எதிர் வீட்டில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கடுமையாகவே குரைப்பதாக எனக்குத் தோன்றியது. பின்னிரவில் சுவர்க்கோழிகளையும் சிள்வண்டுகளையும் மட்டுமே கேட்டுப் பழக்கமானவனுக்கு நாயின் குரைப்பு நிம்மதியை குலைத்தது. பின்னிரவில் மட்டுமல்லாமல், வீட்டில் இருந்து வேலை பார்த்த மதியங்களிலும் நாய் குரைத்துக் கொண்டிருப்பது ஓங்கி ஒலித்தது. அஞ்சல் பட்டுவாடா செய்த குட்டி லாரிகளின் சத்தத்திற்கு இடையேயும், நீர்நிலையைத் தேடி அலைந்த வாத்துகளின் சல்ம்பலுக்கு இடையேயும் நாயின் மெல்லிய ஓலம் துல்லியமாகக் கேட்டது.
அப்படி என்னதான் அந்த நாய் சொல்லிக் கொண்டிருக்கும்? வீட்டிற்குள் திருடர் நுழைந்தால் சொல்லிக் காட்ட பாதுகாப்பு அரண் இருக்கிறது. எஜமானனிடம் அன்பு தெரிவிக்க மாலை நேரம் இருக்கிறது. பசி தீர்க்க வீட்டின் பாதாள அறையின் மூலையில் உணவு வைக்கப்பட்டிருக்கிறது. உண்டதும் வெளிக்கிருக்க தினந்தோறும் அந்த நாயை ஒவ்வொரு மரத்தையும் முகர வைக்கிறார்கள். மைல்கல் போல் பாதையெங்கும் நிற்கவைக்கப்பட்டிருக்கும் நெருப்பு அணைப்பதற்கான நீர்க்குழாய்களையும் அந்த நாய் விட்டுவைப்பதில்லை. இருந்தும் அந்த அர்த்தஜாமத்தில் என்ன புலம்புகிறது என்று தெரியாமலே “நாய் வாள்வாளென்கிறது” என்று புகார் செய்ய வைத்தது.
நாய் கத்துவதில் ஒலிநயம் இருப்பதை இசையமைப்பாளர் அறிவாராக இருக்கும். அந்த நாய் எதற்காக ஊளையிடுகிறது என்பதை ஆய்வாளர் அலசுவாராக இருக்கும். அந்த நாயின் உண்ணிகளை குணமாக்க மருத்துவர் பயிற்சி பெற்றிருப்பாராய் இருக்கும். கோம்பைநாய், செந்நாய் என தரம் பிரிக்க விலங்கியலாளரால் இயலுமாக இருக்கும். எப்படி அதட்டினால், அந்த நாய் அடங்கும் என்பதை உரிமையாளர் தெரிந்திருப்பாராய் இருக்கும். ஆனால், அந்த நாயின் உணர்வைப் புரிந்துகொள்ள மிருகபாஷை தெரிய வேண்டும்.
நமக்கு அறியாத மொழியில் இன்னொருவர் கவித்துவமாக உண்மைகளை அறிய வைத்தாலும், அவற்றை மண்டைக்குள் ஏற்ற இயலாத குறைபாடுகளோடு நாம் இயங்குகிறோம். இந்த அவஸ்தையை மொழிபெயர்ப்புகள் ஓரளவு நிவர்த்தி செய்கின்றன. இந்த வகையில்தான் சமீபத்தில் வெளிவந்த In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) புத்தகத்தைப் பார்க்கிறேன்.
கிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன? டென்னிஸ் ஆடுவிங்களா? தோட்டம் பயிரிடுவீங்களா?”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
இன்றைய பேச்சு மொழியையோ ஃபேஸ்புக் மொழியையோ எடுத்துக் கொண்டால் ஒன்று புலப்படுகிறது. நாம் புழங்கும் இணையத்தில் ஆங்கிலம் இரண்டறக் கலந்திருக்கிறது. இலக்கியத்திற்காக தமிழும் பிழைப்பிற்காக ஆங்கிலமும் என சிலசமயம் வைத்துக் கொள்கிறேன். சிரமமான உள் உணர்வுகளை வெளிக்காட்டத் தடுமாறும்போது திடீரென்று தமிழரோடு பேசும்போது ‘எம்பாரசிங்’ என்றோ, ஆங்கிலம் மட்டுமே அறிந்த நண்பரோடு உரையாடும்போது ’தோக்கா’ என்னும் ஹிந்தி வார்த்தையும் மின்னும். இந்தப் புத்தகத்தில் வெளியான கவிதைகளில் ஆங்கிலம் கலக்கவில்லை. இந்தப் புத்தகத்தின் சிறப்பு இடது பக்கம் தமிழ்க் கவிதையும் வலப்பக்கம் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் பக்கத்து பக்கத்தில் கொடுக்கப்பட்டிருப்பது.
