Tag Archives: ஆக்கம்

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள்

சொகுசான இடங்களில் வாழ்பவருக்கு வறுமையும் தெரியாது. அங்கிருப்போரின் கதைக்களனும் ரம்மியமாக உளச்சிக்கல்களைக் கொண்டிருக்கும்.

இது பெரும்பாலானோருக்கு உவப்பானது. பெரும்பாலானோர் கதை எழுதுவதில்லை. அவர் நிம்மதியை நாடுபவர்.

அமெரிக்காவாக இருக்கட்டும். பணத்தில் புரளும் மேற்குலகம் ஆகட்டும். ஒவ்வொரு நியு யார்க் லண்டனிலும் நுழையக்கூடாத பிரதேசங்கள் உண்டு. அது வரைபடத்தில் இருந்தாலும் கூகிள் மேப்ஸ் அனுப்பாத சாலையைக் கொண்ட அரணாக இருக்கும். அங்கு போதை வஸ்துவும் கிடைக்கும். ராப்பிசாசாக அலைபவருக்கு வேண்டியவையும் விற்கப்படும்.

இது பெரும்பாலானோர் விரும்புவது. நல்லவர் எல்லாம் சொர்க்கத்தில் மிதப்பது வசதி. அல்லவர் எல்லாம் நரகத்தில் கண் காணாமல் இருப்பது தெரியாது.

நல்ல உணவு; கொண்டாட்டமான கேளிக்கை; நடந்தால் வரும் சுகந்தம் – இது சொர்க்கவாசி.

சாலை நடுவில் திக்கற்ற பார்வதி; பச்சை குத்திய தடிமாடு; சாயம் போன கார்; பேட்டையில் நுழைந்தாலே வரும் பயம் – இது சுவர்க்கவிரும்பி ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்க்கும் அக்ரஹாரம்.

இவ்வளவு முன்னுரையும் எதற்கு?

அமெரிக்காவில் கருப்பினத்தவரை பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். வயதானவரை சாலையோரமாக தட்டி வைத்துக் கொண்டு உண்டியல் குலுக்குவதைக் கண்டு அவசரமாக நகர்ந்திருக்கிறேன்.

சிலர், “இந்த தானம் எனக்காக இல்லை! எங்கள் அமைப்புக்காக!!” என்று சொல்வார். சிலர், “நானும் என் குடும்பமும் சாப்பிட்டு ஆறு வேளை, மூன்று நாள் ஆகி விட்டது. இந்தக் கடுங்குளிரில் ஒரு வாய் கவளத்துக்காவது காணிக்கை கொடுக்கவும்.” என்பார். சிலர், “உனக்காக நான் இராக் சண்டைக்குப் போனேன்! அப்படிப்பட்டவனை இப்படியா நடு ரோடில் விடுவது?” எனக் கேட்பார்.

அவருக்கு உருக்குலைந்த தோற்றம் இருக்கும். வெறித்த பார்வை இருக்கும். போருக்குச் சென்று திரும்பியவர் என்றோ சமீபத்திய பொருளாதராச் சரிவில் வேலை இழந்தேன் என்றோ எழுதியிருக்கும். புகைக்கு அடிமையானவர் என்பது முக அடையாளம்.

கருப்பர்; நோஞ்சான்; எலும்புருக்கி; கிழவி; வெடவெடக்கும் கை; பதற்றமான நடை; இறைஞ்சும் பார்வை – இதைக் கடந்து போக மனதை சிந்தையின் நியாயம் கொண்டு அடக்குவேன்.

ஆனால்… இன்று…

சாலையின் இந்தப் பக்கம் இந்தியப் பெண்மணி. அசப்பில் மணிரத்னம் கதாநாயகி போல் இருந்தார். சாலையின் இன்னொரு பக்கம் போஷாக்கான பூசியத் தோற்றம் கொண்ட பழுப்பு நிற தெற்காசியன். தமிழனோ? தெலுங்காக இருக்குமோ? வட இந்தியராகவும் இருக்கலாம். பக்கத்தில் மூன்றோ, நான்கு வயதோ மதிக்கத்தக்க குழந்தை. அதற்கான தள்ளுவண்டி.

