நூலின் பெயர்: Cast of Characters: Wolcott Gibbs, E. B. White, James Thurber, and the Golden Age of the New Yorker
எழுதியவர்: Thomas Vinciguerraவெளியான தேதி: நவம்பர் 9, 2015
ISBN: 978-0393240030
பக்கங்கள்: 464
பதிப்பாளர்: நார்டன்
பத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்பதை விட, பத்திரிகையை யார் நடத்துகிறார்கள் என்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். ஆனந்த விகடனில் நடந்த பிணக்குகள் காரணமாக கல்கி தனியாக வாராந்தரி துவங்கியது எல்லாம் ரொம்பவே பிற்பாடுதான் தெரிய வந்தது. அதற்கு முன்பாகவே சாவி பத்திரிகையும் இதயம் பேசுகிறது மணியனும் விகடனில் இருந்துதான் கிளை பரப்பினார்கள் என்பதில் இந்த என்னுடைய வம்பார்வம் துவங்கியிருக்க வேண்டும். நிஜத்தில் முதன் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது ‘அரசு பதில்கள்’ எனப்படும் குமுதத்தின் மும்மூர்த்திகள் – எஸ்.எ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், துமிலன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் – சமயத்திற்கேற்றபடி மாறிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களைக் குறித்து உயிர்மைக் கட்டுரையில் பிரபஞ்சன் எழுதியது:
அண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.
பள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.பி.
இன்னொரு கட்டுரை – பகவத் கீதை பாடமும் பலான படங்களும்
ஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.
சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது.
குமுதம் குறித்து இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு?
அமெரிக்கா வந்தபிற்கு அதே போல் உளம்கவர் கள்வனாக ‘நியு யார்க்கர்’ இதழ் அமைந்து இருந்திருந்தது. சின்ன வயதில் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தது போல், இங்கேயும் நியு யார்க்கர் இதழுக்காக காத்திருத்தலும், நூலகத்தில் கிடைத்தவுடன் எடுத்து வாசிப்பதும் சுகம் தந்தது. இசையைப் பற்றி வார்த்தையால் விளக்க முடியாது என்பார்கள். அது போல் நியு யார்க்கர் வாசிப்பனுபவர்த்தைச் சொல்லி புரியவைப்பதும் சற்றே சிரமமே.
தொடர்புள்ள பதிவு: Love The Music Of Coen Brothers Films? You Can Thank Carter Burwell : NPR — Unlike the Coens, Burwell says, Haynes loves to dig into the subtext and meaning of the music. “Not everyone, including musicians, is good at discussing music in verbal terms — but Todd is.” Burwell says. “He’s actually very good at listening to a piece of music and saying in words what that music is doing to the scene, or to the characters, or to the film.” For Carol, Burwell and Haynes agreed that even though the music was critical in communicating those unexpressed feelings and desires, less was more.
நியு யார்க்கர் நல்ல பத்திரிகைதான்… அது தெரிந்த விஷயம்தானே. அதற்கும் இந்தப் பதிவிற்கும், மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்திற்கும் என்ன தொடர்பு?
1925ல் நியு யார்க்கர் பிறக்கிறது. அன்று தொடங்கிய பாரம்பரியம் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொஞ்சம் கேலி, நிறைய விமர்சனம், ஆதாரம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், ஒவ்வொரு இதழுக்கும் முத்து முத்தாக ஒரேயொரு கதை, சற்றே சிலேடையாக இருந்தாலும் பஸ் டிக்கெட் பின்னாடி எழுதப்படும் காதல் பாக்கள் போல் இல்லாமல் நெஞ்சைத் துளைக்கும் கவிதைகள், நியு யார்க் நகர சங்கதிகள், அரசல் புரசலாகப் பேசப்படும் மாநகர வம்பு விஷயங்கள் என்று சுவாரசியமாகவும், ஆழமாகவும், கவன ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நியூ யார்க்கரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றவர்களும் காத்திருக்கின்றனர்.
