முதியோரை நாம் எப்படி நடத்துகிறோம்? வயதான பிறகு தோன்றும் கனவுகளுக்கு என்ன அர்த்தம்? மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது?
பாவண்ணனின் “பாதை” கதை இவற்றை பேசுபொருள்களாகக் கொண்டிருக்கின்றன.
தமிழில் முக்கியமான சிறுகதை எழுதும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஒரு நடையில் தேர்ந்த பிறகு இன்னொரு நடைக்குத் தாவிடுகிறார்கள். அதாவது, எனக்கு சி/சி++/சி# நன்றாக நிரலி எழுத வரும். அவற்றில் திறமைசாலி ஆனவுடன், சீக்வல், எஃப்# என்று வேறு நுட்பத்திற்கு சென்று பயில்வேன். அந்த மாதிரி எதார்த்தம் முடிந்த பிறகு மாயாஜாலம்; அதன் கூடவே அதிபுனை, அறிபுனை என்று கூடு விட்டு கூடு பாய முயல்கிறார்கள்.
சில சமயம் அவர்கள் அந்த புதுப் பகுதியிலும் வெற்றி காண்கிறார்கள். புதிய வாசக்ர்களை ஈர்க்கிறார்கள். தங்களைப் படிக்கும் நுகர்வோர் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது சாதகமான விஷயம்.
ஆனால், பாவண்னன் இப்படி எல்லாம் குரங்கு போல் கிளை பாய்வதில்லை. இது எனக்குப் பிடித்த விஷயம். எடுத்துக் கொண்டதில் முழுமையாக பரிமளிப்பது மகிழ்ச்சி தருகிறது.
இன்னும் சிலர் ஜே.பி.சாணக்யா, பெருமாள் முருகன் போன்றோர் அலைபாயாமல் ஒரு அலைவரிசையிலேயே இயங்கினாலும், அவரவர்களின் முதல் பருவத்தின் சிறுகதைகள் போல் தற்கால புனைவுகள் கவரவில்லை. இவர்களுக்கு கதை எழுதும் வித்தை கைவசப்பட்டிருப்பதால் கதை நன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் கதை வாசித்து முடித்த பிறகு ஏதோ தவறவிட்டது போல் இருக்கும். பாவண்ணன் இந்த வகைக்குள்ளும் இன்றளவும் சிக்காமல் இருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.
நீங்களும் கதையைப் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை சொல்லுங்களேன்…
http://puthu.thinnai.com/?p=23838