பிற இரப்பாளர் இடத்தில் பார்த்தது போன்றே அழுக்கான கம்பளி. உடைமையைக் கொண்ட தரைவிரிப்பு. நம்மவர் ஏன் இப்படி வருவோர், போவோரிடம் கையேந்த வேண்டும்?

எல்லா தேஸி மக்களும் சுந்தர் பிச்சை மாதிரி அந்தஸ்துடன் சௌக்கியமாக இருப்பவர்கள் அல்லவா? நல்ல சம்பளம். சொகுசான கார். வீட்டு வேலை உதவிக்கு பெற்றோர். ஞாயிறு ஆனால் ஊர்சுற்றல். இப்படிப்பட்ட குடிபுகுந்தவரை மட்டுமே பார்த்தவனுக்கு அறிவு இயங்க மறுத்தது.

யாசகத்துக்கு என்ன காரணமாக இருக்கும்?

மனைவியை விற்கும் அன்னக்காவடியோ?

குழந்தையை வைத்து மிரட்டுகிறானோ?

இந்த ஆண்களே இப்படித்தான். எருதாண்டிமாடு ஆண்வர்க்கம்.

தன் வீடு, வாசல் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு ஓட்டாண்டியானவரோ?

சாஃப்ட்வேர் இல்லாத உணவக வேலை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவரோ?

ஆடலுடன் பாடல் கச்சேரி நிகழ்ச்சிக்கு வருவோர் ஓரிருவரை தொலைத்துவிட்டுச் சென்றுவிடுவார். அந்த மாதிரி அனாதையாக்கப்பட்டோரோ?

ஆள்குறைப்பு, வேலையிழந்து நெடுங்காலம் காத்திருத்தல் போன்ற திடீர் தரித்திரத்தால் இந்த மாதிரி இறங்கினாரா?

கலிஃபோர்னியா போன்ற வேறு ஊரில் இருந்து வந்து கொள்ளையடிக்கப்பட்டு அனைத்து விஷயங்களையும் இழந்தவரோ?

பேருந்து நிலையத்தில் பயணத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பிப் போக காசு வேண்டும் என்று இறைஞ்சுவாரே… அவரோ?

செய்வதறியாது திகைத்து கையறு நிலையில் இந்த இறுதி மார்க்கத்தில் இழங்கியவரோ?

சீவகராக பிஷை எடுத்து உண்ணவேண்டும் என்பது ஜாதகப் பரிகாரமாக சொல்லப்பட்டதால் அதற்காக இந்த மாதிரி பொன்னம்பலத்தார் ஆனாரோ?

பிட்காயின், டாஜ்காய்ன், எதிரீயம் என்று பணத்தை சூதாடி அழித்தவரோ?

அந்தப் பெண்ணின் அறிவிப்புத் தட்டியைப் படிக்க எத்தனித்தேன். அந்த அட்டை என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்குள் பச்சை விழ சாலையை விரைந்து விட்டேன்.

கூட வந்த நண்பர் செந்தில் சொன்னார்: “ரொம்ப யோசிக்காதீங்க பாலா… குறும்பட ஷுட்டிங் ஆக இருக்கும்!”

பின்புறம் காவலர் வருவது தெரிந்தது. அந்தத் தம்பதியரையும் சிறுவனையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றியனுப்புவது தூரப்புள்ளியாக மறைந்தது.

மாயப் பெரு நதி – ஹரன்பிரசன்னா

நான் ஹரன்பிரசன்னாவின் கட்டுரைகளின் ரசிகன். அவரின் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்து இருக்கிறேன். ஆதிகாலத்து யாஹூ குழுமங்களில் இருந்து அறிமுகமானவராக இருந்தாலும் இன்றளவும் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆகத் தொடர்பவர். அவரின் பதிவுகளும் விமர்சனங்களும் ரசனைகளும் பரிந்துரைகளும் என்னை கவனம் கொள்ள வைக்கும். அவரின் முதல் நாவல் வெளிவந்திருக்கிறது. அமேசான் கிண்டில் நூலாக வாங்கி கடகடவென்று வாசித்து விட்டேன்.