இப்பொழுது எச்.பி.ஓ.வில் வெளியாகும் ’வினைல்’ தொடரின் முதல் எபிசோடை ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸீ இயக்குகிறார். முதலில் துவங்கியவர்கள் எப்படி செய்கிறார்களோ, அதை அப்படியே பின் தொடரும் கலையை டிவி முதல் நியு யார்க்கர் வரை பின்பற்றுகிறார்கள். கால்கோள் இட்டவர்கள் செலுத்திய பாதையில் அடியெடுத்துச் செல்கிறார்கள். சொல்வனத்தில் ’மேற்கில் சின்னத்திரை’ கட்டுரையில் சத்தியமூர்த்தி இவ்வாறு சொல்கிறார்:
இந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.
அது போல் அன்று ஆரம்பித்து வைத்தவர்களின் வழிமுறையை நியு யார்க்கர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. துவக்கியவர்களின் பங்கு எவ்வாறு முக்கியம் என்பதை உணரவைக்கிறது. இந்தப் புத்தகம் நியு யார்க்கர் பத்திரிகையைத் துவக்கியவர்களின் வரலாறு. யார் ஆரம்பித்தார்கள், என்ன வழிமுறையைப் பின்பற்றினார்கள், எவ்வாறு எடிட்டிங் செய்தார்கள், எங்ஙனம் தரத்தை நிலைநாட்டினார்கள், எப்படியெல்லாம் பதில் போட்டு கட்டுரையாளர்களையும் படைப்பாளிகளையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள், எங்கே ஓய்வெடுத்தார்கள், எப்படி பணியில் மூழ்கினார்கள், எப்பொழுது வேறு புத்தகங்களை எழுதினார்கள், வேலையை விட்டு எப்போது விலகினார்கள் என்று சரித்திரத்தை சுவாரசியமாகச் சொல்கிறது.
நாலைந்து பேரைப் பற்றி, அதுவும் ஒரேயொரு வார இதழில் பணியாற்றிய ஆசிரியர் குழுவைப் பற்றி, எழுதிய புத்தகத்தை நான் ஏன் விரும்பி வாசித்தேன்?
சொல்வனம் ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரைகளைக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கறாரான பதில் வரும். பதாகை எடிட்டருக்கு என்னுடைய படைப்புகளைக் கொடுத்தால் கட் அண்ட் ரைட்டான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய மறுமொழி மடல் வந்து சேரும். இது போன்ற பதிப்பாசிரியர் + பத்திரிகையாசிரியர் தொடர்புகள்தான் எனக்கு இந்தப் புத்தகத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டியது.
புத்தகத்திற்குள் செல்வதற்கு முன் நியு யார்க்கரின் 90 வருட பாரம்பரியத்தைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் இந்த சமீபத்தியப் பதிவுகள் உங்களுக்கு உதவும்:
- Ninety Years of The New Yorker – The New Yorker
- Out Loud: Ninety Years of The New Yorker – The New Yorker
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றோர் யார்?
1. வால்காட் கிப்ஸ் (Wolcott Gibbs)
தியேட்டர் விமர்சகர்; நியு யார்க்கில் பிராட்வேயில் நடக்கும் இசை நாடகங்களை அறிமுகம் செய்து ஆராய்பவர். கடுமையான உழைப்பாளி. புனைகதை எழுத்தாளர். இரக்கமின்றி வெட்டித் தள்ளி, — வரும் விஷயங்களை நேர்த்தி ஆக்குபவர். குசும்பு பிடித்தவர். ஹெமிங்வே எழுதும் ஆர்ப்பாட்டங்களை ஜெயமோகன் தொப்பி, திலகம் என்று நக்கலடித்தது போல் இயல்பாக சுட்டுகிறார்.
’இந்தியா டுடே’ போல் இரண்டுங்கெட்டானாக அமெரிக்காவில் டைம் (Time) பத்திரிகை பல்லாண்டுகாலமாக வெளியாகிறது. செக்ஸ் கருத்துக் கணிப்பு, ரஜினி-50 சிறப்பிதழ் என்று வெகு தீவிரமாக இயங்கும் வாராந்தரி. அந்த இதழை நக்கலடித்து 1936ல் ‘நியு யார்க்கர்’ இதழொன்றைக் கொணர்கிறார். அதன் மூலம் காலாகலத்திற்கும் சாஸ்வதமான சிம்மாசனத்தில் ஏறுகிறார்.
