‘தெரியல’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள்: விளங்கவில்லை (அல்லது) பார்க்க முடியவில்லை
நான் சட்ட அமைச்சரானால்:
1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்
2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.
3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.
ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.
மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:
“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.
பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).
உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா. 🙂
அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”
- நண்பரின் நக்கல் நறுக் :: எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன? அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது.
- “The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.”
– Kundera - டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.
பா ராகவன் :: (குதிரைகளின் கதை தொகுப்பு)
1. யுவர்ஸ் ஒபீடியன்ட்லி
இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது
2. மூன்று காதல்கள்
அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.
3. ஆயில் ரேகை
“புத்திசாலி நவீன இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவுக்கு டயலாக் எழுதப் போகும்போது ஒரு மாதிரி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள் இல்லியா? அந்த மாதிரி. நான் உலக உத்தமன்தான். அவன் அயோக்கியன்தான். ஆனால், நானும் அவனும் சேரும் இந்த ஒரு விஷயம் மட்டும் புனிதப் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது மாதிரி.”
4. பனங்கள், தென்னங்கள், கன்னங்கள் என்று எதிலெல்லாம் மெல்லிய கிக் கிடைக்கிறதோ, அதிலெல்லாம் ஈத்தைல் ஆல்கஹால் இருக்கிறதென்று அர்த்தம். (கன்னங்கள்? சந்தேகப்படாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரியும் மாபெரும் ஹைட்ரோகார்பன் ப்ராடக்ட், மனித உடல்தான்.)
இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்
தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.
இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.
(வார்த்தை – ஜூன் 2008)