இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.
அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:

திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.