இவருடைய எடிட்டிங் கருத்துகள் பயமுறுத்துபவை. “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதித் தருவதற்கு பதில் உங்க வீட்டு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யலாமே” என்னும் ரீதியில் கறாராக செயல்பட்டிருக்கிறார். அச்சுப்பிழைகள், தகவல்பிழைகள், ப்ரூஃப் பார்த்தல் என்று கர்மசிரத்தையாக செயல்பட்டவர். பள்ளியில் படிக்கும் மகன் எழுதும் தபால்களைக் கூட வெகு சீரியஸாக சரி பார்த்து, பிழை திருத்தி, எவ்வாறு தூய ஆங்கிலத்தில் இலக்கணச்சுத்தமாய் எழுதுவது என்று பதில் போட்டவர். (நிஜமாகவே… அதீதமாகச் சொல்லவில்லை)
ஒரு கட்டுரை ரொம்பவே வேலை வாங்குகிறது என்றால், பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போடுகிறார் கிப்ஸ். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரையில் பரப்புகிறார். ஒவ்வொரு பத்தியையும் கத்திரிக்கோலால் வெட்டுகிறார். இப்போது நூற்றுக்கணக்கான பத்திகளை கலைத்துப் போட்டு ஒவ்வொன்றாக ஒருங்கிணைக்கிறார். நடு நடுவே விடுபட்ட பத்திகளைக் குறித்து புதிய பக்கங்களில் தட்டச்சுகிறார். அதை ஆங்காங்கேக் கோர்க்கிறார். இப்போது அசல் ஆசிரியர் எழுதிய பத்திகளின் போதாமையும் தொடர்பின்மையும் தேவையான விளக்கங்களும் புலப்படுகிறது.
ஒரு உதாரணத்திற்கு டுல்ஸா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் நிம்ராட் சஞ்சிகையை எவ்வாறு கோர்க்கிறார்கள் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்கள்:
ஒரு வார்த்தை எங்காவது தவறான பொருளில் வந்தால் குடிமுழுகிப் போனதாகவேக் கருதுகிறார். “கொஞ்சம் தாமதமாக தவணையை செலுத்தினார் என்பது நேர்மையின்மையைக் குறிக்காதே?” என ஒரு கட்டுரையாளருக்கு வினா எழுப்புகிறார். “அதற்கு வறுமை என்று பெயர் என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார்.
2. ஹாரொல்டு ராஸ் (Harold Ross)
நியு யார்க்கரைத் துவக்கியவர்; மற்றவர்களிடமிருந்து வேலையைக் கறப்பதில் கெட்டி. கொண்ட பதிப்புக் கொள்கையில் இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். இவருடைய புகழ்பெற்ற மேற்கோள்: “நீ மேதையாக இல்லாமல் இருப்பதால்தான், நான் உன்னை வேலையை விட்டுத் தூக்குகிறேன்!”
எஸ்.ஏ.பி. (குமுதம் இதழின் முதலாளி அண்ணாமலை) போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக ராஸ் தெரிந்திருக்கிறார்.
– ’அறிமுகமான சில நிமிஷங்களிலேயே உங்களை இயல்பிற்குக் கொணர்ந்து நெருங்குபவர்’: ஹார்ப்போ மார்க்ஸ்
– ‘முகஞ்சுளிக்கவைக்கும் முட்டாள்தனம் கலந்து கொடுரமான வில்லத்தனமான செய்கைகளையும் நிகழ்த்துபவர்’: எட்மண்ட் வில்ஸன்
– ‘அன்பானவர்’: ஹாரியத் வால்டன்
– ’மற்றவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கஷ்டப்பட்டவர்’: ஏ. ஜே. லைபிளிங்
– ’விவேகம் ததும்பும் புத்திசாலி மனிதர்’: ஜானெட் ஃப்ளானெர்
– ‘அவரை மாதிரி சமரசம் செய்து கொள்ளாத காட்டுவாசி மண்ணாந்தை அராஜகவாதியை நான் பார்த்ததே கிடையாது’: டேவிட் கொர்ட்
அலுவலில் நடைபாதையில் எவராவது பேச்சுக் கொடுத்தால் அலறியடித்துக் கொண்டு கண்டும் காணாத மாதிரி அவர்களை புழு போல் ஒதுக்கிவிட்டு ஓடுகிறார். நிறைய கெட்ட வார்த்தை பேசுகிறார். ”வெளிப்படையாக நேர்பட எழுது” என்பதில் உறுதியாக இருந்தவர். வழவழா கொழகொழா என்றில்லாமல் கூறியதையேத் திரும்பக் கூறாமல் எழுது என்று சித்தாந்தம் வைத்தவர். செய்தியாசிரியராக வாழ்வைத் துவக்குகிறார். ’ஒரு இடத்தில் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அது நரகம்’ என்று நினைத்தவர்.