எட்டுத்தொகை நூலில் என்னவெல்லாம் பாடியிருக்கிறார்கள் எதைப் பற்றியெல்லாம் கவி இயற்றியிருக்கிறார்கள் என ஒரு பத்தியில் விளக்குவது எவ்வளவு மேலோட்டமாக அமையுமோ, அவ்வாறே, இந்தப் புத்தகத்தில் அமைந்த கவிதைகளையும் அதன் பரப்புகளையும் சுருக்க முடியாது. ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து இதில் உள்ள கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா) மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கவிஞர்கள் வசிக்கும் நாடுகளின் வரிசைப்படி, கவிதைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடும் இலங்கையும் நடுநாயகமாக நிறைய ஆக்கங்களைக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ, அங்கிருந்தெல்லாம் ஒரு கவிதை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லோரைப் பற்றியும் சிறு குறிப்பு கிடைக்கிறது. அனைவரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்பு தற்கால கவிஞர்களின் சிறுபத்திரிகை கவிதைத் தொகுப்பாக “சிற்றகல்” வாசித்திருக்கிறேன். பூமா ஈஸ்வரமூர்த்தியும் லதா ராமகிருஷ்ணனும் இணைந்து 107 கவிஞர்களின் 211 கவிதைகளை அந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார்கள். அருந்ததி நிலையம் வெளியீட்டிருக்கிறது.
அதைக் குறித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:
தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் எழுதப்படும் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்துப் பார்க்க வசதியான தொகுப்பு. ந. பிச்சமூர்த்தி, மயன் [க.நா.சு] முதலிய முதல் தலைமுறை புதுக்கவிஞர்களும் அசதா, அமிர்தம் சூர்யா போன்ற நான்காம் தலைமுறை இளைய கவிஞர்களும் இடம்பெறும் விரிவான தொகுப்பு. தொகுப்பில் தொகுப்பாளர்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆனால் தமிழ்க் கவிதை இன்று எப்படி ஒரு வெற்றுக் கைப்பழக்கமாக பெரும்பாலானவர்களிடம் உள்ளது என்ற மனப்பதிவையே இது உண்மையில் உருவாக்குகிறது. தேவதேவன் போன்ற தீவிரமான கவிஞர்கள் [அவரது ஒரு கவிதைதான் உள்ளது] எழுதும் சூழலிலேயே கவிதையே அல்லாத வெற்று வரிகளை மடித்துப்போடுபவர்களும் மண்டியிருக்கிறார்கள். இத்தொகுப்பில் உள்ள பெயர்களில் முக்கால்வாசிபேரை கழித்துவிட்டால்தான் நாம் கவிதையைப்பற்றியே பேசமுடியும். என்ன நடக்கிறது இங்கே என்று காட்டும் ஒரு ஆவணம் எனலாம்.
கவிஞனின் எல்லாக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு, அவரின் எழுத்தை, வயது மாற மாற… மாறும் சிந்தனைகளை, வார்த்தை தேர்வுகளை, அனுபவங்களை சொல்லும். அதே போல், சற்றேறக்குறைய ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த பற்பல கவிஞர்களின் தொகுப்பு, அந்தச் சமூகத்தின் எண்ணங்களையும் பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் முன் வைக்கிறது. அதிலும், இந்தப் பற்பல கவிஞர்களின் தமிழ்மொழியை ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர் வாசிக்க வைக்குமாறு மொழிபெயர்க்க வேண்டும். சீதை என்னும் கலாச்சார அடையாளத்தை விளக்க வேண்டும்; பிரமிள் என்று கவிதையில் வருகிரது… அவர் யார் என சிறுகுறிப்பு வரைய வேண்டும். சங்கப்பாடல்களில் சரளமாக வரும் மருத நிலக்குறிப்பிட வேண்டும்; புங்குடுத்தீவை வரைபடமாக்க வேண்டும்.