நீங்கள் முதன் முதலாக பிரவேசித்தது எங்கே? பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேடையேறி இருக்கலாம். பிடித்த துணையை வசப்படுத்துவதற்காக காதலரைக் கவர நிஜ வாழ்க்கையில் அசல் நாடகம் போட்டிருக்கலாம். நேர்காணலில் பயத்துடன் உளறாமல் இருக்க ஒத்திகை பார்த்த சொற்றொடர்களை ஒப்பித்து இருக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பை திட்டமிட்டு, பயத்தை வெளிக்காட்டாமல், சந்தேகங்களை மனதுக்குள் போட்டு புழுங்காமல் போட்டுடைத்து, ஆபத்துகளை நிவர்த்தி செய்து, சமர்த்தராக முடித்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். இங்கே ஹரன்பிரசன்னா, தன் நாவலை அவ்வாறு தன் தோற்றத்தை இலக்கியப் பதிவேட்டில் ஆஜர் ஆக்குகிறார்.

முதல் நாவல் ஒரு அகக் கொந்தளிப்பு இல்லையா? எல்லா நாவலுமே அகக் கொந்தளிப்புத்தான். ஒவ்வொரு நாளும் மனைவியுடன் கூடும்போதும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு வெறி வரத்தான் செய்கிறது. ஆனாலும் முதல் நாள் தொடுகையுடன் அதை ஒப்பிடமுடியுமா? முதல் நாவல் அப்படி இல்லையா? முதல் நாவலிலேயே ஒட்டுமொத்தத்தையும் யோசிக்கமுடியுமா? யோசிக்கத்தான் வேண்டுமா? நாவலுக்கு அழகு அகத்தில் இருந்து வரும் சொற்கள் இல்லையா? இங்கே எல்லாமே வெறும் சொற்களா? லே அவுட்டுக்குள் சிக்கி நிற்கும் சொற்களா நாவல்? ராகவனுக்குத் தலை சுற்றியது.

Haran prasanna, ஹரன் பிரசன்னா. மாயப் பெரு நதி (நாவல்) (Tamil Edition) . தடம் பதிப்பகம் | Thadam pathippagam. Kindle Edition.

நாவலின் களம், கதை, அதன் கருத்து என்று எண்ணிப் பார்ப்பதற்கு முன் சில சுருக்கமான எண்ணங்கள்:

  • தேவையற்ற இடையூறு: ராகவன் என்று நாயகனின் பெயரை இனிஷியல் போடாமல் சூட்டியதற்கு தனி தைரியம் வேண்டும். அதை விட அவர் வேலை பார்க்கும் பதிப்பகத்தையும் மூன்றெழுத்தில் அமைத்ததற்கு கொஞ்சம் உதாசீனம் கலந்த தெனாவட்டு இருக்கிறது. எனினும், வடம் பெயரையும் கற்பனையற்ற எழுத்தாளர் பெயரையும் தவித்திருக்க வேண்டும்.
  • மருட்புனைவு: அந்த அலட்சியமும் நம்பிக்கையும் உற்சாகமும் எழுத்தாளர்களின் அரசியலை வெளிப்படையாக சொல்ல வைக்காமல், வெறுமனே கதை 1, 2… என 10 பட்டியலிட்டது தெனாவட்டின் எல்லைகளை பல்லிளித்து சுட்டுகிறது. அவற்றை நேர்மையாக புனைவின் சாத்தியங்களுடன் உருவாக்கி இருந்தால் இன்னொரு “ஜே.ஜே.” என்றிருக்கலாம்.
  • கனா வினா: கட்டுரைக்கு கேள்விகள் பயனளிக்கும். கதைக்கு வாசகர் தான் கேள்வியைத் தொடுக்க வேண்டும். அகப் பயணங்களை வினாக்களாகப் பட்டியலிட்டுத் தொடுப்பது நாவலா அல்லது நாவலுக்கான குறிப்புகளா என கதாசிரியரின் புத்திசாலித்தனத்தின் மீது அயர்ச்சியைக் கொடுத்து கதையை அன்னியமாக்குகிறது.
  • இச்சா அதிகாரம்: கிட்டத்தட்ட சரோஜா தேவி எழுதிய பலான புத்தகமோ என பயம் வருமளவு ஏடாகூட வருணணைகள். விலாவாரியான செக்ஸ் விவரிப்புகள். புணர்தலை எழுதுவது என்பது பல உலக இலக்கியவாதிகளால் இயலாத காரியம். ஹாருகி முரகாமி முதல் சுஜாதா வரை சறுக்கிய தருணங்களை உதாரணங்களுடன் பட்டியலிடலாம். ஆனால், ஹரன்பிரசன்னா கில்லி அடித்திருக்கிறார். காமத்திற்கும் போகத்திற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்பது போல் பிசகாமல் தரமாக எழுத்து வடிவாக்கி இருக்கிறார்.
  • உள்ளுடையும் உறையும்: பிரசன்னாவின் நாயகன் ஆன ராகவனுக்கு அட்டை குறித்த கவலை இருக்கிறது. இருந்தும் இப்படி ஒரு அட்டையைப் படம் போட்டு இருப்பது கவர்ச்சியாக இல்லை. கனவு, மாயை, இரட்டை எனச் சுழலும் நாவலுக்கு கொஞ்சம் எதார்த்தம் இல்லாத தன்மை கொண்ட முகப்புப் படம் சுவாரசியம் தந்திருக்கும்.
  • பாஷா முரண்கள்: விக்கிரஹத்தை ஒத்தி எடுங்கள் என்று வருகிறது; துடையுங்கள் என்றும் வருகிறது. சென்னையில் வசிப்பவர்களின் மொழி, கன்னடம் கலந்த தமிழின் மொழி போன்ற சுவைகளை கொடுத்திருக்கலாம். அதிபூதா துக்கம், தாரதம்யம் என்றெல்லாம் மொழி நடனமாடுபவர் இன்ன பிற இடங்களிலும் அசல்தன்மையை நடமாட விட்டிருக்க வேண்டும்.
  • சொப்பன தரிசனம்: சில விஷயங்களை “சொல்லவியலாது” என்று எழுதுபவரே கையை விரித்து விடுவது ஏமாற்றம் தந்தது. கனவு என்று சொல்லாமல் அந்த மாய உலகை உலவவிட்டு அதனுள்ளே நம்மை இழுத்து சென்றிருக்கலாம்.
  • தூங்கலோசை: நாவலில் திகைப்புகளே இல்லை. க்ளைமேக்ஸ் எனப்படும் தருணத்தில் அசாதரணமான விஷயங்களோ, அத்தியாயத்திற்கு அத்தியாயம் அவிழாத முடிச்சுகளோ, அதிர்ச்சியூட்டும் திருப்பங்களோ, பரபரப்பான விஷயங்களோ இல்லாமல் இராமாயணம் தெரிந்தவர் கம்பராமாயணம் வாசிப்பது போல் அமைதியாக சொல்லிச் செல்கிறது.

அவளைக் கூர்ந்து பார்த்தான். மூக்கு குத்தி இருக்கிறாள். அதனால்தான் முகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. தாவணி அணிந்திருக்கிறாள். பெரியவளானதால் உடலில் செழுமை வந்திருக்கிறதா அல்லது தாவணி உடுத்தி இருப்பதால் அப்படித் தெரிகிறதா? மார்புகள் லேசாக மேடாகி இருக்கின்றன. அவற்றின் மேல் இரட்டை ஜடை படுத்திருக்கிறது. தாவணியில் அவளது இடுப்பு கொஞ்சம் தெரிந்தது. அந்த வெண்ணிறம் அவனைப் பித்துக்கொள்ளச் செய்தது. பூப் போட்ட பாவாடை அணிந்திருந்தாள். கால் பாதங்கள் பளிச்சென இருந்தன. மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல. அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி அவளருகில் வந்தாள்.

நாவலில் நேரடித்தன்மை எளிதாகப் புரிகிறது. ராகவன் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாக பணியாற்றுபவன். நாவல் எழுதுகிறான். அதை சொந்தமாக வெளியிடுகிறான். தான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் வெளியிட கூச்சமோ தன்னடக்கமோ தடுக்கிறது. அதன் கூட புத்தகக் கண்காட்சியில் நடக்கும் குளறுபடிகளும் வருகிறது. சற்றே ஊறுகாய் ஆக புத்தக எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளும் தூவப்படுகிறது. அவனின் குழந்தையும் மனைவியும் ரஜினி படத்தில் த்ரிஷா போல் எட்டிப் பார்க்கிறார்கள்.