ஆனால், ராஸ் தனக்கென்று சில பதிப்பாசிரிய தர்மம் வைத்திருந்தார். அவரைப் பார்த்துதான் மற்ற நால்வரும் கண்கொத்திப் பாம்பாகப் பிழைகளைக் கண்டுபிடித்து, எழுதியவருக்கு விளக்கம் கேட்டு, அதற்கு பதில் விளக்கம் கேட்டு, பிரதியை செம்மையாக்கினார்கள். ‘இதற்கு என்ன ஆதாரம்?’, ‘இவர் எப்போது பிறந்தார்?’, ‘ஏன் இந்தப் பிரயோகம்?’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா?’, ‘இது அருவருக்கத்தக்க முறையில் சொல்லப்படுகிறதே’ என வினா மேல் வினா போட்டு, மறுபடி திருத்தி எழுத வைக்கும் முறையை நடைமுறையாக்கினவர்.
பிரதியை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் இல்லாத அந்தக் காலத்தில் இவர் எழுதிய அஞ்சல்கள் பிரசித்தி பெற்றவை: “தேறாது”, “இது வேண்டாம்”, “இது எங்களுக்கானது இல்லை”, “ரொம்ப லேசாக இருக்கிறது”, “இந்த முறை பிரகாசிக்கவில்லை”, “இப்படி எழுதினால் போதாது”.
இந்த ஐவரைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு ஏதாவதொரு கட்டுரை அடுத்த கட்டத்திற்குச் சென்றால், — புகழ்பெற்ற, நிலையான, சாஸ்வதமான எழுத்தாளருக்கு இருபது முதல் முப்பது பதில் கேள்விகளும் சந்தேக விளக்கங்களும் அனுப்பப்படும். 20/30 மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டால், அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு சமயம் ஹாரிமன் என்பவர் பன்னிரெண்டு பக்க கட்டுரையை நியு யார்க்கருக்கு சமர்ப்பிக்கிறார். அவருக்கு ஆறு பக்கத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது; நொந்துபோய்விட்டார். ஜாஃப்ரி டி ஹெல்மன் என்பவர் மெட்ரோபாலிடன் அரும்பொருளகம் குறித்து அபுனைவு அனுப்பியிருக்கிறார். அவருக்கு 147 கேள்விகள் விளக்கமாக கேட்டு அனுப்பப்பட்டதாம். ”அதெல்லாம் ரெகார்டே இல்லீங்க”, என்கிறார் ஹெல்மன்.
இது வெறும் முதல் கட்டம். அதன் அடுத்த கட்டமாக தகவல் சோதனை; அதன் பின் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சரிபார்த்தல். அதன் பின் சம்பவங்களின் உண்மைத்தனம் குறித்த ஆராய்ச்சி. அதன் பின் ப்ரூஃப் பிழை பார்த்தல்; அச்சுக்கோர்த்தல் இன்ன பிற விஷயங்கள் நடக்கும்.
இவ்வளவிற்குப் பிறகும் சில பிழைகள் நுழைந்து விடும். இப்படித்தான் ஒருமுறை குத்துச்சண்டை வீரரான Joe Louis (ஜோ லூயிஸ்) என்னும் பெயர் Joe Lewis (ஜோ லூவிஸ்) என்று தான் எழுத்துக் கோர்க்கும் நியூ யார்க்கரில் அச்சாகிவிட்டதைப் பார்த்து, பலருடன் பயணிக்கும் பேருந்தில், அதிர்ச்சியில் பேப்பரைக் கீழே தவறவிட்டு, கதறிக் கதறி அழுதவர்களை வேலைக்கு வைத்திருந்தவர்.