இத்தனையும் இந்த ”In Our Translated World” சாதிக்கிறது. சிறு பத்திரிகைகளில் எழுதும் பலரையும் தேர்ந்தெடுத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து இருக்கிறார்கள். பெண்ணியக் கருத்துகள், புலம்பெயர்ந்தோர் கருத்துகள், மார்க்சிய சிந்தனைகள், நடைமுறைவாதிகள், வாழ்வியல் புலம்பல்கள், இயற்கை காட்சிகள் என பல்வகையும் தொகுத்து இருக்கிறா் பேராசிரியர் செல்வ கனகநாயகம். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித் துறைப் பேராசிரியராக இருப்பவரும் தெற்காசியவியல் ஆய்வு மையத்தை இயக்குபவரும் இதன் தொகுப்பாசிரியராக இருந்திருப்பது இலகுவான மொழிபெயர்ப்பிலும் தமிழ்ச்சூழலின் அத்துணை இலக்கிய தொனிகளையும் சித்தாந்தப் போக்குகளையும் கருப்பொருட்களையும் கவிதை பாணிகளையும் தொடுமாறு உருவாகியிருக்கும் புத்தகத்தை வைத்து கணிக்கலாம்.
இவ்வளவு கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு மிகப்பெரிய சிக்கல். தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரிடமும் அனுமதி பெறுவது அடுத்த நடைமுறை சிக்கல். அந்த ஒவ்வொரு கவிதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய மலையேறும் பணி. அந்த மொழிபெயர்ப்பை, நூல் முழுக்க ஒரே ஒடையாகவும் கொணர்ந்திருக்கிறார்கள். மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் இருந்து, ஒரு கவிதையில் இருந்து அடுத்த கவிதைக்குச் செல்லும்போது இடராமல், அதே பாணியே, ஒரே மொழி இலாவகத்தைக் கையாண்டது ஒத்திசைவான வாசிப்பனுவத்தை நல்குகிறது.
சங்கப்பாடல்களில் ஐங்குறுநூற்றில் அகவாழ்வின் ஐந்திணைகளான மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் தொகுத்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தண்ணீரும் மின்சாரமும் இன்னபிற அத்தியாவசியங்களும் பற்றாக்குறையான தமிழ்நாட்டிலும், தாய்மண் தவிப்பில் வாழும் அயலகத் தமிழரும், சொந்த பந்தங்களைப் பிரிந்து தனியே உழைக்கும் தெற்காசியத் தமிழர்களும், வேற்றுக் கலாச்சாரத்தில் சிக்கி அடையாளமிழந்து வாழும் அமீரகத் தமிழரையும் இந்த நூலில் பார்க்கலாம். இதையே உருத்திரமூர்த்தி சேரன் பனியும் பனி சார்ந்த இடமும் என விளிக்கிறார். அதையே ”தமிழ் இலக்கியத் தோட்டம்” தொகுத்த இந்தத் தற்காலத் தமிழ்க் கவிதைத் தொகுப்பு பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது.
அமேசான் மூலமாக அச்சுப்பிரதியாகவும் கிண்டில் பிரதியாகவும் ibooks மூலமாகவும் கிடைக்கிறது: http://www.amazon.com/Our-Translated-World-Chelva-Kanaganayakam/dp/1927494362
புத்தகத்தில் இருந்து:
Torture
Tongue ripped
words mangled,
on such a day I saw
a three-winged bird in flight
carrying the language;
asserting myself
is not to deny your world;
those words are swallowed
by the unkind tongue of the wind;
This solitude and indifference
always hurting someone,
they stone the bird that
sprinkles this language
across the grey sky;
my bird
shedding one wing in the
lengthening night of autumn
knows
struggling with language
only to lose
is solitude and
torture.
இளங்கோ கவிதையின் மூலம் இங்கே கிடைக்கும்: http://djthamilan.blogspot.com/2008/05/blog-post_22.html
-பாஸ்டன் பாலா