இதன் முற்பிறவி அசல் நாவலுக்கான சகல சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருக்கிறது. அதில் கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரம் இருக்கிறது. அவர்களின் காரியங்களுக்கு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. தானே பதிப்பித்த நூல் போல் சுயம்பு உருவாகும் தருணங்கள் கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி இன்னும் விரிவாக தத்துவ சிக்கல்களுடன் வந்திருக்க வேண்டும். பாரத தேசம் முழுக்க பயணம் செய்திருக்க வேண்டும். பட்டியல்களைப் படையலாக ஆக்காமல் அந்தப் புத்தகங்களின் உள்ளார்ந்த கிரகிப்புகளைப் பகிர்தலாக ஆக்கியிருக்க வேண்டும்.

முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் சடாரென்று முடிவுக்கு வருவது மட்டுமே குறை.

மீதம் இருக்கும் குழம்பையும் சாதத்தையும் எண்ணெய்யும் உப்பும் போட்டுப் பிசைந்து உருட்டிக் கொடுக்கச் சொல்லி உண்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது.

புத்தகக் கண்காட்சியில் சாப்பிடச் செல்கிறான் நாயகன் ராகவன். ஆத்துச் சாப்பாட்டில் திளைக்கிறவன் ராகவன். வெறும் பொரியலிலும் வத்தக் குழம்பிலும் ஜமாய்க்கிற மனைவின் கைப்பக்குவத்தை நினைத்துப் பார்க்கிறான். அதே சமயம் கூடை சோற்றைப் போட்டு அதை அவக்கு அவக்கென்று விழுங்கும் கூட்டத்தை சமபந்தியில் பார்க்கிறான். இது நாலே பக்கக் கதையில் கூட நளபாகத்தைப் போடும் இலக்கியகர்த்தாவையும், நாலு ஃபாரம் கொடுத்தாலும் கூறியதையேக் கூறும் அ-புனைவு விற்பனை எழுத்தாளனையும் ஒப்பிட்டது போல் அமைந்துள்ளது.

இதுவே பின் பகுதியான இரண்டாம் பாக நாவலில் ஆனந்தனையும் மாதவனையும் உணர்த்த இன்னொரு வழியில் சொல்லப்படுகிறது. ஆனந்தனுக்கு லௌகீக உணவே கொண்டாட்டம். வாசனையை வைத்தே என்ன சமையல் என்பதைக் கண்டுபிடிக்கிறான். அதில் லயிக்கிறான். தத்துவமும் துறவும் எண்ணமாகக் கொண்ட மாதவனுக்கு உணவு என்பது அத்தியாவசியம். ஏதோ கொஞ்சமாய் உண்ண வேண்டும். ருசிக்கும் பசிக்கும் அல்ல. கவளம் கிடைத்த சிந்தைக்காக சற்றே உட்கொள்கிறான்.

He gazed sadly at the threatening sky, at the burned-out remnants of a locust-plagued summer, and suddenly saw on the twig of an acacia, as in a vision, the progress of spring, summer, fall and winter, as if the whole of time were a frivolous interlude in the much greater spaces of eternity, a brilliant conjuring trick to produce something apparently orderly out of chaos, to establish a vantage point from which chance might begin to look like necessity …and he saw himself nailed to the cross of his own cradle and coffin, painfully trying to tear his body away, only, eventually, to deliver himself—utterly naked, without identifying mark, stripped down to essentials—into the care of the people whose duty it was to wash the corpses, people obeying an order snapped out in the dry air against a background loud with torturers and flayers of skin, where he was obliged to regard the human condition without a trace of pity, without a single possibility of anyway back to life, because by then he would know for certain that all his life he had been playing with cheaters who had marked the cards and who would, in the end, strip him even of his last means of defense, of that hope of someday finding his way back home.

An excerpt from the beginning (and end) of László Krasznahorkai’s novel Satantango. English translation by George Szirtes.

Title(Eng)Maaya Peru Nadhi
Authorஹரன்பிரசன்னா
FormatPaperback
Year Published2020
Pages360
Imprintதடம் பதிப்பகம்

இந்நாவலைப் பற்றி:

இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.

ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது.

தி. ஜானகிராமன் – ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்”

ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.

அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.

அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.

தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.

கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:

  1. பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.

2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.

கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.

  1. மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
  2. இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
  3. தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”

இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.

ஜெயமோகனின் “குமிழிகள்” சிறுகதை

எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…

எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.

சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.

ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.

இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.

எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.

சரி… வாசகர் கடிதங்களைப் பார்ப்போம்…

கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.

இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.

கதை விமர்சனத்திற்கே வந்து விடுகிறேன்: https://www.jeyamohan.in/142864/

கதையை வாசித்துவிடுங்கள்.

தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.

இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.

விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.

கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.

கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.

ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.

தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.

கொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்

முதலில் கதையைப் படித்து விடுங்கள்:

https://www.newyorker.com/magazine/2020/03/23/out-there

“Out There,” by Kate Folk | The New Yorker: Fiction by Kate Folk: “The early blots had been easy to identify. They were too handsome, for one thing.”

ப்ளாட் என்பது என்ன? பாட் போல் அதுவும் கணினியில் மட்டும் இயங்குவது.

நம் துணைவர் எப்படி இருக்க வேண்டும்? என்னுடைய விஷயத்தில் அக்கறை எடுப்பார். தும்மினால், இருமினால் என்னாச்சு என்பார். எவனாவது இணையத்தில் தாக்கினால் குரல் கொடுப்பார். நான் செய்யும் அச்சுபிச்சுகளைப் பொறுப்பார். ப்ரூ காபி விளம்பரம் போல் எதிர்பாராததை செய்வார். வெறுமனே காமத்திற்கு மட்டும் என்னை உபயோகிக்க மாட்டார்.

மாடு பிடிப்பது போல் ஆணைத் தேடும் சமூகம். சந்தை போல் குவிந்திருக்கிறார்கள். அதில் பாதி பேர் போலி. கொஞ்ச காலம் துணையாக நடிப்பார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பவர்கள் சட்டென்று இன்னொரு பெண்ணின் பின் சென்று விடுகிறார்கள். கரிசனத்துடன் விசாரிப்பவர்கள் பின்னொரு நோக்கத்தோடு வேறொரு பாதையில் போய் விடுகிறார்கள்.

இந்த நிலைமையில் எப்படி பொருத்தம் பார்ப்பது? யோனி, ரஜ்ஜு எல்லாம் போதுமா? பழக வேண்டும். ஆணின் உண்மையான குணாதிசயம் தெரிய வேண்டும். அந்தரங்கம் வெளிப்பட வேண்டும். ஆத்மார்த்தமான அன்பு உணரப்பட வேண்டும்.

இதைத் தற்காலத்திற்கேற்ப இந்தக் கதை சொல்கிறது.

கதாநாயகிக்கு நிறைய பிரச்சினைகள். முன்னாள் குடிப்பழக்கம்; தனிமை; அனாதரவாக விட்ட தந்தை; புதிய நகர வாசம்.

இருந்தாலும் நாயகி உயர்வாக உணர்கிறாள். சத்தான பழரசம்; பாவப்பட்ட ஜென்மம்; வஞ்சிக்கப்பட்டவள்.

This piece has some things in common with the recent one in The New Yorker, “Kid Positive” by Adam Levin (interrogation of our backstories, notions of real vs. fake and where the lines blur), as well as Elvia Wilk’s 2019 novel Oval, Ishiguro’s neo-classic Never Let Me Go, Jonathan Lethem’s novel from a few years back A Gambler’s Anatomy, and the stories of Aimee Bender (நன்றி: Kate Folk: “Out There” – The Mookse and the Gripes)

இயந்திரத்தனமாக நடப்பதை விரும்பாதவரின் கதை இது. நாயகியும் எந்திரத்தனமாகும் கதை இது. வேண்டுவதை செய்யும் கணவனை எதிர்பார்க்கிறோம். எப்போதும் ஒரே மாதிரி செயல்படும் புருஷனை எதிர்பார்க்கிறோம். இது சலிப்பூட்டும். எது வேண்டுகிறோமோ, அதுவே கிடைத்துவிட்டால், இடைவெளியை கோருகிறோம்.