ஹெலன் ஹெய்ஸ் என்னும் நடிகையைக் குறித்து ஹாரிமன் இவ்வாறு எழுதுகிறார்: “சாஸ்திரோப்தமாகப் பார்த்தால் அழகில்லைதான்”. ராஸ் பொங்கியெழுந்துவிடுகிறார். “அவள் எப்பேர்ப்பட்ட அழகு! நளினமும் ஒயிலும் சிருங்காரமும் கலந்த அவளின் அழகை ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் எல்லாம் நிருபன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள்”, என பதில் போடுகிறார். ஏழு நாட்கள், மூன்று கலந்துரையாடல்கள் கழித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறார்கள். அச்சில் இவ்வாறு செல்கிறது: “அவள் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அல்ல”.
3. ஜேம்ஸ் தர்பர் (James Thurber)
கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனாலும் மூளை மழுங்காமல் கார்ட்டூன் வரைந்தவர். பதிப்பாளர் ராஸ் சொல்வது போல் ‘ஒரே குரல்; ஒரே நடை; ஒரே விதமான கட்டுரைப் பாங்கு!’ என்னும் ஒழுங்கு தாங்கவியலாமல் அலுத்துப் போகிறார். நியு யார்க்கரில் எழுதுவது, எடிட்டுவது எல்லாம் போரடித்துப் போய்விட, பிராட்வே நாடகம் போடச் சென்றிருக்கிறார். எங்கே இருக்கிறார் எனும் அடிச்சுவடே தெரியாமல் போகுமாறு பெர்முடாவில் போய் இரண்டு மாதம் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறார்.
‘இவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று தர்பர் எழுதிய பகுதி பெரும் புகழ்பெற்றது. சின்னவயதிலேயே சாதித்தவர்கள், வயதான பிறகு என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், பத்தாண்டுகள் முன்பு புகழின் உச்சியில் இருந்தவர்கள், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று துப்புதுலக்கி ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை விவரிப்பதும் வாசகர்களைக் கவர்ந்தது. அதனால், சில பல சட்டப் பிரச்சினைகளும் அவதூறு வழக்குகளும் தனி மனிதர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி எட்டிப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டும் வந்துசேர்ந்தது.
அந்தக் காலத்தில் நியு யார்க்கரின் சில பகுதிகளை எவர் எழுதினார் என்று தெரியாமல், பெயர் போடாமல் வெளியானது இவருக்கு உவக்கவில்லை. தன்னுடைய முத்திரை பதிக்கும் துணுக்குகளிலும் நகரம் குறித்த நடப்புக் கட்டுரைகளிலும் தன் பெயர் வரவேண்டும் என தர்பர் எதிர்பார்த்தார். ஆனால், முதலாளி ராஸ் அதற்கு ஒப்பவில்லை.
ராஸ் என்பவருக்கு பயணத்தின் முடிவில் எங்கே செல்ல வேண்டும் என்னும் இறுதி குறித்த தூரப்பார்வை இருந்தது. தர்பர் என்பவருக்கு அதற்கான செயல்முறை திட்டமும், வழியில் அமைக்கவேண்டிய கூடாரங்களும், ஒவ்வொன்றையும் எவர் செய்வார் என்பது குறித்த பணிப் பகிர்தல்களும் முக்கியமாக இருந்தது. யாருடன் எப்பொழுது தொலைபேசுவது, எவரைத் தொடர்பு கொண்டால் எது கிட்டும், யார் எதைத் திருத்துவார்கள், எப்பொழுதுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிச் சென்றார்.
