி இறந்து போனார் என்பது முதல் வரி.
– அவருடைய மகன், மகள், மருமகன், பேரக் குழந்தைகள், கொள்ளூப் பேத்திகள் எல்லாம் இரண்டாம் பத்தியை நிறைத்து இருந்தார்கள்.
– எங்கே பிறந்தார், யாருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார், எப்போது மணம் புரிந்தார் என்பதெல்லாம் இன்னொரு பத்தி.
– எவருக்கு பணி புரிந்தார், எப்பொழுது ஓய்வு பெற்றார், எத்தனை போரில் சண்டை போட்டார், எந்த ஊரில் வசித்தார் என்பது அடுத்த பத்தி.
– அவருக்கு என்ன பிடிக்கும் என்பது ஒரே ஒரு வரி.
– எங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தலாம், என்றைக்கு பத்து, கிரேக்கியம் என்பதெல்லாம் இறுதி வாக்கியங்கள்.

218 வார்த்தைகள் இருந்தது.
15 வாக்கியங்கள்.
6 பத்திகள் பிரிக்கப்பட்டு இருந்தது.
to, as, during, before, and, of, in என நிறைய விகுதிகள் அடைத்து இருந்தது.
விருந்தினர் பதிவேட்டில் இரண்டு பேர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

போரும் அரசியலும்: ரத்தசரித்திரம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.

துரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.

கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.

கிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

கிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.

அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.

கிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦

9/11: பத்தாண்டு பலன்

இந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.

செப்டம்பர் 11, 2001.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன? எது நடந்தது?

  1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்
  2. இஸ்லாமிய வெறுப்பு
  3. பொருளாதாரப் பின்னடைவு

இஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்

  • 88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.
  • 83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.

  • அமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா? ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.

அயல்நாட்டுப் போர்

  • ஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.
  • இராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.

  • இறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை? அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு
    • வேலைவாய்ப்பின்மை
    • மருத்துவ சிகிச்சை தராமை
    • குடும்பத்தினருக்கு ஏற்படும் பளு
    • மனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
  • வீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.
  • போராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும்? தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்?

பொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை

இதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.
நிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

  • இது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.
    • ஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி
    • அல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது
ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.
ஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது!

டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்

டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!

அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:

  1. மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
  2. பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
  3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
  4. வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
  5. பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
  6. நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
  7. மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
  8. தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.

அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.

நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி

முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:

“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.

முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.

கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”

பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.

இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.

நினைவாளர் நாள்: Memorial Day கருத்துப்படம்

(th)ink by Keith Kniwght

நன்றி: (Th)ink

மாபெரும் விலைக்குறைப்பு – நகைக்கடையும் லாலுவின் இரயில்வேயும்

இந்திய வரலாற்றிலேயே, எந்த துறையாக இருந்தாலும் சரி. “கட்டணம் குறைப்பு” என்ற தலைப்பை செய்தித்தாள்களில் முதன்முறையாக இன்றுதான் இந்தியன் பார்க்கிறான்.
லக்கிலுக்

தினத்தந்தி செய்தியின் படி:

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு
100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1
200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2
300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3
400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4
500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5
700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7
900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

அமெரிக்காவின் ஆம்ட்ராக் இருவுள் நிறுவனம், விமானசேவைக்கு பலியாகிக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசின் தாராளமான மானியங்களினால் ஓரளவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது மாதிரி ஆகாமல், பணவீக்கத்துக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதற்கு லாலுவை பாராட்டவேண்டும்.

அதே சமயம், ஒத்தை ரூபாயை பேரம் பேசுவது போல் இறக்கிவிட்டு, ‘இமாலய விலைக்குறைப்பு’ என்று சந்தைப்படுத்துவது, லல்லுவின் மானகைத் திறனை பறைசாற்றுகிறது.

தகவலறியும் சட்டத்தின் மூலம் அல்லது விஷயமறிந்தவர்கள் மூலம் அறிய விரும்புபவை:

  • Safety: கடந்த ஆணடில் எத்தனை விபத்துகள் நடந்தன? இவற்றில் எப்பொழுது எல்லாம் இந்திய இருவுள் அலுவலரின் கவனக்குறைவினால் நிகழ்ந்தது?
  • Danger/Prevention: காரோட்டி வந்து மோதியவர்கள், கடக்கும்போது தவறிப் போனவர்கள் ஆகியவற்றின் கணக்கு என்ன? இவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது
  • Security: சம்ஜவுதா குண்டுவெடிப்பு போன்றவை தடுக்க, அண்டை நாடுகளுடனான போக்குவரத்தில் உள்நுழைபவர்களுக்கான சோதனை, விமான பாதுகாப்பு பரிசோதனை போல் உள்ளதா?
  • Disabled Friendly: கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு வசதியாக இருவுள் நிலையங்களும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் அமைந்திருக்கின்றனவா? எத்தனை? மற்றவை எப்பொழுது மாற்றப்படும்
  • Privacy Protection: பெயர்களை வெளியில் ஒட்டும் முறை இன்னும் தொடர்கிறதா? ஏன்? தனி மனிதரின் பெயர்/வயது/பால்/இனம்/மொழி போன்றவை இவ்வாறு வெளிப்படுத்துவது தடுக்கப் பட முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா?
  • On time Performance: எத்தனை இரயில்கள் நேரத்துக்கு சென்றடைகின்றன? அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமாக செல்லும் சதவிகிதன் என்ன?