மேலும்…

Kate Folk on Discerning Reality on the Internet | The New Yorker: The author discusses “Out There,” her story from this week’s issue of the magazine.

உடன்வந்தி அருநிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

confidence_confession

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

a-shadow-on-the-cloud-is-the-shadow-of-this-very-same-plane-on-the-picture-taken-on-a-flight-from-4

உடன்வந்தி அருநிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

roulette-wheel

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

பிடிப்பிடம்

கொஞ்சம் கம்மி எதிர்பார்ப்புடன் இந்தக் கதையைப் படிக்கத் துவங்கினேன். ஹரன்பிரசன்னாவின் ’வியாழன் இரவு’ மற்றும் ’சீடன்’ இந்த ஏமாற்றம் கலந்த தயார் உணர்வைத் தந்திருந்தது.

ஆனால், இதுதான் இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பிற்கான தலைப்பு ஆக்கம் – ‘புகைப்படங்களின் கதைகள்’. புனைவின் முகப்பிற்கு ஏற்ற பன்முகம் காட்டும் தலைப்பு என்பதால் இதை வைத்திருப்பார்கள். அது பொருந்தும்.

சிறுகதையை இங்கு சுருக்கித் தரப் போவதில்லை. பதினைந்து நிமிடங்களுக்குள் நீங்கள் வாசித்து விடலாம். வாசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். எனவே, வாசித்து விட்டு வாருங்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கிறேன்.

haranprasanna : புகைப்படங்களின் கதைகள் – சொல்வனம்

ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அந்த விஷயத்தில் முழுமையாக மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணக் கட்டுரையாக இதைச் சொல்லலாம்: Pyre | Amitava Kumar | Granta Magazine. இந்தக் கதை ஒருவரை எடுத்துக் கொண்டு, அவரின் வாழ்க்கையில் மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணம்.

ஜான் பெர்கர் கதை வாசிப்பைப் பற்றி கூறும்போது ‘ஒரு கதையை வாசிக்கும்போது நாம் அதனுள் குடிகொள்கிறோம், அதனுள் ஜீவிக்கிறோம். அடுத்து நடப்பவை எல்லாம் அந்தக் கதையின் நான்கு சுவர்களுள் மாத்திரமே நடக்கும். ஒரு கதையின் குரல் அனைத்தையும் தன் சொந்தமாக மாற்றுவதால் மட்டுமே இது சாத்தியமாகிறது’ என்கிறார். இந்தக் கதையில் அது நடக்கிறது. எதோவொரு வரியில் என் வேட்டி விலகியிருப்பதையும், அதை ஒழுங்கு செய்வதையும் உணர்ந்தேன். இன்னுமொரு இரண்டு பத்தி கழித்து, என் குடும்பத்தின் அங்கத்தினர்களை மரமாக வரைந்து, ஒவ்வொருவரின் மலரும் நினைவுகளையும் ஆவணமாக்கிப் பதிந்தேன்.

இந்த ஆக்கம் நாவலுக்கான விதை. ராம் என்னும் பேரனிடம் தாத்தாவின் அனுபவங்கள் எவ்வாறு அவன் வாழ்வின் முடிவுகளை எடுக்க வைக்கிறது என்று சொல்வது, தாத்தாவிற்கும் அவரின் மகனுக்கும் நடுவில் இருக்கும் கடமையில் ஊறிய பாச நிர்ப்பந்தங்களும் கோடிட்டு மட்டுமே காட்டப் பட்டிருக்கிறது. இதன் அடுத்த அத்தியாயங்களை முழுமையாக்கி முழுநீள புனைவாக்க வேண்டும் என்பது நாராயண் ராவின் ஆசையாக இருந்திருக்கும்.

prasanna

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கி

Imposter syndrome is a predictor of success. If you feel like a fraud, research suggests you may be on the right track.