4. ஈ.பி. வொயிட் (E.B. White)
இவரை இவரின் குழந்தைகளுக்கான புத்தகங்களால் அறிந்திருப்பீர்கள். நால்வரில் அமைதியானவர்; ஆனால், பதிப்பாசிரியர் ஹாரொல்டின் செல்லப்பிள்ளை. மனைவியையும் (கேத்தரின்) நியு யார்க்கரில் கண்டுபிடித்து, ஆசிரியர் குழுவை ஆற்றுப்படுத்தியவர். இன்றளவும் நியு யார்க்கரில் அலங்கார வார்த்தைகளோ, ஆடம்பரமான சொல்ஜாலங்களோ பெரிய சிலம்பாட்ட உருவகத்தோரணங்களோக் கிடைக்காது. இதற்கு தோற்றுவாயாக ஈபி ஒயிட் இருக்கிறார். நேரடித்தன்மை; அதன் பிரதிபலிப்பு – அம்புட்டுதானே விஷயம் என்பதை விவரிக்கும் நடையைத் தந்திருக்கிறார்.
5. காத்தரின் வொயிட் (Katharine White)
ஒன்றரை பக்க நாளேடாக வந்து கொண்டிருந்த துண்டுப் பத்திரிகையை ”நியூ யார்க்கர்டா!” எனச் சொல்ல வைத்தவர். நியு யார்க்கருக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஈபி. ஓயிட்டை மணந்தவர்.
ஹிரோஷிமா
இந்த நூலின் 12ஆம் அத்தியாயம் நியு யார்க்கரின் சில அதிரடி இதழ்களையும் கருத்துக்களையும் குறித்துப் பேசுகிறது.
நியூ யார்க்கர் இதழோ கிண்டல் கொண்ட கருத்துப் படங்களும் கேலிச்சித்திரங்களும் கொண்டது. ஊரில் நடக்கும் டிராமா, சினிமா, இசைக் கச்சேரி, ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகத்தின் நிகழ்வுகள், நல்ல உணவு, புதிய கலைகள் என்று வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டது. அது போன்ற இதழில் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தை எப்படிக் கொணர்வது?
ஒரு நாட்டின் அரசன் கொலையுண்டால் அதைக் குறித்து செய்திக் கட்டுரை வெளியிடலாம். அமெரிக்காவின் பொம்மலாட்ட ராஜாங்கமான இராக் அரசரின் ஆட்சி கவிழ்ந்தால் அதை ஆராயலாம். லெபனானுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதையும் கியூபாவில் காஸ்ட்ரோ அரியணையை நெருங்குவதையும் அலசலாம். ஹங்கேரியின் தலைவரான இம்ரே நகி வெட்டவெளியில் வெட்டப்படுவதை விவரிக்கலாம். ஸ்புட்னிக் விண்வெளிக்கோளும் எக்ஸ்ப்ளோரர் விண்கலங்களும் ஏவப்படுவதை அறிவியல் தகவல் கட்டுரைகளாக்கலாம். தலைக்கு மேலே சுற்றும் செயற்கைகோள்கள் எல்லாம் அணுஆயுதங்களாகச் சுழலும் அபாயத்தை சங்கு கொண்டு முழங்கலாம்.
அதே ரீதியில் எண்பது மில்லியன் அமெரிக்கர்கள் இறந்த கொடுமையை எப்படி உரைப்பது? ஒரு நாட்டின் மீது குண்டு போட்டு மேலும் பல கோடி மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது. ஆகஸ்ட் 31, 1946ஆம் ஹிரோஷிமா இதழாக வெளியானது: 1946-08-31 – The New Yorker
இதழ் முழுக்க ஒரேயொரு கட்டுரைதான். 31,347 வார்த்தைகள் கொண்டு நேரடியாக ஜப்பான் சென்று வந்தவரின் அனுனவப் பகிர்வு. அது மட்டுமே ஒரு இதழ் முழுக்க ஓடுகிறது.
சமீபத்தில் நியு யார்க் வந்திருந்தபோது 911 நினைவுச்சின்னம் சென்று வந்தேன். அங்கே எல்லா சம்பவங்களையும் காலவாரியாக நிகழ்வுவாரியாக தெளிவாக புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ரொனால்டு ரேகனும் அப்பா புஷ்ஷும் தாலிபான் தலைவர்களுடன் சமபந்தி பேச்சுவார்த்தை நடத்துவதைச் சொல்லும். அதை ஒட்டி அப்போதே ஈ.பி. ஒயிட் எழுதுகிறார்:
Build the museum, O builders! Have it ready for me when I come.
Then, when the radioactivity has been dissipated and the rays no longer threaten my white corpuscles,
Letter the proper sign and let me in. And don’t forget
To give the date. I like dates.
July 16, 1945.
Give the hour, the minute, the very second of the blast.
Exactly five-thirty A.M. “Beginning of the atomic age.”
Alamogordo, Alamogordo — my last pilgrimage. Earliest bomb crater in the atomic world. Most famous deathsite [sic].
Note, ladies and gentlemen, how the effect radiates in all directions,
With color and shading gradually growing darker like the petals of a flower.
Those who are hungry will find an appetizing, moderately priced
Meal in the Nuclear Snack Bar, just outside the gate, and
Clean rest rooms.
Take home a souvenir of atomiste [sic] for the children.
oOo
முதலாளி ராஸ் காலமான பிறகு நியு யார்க்கருக்கு என்னவாகும் என்று எல்லோரும் பயந்த போது, நியூ யார்க்கரின் அடுத்த எடிட்டர் சொல்கிறார்: ”சிக்மண்ட் பிராயிட் இறந்த பிறகும் மனோவியல் ஆராய்ச்சித் தொடர்கிறது அல்லவா…”. இன்றும் நியு யார்க்கர் அன்றைய தரமும் விழுமியங்களும் வழுவாமல் வெளியாகிறது.
அப்படி என்ன சித்தாந்தம்?
அவருடன் பழகியவரைக் கேட்டால், “ராஸுக்கு இரண்டு தெய்வங்கள் இருந்தார்கள்: பெரிய எழுத்து மற்றும் சிற்றெழுத்து (uppercase and lower case)”.
கொஞ்சம் வெளியில் இருந்து நோக்கினால், ‘பொய்மையை அம்பலப்படுத்துவோம். போலித்தனத்தை வெளிக்கொணர்வோம்!’
வில்லியம் சரோயன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ‘தி புயூடிஃபுல் பீப்பிள்’ வெளியிடுகிறார். நியு யார்க்கர் விமர்சனத்தில் ‘சுத்த நான்சென்ஸ்’ என்று போட்டுடைக்கிறார்கள்.
சாமர்செட் மாம் குறித்து: “நம்முடைய தரம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இவர் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படையான அடையாளம்.”
இப்படி எல்லாம் நேர்மையாக எழுதினாலும் எல்லாவற்றையும் விளையாட்டாக, அனைத்திலும் குழந்தைத்தன்மையோடு அணுகுவது நியு யார்க்கரின் சித்தாந்தம் எனலாம். மெரிட் நெல்சன் என்னும் பள்ளி மாணவன் நியு யார்க்கருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறான்: “உங்களின் நோக்கமும் குறிக்கோளும் என்னவென்று சொல்ல முடியுமா?”. அவனுக்கு பதில் தபால் வந்தது: “எங்களுக்கு எந்த இலட்சியமும் கிடையாது.”
நூலை எழுதிய தாமஸ் வின்சிகுவேரா (Thomas Vinciguerra) நாற்பத்தியேழு பக்கங்களுக்கு அனுபந்தமாக அடிக்குறிப்புகளையும் தொடர்பான கட்டுரைகளையும் சுட்டுகிறார். மேலும் பத்து பக்கங்களுக்கு இந்த ஆராய்ச்சித் தொடர்பான புத்தகங்களையும் இந்த நால்வர் (ஐவர்?) எழுதிய ஆக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொண்ணூறு வருட நியு யார்க்கர்களைப் படிப்பது மட்டுமில்லாமல் கிப்ஸ் குடும்பம், அவரின் பல மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று ஊர் ஊராக வாழ்ந்த இடங்களையும் மனிதர்களையும் தேடித் தேடி பேட்டியெடுத்து நூலை எழுதியிருக்கிறார். இதே மாதிரி மணியனுக்கும் ‘ஜெமினி’ வாசனின் மகனான விகடன் எஸ். பாலசுப்ரமணியத்திற்கும் இடையே உள்ள பிணக்குகளையும் சாவிக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே உள்ள நட்பையும் காலச்சுவடு கண்ணனுக்கும் உயிர்மை எஸ். அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரனுக்கும்) நடுவே உள்ள பரஸ்பர புரிதல்களையும் தொகுக்க வேண்டும்.