இந்தியாவில்தான் நாடி ஜோசியம், ஜாதகம், பரிகாரம், கைரேகை, கிளி சீட்டெடுத்தல் என்று நினைத்திருந்தேன். அமெரிக்காவும் அதே கதிதான் என்பது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (பெரியண்ணன்) நீதிபதிகள் என்னும் கிளிகளின் சீட்டுக்களில் ஜெயித்தபோது தெரிந்தது. அதன் பின் நேற்றைய தேர்தலில் யேசு கிறிஸ்துவின் உதவியுடன் டெட் குரூஸ் (ஜோ. டி. குரூஸ் மாதிரியே பெயர் கொண்டிருப்பவர்) ஜெயிப்பது வரை உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அறிவியல்தனமான இரு புத்தகங்கள்:

Medical Medium: Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal by Anthony William

Medical Medium - Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal

அறிவியல் என்றால் கவனிப்பது, கவனித்ததை அளவெடுப்பது, அளவுகளைப் பரிசோதிப்பது, பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் அடிப்படையில் இறுதி முடிவை நிரூபிப்பது என்பார்கள். அந்தோணி வில்லியம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லர்.

கியானு ரீவ்ஸ் நடித்து ‘கான்ஸ்டாண்டின்’ என்று ஒரு பேய் + சாமியார் + கிறித்துவ பூதம் படம் வரும். அதில் வருவது மாதிரி நான்கு வயதில் அவருக்கு முன் அரூப உருவங்கள் தோன்றி அவருக்கு ஞானப்பால் கொடுத்திருக்கிறது. நான்கு வயதிலேயே நேராகச் சென்றார். பாட்டியின் மார்பில் கை வைக்கிறார். ‘பிஞ்சிலேயேப் பழுத்திடுச்சு’ என்போமே… அது போல். அப்பொழுதே கையடித்து சொல்லி இருக்கிறார்: “நுரையீரல் புற்றுநோய்” (தமிழில் சொல்லவில்லை; லங் கேன்சர் என்று ஆங்கிலத்தில் மழலையாகச் சொன்னதை கற்பூரம்… சாரி… மெழுகுவர்த்தி அடித்து சத்தியம் செய்கிறார்).

அடுத்த நாள் காலையே மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் செல்கிறார்கள். சரியான கருநாக்கு. அப்படியே பலித்துவிட்டது.

நீங்கள் வில்லியமை நினைத்தவுடன் தரிசிக்க முடியாது. அதற்கு பெரிய க்யூ நிற்கிறது. லாட்டரியில்தான் நோயாளிகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தாலே உங்களின் பிணி பரிபூரண குணமடையும். அறுவை சிகிச்சையின்றி மருந்தின்றி மாத்திரையின்றி குமுதம் பிரார்த்தனை கிளப் இல்லாமல் நலமடைவீர்கள்.

இவருக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் விசுவாசியா?

Cure: A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

Cure - A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

எஸ்.வி. சேகரின் ‘காட்டுல மழை’யில் சில புகழ்பெற்ற கடிஜோக்குகள் உண்டு. கீழ்கண்ட சம்பவத்தைப் படித்தால் வடிவேலு, விவேக் கூட நினைவிற்கு வரலாம்.

”முதல் நாள் கொதிக்கும் தண்ணீரில் கால் வைத்தேன். என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.

அடுத்த நாள் என்னுடைய பிடித்தமான விளையாட்டை ஐ-பேட் எடுத்து விளையாடிக் கொண்டே, அதே கொதிக்கும் வென்னீரில் காலை வைத்தேன். என்ன ஆச்சரியம்… சூடே தெரியவில்லை!”

திருநாவுக்கரசர் அன்றே பாடினார்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

காதலன் காதலியிடம் மயங்குகிறான். சிலர் ஃபேஸ்புக்கில் விழுகிறார். சிலர் ஆசானிடம் அடிமையாகிறார்கள். மனவசியம் எனலாம். தொழுகையில் லயிக்கலாம்.

எல்லாம் நம் சிந்தையில்தானே இருக்கிறது. பூதம் இருக்கிறது என நினைத்தால் அது நம்மை விழுங்கும். பூச்சிதான் இருக்கு, என்று நினைத்து எல்லாப் பிரச்சினைகளையும் நசுக்கு என்கிறார்.

’ஏமாறாதே… ஏமாற்றாதே’ என்று வாத்தியார் பாடியிருக்கலாம். கடைபிடிக்கவில்லையே!

திருக்குறள் : 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.